முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளன் கொல்லப்பட்டால் மட்டும் தான் போராடுவோம்

டைம்ஸ் நவ் டிவி விவாதத்தில் ஒரு ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. கடந்த பத்து வருடங்களில் நடைபெற்ற குஜராத், அசாம், உ.பி என பல்வேறு மாநிலங்களில் நடந்த ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கு ஏன் எழுத்தாளர்கள் இது போல் தீவிரமாய் எதிர்வினையாற்ற வில்லை? இதற்கு தாருவாலா மற்றும் ஷோபா டே இருவரும் ஒருமித்த குரலில் பதிலளிக்கிறார்கள் “ஏனென்றால் அப்போது எழுத்தாளர்கள் சாகவில்லை”. அப்படி என்றால் மற்றவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? 


எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த ஆவேசம் பற்றின கேள்விகளுக்கு இன்று வரை அவர்கள் தரப்பில் தெளிவான, தர்க்கரீதியான பதில் இல்லை. பொதுவாக கூறப்படுவது போல் நயன்தாரா சாஹல், மல்ஹோத்ரா போன்றோருக்கு காங்கிரஸ் பின்புலம் உள்ளதாய் நான் நம்பவில்லை. கடந்த கால மௌனத்துக்கு ரெண்டு காரணங்கள் தோன்றுகின்றன. 1) ஒருவேளை இவர்கள் முன்பு நடந்த படுகொலைகளின் போதும் வேதனைப்பட்டிருக்கலாம். ஆனால் தெளிவான, தொடர்ச்சியான கருத்தியல் புரிதலோ அரசியல் செயல்பாடோ இவர்களுக்கு இல்லை என்பதால் வழக்கம் போல் தமக்குள் முனகியபடி இருந்திருக்கலாம். கருத்தியல் உறுதி இல்லாதவர்கள் உணர்ச்சிகரமாய் மட்டுமே யோசிப்பார்கள்; தர்க்கரீதியாய் அல்ல. ஆதலால் எப்போதோ ஒரு தருணத்தில் தான் அவர்கள் மிக அதிகமாய் உணர்வுரீதியாய் தூண்டப்படுவார்கள். வெளிப்படையான இந்துத்துவா அரசும், நேரடியான மதவாதமும் இப்போது பரவுவதால் சாஹல் போன்றோர் அவநம்பிக்கையையும் கோபமும் உற்றிருக்கலாம். ஆனால் எப்படி எதிர்ப்பை வடிவமைப்பது என தெளிவின்றி சிறுபிள்ளைத்தனமாய் விருதை தூக்கி அரசின் முகத்தில் எறிகிறேன் என இறங்கி விட்டார்கள். சரியான அரசியல் தெளிவும் தொடர்ச்சியும் கொண்டவர்கள் கடந்த பத்தாண்டின் ஒவ்வொரு அநீதிக்கும் எதிர்வினையாற்றி வந்திருப்பார்கள். வெறும் உணர்ச்சியால் வழிநடப்படுகிறவர்கள் திடீரென ஒரு பிரச்சனையை கையில் எடுக்கும் போது அது அபத்தமாக முடியும். தம் மீது எழுப்பப்படும் எந்த கேள்விக்கும் அவர்களால் பதிலளிக்க முடியாமல் போகும். இந்த விவாதங்களை கவனிக்கிற பொதுமக்கள் ஏன் இந்த எழுத்தாளர்கள் ஒரு பிரச்சனையை மட்டுமே குறிவைத்து பேசுகிறார்கள், குஜராத்திலும் மும்பையிலும் வலதுசாரிகளால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட போது இவர்கள் மௌனமாய் இருந்தது இரட்டை வேடமோ என யோசிப்பார்கள். தவறான ஆட்கள் ஒரு சரியான விசயத்தை செய்யும் போது இது போன்ற குழப்படிகள் மட்டுமே எஞ்சும். ஆனால் தொடர்ந்து எல்லாவகையான சமூக குற்றங்கள் மற்றும் தீவினைகளுக்கும் எதிர்வினையாற்றி வந்துள்ள, போராடி வந்துள்ள பல எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இது போல் அதிர்ச்சி மதிப்பு செயல்களில் ஈடுபட மாட்டார்கள். திடீர் திடீரென அரசியல் மனசாட்சி விழித்துக் கொள்ள கதறி அழ மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு சாஹல், மல்ஹோத்ரா போல் மீடியா, பொருளாதார பின்புலம் இல்லை. ஒரு சரியான போராட்டத்தை சாஹல் போன்றவர்கள் ஹைஜேக் செய்து வெற்று இரைச்சலாக்கி விட்டார்கள். இவர்களால் முற்போக்காளர்கள் பற்றி ஒரு தவறான எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டு விட்டது.

