Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

என்ன தான் சாப்பிடுவது?




 கல்கி ஆசிரியர் வெங்கடேஷை போன முறை சந்தித்த போது மனிதர் பென்சில் போல் இளைத்திருந்தார். நாற்பது வயதுக்கு மேல் இளைப்பவர்களின் கண்களில் ஒரு குறும்புத்தனம் மிளிரும். இளமையின் பளபளப்புடன் இருந்தார். என்ன பண்ணினீர்கள் எனக் கேட்டதற்கு “டயபடீஸ் ரிவர்சல் டயட்டில்” இருக்கிறேன் என்றார். நான் இந்த டயட் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். அது என்ன?
அவர் முழுக்க அரிசி, கோதுமை உணவை நிறுத்தி விட்டார். தேங்காய், காய்கனி, சிறுதானியங்கள் மட்டும் புசிக்கிறார். அவருடைய ரத்த சர்க்கரையும் இதனால் வெகுவாய் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாய் சொன்னார். அவர் பார்க்க ஆரோக்கியமாய் இருந்தார். நான் சில நாட்களாய் இது போன்ற புது வகை உணவு பரிந்துரைகள் பற்றி படித்தும் யுடியூப்பில் காணொளிகள் பார்த்தும் வருகிறேன்.

இப்போதுள்ள டயட் பேஷன் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தவிர்ப்பது. பேலியோ டயட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கற்காலத்துக்கு முன்னால் மனிதன் உண்டதை இப்போது உண்ண துவங்கி இருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு பாரம்பரிய உணவு என்று ஒன்று இல்லை. சந்தை பொருளாதாரம் வடிவமைத்த துரித உணவுகளை சாப்பிட்டு அமெரிக்கர்களின் ஒரு தலைமுறையே ஆரோக்கிய சீர்கேட்டால அங்கு அவஸ்தைப்படுகிறது. சரி அதை விடுத்து மரபான உணவுக்கு நம்மைப் போல் அவர்கள் திரும்ப முடியாது. அப்படி ஒன்று அவர்களுக்கு இல்லை. அதனால் தான் கற்காலத்துக்கு முந்தைய உணவு என்று ஒன்றை தேடிப் போகிறார்களோ என்று தோன்றியது.
 நம்மூர் சைவ உணவும் அங்கே பிரபலம் தான். காந்தியின் சுயசரிதை “சத்திய சோதனை” படித்தவர்கள் அவர் இங்கிலாந்துக்கு போன காலத்திலேயே சைவ உணவை முன்னெடுக்கும் குழுக்கள் அங்கு இருந்ததையும் அதற்காய் பிரத்யேக பத்திரிகைகள் வெளிவந்ததையும் அறிந்திருக்கலாம். அமெரிக்கர்கள் நம்மை விட பத்து மடங்கு கறி சாப்பிடுவார்கள். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கும் அவர்களின் உடல்வாகுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் அது இப்போது மிகுந்து எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. அதனால் ஒரு கூட்டத்தினர் சைவ உணவே சிறந்தது; ரத்தசர்க்கரை, மாரடைப்பு, புற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்ற ஏற்றது எனக் கூறுகிறார்கள். பொதுவாக சைவ உணவுக்கு மாறினதும் உடல் எடை வேகமாய் குறையும் என்பதால் இந்த பழக்கம் பிரபலமாகிறது.
 ஒரு பக்கம் நமது பற்களின் அமைப்பு கறி தின்பதற்கு ஏற்றதில்லை என கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் ஆய்வாளர்கள் தாவரங்களில் உள்ள செல்லுலூஸை ஜீரணிக்கும் திறன் பசு, ஆட்டை போல் மனிதர்களுக்கு இல்லை என்கிறார்கள். வீகனிசம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் அசைவம் மட்டுமல்ல மிருகங்களில் இருந்து பெறும் உணவான பால், நெய்யை கூட தவிர்க்கிறார்கள்.
