முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோனி, கோலி × கலைஞர், ஸ்டாலின்



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்று விட்டது. அதுவும் சுலபமாய் ஜெயிக்க வேண்டிய நிலையில் இருந்து சொதப்பலாக ஆடி வெற்றியை தென்னாப்பிரிக்காவுக்கு பரிசளித்தது. ரோஹித் தன்னந்தனியாய் 150 அடித்து முயன்றாலும் இன்னொரு பக்கம் கோலியில் இருந்து தோனி வரை யாராலும் ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை. கோலி பொதுவாய் மூன்றாவது எண்ணில் ஆடி பழக்கப்பட்டவர் என்பதால் 4வது எண்ணில் தாமதமாய் அவர் ஆட வந்ததும் தன்னுடைய புது பாத்திரத்தில் அவரால் சுலபமாய் பொருந்த இயலவில்லை. முன்பு கோலி 20 பந்துகளில் 15 அடித்து விட்டு பொறுமையாய் அவ்வப்போது பவுண்டரி அடித்து அரை சதத்துக்கு சென்று அங்கிருந்து இன்னிங்ஸை கட்டமைப்பார். ஆனால் 4 அல்லது 5 என்பது வேறு விதமான ஆட்டத்தை கோருகிறது. நீங்கள் வந்ததுமே 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆட வேண்டும். தேவையென்றால் சற்று நேரத்தில் 150 அல்லது 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடிய வேண்டும். இந்த இடம் தோனி அல்லது ரெய்னாவுக்கு கச்சிதமானது. ஆனால் தோனியின் ஆட்டநிலை மிக மோசமாய் உள்ளதாலும், ரஹானே 4இல் ஆடுவதில் தோனிக்கு நம்பிக்கை இல்லை என்பதாலும் ஆட்ட வரிசையில் நிறைய குழப்படிகள் ஏற்பட்டுள்ளது.

 தோனியை தவிர்த்து கோலி அல்லது ரெய்னா அட்டகாசமான ஆட்டநிலையில் இருந்தால் இந்த சிக்கல் தெரியாமல் மறைந்து விடும். அல்லது தோனி சிறப்பான ஆட்டநிலையில் இருந்தால் கோலியை 3இல் அனுப்பி விட்டு 4 அல்லது 6இல் யாரை வேண்டுமானாலும் ஆடவிட்டு சமாளிக்கலாம். தோனி தனியாகவே கடைசி 20 ஓவர்களை கையாள்வார். இப்படியான சௌகரியங்களை இனி யாரும் கீழ்மத்திய வரிசையில் எதிர்பார்க்க இயலாது. வயதும் காயங்களும் காரணமாய் தோனி தன்னுடைய சன்னமான நிழலாய் மாறி விட்டார். அவரால் இனி அடித்தாடும் மட்டையாளர்களுக்கு ஒத்துழைப்பு மட்டுமே தர இயலாம். அவரால் தன்னந்தனியாய் 10 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எல்லாம் அடிக்க இயலாது. கடைசி ஓவரில் 10 அடிக்கவே அவர் திணறுகிறார். இன்றைய ஆட்டத்தில் தோனி தன் வழக்கமான பாணியில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறுவது பார்க்க பரிதாபமாய் இருந்தது. அவர் இன்று தன் ஆட்டவாழ்வில் முதன்முதலாய் ஒரு லேப் ஷாட் அடித்தார். ஸ்டெயின் பந்தில் ஸ்டம்பில் இருந்து விலகி போய் பந்தை ஸ்வீப் செய்வது போல் தூக்கி பின்னால் அடித்தார். இது பொதுவாய் பந்தை நேராகவே லாங் ஆனிலோ சிக்ஸருக்கு விளாசும் ஆற்றல் இல்லாத மட்டையாளர்கள் ஆடும் ஷாட். ஜெயவர்த்தனே, தினேஷ் கார்த்தி போன்றோர் இத்தகைய லேப் ஷாட்களை அதிகம் அடிப்பார்கள். தோனி தன்னால் பழையது போல் பந்தை வலுவாக டைமிங்குடன் அடிக்க முடியவில்லை என்று உணர்ந்ததால் தன் ஆட்ட பாணியை மாற்ற முன்வந்துள்ளார். தன் பலவீனத்தை அவர் ஏற்றுள்ளார் என்பதை இது காட்டுகிறது.
இன்றைய ஆட்டத்தில் மிக முக்கியமான கட்டத்தில் ரஹானே வெளியேறினதும் எனக்கு அது மோசமான சகுனம் எனப் பட்டது. ஏனென்றால் இன்னும் முப்பது நாற்பது ஓட்டங்கள் அவர் கூடுதலாய் சேர்த்திருந்தால் கோலி வந்ததுமே விளாச துவங்கி இருக்கலாம். தோனியும் இன்னும் தன்னம்பிக்கையுடன் ஆடியிருப்பார். அடுத்து ரெய்னா வருவார் என எதிர்பார்க்க தோனி களமிறங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் ரோஹித் சிக்ஸர்கள் அடிக்கும் போதும் தேவையான ஓட்டங்களின் விகிதம் 9க்கு மேலாக இருந்தது. காரணம் தோனி பந்தை டைம் செய்ய திணறி 50 ஸ்டிரைக்ரேட்டில் ஆடிக் கொண்டிருந்தார். அவருக்கு பதில் ரெய்னா வந்து சரளமாய் ஆடியிருந்தால் தேவையான ஓட்டவிகிதம் 6க்கு வந்திருக்கும். அங்கிருந்து சுலபமாய் ஒற்றை இரட்டை ஓட்டங்கள் ஓடியே வென்றிருக்கலாம்.
