Skip to main content

புரிதல் நோக்கிய பயணம் (”கால்கள்” விமர்சனம்) – எம்.ராஜா




 ஒரு வெள்ளைத் தாளில் சின்னக் கருப்புப் புள்ளியை வைத்து, இந்தத் தாளில் என்ன தெரிகிறது என்று கேட்டால், பெரும்பாலானோர், “ஒரு கருப்புப் புள்ளி தெரிகிறது” என்று தான் சொல்வர்.  ஏன். ஒரு கருப்பு புள்ளி, நம் கவனத்தை சுற்றியிருக்கும் வெள்ளைத் தாளில் இருந்து குவிக்கிறது. இந்தக் குவியல் நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சாரப்படுத்த தேவையான மன நிலை.  ஆனால், முழுமையற்றது.  உள்ளதை உள்ளபடி பார்க்கும் வழக்கமுள்ள ஒரு சிலரால் மட்டுமே, “ஒரு வெள்ளைத் தாளில், சின்னக் கருப்புப் புள்ளி இருக்கிறது”, என்று சொல்ல இயலும். இந்த இரண்டு பார்வைகளுக்கும் உள்ள வித்தியாசம் பெரிது.

இதை மனதில் வைத்துக் கொண்டு ஒன்றை யோசித்துப் பாருங்கள். உடல்சிதைவுற்றவர்களை, பெரும்பாலானோர் அவர்களது உடல்குறையைக் கொண்டு மாத்திரமே அடையாளப்படுத்துவது இந்த மன நிலையின் வெளிப்பாடு.  அறியாமையில் இருந்து விளையும் ஒரு வன்முறை.  இந்த வன்முறை கேலியாக, பரிவாக, அருவருப்பாக, ஒதுங்கிப் போகும் மனோபாவமாக, பன்முகம் கொண்ட பிணியாக நம் சமூகத்தில் உறைந்துள்ளது.  மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கிடைக்கக் கூடிய  எளிய அங்கீகாரங்களைக் கூட, உடல் சிதைவுற்றவர்கள் பெற தினமும் போராட வேண்டி உள்ளது.  உடல் சிதைவுற்றவர்களின் பார்வையில், அவர்களது தினசரி போராட்டங்களை மிகையுணர்ச்சி இன்றி, சித்தரிக்கும் முதல் தமிழ் நாவல், கால்கள்.

இந்த நாவலின் மையப்பாத்திரமான மதுக்க்ஷரா மற்ற 19 வயதான கல்லூரிப் பெண்களைப் போன்றவள் அல்ல.  இலக்கியம் படிக்கிற அறிவுஜீவி.  தன் வாழ்க்கையை தர்க்கப் பூர்வமாக புரிந்து கொள்ள முயல்பவள்.  சின்ன வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, இடது கால் முற்றிலும் வலுவிழந்து போய் விட்டது.  நடக்க கனமான கேலிப்பர் கருவிகளை அணிய வேண்டும்.  அணிந்தாலும் நடப்பது சிரமமே.   மதுக்ஷராவின் இந்த உடற்குறையே அவள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நிர்ணயிக்கிறது.  இந்த உடற்குறை நிர்ணயித்த உறவுகள், வாழ்க்கைச் சங்கடங்கள், சங்கடங்களைப் தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள ஒரு பதின்பருவப் பெண்ணாய் அவள் கொள்ளும் முயற்சிகள் என்ற மூன்று மைய இழைகளைக் கொண்டு இந்தப் புனைவை நெய்துள்ளார், ஆசிரியர் அபிலாஷ். 


நாவலின் முதலிழை, மதுவுக்கும் அவள் பெற்றோருக்கும் இடையேயான உறவு. மது, தன் பெற்றோர்களிடம் – குறிப்பாக தன் அப்பாவிடம் – விட்டேத்தியாக நடந்து கொள்கிறாள்.  தன் உடல்குறைக்குக் காரணம், சின்ன வயதில் பெற்றோர்கள் தனக்கு போலியோ தடுப்பூசி போடாதது தான் என்ற நம்பிக்கை தான் மதுவுக்கும் அவள் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவின் முக்கியச் சிடுக்கு.  மதுவின் தந்தை தன் குற்ற உணர்வை, ஊரிலிருக்கும் எல்லா ஆயுர்வேத வைத்தியர்களின் எண்ணைப் பிளிச்சலையும், பத்தியச் சோறையும் மதுவுக்கு அளிப்பதின் மூலம் தீர்த்துக் கொள்ள முயல்கிறார்.  அவரது சுயகழிவிரக்கம் அவ்வப்போது எம் ஜி ஆர் பாடல்களாக, குடித்த பின்னர், பீரிட்டெழுந்து குடும்பத்தையே நனைக்கிறது.  சுயகழிவிரக்கத்தில் பாட்டுப் பாடி தீர்த்துக் கொள்ள முயல்கிறார்.  மதுவின் அம்மா, பூசை/புணஸ்காரங்களில் ஈடுபடுவதின் மூலம் தன்னைச் சமாதனப் படுத்திக் கொள்ள முயல்கிறார்.  அவரது வாழ்க்கை குருகி விடுகிறது – “சூம்பிப் போன இடது கால் தான் அம்மா”,  என நினைக்கிறாள் மது.  குற்ற உணர்வால் பிணைக்கப்பட்ட இந்த உறவை, அபிலாஷ் அற்புதமாக, அங்கதம் நிறைந்த மொழியில் விவரிக்கிறார். 