டெட் டாக்கில் இரு மருத்துவர்கள் இது குறித்து மாறுபட்ட வகையில் பேசுவது கேட்டேன். ஒருவர் நம் உடம்பின் வியாதிகள் அனைத்திற்கும் மிருகங்களில் இருந்து பெறும் கொழுப்பு தான் காரணம் என்கிறார். இவர் கொழுப்பு வகை உணவுக்கு எதிரானவர். போம்பா எனும் ஒரு மருத்துவர் கொழுப்பு தான் உடம்புக்கு நல்லது என்கிறார். அதாவது கொழுப்பு உடம்பில் குறையும் போது தான் நீரிழிவு ஏற்படுகிறது என்பது அவரது வாதம். நமது உடம்பின் செல்கள் இன்சுலின் ஹார்மோனை பயன்படுத்தி குளோகோஸ் மற்றும் கொழுப்பை சக்தியாக மாற்றி எரிக்கும். இன்சுலின் அருகில் வரும் போது செல்களின் மேலுள்ள முடிமுடியாக இருக்கும் ரிசெப்டர்ஸ் அதை அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ளும். ஆனால் ரத்தத்தில் குளோகோஸின் அளவு அதிகமாகும் போது இந்த ரிசெப்டர்கள் வேலை செய்யாமல் மழுங்கிப் போகும். ஆனால் இயல்பாக உணவில் கிடைக்கும் கொழுப்பு (வெண்ணெய் போன்று) செல்கள் இன்சுலினை அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ள உதவும். அதனால் இவர் குளோகோஸை கொண்ட சோறு, கோதுமை, மைதா ஆகியவற்ற முழுக்க உணவில் இருந்து தவிர்க்க சொல்கிறார். அதற்கு பதில் கொழுப்பை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எந்த கொழுப்பை எவ்வளவு எப்படி சேர்க்கலாம் என அவர் விளக்கவில்லை.
உணவு வல்லுநர்களின் கதை எப்போதும் இப்படித் தான். ஒருவர் தெற்கு என்றால் இன்னொருவர் வடக்கே போக சொல்வார். எனக்கு இந்த குளோகோஸ் உணவுகளை தவிர்ப்பது ஓரளவு நல்ல பயன் தரும் எனத் தோன்றுகிறது. ஆனால் ஒரேயடியாய் அரிசி, கோதுமையை தவிர்க்காமல் ராகி, கம்பு ஆகியவற்றை கொஞ்சமும் நிறைய காய்கறி, கடலை, பயிறு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பாலும் பால் சார்ந்த பொருட்களும் உடம்புக்கு அவசியம். அசைவம் உண்பவர்கள் எப்படியும் நம் ஊரில் வாரத்துக்கு ஒருமுறை தான் கறி சாப்பிடுவார்கள். இதனால் எப்படியும் சிக்கல் இல்லை. அவர்கள் காய்கறிகளுடன் நிறைய மீன் சாப்பிட்டு பார்க்கலாம். தேங்காய் போன்ற இயற்கை பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்பு (ரிபைண்ட் எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பை போல் அல்லாது) ரத்த கொழுப்பை குறைக்க உதவும் என்கிறார்கள்.
இதெல்லாம் ஆளாளுக்கு மாறுபட்ட விளைவுகள் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். ஒரு மாதமாய் மெல்ல மெல்ல உணவுப்பழக்கத்தை இப்படி மாற்றி ரத்த சர்க்கரை, கொழுப்பின் அளவில் மாறுபாடு உள்ளதா, எடை குறைகிறதா என சோதிக்கலாம். ஒகெ என்றால் தொடரலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். எந்த வியாதியும் இல்லாதவர்கள் மரபான உணவுப் பழக்கத்தை மாற்றாமல் தொடர்வது தான் நல்லது.
 இந்த உணவுப் பழக்க மாற்றம் (ரிவர்ஸல் டயட்) சிலருக்கு மருந்தில்லாமலே நீரிழிவை கட்டுப்படுத்த உதவியுள்ளதாய் கூறுகிறார்கள். ஆனால் டைப் 2 நீரிழிவு கொண்டவர்களுக்கு தான் இது சாத்தியம். டைப் 1 ஆட்கள் நிச்சயம் இன்சுலினை தொடர வேண்டும். ஆனால் அதன் அளவை குறைக்க இது பயன்படலாம். முயன்று பார்ப்பதில் தோஷமில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...