முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்ன தான் சாப்பிடுவது?




 கல்கி ஆசிரியர் வெங்கடேஷை போன முறை சந்தித்த போது மனிதர் பென்சில் போல் இளைத்திருந்தார். நாற்பது வயதுக்கு மேல் இளைப்பவர்களின் கண்களில் ஒரு குறும்புத்தனம் மிளிரும். இளமையின் பளபளப்புடன் இருந்தார். என்ன பண்ணினீர்கள் எனக் கேட்டதற்கு “டயபடீஸ் ரிவர்சல் டயட்டில்” இருக்கிறேன் என்றார். நான் இந்த டயட் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். அது என்ன?
அவர் முழுக்க அரிசி, கோதுமை உணவை நிறுத்தி விட்டார். தேங்காய், காய்கனி, சிறுதானியங்கள் மட்டும் புசிக்கிறார். அவருடைய ரத்த சர்க்கரையும் இதனால் வெகுவாய் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாய் சொன்னார். அவர் பார்க்க ஆரோக்கியமாய் இருந்தார். நான் சில நாட்களாய் இது போன்ற புது வகை உணவு பரிந்துரைகள் பற்றி படித்தும் யுடியூப்பில் காணொளிகள் பார்த்தும் வருகிறேன்.

இப்போதுள்ள டயட் பேஷன் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தவிர்ப்பது. பேலியோ டயட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கற்காலத்துக்கு முன்னால் மனிதன் உண்டதை இப்போது உண்ண துவங்கி இருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு பாரம்பரிய உணவு என்று ஒன்று இல்லை. சந்தை பொருளாதாரம் வடிவமைத்த துரித உணவுகளை சாப்பிட்டு அமெரிக்கர்களின் ஒரு தலைமுறையே ஆரோக்கிய சீர்கேட்டால அங்கு அவஸ்தைப்படுகிறது. சரி அதை விடுத்து மரபான உணவுக்கு நம்மைப் போல் அவர்கள் திரும்ப முடியாது. அப்படி ஒன்று அவர்களுக்கு இல்லை. அதனால் தான் கற்காலத்துக்கு முந்தைய உணவு என்று ஒன்றை தேடிப் போகிறார்களோ என்று தோன்றியது.
 நம்மூர் சைவ உணவும் அங்கே பிரபலம் தான். காந்தியின் சுயசரிதை “சத்திய சோதனை” படித்தவர்கள் அவர் இங்கிலாந்துக்கு போன காலத்திலேயே சைவ உணவை முன்னெடுக்கும் குழுக்கள் அங்கு இருந்ததையும் அதற்காய் பிரத்யேக பத்திரிகைகள் வெளிவந்ததையும் அறிந்திருக்கலாம். அமெரிக்கர்கள் நம்மை விட பத்து மடங்கு கறி சாப்பிடுவார்கள். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கும் அவர்களின் உடல்வாகுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் அது இப்போது மிகுந்து எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. அதனால் ஒரு கூட்டத்தினர் சைவ உணவே சிறந்தது; ரத்தசர்க்கரை, மாரடைப்பு, புற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்ற ஏற்றது எனக் கூறுகிறார்கள். பொதுவாக சைவ உணவுக்கு மாறினதும் உடல் எடை வேகமாய் குறையும் என்பதால் இந்த பழக்கம் பிரபலமாகிறது.
 ஒரு பக்கம் நமது பற்களின் அமைப்பு கறி தின்பதற்கு ஏற்றதில்லை என கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் ஆய்வாளர்கள் தாவரங்களில் உள்ள செல்லுலூஸை ஜீரணிக்கும் திறன் பசு, ஆட்டை போல் மனிதர்களுக்கு இல்லை என்கிறார்கள். வீகனிசம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் அசைவம் மட்டுமல்ல மிருகங்களில் இருந்து பெறும் உணவான பால், நெய்யை கூட தவிர்க்கிறார்கள்.
