Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சூரிய வணக்கமும் புரூஸ் லீயும்




இன்று ஒளிபரப்பான சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் நான் பேசினது நன்றாய் இருந்தது பல நண்பர்கள் கூறினார்கள். எனக்குத் தான் பேசி முடித்த பின் அவ்வளவாய் திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால் படப்பிடிப்புக்கு முன் அது புருஸ் லீ பற்றின இரண்டு நிமிட பைட்டாக தான் இருக்கும் என நினைத்து போயிருந்தேன். என்னுடைய “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலைக் கூட முழுக்க புரட்டிப் பார்த்து விட்டு செல்லவில்லை. அங்கு போன பிறகு தான் அது சூரிய வணக்கத்துக்கான முழுபேட்டி என உணர்ந்தேன். சரி நினைவில் இருப்பதை வைத்து பேசலாம் என எப்படியோ ஒப்பேற்றி விட்டேன். ஆனால் சில நேரம் அரைகுறை தயாரிப்புடன் பேசுவது நன்றாய் அமைந்து விடுகிறது.

 இன்னொரு விசயம். இந்நிகழ்ச்சியில் என்னை பேச அழைத்ததற்கு நான் எழுதிய ”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” தான் பிரதான காரணம். அதை நிகழ்ச்சி முழுக்க பின்னணியில் காட்டினார்கள். நான் எழுதிய நூல்களில் நான் அதிகம் பொருட்படுத்தாது இந்நூல் தான். நான் அதற்கு ஒரு கூட்டம் நடத்தவில்லை. புரொமோட் செய்ய முயலவில்லை. ஆசைக்காகவும் தனிப்பட்ட பொழுதுபோக்குக்காகவும் தான் அதை எழுதினேன். இந்நூலை எழுதும் தூண்டுதல் மிக எதேச்சையாக கிடைத்தது. அதற்கு முன் நான் புரூஸ் லீயை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. ஒருமுறை எஸ்.ராவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் அறையில் இருந்த பட சி.டிக்களில் புரூஸ் லியின் படங்களும் இருந்தது கண்டு வியப்புற்றேன். எஸ்.ராவே புரூஸ் லீயின் படங்களை முக்கியம் என நினைத்து தன் நூலகத்தில் வைத்திருந்தால் அவர் உண்மையில் எப்படியான கலைஞன் எனும் கேள்வி எழுந்தது. நான் எஸ்.ராவிடம் இது பற்றி கேட்கவில்லை. வீட்டுக்கு வந்த பின் அது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பிளிப்கார்ட்டில் புரூஸ் லீ பற்றிய சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். அப்போது தான் எனக்கு அவரது பல புது பரிமாணங்கள் தெரிய வந்தன. அவரது சண்டைக்கலையின் தத்துவ விளக்கங்கள், அவரது வாசிப்பு, ஜென் மீதான அக்கறை, சண்டைக்கலையை அவர் வாழ்க்கைக்கலையாக பார்த்தது, அவரது வாழ்க்கையின் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், போராட்டங்கள், இறுதியான வீழ்ச்சி என பல விசயங்கள் என்னை கவர்ந்தன.
 நம்மூரில் இலக்கிய எழுத்தாளர்கள் சினிமா ஐகான்கள் பற்றி புத்தகம் எழுதும் மரபு இல்லை. அதனால் புரூஸ் லீ பற்றி ஒரு நூல் எழுதலாம் என்று தோன்றினதும் மிகுந்த தயக்கத்துடன் மனுஷ்யபுத்திரனுடன் கூறினேன். அவர் உடனே என்னை மிகவும் ஊக்குவித்தார். அதன் பிறகு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மளமளவென வேலையில் இறங்கினேன். தற்காப்பு கலைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் பொதுவாக இவ்வகுப்புகள் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள என் வீட்டருகே சிவபாலன் எனும் மாஸ்டர் நடத்தும் வகுப்பில் சேர்ந்தேன்.
மாஸ்டர் சிவபாலன்

இஷின்ரியு கராத்தே அவரது ஸ்டைல். அவர் தோன்றினால் மட்டுமே கற்றுத் தருவார். பெரும்பாலான நேரம் நான் பிற மாணவர்கள் பயில்வதை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் எப்போதாவது என்னிடம் கவனம் காட்டி கற்றுத் தரும் போது அவர் எவ்வளவு சிறந்த ஆசிரியர் என உணர்ந்து கொண்டேன். அந்த வகுப்புகளுக்கு சென்றது, கவனித்தது எனக்கு புத்துணர்வூட்டும் அனுபவம். புத்தகத்துக்கும் மிகவும் பயன்பட்டது. அந்த ஆறு மாதங்கள் நான் முழுக்க முழுக்க புருஸ் லீ மற்றும் குங்பூ பற்றி படிப்பது, படங்கள் பார்ப்பது என செலவழித்தேன். இலக்கியம், கோட்பாடு, சமூகம், அரசியல், தத்துவம் ஆகியவற்றில் இருந்து விலகி இன்னொரு ஏரியாவில் இப்படி பயணிப்பது உற்சாகமாய் இருந்தது.
 பிரசுரத்தின் போது நிறைய படங்கள் சேர்க்க வேண்டி இருந்ததால் மிகுந்த கவனத்துடன் பிழை திருத்தவும் பக்க அமைப்பை சரி பார்க்கவும் வேண்டி இருந்தது. என்னை விட பக்கங்களை அமைத்த செல்வி அபாரமாய் வேலை பார்த்தார். நான் எடுத்துக் கொடுத்த பக்கங்கள் போதுமான ரெசலூஷனில் இல்லாததால் பதிப்பில் சரியாய் வராது, அதனால் எடுத்து விடலாமா என முதலில் கேட்டார். நான் எப்படியாவது படங்களை சேர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டேன். பிறகு நிறைய முயற்சி செய்து படங்கள் நன்றாய் வரும்படி செய்தார். ஒரு சின்ன புத்தகம் வெளி வருவதன் பின்னால் எவ்வளவு வேலை இருக்கிறது என குறிப்பிடத் தான் இவ்வளவும் சொன்னேன்.
 நான் ஒரு ஜாலி முயற்சியாய் செய்தது என்றாலும் என் புத்தகங்களில் பரவலாய் வாசிக்கப்பது ”புரூஸ் லீ சண்டையிடாத சண்டைவீரன்” தான். ஏனென்றால் பிரபலங்கள் பற்றி சீரியஸாய் எழுதப்படும் நூல்களுக்கு என்று ஒரு தனி தேவை உள்ளது. அதே போல தீவிரமான இலக்கியவாதிகள் பற்றி எளிதாய் சுவாரஸ்மாய் எழுதப்படும் நூல்களுக்கும் ஒரு பெரிய தேவை உள்ளது. உயிர்மையில் எஸ்.ரா எழுதி வரும் “செகாவ் வாழ்கிறார்” புத்தகமாய் வெளிவரும் போது மிகப்பெரும் வரவேற்பு பெறும். அவரது சிறந்த நூல்களில் ஒன்றாய் அது நிச்சயம் இருக்கும். இந்த இரண்டு வகைமைகளிலும் நாம் எழுதுவதற்கு இன்னும் நிறைய நூல்கள் காத்திருக்கின்றன.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...