Skip to main content

விருது என்பது…




சமீபத்தில் சாகித்ய அகாதெமி கருத்தரங்குக்காய் மதுரை சென்றிருந்த போது அதில் கலந்து கொள்ள வந்த நண்பர் லஷ்மி சரவணகுமாருடன் முழுநாளும் நேரம் செலவழிக்க முடிந்தது. கூடவே ஸ்டாலின் ராஜாங்கமும், வீரபாண்டியனும் (பருக்கை நாவல்) இருந்தார்கள். மதியம் என் அறையில் சந்தித்துக் கொண்டோம். மிக சுவாரஸ்யமாய் அரட்டையும் விவாதமும் நடந்தது. லேடி டோக் கல்லூரியின் மாணவிகளின் உபசரிப்பை பாராட்டியாக வேண்டும். டீ கொண்டு வருவார்கள். டீ கப்பை வாங்க வருவார்கள். நொறுக்குத் தீனி கொண்டு வருவார்கள். தட்டை வாங்க வருவார்கள். கொஞ்சு குரலில் அவர்கள் “அண்ணா” என அழைப்பது கேட்க எனக்கு இனிமையாக இருந்தது. மற்ற மூவரும் எப்படி உணர்ந்தார்கள் எனத் தெரியவில்லை.

அன்று மதிய உணவின் போது நானும் லஷ்மி சரவணகுமாரும் தனியாய் ஒரு சிமிண்ட் பெஞ்சில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவர் சினிமா உலக கதைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். அப்போது இயல்பாக யுவ புரஸ்கார் விருது பற்றி பேச்சு வந்தது. அவருக்கு அவ்விருது கிடைக்காதது எனக்கு வருத்தமளித்தது என்றேன். அவர் படைப்புக்களில் செக்ஸ் தூக்கலாய் உள்ளது தான் நிராகரிப்புக்கு காரணம் என்றார். என் சக படைப்பாளிகளில் நான் மிகவும் மதிக்கிறவர் அவர் என்று சொன்னேன். என் விருது பற்றி யாராவது பேசும் போது லஷ்மிக்கு கிடைக்கவில்லையே என எனக்கு குற்றவுணர்வு தோன்றும் என்றேன். ஆனால் அவருக்கு 35 வயதாவதற்கு இன்னும் சில வருடங்கள் உள்ளதால் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன. அவர் மிகவும் கசப்புடன் “இனி கிடைத்தாலும் எனக்கு வேண்டாம்” என்றார். நான் அவரிடம் சொன்னேன் “விருது என்பது லாட்டரி அடிப்பது போல. நாம் அதற்காய் வாழவில்லை, எழுதவில்லை. கிடைத்தால் நஷ்டம் இல்லையே. விருது மூலம் ஒரு படைப்புக்கு மேலதிகமான கவனம் கிடைக்கும். அந்த இலவச விளம்பரமும் கொஞ்ச பணமும் நமக்கு நல்லது தான். மற்றபடி நம் தகுதியை நாமும் வாசகர்களும் தான் தீர்மானிக்கிறோம்”. அவர் ஏற்றுக் கொண்டார்.
தமிழில் விருதுகளின் சீஸன் ஆரம்பித்து விட்டது. இனி தொடர்ந்து நிறைய பேருக்கு விருதுகள் கிடைக்கும். நிறைய புத்தகங்கள் முக்கியமானவையாய் பரிந்துரைக்கப்படும். பதுங்கு குழியில் இருந்து நிறைய பேர் வெளிப்பட்டு தமிழின் சிறந்த எழுத்தாளர்களாய் துப்பாக்கி ஏந்தியபடி டாங்கிகளில் ஏறி வலம் வருவார்கள். ஜனவரியில் மீண்டும் பதுங்குகுழிக்குள் போய் விடுவார்கள். ஜனவரியில் இருந்து நவம்பர் வரை மீண்டும் உண்மையான எழுத்து யுத்தம் நடக்கும். யுத்தம் முடிந்ததும் இவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள்.
இதெல்லாம் பார்க்க ரொம்ப ஜாலியான வேடிக்கை. ஆனால் இந்த சீஸனில் தான் நல்ல புது எழுத்தாளர்களும் நூல்களும் வாணவேடிக்கை புகை மற்றும் ஆரவாரத்துக்கு இடையில் பயந்து நடுங்கி வெளியே வருவார்கள் என்பதும் உண்மை.
எனக்கு எந்த விருதும் விளம்பரம் மற்றும் பணம் கடந்து முக்கியமற்றது என தோன்றுகிறது. என் விருதும் உட்பட. விருது பெறும் ஒரு நூலை உடனே வாங்கி பார்க்க ஆர்வம் தோன்றும். பலன் 50-50 தான். இந்த சலசலப்புகளை கடந்தும் நிறைய நல்ல நூல்கள் புத்தக விழாவின் போது காணக் கிடைக்கும்.
முன்பு வயதானவர்கள் மட்டுமே விருது பெறுவார்கள். இப்போது விருதுகள் கொஞ்சம் அதிகரித்து விட்டதால் எழுத துவங்கி உள்ளவர்களும் பெறுகிறார்கள். ஒரு சின்ன கிளுகிளுப்பு, உற்சாகம், கவனம் கடந்து இதையெல்லாம் எழுத்தாளன் பொருட்படுத்த வேண்டியதில்லை.