பெற்றோர்களை அடுத்த நிலையில் இருக்கும், நெருங்கிய உறவுகளிடமும் கூட அவர்களைச் சீண்டிப் பார்க்கும் தன்மையுள்ளவளாகத் தான் மது சித்தரிக்கப்படுகிறாள்.  அவள் ஏன், அப்படி நடந்து கொள்கிறாள் என்பது நாவலின் ஒரு முக்கியச் சரடு.  தன் உடல்குறையின் காரணமாக உலகம் அளிக்கத் தயாராக இருக்கும் எந்தச் சலுகையையும் மது ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை.  அச்சலுகைகளை வழங்கும் சமுதாயத்தை அவநம்பிக்கையுடன் பார்க்கிறாள். அச்சலுகைகளைக் கோபத்துடன் புறக்கணிக்கிறாள்.  உதாரணமாக, அவளுக்கு இலவசமாக ஆட்டோ ஒட்டுகிறேன் என்று சொன்னவரிடம், “எனக்கு இலவசமாக வேண்டாம்.  உரிய காசு தருவேன்” என்று முதலில் சண்டையிடுகிறாள்.  ஆட்டோக்காரர், “சரிம்மா 60 ரூபாய் கொடு,” என்று கேட்கும்போது, “என்ன 60 ரூபாயா? என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? பாதி தான் தருவேன்” என்று ஆட்டோக்காரரிடம் சண்டை போடுகிறாள்.  தாமதமாக வகுப்பிற்கு வந்தால், அட்டெண்டன்ஸ் கொடுக்கும் பேராசிரிகளின் வகுப்புகளுக்கு இன்னும் தாமதமாகச் செல்கிறாள்.  கறாராக, ஆப்செண்ட் போட்டு விடும், மதுசூதனன் எனும் பேராசிரியரின் வகுப்பிற்குச் சரியான நேரத்தில் செல்கிறாள்.  மது, உலகிடம் கோருவதும் அதுவே.



