Skip to main content

வாசக சாலை கூட்டத்தில் கோபி கிருஷ்ணன் பற்றின கலந்துரையாடல்



போன ஞாயிறு பனுவலில் வாசக சாலை நடத்திய கோபி கிருஷ்ணன் படைப்புலகம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நான் எதிர்பாராத வகையில் பேச வேண்டியதாயிற்று. நான் பொதுவாக எந்த நிகழ்ச்சியில் பார்வையாளனாய் கலந்து கொள்வதென்றாலும் அதில் பேசப் படக் கூடிய எழுத்தாளனின் படைப்புகளை முந்தின நாள் ஒருமுறை வாசித்து விடுவேன்; ஏற்கனவே படித்திருந்தால் ஒரு மீள்வாசிப்பு செய்வேன். ஆகவே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீர்மானித்ததும் கோபி கிருஷ்ணன் படைப்புகளை முந்தின நாளில் இருந்தே புரட்டிக் கொண்டிருந்தேன். மனதில் பட்டதை குறிப்பெடுத்தேன். ஒரு கட்டுரையாக எழுதலாம் என எண்ணிக் கொண்டிருந்த போது மூன்றரை மணி அளவில் நண்பர் அருண் அழைத்து அன்றைய கூட்டத்தில் பேச வேண்டிய ஒருவர் வர முடியாத நிலையில் அவருக்கு பதில் நான் பேச முடியுமா என்றார். கூட்டம் ஐந்தரைக்கு. ஏற்கனவே தயாராக இருந்ததால் சரி என்றேன். 