என்னை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாய் ஒரு எழுத்தாளன் எழுதி எழுதி தடம் பதிக்க, முதிர்ச்சி அடைய பத்து வருடங்களாவது பிடிக்கும். எழுத்தாளனுக்கு ஆயுசு ஜாஸ்தி. சராசரியாய் ஒரு எழுத்தாளன் 40 வருடங்கள் இயங்க முடியும். அதிர்ஷ்டமிருந்தால் 60, 70 வருடங்கள் கூட எழுதலாம். அப்போது தான் ஒரு சில நல்ல நூல்களை எழுத இயலும். நான் அதிகமாய் எழுத துவங்கி 7 வருடங்கள் இருக்கும். இதற்குள் பாராட்டத்தக்கதாய் கவனிக்கத்தக்கதாய் நான் ஒன்றும் எழுதவில்லை. தரமாய் எழுத எனக்கு இன்னும் பத்தாண்டுகள் நிச்சயம் தேவைப்படும். அதுவரை நான் எழுதுவேனா உயிரோடு இருப்பேனே என்று கூட தெரியவில்லை. அப்படி இருக்க ஒரு நீண்ட பயணத்தில் சில அடிகள் எடுத்து வைத்ததுமே விருது மூலமோ அல்லது வாசகர்களாலோ ஒருவர் கொண்டாடப்பட்டால் தான் ஒரு முக்கியமான இடத்தை வந்ததைந்ததாய் எழுத்தாளன் நினைக்கலாகாது. இதை நான் எனக்குத் தான் சொல்கிறேன். நான் இதுவரை எழுதியுள்ளது முதலிரவு படுக்கை மட்டும் தான். அடுத்த பத்து வருடங்களில் மணப்பெண் வர வேண்டும். அதற்கு அடுத்த பத்து வருடங்களில் அது நடக்க வேண்டும். அதுவரை பொறுப்போம்.
புத்தாண்டு கொண்டாட்டம் வீதியில் நடக்கும் போது யாராவது பெயர் தெரியாதவர்கள் நம்மை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறலாம். நாமும் உளமகிழ்ந்து குதூகலிப்போம். ஆனால் அத்தோடு விட்டு விட வேண்டும். கட்டிப்பிடித்தவரை அடுத்த நாள் தேடிப் போய் ஐ லவ் யூ கூறக் கூடாது. விருதையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன்.
”இன்மைக்கு” ஒருவர் கவிதைகளும் தன் படைப்பு வாழ்வின் விபரங்களையும் அளித்திருந்தார். பார்த்தால் அவர் இதுவரை ஐம்பது விருதுகளுக்கு மேல் வாங்கி இருக்கிறார். ஆனால் அவரை யாரென்றே எனக்குத் தெரியவில்லை. அந்த கவிதைகளும் “அம்மா இங்கே வா வா” அளவில் தான் இருந்தன. உண்ணி.ஆரின் கதைத்தொகுப்பு (காளிநடனம்) உயிர்மையில் வெளிவந்தது. நாமெல்லாம் தொகுப்புக்கு தான் விருது வாங்குவோம். ஆனால் அவர் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைக்கும் ஒரு விருது வாங்கிருக்கிறார். சாதாரண கதைகள் தாம். அவரை விட நூறு மடங்கு மேலாய் எழுதக் கூடியவர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால் மலையாளத்தில் நீங்கள் ஒரு சுமாரான கதை எழுதி விட்டு வீதியில் நடந்து சென்றால் முனைக்கு முனை ஒருவர் நின்று கொண்டு உங்களுக்கு ஒரு விருதை நீட்டுவார்கள். அதே போல அட்டு நூல்களெல்லாம் அங்கே ஐயாயிரம் பிரதிகள் விற்கும். அங்கே விருது, வாசிப்பு எல்லாம் தகுதியை மீறி சொறி, படை போல் பரவும் விசயங்கள். அது ஒருவிதத்தில் நல்லது தான் என்றாலும் சுமாராய் எழுதுவதை கொண்டாடும் போது அம்மொழியின் படைப்பு தீவிரம் குறைய வாய்ப்பு அதிகம். அதனால் தான் மலையாள நவீன இலக்கியம் இன்னும் நம்மளவு வளராமல் உள்ளது. டி.டி ராமகிருஷ்ணனின் “பிரான்ஸிஸ் இட்டிக்கூராவை” எடுத்துக் கொள்ளுங்கள். அதை தமிழில் யாராவது எழுதியிருந்தால் பத்து பிரதிக்ள் கூட விற்காது. ஏனென்றால் அதில் ஜீவனில்லை. ஆழமில்லை. இணையத்தில் படித்ததை கற்பனையாய் மேலோட்டமாய் தொகுத்து எழுதின மலின நாவல் அது. ஆனால் அங்கு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றது. கேரளாவில் இலக்கிய நாவல் வாங்குகிறவர்களும் இங்கு ”புலி” படத்தின் திருட்டு டிவிடி வாங்குகிறவர்களும் ஒன்று தான்.
எழுத்தாளன் விருதை வாங்கி மறந்து விட வேண்டும். வாசகன் அதை கவனித்து மறந்து விட வேண்டும். அதை விட அதில் ஒன்றும் இல்லை.

Comments

viruthai patriya thangal paarvai arumai sir.






அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...