Skip to main content

”நடிப்பு” பத்திரிகை



நண்பர் (தம்பி) சோழனின் “நடிப்பு” பத்திரிகையின் முதல் இதழ் செறிவாகவும் தீவிரமாகவும் வந்திருக்கிறது. நடிப்பு எனும் ஒற்றைப்புள்ளியை மையமிட்டு நடிப்புக் கலை, முக்கியமான நடிகர்கள், நடிப்பு பற்றின நூல்களில் இருந்து அத்தியாயங்கள், பேட்டிகள், நடிகர்கள் பற்றின நூல் விமர்சனம் என பல விசயங்களை பிசிறின்றி தந்திருக்கிறார். மீள்பிரசுரங்களில் மகேந்திரனின் “நடிப்பு என்பது” எனும் நூலில் இருந்து ”விழிமொழியும்”, சோழனின் ”நீங்களும் நடிக்கலாம்” நூலில் இருந்து “நம்ப வைப்பது தான் நடிப்பும்” முக்கியமாய் படிக்க வேண்டியவை. 


கட்டுரைகளில் நவாசுதின் சித்திக்கி பற்றின ரிஜின் ரோஸின் கட்டுரை என்னை கவர்ந்தது. அவர் தொடர்ந்து எழுதினால் சிறப்பு. பெரும்பாலான கட்டுரைகள் உள்ளார்ந்த அவதானிப்பும் கற்பனையும் நடிப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மையசரடாக கொண்டுள்ளன. கோட்பாட்டு கட்டுரைகள் இல்லை. நடிப்பு பற்றின அனுபவ பூர்வமான அவதானிப்பு பதிவுகளுக்கு தான் அதிகம் இடமளிகப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டதா அல்லது எதேச்சையாய் அமைந்ததா என தெரியவில்லை. கில் ஆலனின் பேட்டியை இன்னும் விரிவாய் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. குறிப்பாய், அவர் பிரபுதேவா ஒரு சிறந்த நடிகர் என ஒற்றை வரியில் சொல்லி விட்டு நகர்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என அறிய ஆர்வம் தோன்றியது. கமல் மற்றும் மோகன்லாலை ஒப்பிடும் எனது கட்டுரையும் வெளியாகி உள்ளது.
இவ்வளவு பேரிடம் இருந்து குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வாங்குவது எவ்வளவு சிரமம் என அறிவேன். நூறு பேரிடம் கேட்டால் பத்து பேர் தான் எழுதுவார்கள். அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் தொந்தரவு பண்ணி பொறுமை காத்தால் தான் இவ்வளவு கட்டுரைகளை கேட்டு வாங்க முடியும். இவ்விசயத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண் திறமைசாலி. முதலில் பத்து சொற்களில் கட்டுரையை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்புவார். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அடுத்து எட்டு சொற்களில் கேட்டு அனுப்புவார். அதுவும் பலிக்கவில்லை என்றால் ஐந்து, மூன்று. ரெண்டு என சொற்கள் குறைந்து கொண்டே போகும். ஆனால் கேட்பதை மட்டும் நிறுத்த மாட்டார். ஒருமுறை எனக்கு கேள்விக்குறியை மட்டும் குறுஞ்செய்தி அனுப்பினார். அதைப் பார்க்க எனக்கு ஒரு அருவா போல் தோன்றியது. பயந்து விட்டேன். இருப்பதிலேயே எளிது தொடர்ச்சியாக எழுதும் பிரபலங்களிடம் இருந்து கிடைப்பதை வாங்கி தொகுத்து வெளியிடுவது தான். ஆனால் அது பத்தோடு பதினொன்றாய் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து இப்படி ஒரு இதழை சோழன் தயாரித்திருப்பது பாராட்டத்தக்கது.
 இது போல் இலக்கியத்திலும் யாராவது thematic பத்திரிகை வெளியிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். பேட்டிக்கென்றே ”நேர்காணல்” என்றொரு பத்திரிகையை நண்பர் பௌத்த ஐயனார் கொண்டு வருகிறார். முன்பு கி.ரா கடிதங்களுக்காய் ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய வாட்ஸ் ஆப் குரூப், பழைய செயின் மெயில் போன்றவற்றின் தொல்வடிவம் அது. அதற்கு முன்பு ”எழுத்து” பத்திரிகை சிறுகதைகளுக்காய் தனித்து இயங்கியது. இப்போதும் கார்களுக்கு என்று தனியாய் பத்திரிகைகள் வருகின்றன. ஆங்கிலத்தில் மது வகைகளைப் பற்றி பத்திரிகை வருகிறது. நாமும் இது போல் செய்ய முடியும். பொதுவாக விமர்சனம் என்றால் யாரையாவது வரிக்கு வரி பாராட்டிக் கொண்டே போவது என தமிழில் ஒரு மரபு உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எதிர்மறையாய் விமர்சிப்பதற்கு ஒரு polemical பத்திரிகையை யாராவது நடத்தலாம். எழுத்துக்கலை பற்றி நடத்தலாம். யாராவது இறந்தால் உடனே ஒவ்வொரு பத்திரிகையிலும் பத்து பேராவது அவரைப் பற்றி அஞ்சலிக் குறிப்பு எழுதுவார்கள். ஏன் அஞ்சலிக் கட்டுரைகளுக்கு என்றே தனியாய் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது?

Comments

’நடிப்பு’க்கு வாழ்த்துகள்.தம்பி சோழன் இன்னும் மெருகேற்றுவார்.நம்புகிறேன்.”அஞ்சலி”க்கென்றே ஒரு இதழை யாராவது நடத்தினால் நன்றாயிருக்கும்...?!!!(நல்லாயிருக்கு அபிலாஷ்...!?!எத்தனை பேருக்கு அஞ்சலி செலுத்துவது? இல்லை அஞ்சலி என்பவருக்கான பத்திரிக்கையை குறிப்பிடுகிறீர்களோ...?) வாழ்த்துகள் அபிலாஷ்...!!!சந்திப்போம். அன்புடன் சு.மு.அகமது

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...