டெட் டாக்கில் இரு மருத்துவர்கள் இது குறித்து மாறுபட்ட வகையில் பேசுவது கேட்டேன். ஒருவர் நம் உடம்பின் வியாதிகள் அனைத்திற்கும் மிருகங்களில் இருந்து பெறும் கொழுப்பு தான் காரணம் என்கிறார். இவர் கொழுப்பு வகை உணவுக்கு எதிரானவர். போம்பா எனும் ஒரு மருத்துவர் கொழுப்பு தான் உடம்புக்கு நல்லது என்கிறார். அதாவது கொழுப்பு உடம்பில் குறையும் போது தான் நீரிழிவு ஏற்படுகிறது என்பது அவரது வாதம். நமது உடம்பின் செல்கள் இன்சுலின் ஹார்மோனை பயன்படுத்தி குளோகோஸ் மற்றும் கொழுப்பை சக்தியாக மாற்றி எரிக்கும். இன்சுலின் அருகில் வரும் போது செல்களின் மேலுள்ள முடிமுடியாக இருக்கும் ரிசெப்டர்ஸ் அதை அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ளும். ஆனால் ரத்தத்தில் குளோகோஸின் அளவு அதிகமாகும் போது இந்த ரிசெப்டர்கள் வேலை செய்யாமல் மழுங்கிப் போகும். ஆனால் இயல்பாக உணவில் கிடைக்கும் கொழுப்பு (வெண்ணெய் போன்று) செல்கள் இன்சுலினை அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ள உதவும். அதனால் இவர் குளோகோஸை கொண்ட சோறு, கோதுமை, மைதா ஆகியவற்ற முழுக்க உணவில் இருந்து தவிர்க்க சொல்கிறார். அதற்கு பதில் கொழுப்பை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எந்த கொழுப்பை எவ்வளவு எப்படி சேர்க்கலாம் என அவர் விளக்கவில்லை.
உணவு வல்லுநர்களின் கதை எப்போதும் இப்படித் தான். ஒருவர் தெற்கு என்றால் இன்னொருவர் வடக்கே போக சொல்வார். எனக்கு இந்த குளோகோஸ் உணவுகளை தவிர்ப்பது ஓரளவு நல்ல பயன் தரும் எனத் தோன்றுகிறது. ஆனால் ஒரேயடியாய் அரிசி, கோதுமையை தவிர்க்காமல் ராகி, கம்பு ஆகியவற்றை கொஞ்சமும் நிறைய காய்கறி, கடலை, பயிறு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பாலும் பால் சார்ந்த பொருட்களும் உடம்புக்கு அவசியம். அசைவம் உண்பவர்கள் எப்படியும் நம் ஊரில் வாரத்துக்கு ஒருமுறை தான் கறி சாப்பிடுவார்கள். இதனால் எப்படியும் சிக்கல் இல்லை. அவர்கள் காய்கறிகளுடன் நிறைய மீன் சாப்பிட்டு பார்க்கலாம். தேங்காய் போன்ற இயற்கை பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்பு (ரிபைண்ட் எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பை போல் அல்லாது) ரத்த கொழுப்பை குறைக்க உதவும் என்கிறார்கள்.
இதெல்லாம் ஆளாளுக்கு மாறுபட்ட விளைவுகள் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். ஒரு மாதமாய் மெல்ல மெல்ல உணவுப்பழக்கத்தை இப்படி மாற்றி ரத்த சர்க்கரை, கொழுப்பின் அளவில் மாறுபாடு உள்ளதா, எடை குறைகிறதா என சோதிக்கலாம். ஒகெ என்றால் தொடரலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். எந்த வியாதியும் இல்லாதவர்கள் மரபான உணவுப் பழக்கத்தை மாற்றாமல் தொடர்வது தான் நல்லது.
 இந்த உணவுப் பழக்க மாற்றம் (ரிவர்ஸல் டயட்) சிலருக்கு மருந்தில்லாமலே நீரிழிவை கட்டுப்படுத்த உதவியுள்ளதாய் கூறுகிறார்கள். ஆனால் டைப் 2 நீரிழிவு கொண்டவர்களுக்கு தான் இது சாத்தியம். டைப் 1 ஆட்கள் நிச்சயம் இன்சுலினை தொடர வேண்டும். ஆனால் அதன் அளவை குறைக்க இது பயன்படலாம். முயன்று பார்ப்பதில் தோஷமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...