முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நயன்தாரா சாஹல் போல் நாமும் விருதை திரும்ப அளிக்கலாமா?


நரேந்திர தலோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் வலதுசாரிகள் சிலரால் கொல்லப்பட்டதையும், தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாய் சொல்லி ஒருவரை கொன்றதையும் கண்டிக்கும் விதமாய் எழுத்தாளர் நயன்தாரா சாஹல் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய் அகாதெமி விருதை திரும்ப அளிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் பிரதமர் மற்றும் மத்திய அரசின் மீதான தன் கண்டனங்களை தெரிவிக்க விரும்புகிறார். ஏற்கனவே இது போல் எழுத்தாளர்கள் விருதை திருப்பி அளிப்பது நடந்துள்ளது. சார்த்தர் தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை மறுத்தார். நோபல் பரிசு என்பது அரசியல் ரீதியாய் முடிவு செய்யப்படுகிற ஒன்று. அமெரிக்காவின் சரவ்தேச உறவுநிலைகள் தான் ஒவ்வொரு வருடமும் யாருக்கு அது வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் சாகித்ய அகாதெமி விருது அப்படி அல்ல. இதுவரை எனக்குத் தெரிந்து அரசு நேரடியாய் அவ்விருதின் தேர்வில் தலையிடுவது இல்லை. தமிழை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி இப்போதும் சரி இடதுசாரிகளின் செல்வாக்கு தான் சாகித்ய அகாதெமியில் வலுவாக உள்ளது. அதற்காக இடதுசாரி படைப்பாளிகள் தான் தேர்வாகிறார்கள் என்றில்லை. நாஞ்சில் நாடன் நல்ல உதாரணம். அதனால் சாகித்ய் அகாதெமி விருதை ஒருவர் அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கும் வண்ணம் திரும்பி அளிப்பது அபத்தமான பொருத்தமற்ற செயல்.


ஆனால் இதற்கு ஒரு குறியீட்டுத்தனமான முக்கியத்துவம் உள்ளது தான். ஒரு எழுத்தாளர் தேசிய விருதை திரும்ப அளிக்கும் போது அவர் பேசும் பிரச்சனை சட்டென மீடியா கவனம் பெறுகிறது. சாஹலை தொடர்ந்து பிற எழுத்தாளர்களும் தம் விருதுகளை திரும்ப கொடுக்கலாமா?
சாஹலுக்கும் பிற மாநில, வட்டார எழுத்தாளர்களுக்கும் வர்க்க ரீதியான முக்கிய வேறுபாடு உண்டு. சாஹல் ஒரு எலைட்டிஸ்ட். ஆங்கிலத்தில் நாவல் எழுதுபவர். அவர் நேருவின் சகோதரியின் மகள். நேரு குடும்பம் எவ்வளவு பெரும்பணக்காரர்கள் என உங்களுக்குத் தெரியும். சாகித்ய அகாதெமி விருதும் அதன் பணமும் அவர்களுக்கு டாய்லெட் பேப்பருக்கு சமம். ஆனால் மாநில எழுத்தாளர்கள் பலரின் நிலை பரிதாபமானது. நான் இவ்வருடம் ஷிலோங்கில் யுவபுரஸ்கார் விருது வாங்குவதற்கு சென்றிருந்த போது பிறமாநில எழுத்தாளர்களை சந்தித்தேன். எல்லாரும் மத்திய வர்க்கம். எழுதி எந்த கவனமும் அதுவரை கிடைக்காதவர்கள் சாகித்ய அகாதெமி தரும் சிறு வெளிச்சமும் பணமும் அவர்களுக்கு முக்கியம். விருது சரி, பணத்தையும் திரும்ப கொடுப்பதென்றால் அவர்கள் எங்கு போவார்கள்? அந்த நிகழ்வில் ஒரே ஒரு எழுத்தாளர் மட்டும் தான் பங்கு பெறவில்லை. அவர் தான் எழுதிய ஆங்கில நாவலுக்காய் பரிசு பெற்ற கௌஷிக் பாரு. அவர் வெளிநாட்டில் ஏதோ வேலையாக இருந்ததனால் தன் அம்மாவை அனுப்பி இருந்தார். பொதுவாக ஆங்கில இந்திய எழுத்தாளர்களுக்கு இது போன்ற விருதுகளெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அவர்கள் சதா விமானத்தில் பறந்து கொண்டும் நியுயார்க் வீதியில் காதலியுடன் கைபற்றி நடந்து எந்த நட்சத்திர விடுதியில் உணவருந்தலாம் என யோசித்தபடியும் இருப்பார்கள்.

