முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”நடிப்பு” பத்திரிகை



நண்பர் (தம்பி) சோழனின் “நடிப்பு” பத்திரிகையின் முதல் இதழ் செறிவாகவும் தீவிரமாகவும் வந்திருக்கிறது. நடிப்பு எனும் ஒற்றைப்புள்ளியை மையமிட்டு நடிப்புக் கலை, முக்கியமான நடிகர்கள், நடிப்பு பற்றின நூல்களில் இருந்து அத்தியாயங்கள், பேட்டிகள், நடிகர்கள் பற்றின நூல் விமர்சனம் என பல விசயங்களை பிசிறின்றி தந்திருக்கிறார். மீள்பிரசுரங்களில் மகேந்திரனின் “நடிப்பு என்பது” எனும் நூலில் இருந்து ”விழிமொழியும்”, சோழனின் ”நீங்களும் நடிக்கலாம்” நூலில் இருந்து “நம்ப வைப்பது தான் நடிப்பும்” முக்கியமாய் படிக்க வேண்டியவை. 


கட்டுரைகளில் நவாசுதின் சித்திக்கி பற்றின ரிஜின் ரோஸின் கட்டுரை என்னை கவர்ந்தது. அவர் தொடர்ந்து எழுதினால் சிறப்பு. பெரும்பாலான கட்டுரைகள் உள்ளார்ந்த அவதானிப்பும் கற்பனையும் நடிப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மையசரடாக கொண்டுள்ளன. கோட்பாட்டு கட்டுரைகள் இல்லை. நடிப்பு பற்றின அனுபவ பூர்வமான அவதானிப்பு பதிவுகளுக்கு தான் அதிகம் இடமளிகப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டதா அல்லது எதேச்சையாய் அமைந்ததா என தெரியவில்லை. கில் ஆலனின் பேட்டியை இன்னும் விரிவாய் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. குறிப்பாய், அவர் பிரபுதேவா ஒரு சிறந்த நடிகர் என ஒற்றை வரியில் சொல்லி விட்டு நகர்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என அறிய ஆர்வம் தோன்றியது. கமல் மற்றும் மோகன்லாலை ஒப்பிடும் எனது கட்டுரையும் வெளியாகி உள்ளது.
இவ்வளவு பேரிடம் இருந்து குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வாங்குவது எவ்வளவு சிரமம் என அறிவேன். நூறு பேரிடம் கேட்டால் பத்து பேர் தான் எழுதுவார்கள். அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் தொந்தரவு பண்ணி பொறுமை காத்தால் தான் இவ்வளவு கட்டுரைகளை கேட்டு வாங்க முடியும். இவ்விசயத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண் திறமைசாலி. முதலில் பத்து சொற்களில் கட்டுரையை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்புவார். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அடுத்து எட்டு சொற்களில் கேட்டு அனுப்புவார். அதுவும் பலிக்கவில்லை என்றால் ஐந்து, மூன்று. ரெண்டு என சொற்கள் குறைந்து கொண்டே போகும். ஆனால் கேட்பதை மட்டும் நிறுத்த மாட்டார். ஒருமுறை எனக்கு கேள்விக்குறியை மட்டும் குறுஞ்செய்தி அனுப்பினார். அதைப் பார்க்க எனக்கு ஒரு அருவா போல் தோன்றியது. பயந்து விட்டேன். இருப்பதிலேயே எளிது தொடர்ச்சியாக எழுதும் பிரபலங்களிடம் இருந்து கிடைப்பதை வாங்கி தொகுத்து வெளியிடுவது தான். ஆனால் அது பத்தோடு பதினொன்றாய் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து இப்படி ஒரு இதழை சோழன் தயாரித்திருப்பது பாராட்டத்தக்கது.
 இது போல் இலக்கியத்திலும் யாராவது thematic பத்திரிகை வெளியிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். பேட்டிக்கென்றே ”நேர்காணல்” என்றொரு பத்திரிகையை நண்பர் பௌத்த ஐயனார் கொண்டு வருகிறார். முன்பு கி.ரா கடிதங்களுக்காய் ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய வாட்ஸ் ஆப் குரூப், பழைய செயின் மெயில் போன்றவற்றின் தொல்வடிவம் அது. அதற்கு முன்பு ”எழுத்து” பத்திரிகை சிறுகதைகளுக்காய் தனித்து இயங்கியது. இப்போதும் கார்களுக்கு என்று தனியாய் பத்திரிகைகள் வருகின்றன. ஆங்கிலத்தில் மது வகைகளைப் பற்றி பத்திரிகை வருகிறது. நாமும் இது போல் செய்ய முடியும். பொதுவாக விமர்சனம் என்றால் யாரையாவது வரிக்கு வரி பாராட்டிக் கொண்டே போவது என தமிழில் ஒரு மரபு உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எதிர்மறையாய் விமர்சிப்பதற்கு ஒரு polemical பத்திரிகையை யாராவது நடத்தலாம். எழுத்துக்கலை பற்றி நடத்தலாம். யாராவது இறந்தால் உடனே ஒவ்வொரு பத்திரிகையிலும் பத்து பேராவது அவரைப் பற்றி அஞ்சலிக் குறிப்பு எழுதுவார்கள். ஏன் அஞ்சலிக் கட்டுரைகளுக்கு என்றே தனியாய் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது?

கருத்துகள்

சு.மு.அகமது இவ்வாறு கூறியுள்ளார்…
’நடிப்பு’க்கு வாழ்த்துகள்.தம்பி சோழன் இன்னும் மெருகேற்றுவார்.நம்புகிறேன்.”அஞ்சலி”க்கென்றே ஒரு இதழை யாராவது நடத்தினால் நன்றாயிருக்கும்...?!!!(நல்லாயிருக்கு அபிலாஷ்...!?!எத்தனை பேருக்கு அஞ்சலி செலுத்துவது? இல்லை அஞ்சலி என்பவருக்கான பத்திரிக்கையை குறிப்பிடுகிறீர்களோ...?) வாழ்த்துகள் அபிலாஷ்...!!!சந்திப்போம். அன்புடன் சு.மு.அகமது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...