மோடி அரசை ஒருவர் எதிர்ப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. அது வரவேற்கத்தக்கது தான். ஆனால் எதிர்ப்பின் பெயரை மீடியா ஸ்டண்ட அடிப்பவர்களை நான் ஏற்கவில்லை. எழுத்தாளர் செத்தால் மட்டுமே நாங்கள் எதிர்ப்போம் என கூறுகிறவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன்.
இந்த எழுத்தாளர்களின் விநோத நிலைப்பாட்டுக்கு இன்னொரு காரணம் இது. மதப்படுகொலைகள், மதவாதம், வறுமை, சிறுபான்மையினரின் ஒடுக்குமுறை ஆகியவற்றை விட எலைட்டிஸ்ட் எழுத்தாளர்களை அதிகமாய் தூண்டுவதும் கலவரப்படுத்துவதும் கருத்துரிமை பறிப்பு. கருத்துரிமை முக்கியம் தான். ஆனால் சோறுக்கும், கல்விக்கும், உயிருக்கும் பிறகு தான் அது வருகிறது. மூன்றையும் பற்றி கவலையில்லாத எலைட்டுகள் எப்போதெல்லாம் கருத்துரிமை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் களத்தில் குதித்து கூச்சல் போடுவார்கள். இப்படி ஒன்றை தேர்ந்தெடுத்து வெஞ்சினம் கொள்வது என்பது ஒரு சாதிய மனப்பான்மை என தனியாய் சொல்லத் தேவையில்லை. தாருவாலா கூறுகிறார் “மிருகங்களை பற்றி அக்கறை கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிருகங்கள் கொல்லப்பட்டால் மட்டும் எதிர்ப்பார்கள். பறவை ஆதரவாளர்களும் பறவைகளுக்காய் மட்டுமே குரல் கொடுப்பார்கள். அது போல் நாங்களும் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டால் மட்டும் குரல் கொடுப்போம்”. எலைட்டுகளுக்கே உரித்தான பார்வை இது. உதாரணமாய் சாலையில் ஒரு ஆள் அடிபட்டு கிடந்தால் கவனிக்க மாட்டார்கள். ஆனா ஒரு நாய் அடிபட்டால் அதை காப்பாற்ற எலைட்டுகள் ஒரு படையாக வருவார்கள். இந்த மனப்பான்மை தான் இந்த குழப்படிக்கும், இரட்டை மனப்பான்மைக்கு மற்றொரு காரணம்.
சரி, யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே என யோசித்தால், இவர்கள் எதிர்க்கிறேன் என்ற பெயரில் உண்மையான பிரச்சனையை திரித்து மக்களிடம் ஒரு மோசமான பெயரை ஏற்படுத்தி விட்டார்கள். எழுத்தாளர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என அவப்பெயர் உருவாகி விட்டது.
”புளுகிராஸ் ஆக்டிவிஸ்டுகள்” ஆக வேண்டியவர்கள் அரசியல் பிரச்சனையில் போராடினால் இப்படி மேம்போக்காய், வெறும் கவன ஈர்ப்பாய், உள்முரண்பாடானதாய் தான் முடியும். இதை நான் சொல்லக் காரணம் இது. கேரளாவில் சமீபமாய் தெருநாய்கள் கொல்லப்பட்டதும் மிருகவதை எதிர்ப்பாளர்கள் ஒரு பிரச்சாரம் தொடங்கினார்கள். கேரளாவுடனான வணிக தொடர்புகளை துண்டிப்போம். கேரளாவுக்கு இனி யாரும் செல்ல மாட்டோம் என முடிவெடுப்போம் என பேசினார்கள். இதனால் மக்கள் மனதில் நாய்கள் பற்றின வெறுப்பு தான் அதிகமாகும் என இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சாகித்ய் அகாதெமி விருதை திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையும் இதே பாணியில் தான் உள்ளது. தாம் எதிர்க்கிறவர்களை ராட்சசனாய் சித்தரித்து ஒரேயடியாய் தள்ளி வைக்கிற ஒரு அரசியல் இவர்களுடையது. எதிர்த்தரப்புடன் விவாதிப்பதிலோ பரப்புரை வழி எதிர்த்தரப்பையும் பொதுமக்களையும் தன் வசப்படுத்துவதிலோ இவர்களுக்கு ஆர்வமில்லை. சண்டை போட்டு, காறி உமிழ்ந்து, கண்டதை தூக்கி எறிந்து விட்டு தம் வேலையை பார்க்க கிளம்பி விடுவார்கள்.
எலைட்டிஸ்டுகள் எழுத்தாளர்கள் ஆக இருந்தால் அவர்களின் பார்வை குறுகியதாய் இருக்கும். நாங்கள், எங்கள் பிரச்சனை என்று மட்டுமே கவலைப்படுவார்கள். அதனால் தான் பொது நீரோட்ட அரசியல் பிரச்சனைகளில் இருந்து அவர்களில் பெரும்பாலானோர் விலகி இருக்கிறார்கள். மற்றபடி எனக்கு பணக்காரர்கள் மீது ஏந்த வயிற்றெரிச்சலும் இல்லை. இவர்களுடன் பின்னர் வேறு பல பின்னணி கொண்ட எழுத்தாளர்கள் சேர்ந்து கொண்டாலும் இந்த சிந்தனை ஆழமற்ற வெற்றுக் கூச்சல் எதிர்ப்பை வடிவமைத்து நடத்துவது எலைட்டிஸ்டுகள் தாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...