தோனி முன்பு இந்தியாவின் வெற்றிகளுக்கு அடித்தளமாய் இருந்தார். ஒரு சூப்பர்மேனாய் தன்னந்தனியாய் இந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் இப்போது அவரது அதிரடியாய் ஆட்டநிலை அதலபாதாளத்தில் விழுந்து விட்டது. இதற்கு வயது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவருக்கு 33 தானே ஆகிறது? சேவாகும் இந்த வயதில் பந்தை டைம் செய்ய திணறியது நினைவிருக்கலாம். கங்குலி, கம்பீர் போன்ற நல்ல ஸ்டுரோக்பிளேயர்களுக்கு பொதுவாய் 33, 34 வயதில் கைக்கும் கண்ணுக்குமான ஒருங்கிணைவு குறைகிறது. சச்சின், டிவில்லியர்ஸ் போன்று மேதைகளால் மட்டும் தான் 35 வயதிலும் 25 வயதின் ஆற்றலுடன் ஆட இயலும்.
 அல்லது இது ஒரு தற்காலிக ஆட்டநிலை சரிவாக இருக்கலாம். கடந்த ஒரு வருடமாகவே தோனி சரளமாய் இல்லை. ஐ.பி.எல்லில் கூட அவர் மெத்தனமாய் தான் ஆடுகிறார். இவ்வளவு காலம் ஒரு வீரர் மோசமான ஆட்டநிலையில் இருக்க கூடுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும் ஸ்ரீனிவாசன் மீதுமான ஊழல் குற்றச்சாட்டுகள், வாரியத்தில் அவருக்கு பழைய அதிகார பிடிப்பு இல்லாமை, அவருக்கு மாற்றான தலைமை கோலியின் வடிவில் உருவாகி வருதல் ஆகியவை அவர் மீது கடுமையான அழுத்ததை உருவாக்கி இருக்கலாம். இந்த அழுத்தம் அவரது ஆட்டநிலையை பாதித்திருக்கலாம்.
எப்படியாயினும் தோனியின் ஆட்டநிலை மேம்படாவிட்டால் இந்த ஒருநாள் தொடரை நாம் இழக்கக் கூடும்.
தோனி-கோலி இரட்டை தலைமை காரணமாய் அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் குழப்பம் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாண்டியராஜனின் ஒரு படத்தில் அவர் பள்ளியில் படிக்கும் போது எதேச்சையாய் ஒரு பெண்ணை மணந்து வீட்டுக்கு அழைத்து வருவார். அவரை உதவாக்கரை என சதா வையும் அப்பா இப்போது கரித்து கொட்டுவார். இரண்டு பேரையும் வைத்து சோறு போடும் அவர் பாண்டியராஜனை தன் மனைவியோடு படுக்கையில் சேர விடமாட்டார். கோலியின் நிலை கிட்டத்தட்ட இது போலத்தான். அவர் டெஸ்ட் அணியின் தலைவராய் அபாரமாய் செயல்படுகிறார். வீரர்கள் அவர் கீழ் முழுமையான உத்வேகத்துடன் ஆடுகிறார்கள். இயல்பாக அவர் ஒருநாள் வடிவிலும் தலைவராக விரும்புகிறார். ஆனால் தேர்வாளர்கள் இந்த “முதலிரவை” தள்ளிப் போட விரும்புகிறார்கள். தோனி இன்னும் ஒரு வருடம் தலைமை தாங்குவதன் மூலம் அவர்களால் கோலி-ஷாஸ்திரி கூட்டணியையும் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க முடியும். தோனியை நீக்கி அவரது விசிறிகளின் வெறுப்பை சந்திப்பதில் இருந்தும் தப்பிக்க முடியும். கிரிக்கெட் வாரியமும் தேர்வாளர்களும் இந்த பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இரண்டு முகாம்களையும் தம் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறார்கள். ஆனால் இது அணிக்குள் பெரிய குழப்பத்தை உருவாக்குகிறது.
ஒன்று தேர்வாளர்கள் அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை வரை தோனி தான் அணித்தலைவர் என அறிவிக்க வேண்டும். அப்போது கோலி தன் விதியை ஏற்று அடங்கிப் போவார். ஆனால் அவர்கள் அணித்தலைமை எனும் அழகிய இளம்பெண்ணை கட்டிலில் இருத்தி விட்டு ஒரு வருடம் கழித்து தான் முதலிரவு என கோலியிடம் சொல்கிறார்கள்.
போன உலகக்கோப்பையில் இருந்தே கோலி முழுமனதுடன் மட்டையாட வில்லை. அவர் சரியாக ஆட நினைக்கிறார். ஆனால் உள்ளுக்குள் தனக்கு நியாயமான பதவியை தோனி ஆக்கிரமித்திருப்பதாய் கசப்புணர்வு அவரை ஆட்கொள்கிறது. அவரது பாதி மனம் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றும் மீதி மனம் தோனி தோற்க வேண்டும் என்றும் நினைக்கிறது. இந்த ஒருநாள் தொடரை இந்தியா இழந்தால் தோனி ஓய்வு பெற வேண்டும் எனும் முழக்கம் மீடியாவில் வலுக்கும். அதனால் தேர்வாளர்கள் அவரி நீக்க போவதில்லை. ஆனால் இன்னும் மூன்று தொடர்களை தோனி இழந்தால் தேர்வாளர்கள் ஒரு அதிரடி முடிவு எடுக்கக் கூடும். கோலி உள்ளார அதை விரும்புகிறார். அவரை பழிக்கவும் முடியாது. அவரிடத்தில் நாம் இருந்தாலும் அதைத் தான் விரும்புவோம். ஸ்டாலினை நினைத்துப் பாருங்கள். அவர் நிலை தான் கோலிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...