கோபி கிருஷ்ணனின் கதை உலகம் எப்படியானது, அவரது தனிப்பட்ட குணாதசியம் என்ன என்பது பற்றியெல்லாம் நிகழ்ச்சியில் ச.தமிழ்ச்செல்வன் அற்புதமாக உரையாற்றினார். எளிமையும் அடர்த்தியும் நேர்மையும் கொண்ட அந்த பேச்சை கேட்க நேர்ந்தது என் அதிர்ஷ்டம் தான். அதன் பின் அழகியசிங்கர் கோபி கிருஷ்ணனுடனான தனது நட்பு, தனிப்பட்ட அனுபவங்கள் பற்றி மிகவும் இயல்பாக பேசினார். கோபி கிருஷ்ணன் எப்படி வேலையிடத்தில் தன் நண்பருக்காய் பரிந்து பேசச் சென்று வேலையை இழந்தார், பெண்களின் பிரச்சனைகள் பற்றி ஒருவர் கூட்டத்தில் பேசுவது கேட்டு தாரைதாரையாய் கண்ணீர் வடித்தார் என அவர் பற்றிய ஒரு புது பக்கத்தை திறந்து காட்டினார். ஒருநாள் அவர் அழகியசிங்கரை போனில் அழைத்து உடனடியாய் சிறிது பணம் வேண்டும் என கேட்கிறார். வந்து வாங்கிக் கொள்ளுமாறு அழகிய சிங்கர் சொல்ல கோபி கிருஷ்ணன் தான் வரக் கூடிய நிலையில் இல்லை என்கிறார். அழகியசிங்கர் தான் வார இறுதியில் அவர் வீட்டுக்கு வந்து பணமளிப்பதாய் உறுதி அளிக்கிறார். ஆனால் சில நாட்களில் கோபி கிருஷ்ணன் இறந்து விட்டதாய் தகவல் கிடைக்கிறது. அவர் உண்மையில் தான் மரண தறுவாயில் உள்ள விசயத்தை நண்பர்களிடம் தெரிவிக்கவில்லை. ஒரு நண்பருக்கு திரும்ப திரும்ப தன்னை வந்து பார்க்கும் படி அந்த வாரம் பல கடிதங்கள் எழுதுகிறார். ஆனால் நண்பர்கள் வரும் முன் அவர் உயிர் பிரிந்து விடுகிறது. நம் நண்பர்கள் நமக்கு மிக அருகில் இருப்பதாய் நினைத்திருக்கும் போது அவர்கள் சட்டென வெகுதொலைவு சென்று விடுகிறார்கள். மிக அருகில் இருக்கும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்ட முடியாதபடி சந்தர்ப்பம் சில நேரம் அமைந்து விடுகிறது.
வாசகர் பார்வை எனும் பிரிவில் பேசின கமலி பன்னீர்செல்வம் கோபி கிருஷ்ணனின் கதைகள் அனைத்தையும் சிரத்தையாக படித்து வந்து நேர்த்தியாக பேசினார். பொதுவாக கூட்டங்கள் என்றால் எதையும் படிக்காமல் போகிற போக்கில் கதையளப்பது தான் சிறுபத்திரிகை உலகில் வழக்கம். ஆனால் நேற்றைய கூட்டம் ஒரு சின்ன பல்கலைக்கழக கருத்தரங்கம் போல் இருந்தது.
நான் இறுதியாக பேசினேன். கோபி கிருஷ்ணன் அவர் காலத்துக்கு நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து எப்படி மாறுபட்டவராக இருக்கிறார், அவரிடம் உள்ள பின்நவீனத்துவ கூறுகள் என்னென்ன, அவரது எழுத்தில் பிராய்டிய கோட்பாட்டுக்கு உள்ள தாக்கம், பிராய்டின் தாக்கம் எப்படி அவரது படைப்பும் பலமும் பலவீனமுமாய் ஒரேசமயம் இருக்கிறது என விளக்கினேன். அதன் பிறகு மீண்டும் பேசிய ச.தமிழ்ச்செல்வன் சுவாரஸ்யமான விசயம் ஒன்றை குறிப்பிட்டார். கோபி கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்தைய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பெரும்பாலும் படித்திருக்கவில்லை. அவர் உளவியல் மற்றும் பிற விசயங்கள் பற்றி ஆங்கிலத்தில் படித்ததையும் சொந்த அனுபவங்களையும் முன்வைத்து தான் இவ்வளவு அபாரமான ஒரு படைப்புலகை கட்டியெழுப்பி இருக்கிறார். தமிழில் யாரையும் அதிகம் படிக்காதது அவரை தனித்துவமானராய் ஆக்கி இருக்கிறது என்றார் தமிழ்ச்செல்வன்.
வாசக சாலை பார்வையாளர்களுக்கு ஒரு தனி குணம் உண்டு. எவ்வளவு சிக்கலான விசயங்களை எவ்வளவு நேரம் பேசினாலும் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். முதுகலை வகுப்பு இலக்கிய மாணவர்களிடம் கூட நான் இப்படியான ஒரு சீரான ஒருமுகமான கவனத்தை பார்த்ததில்லை. ஆனால் வேறு அமைப்புகளின் கூட்டங்களில் பார்வையாளர்கள் பல விதங்களில் இருப்பார்கள். சிலர் கூட்டம் நடக்கும் போதே எழுந்து வந்தும் போயும் இருப்பார்கள். இன்னும் சில கூட்டங்களில் ஆட்டம் துவங்கியதும் முதல் சில இருக்கைகளில் உள்ளவர்கள் டீ குடிக்க எழுந்து வெளியே போவார்கள். கூட்டத்துக்கு டீ வந்ததும் திரும்ப வந்து அதைக் குடித்து விட்டு சிகரெட் புகைக்க மீண்டும் வெளியே போவார்கள். சில பார்வையாளர்கள் கண்ணாடி போன்ற கண்களுடன் பேச்சாளனையே வெறித்து பார்ப்பார்கள். அதில் பேச்சாளன் தன் முகம் பிரதிபலிப்பதை காணலாம். ஆனால் எந்த சலனமும் இராது. இன்னும் சிலர் போண்டா சாப்பிடுவதில் மட்டும் கவனமாய் இருப்பாளர்கள். பேச்சு தொடங்கியதும் பேச்சாளனைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பராக்கு பார்ப்பார்கள். அவர்களைப் பார்த்ததுமே உங்கள் தன்னம்பிக்கை பஞ்சர் ஆன டயர் போல் படுத்து விடும். ஆனால் ’வாசக சாலை’ பார்வையாளர்கள் ரொம்ப சமர்த்து. இது ஏதோ என் கருத்து தான் என்றில்லை. இதற்கு முன் அங்கு பேசின வேறு சிலரும் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வளவு பேசினாலும் கண்ணசராமல் கவனிக்கிறார்க்ளே என வியந்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் 19 வாசக சாலையில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும் விருது வழங்கும் விழாவும் சேர்ந்து நடக்கிறது. அதற்கான டீஸரில் என்னை பேசுமாறு கேட்டு கேமராவை ஆன் செய்தார்கள். இதற்கு முன் பல டிவி நிகழ்ச்சிகளில் சுலபமாய் பேசி இருக்கிறேன். ஆனால் இரண்டு வரிகளில் ஒரு குறிப்பிட்ட அறிவிப்பை சொல்ல வேண்டும் என்றதும் எனக்கு வாய் குழற ஆரம்பித்தது. அருண் வேறு பல டேக்குகள் வாங்கி விட்டார். கருத்துக்களை பேசுவது சுலபம், ஆனால் தகவல்களை மனனம் செய்து கேமரா முன் கடகடவென சொல்வது ரொம்ப சிரமம். எப்படியோ இரண்டு வரியை பேசி முடித்த பின் சொன்னேன் “என் தலைவர் சாரு ரெண்டு விரல்களால் டான்ஸ் ஆடுவதற்கே நூறு டேக் வாங்கினார். நானெல்லாம் எவ்வளவோ பரவால்லீங்க”.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...