 ஆனால் மாநில மொழி எழுத்தாளர்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அலைகிறவர்கள். இந்த சமூகம் அவர்களுக்கு நிறைய வசதியும் புகழும் கொடுத்திருந்தால் விருதை துச்சமாக தூக்கி எறியலாம்? ஆனால் beggars can’t be choosers என்றொரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. பிச்சைக்காரர்களுக்கு தேர்வுகள் இல்லை.

முன்பு அமெரிக்காவில் பெண்ணியவாதிகள் ஆணாதிக்கத்துக்கு எதிரான குறியீட்டு போராட்டமாக பிராக்களை பொதுவில் எரித்தார்கள். உங்களுக்கு தெரியுமா என தெரியவில்லை – தரமான பிரா என்பது அதிக விலை கொண்டது. பிராவை எரிக்கிறவர்கள் எப்படியும் பிரா அணியத்தான் போகிறார்கள். இரண்டு பிராக்களை துவைத்து மாறி மாறி அணிகிற பெண்கள் உண்டு. அவர்கள் இருக்கிறதை எரித்தால் என்ன செய்வார்கள்?

துணிச்சலாய் செயல்பட ஒன்று உங்களிடம் ஒன்றுமே இருக்க கூடாது. அல்லது நீங்கள் பணக்காரராய் இருக்க வேண்டும். ஆங்கில இந்திய எழுத்தாளர்களைப் போலன்றி நம் மாநில மொழி எழுத்தாளர்கள் மத்திய வர்க்கத்தினர். அவர்களின் முதல் கவலையே இன்று தேவைக்கான ஐந்து பக்கெட் தண்ணீர் கிடைக்குமா என்பதாகத் தான் இருக்கும். அவர்களால் செய்ய முடிவதென்ன? அவர்கள் சமூக அநீதிக்கு எதிராய் தொடர்ந்து எழுதலாம், மீடியாவில் பேசலாம், நேரடியான போராட்டங்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் துரதிஷ்டவசமாய் நான் சந்தித்து உரையாடியது வரை கேரளா, வங்காளம் மொழியை சேர்ந்த விருதாளர்களைத் தவிர பிறருக்கு அதிக அரசியல் உணர்வு இல்லை.
சாஹலின் லாஜிக் படியே யோசித்தால் இந்த அரசாங்கம் நமக்கு வழங்கும் மின்சாரம், தண்ணீர், பொதுபோக்குவரத்து, தொலைதொடர்பு வசதி என பல விசயங்களை நாம் கைவிட வேண்டி வரும். அரசு சாலைகளில் நடக்க கூடாது. அரசு மானியங்களை வாங்க கூடாது. எனக்குத் தெரிந்து இதையெல்லாம் செய்யும் வசதி கொண்டவர்கள் ஆங்கில இந்திய எலைட் எழுத்தாளர்கள் தாம். அவர்கள் பெரும்பாலான நாட்கள் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ வாழ்வதால் நம் அரசின் எந்த சேவையும் அவர்களுக்கு தேவையில்லையே!

சாஹலின் முடிவின் முக்கிய தர்க்கபிழை அவர் மோடியையும் அரசு எந்திரத்தையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்வது தான். மோடி போனாலும் கூட அரசின் சேவைகளான மின்சாரம், தண்ணீர் மற்றும் அங்கீகாரங்களான சாகித்ய் அகாதெமி போன்றவை அப்படியே தானிருக்கும். மோடியை எதிர்த்து போராட அவர் தில்லியின் தெருக்களில் நடக்கும் இடதுசாரி போராட்டங்களில் கலந்து கொள்ளலாம். மீடியாவில் எழுதலாம். கூட்டங்களில் பேசலாம். இது போன்ற போராட்டங்களை நடத்தும் குழுக்களுக்கு தன் கோடிக்கணக்கான சொத்தில் ஒரு சிறு பகுதியை கொடுக்கலாம். சுதந்திர போராட்டத்தின் போது பெரும் முதலாளிகள் தம் சொத்துக்களை காந்திக்கு அப்படி அளித்திருக்கிறார்கள்.

இதை ஒட்டி இன்னொரு சந்தேகம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற ஒருவர் கோக் குடிக்கலாமா? அமெரிக்க பிராண்ட் சட்டைகள், ஜீன்ஸ் அணியலாமா? காபி டே போகலாமா? ஹாலிவுட் படங்கள் பார்க்கலாமா? ஆணாதிக்கத்தை எதிர்க்கிற பெண்கள் அழகாய் ஆடையணியலாமா? ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள் அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடலாமா? மனைவி மீது கோபம் என்றால் அவள் சமைத்த உணவை வேண்டாம் என சொல்வது போல் எளிதல்ல இதெல்லாம்?

நன்றி: தி ஹிந்து

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...