Skip to main content

சூரிய வணக்கமும் புரூஸ் லீயும்




இன்று ஒளிபரப்பான சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் நான் பேசினது நன்றாய் இருந்தது பல நண்பர்கள் கூறினார்கள். எனக்குத் தான் பேசி முடித்த பின் அவ்வளவாய் திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால் படப்பிடிப்புக்கு முன் அது புருஸ் லீ பற்றின இரண்டு நிமிட பைட்டாக தான் இருக்கும் என நினைத்து போயிருந்தேன். என்னுடைய “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலைக் கூட முழுக்க புரட்டிப் பார்த்து விட்டு செல்லவில்லை. அங்கு போன பிறகு தான் அது சூரிய வணக்கத்துக்கான முழுபேட்டி என உணர்ந்தேன். சரி நினைவில் இருப்பதை வைத்து பேசலாம் என எப்படியோ ஒப்பேற்றி விட்டேன். ஆனால் சில நேரம் அரைகுறை தயாரிப்புடன் பேசுவது நன்றாய் அமைந்து விடுகிறது.

 இன்னொரு விசயம். இந்நிகழ்ச்சியில் என்னை பேச அழைத்ததற்கு நான் எழுதிய ”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” தான் பிரதான காரணம். அதை நிகழ்ச்சி முழுக்க பின்னணியில் காட்டினார்கள். நான் எழுதிய நூல்களில் நான் அதிகம் பொருட்படுத்தாது இந்நூல் தான். நான் அதற்கு ஒரு கூட்டம் நடத்தவில்லை. புரொமோட் செய்ய முயலவில்லை. ஆசைக்காகவும் தனிப்பட்ட பொழுதுபோக்குக்காகவும் தான் அதை எழுதினேன். இந்நூலை எழுதும் தூண்டுதல் மிக எதேச்சையாக கிடைத்தது. அதற்கு முன் நான் புரூஸ் லீயை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. ஒருமுறை எஸ்.ராவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் அறையில் இருந்த பட சி.டிக்களில் புரூஸ் லியின் படங்களும் இருந்தது கண்டு வியப்புற்றேன். எஸ்.ராவே புரூஸ் லீயின் படங்களை முக்கியம் என நினைத்து தன் நூலகத்தில் வைத்திருந்தால் அவர் உண்மையில் எப்படியான கலைஞன் எனும் கேள்வி எழுந்தது. நான் எஸ்.ராவிடம் இது பற்றி கேட்கவில்லை. வீட்டுக்கு வந்த பின் அது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பிளிப்கார்ட்டில் புரூஸ் லீ பற்றிய சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். அப்போது தான் எனக்கு அவரது பல புது பரிமாணங்கள் தெரிய வந்தன. அவரது சண்டைக்கலையின் தத்துவ விளக்கங்கள், அவரது வாசிப்பு, ஜென் மீதான அக்கறை, சண்டைக்கலையை அவர் வாழ்க்கைக்கலையாக பார்த்தது, அவரது வாழ்க்கையின் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், போராட்டங்கள், இறுதியான வீழ்ச்சி என பல விசயங்கள் என்னை கவர்ந்தன.
 நம்மூரில் இலக்கிய எழுத்தாளர்கள் சினிமா ஐகான்கள் பற்றி புத்தகம் எழுதும் மரபு இல்லை. அதனால் புரூஸ் லீ பற்றி ஒரு நூல் எழுதலாம் என்று தோன்றினதும் மிகுந்த தயக்கத்துடன் மனுஷ்யபுத்திரனுடன் கூறினேன். அவர் உடனே என்னை மிகவும் ஊக்குவித்தார். அதன் பிறகு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மளமளவென வேலையில் இறங்கினேன். தற்காப்பு கலைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் பொதுவாக இவ்வகுப்புகள் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள என் வீட்டருகே சிவபாலன் எனும் மாஸ்டர் நடத்தும் வகுப்பில் சேர்ந்தேன்.
மாஸ்டர் சிவபாலன்

இஷின்ரியு கராத்தே அவரது ஸ்டைல். அவர் தோன்றினால் மட்டுமே கற்றுத் தருவார். பெரும்பாலான நேரம் நான் பிற மாணவர்கள் பயில்வதை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் எப்போதாவது என்னிடம் கவனம் காட்டி கற்றுத் தரும் போது அவர் எவ்வளவு சிறந்த ஆசிரியர் என உணர்ந்து கொண்டேன். அந்த வகுப்புகளுக்கு சென்றது, கவனித்தது எனக்கு புத்துணர்வூட்டும் அனுபவம். புத்தகத்துக்கும் மிகவும் பயன்பட்டது. அந்த ஆறு மாதங்கள் நான் முழுக்க முழுக்க புருஸ் லீ மற்றும் குங்பூ பற்றி படிப்பது, படங்கள் பார்ப்பது என செலவழித்தேன். இலக்கியம், கோட்பாடு, சமூகம், அரசியல், தத்துவம் ஆகியவற்றில் இருந்து விலகி இன்னொரு ஏரியாவில் இப்படி பயணிப்பது உற்சாகமாய் இருந்தது.
 பிரசுரத்தின் போது நிறைய படங்கள் சேர்க்க வேண்டி இருந்ததால் மிகுந்த கவனத்துடன் பிழை திருத்தவும் பக்க அமைப்பை சரி பார்க்கவும் வேண்டி இருந்தது. என்னை விட பக்கங்களை அமைத்த செல்வி அபாரமாய் வேலை பார்த்தார். நான் எடுத்துக் கொடுத்த பக்கங்கள் போதுமான ரெசலூஷனில் இல்லாததால் பதிப்பில் சரியாய் வராது, அதனால் எடுத்து விடலாமா என முதலில் கேட்டார். நான் எப்படியாவது படங்களை சேர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டேன். பிறகு நிறைய முயற்சி செய்து படங்கள் நன்றாய் வரும்படி செய்தார். ஒரு சின்ன புத்தகம் வெளி வருவதன் பின்னால் எவ்வளவு வேலை இருக்கிறது என குறிப்பிடத் தான் இவ்வளவும் சொன்னேன்.
 நான் ஒரு ஜாலி முயற்சியாய் செய்தது என்றாலும் என் புத்தகங்களில் பரவலாய் வாசிக்கப்பது ”புரூஸ் லீ சண்டையிடாத சண்டைவீரன்” தான். ஏனென்றால் பிரபலங்கள் பற்றி சீரியஸாய் எழுதப்படும் நூல்களுக்கு என்று ஒரு தனி தேவை உள்ளது. அதே போல தீவிரமான இலக்கியவாதிகள் பற்றி எளிதாய் சுவாரஸ்மாய் எழுதப்படும் நூல்களுக்கும் ஒரு பெரிய தேவை உள்ளது. உயிர்மையில் எஸ்.ரா எழுதி வரும் “செகாவ் வாழ்கிறார்” புத்தகமாய் வெளிவரும் போது மிகப்பெரும் வரவேற்பு பெறும். அவரது சிறந்த நூல்களில் ஒன்றாய் அது நிச்சயம் இருக்கும். இந்த இரண்டு வகைமைகளிலும் நாம் எழுதுவதற்கு இன்னும் நிறைய நூல்கள் காத்திருக்கின்றன.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...