இந்த நாவலின் இரண்டாவது சரடு, இளம்பிள்ளை வாதத்தால் (போலியாவால்) பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உள்ள நடைமுறைச் சங்கடங்களை – தாயின் உதவியின்றி வெளிக்குப் போவதில் இருந்து, வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது வரை- எந்த சுய பச்சாதபமும் இல்லாமல், இயல்பாக முன்வைப்பது தான். அவளது முதல் பஸ் பயண அனுபவம், முதன் முதல் சேலை கட்டிய அனுபவம், முதல் ஸ்கூட்டர் ஓட்டிய அனுபவம், எல்லாமுமே ஒரு சாகசச் செயலை செய்தவனுக்கு இருக்கும் நினைவைப் போல் ஆழமாக அவளுள் பதிந்து விடுகிறது. அதே சமயம், இதையெல்லாம் செய்ய எத்தனிப்பதில் உள்ள முஸ்தீபுகள் உருவாக்கும் சலிப்பும் இருக்கிறது.  உடம்பால் செய்ய இயலாத ஒன்றை, மனது உதாசீனப் படுத்த முயல்கிறது.  தன் புத்தி சாலித்தனத்தால் வாழ்க்கையைப் பிரித்துப் போட்டு, அலசி, புரிந்து கொள்வதன் மூலம் வெல்ல நினைக்கிறது.  மதுவின் நண்பன், கார்த்திக், “ஆபரேஷன் கத்தியை வைத்து காய் நறுக்க முயற்சிக்கிறாய்”, என்று சுட்டிக் காட்டுகிறான். அவள் எவ்வளவு தர்க்கரீதியாக தன் உடல்குறைவைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தாலும், அவள் கால்கள் தரும் சிக்கல்கள் அவளுக்கு, உதாசீனப் படுத்த முடியாத பூதாகாரமான ஒன்றாக இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த நாவலின் இன்னொரு முக்கிய இழை, ஒரு பதின் பருவத்துப் பெண், தன்னை, உலகில் தன் இடத்தைக் கண்டடைய கொள்ளும் முயற்சிகளை பற்றியது (coming of age story).  உடல் ரீதியாக, மதுவின் பதின் பருவத்தில் அரும்பும் காமத்தை, கார்த்திக்குடன் கொள்ளும் பதின் பருவக் காதலை, ஒரு பூவை வருடும் கையின் மென்மையுடன் சித்தரித்திருக்கிறார் அபிலாஷ்.  இயல்பாக அரும்பும் காமத்தையும், அது எப்படி தன் வாழ்வில் பரினாமிக்க இயலும் என்ற ஆழ்மனக் கேள்வியையும், பல கனவுகள் வாயிலாக சித்தரித்திருத்திருக்கிறார்.  இந்தக் கனவுகள், எளிதில் புரிந்து கொள்ள முடியாதவையாக இருந்தாலும், மனதில் ஒரு அபாரமான படிமத்தை (image) உருவாக்குகின்றன.  நடைமுறை தளத்தில், பதின் பருவத்துக்கே உரித்தான நிச்சயத்துடன் மது கொண்டிருக்கும் முடிவுகளை, வாழ்க்கை தொடர்ந்து பரிசோதிக்கிறது.  உதாரணமாக, மதுவிடம் யாராவது அவளது காலைப் பற்றிக் கேட்டால் கோபமடைகிறாள்.  அது ஏன் எனக் கேட்கும் கார்த்திக்கிடம், “என்னோட காலை விசாரிக்கிறவன் என் காலைப் பத்திக் கவலைப்படல. அவன் தன் காலைப் பத்தித் தான் முழுக்க யோசிக்கிறான்.  என்னோட காலோட ஒப்பிட்டுப் பார்க்க அவனோட காலைப் பத்தி நிறைவு கொள்றான். பூரிப்படையிறான்.  அவன் என்னோட காலைப் பயன்படுத்தி சுயமைதூனம் பண்றான்.  நான் இதை ஏன் அலவ் பண்ணணும்?  I can’t be a dildo for this fucked up society”, என்று கோபத்துடன் தன் தரப்பை வலுவாக முன் வைக்கிறாள்.  அந்த வாதத்தில் உண்மையிருந்தாலும், அது சமுதாயத்தைப் பற்றிய ஒரு ஆழமான அவ நம்பிக்கையை பூரணமாக உள் வாங்கிய, வெறும் தர்க்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நெகிழ்வற்ற வாதம். அதே போல், தன் பேராசிரியர் மதுசூதனனிடம் அவர் பையன் பாலுவுக்குக் கொடுக்கும் சிகிச்சையின் தரம் சரியில்லை என்று தயங்காமல் குற்றம் சாட்டுகிறாள் மது.  பேராசிரியர் மதுசூதனனும் சரி, நண்பன் கார்த்திக்கும் சரி, வாழ்க்கையின் கஷ்டத்தில் ஆன்மிகத்தை நாடுவதை, கொஞ்சம் இளப்பமாகத் தான் பார்க்கிறாள்.  ஆனால், அதே மது, தன் சுய அனுபவத்தில் வலியைப் பற்றிப் புரிந்து கொள்ளும் போது, மதுசூதனனிடம் தான் நடந்து கொண்டது தவறோ என மறுபரிசீலனை செய்கிறாள்.  தன் வாழ்க்கையின் ஆதாரமாக இருந்த கோபத்தின் அடிப்படையிலே கூட, ஒரு நிச்சயமற்ற தன்மை இருப்பதை அவள் புரிந்து கொள்ளும் போது (அது எப்படியென்று நாவலில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்), தர்க்கத்தின் எல்லையை உணர்கிறாள்.   அந்தப் புரிதல் அளிக்கும் விடுதலை தான் மது வளர்ந்தடையும் இடம்.  கதையெங்கும், போகிற போக்கில், நிறைய தத்துவ விவாதங்கள் – குறிப்பாக கார்த்திக்கிடம்/கண்ணனிடம் மது செய்யும் விவாதங்கள் – கதையின் போக்கோடு ஒட்டி இருப்பதால்- சுவாரசியமாக, சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.  இந்த விவாதங்களை, இன்னும் கொஞ்சம் விரித்து, அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று எண்ணத் தூண்டபவை. 

இந்த நாவலின் குறைகளென சிலவற்றைக் கூறலாம்.  அமைப்புரீதியாக, இந்த நாவலில் 100க்கும் மேற்பட்ட பாத்திரங்களை அவர்களது குணாதியசங்களோடு அறிமுகப்படுத்தும் நாவலாசிரியர், வெகு சில பாத்திரங்களை – மதுவின் அப்பா, கார்த்திக், மதுசூதனன், கண்ணன், சேர்த்தலம் வைத்தியர் – மாத்திரமே ஆழமாகப் படைத்துள்ளார்.   நல்ல விவரணைகளுடன் ஆரம்பிக்கும் பல பாத்திரங்கள் – பிளேடு, ஈஎம்எஸ், பினாய், ஷீனா, ஹரிஹர அய்யர், அப்பு டெய்லர், மார்க்கண்டேயன், சுமலதா, கணேசன் என – துலங்கவில்லை.  மதுவின் அப்பா, வெகு சீக்கிரமே ஒரு கோட்டுச்சித்திரம் (caricature)  போலாகி விடுகிறார்.  அது போல், மது கல்லூரியில் இலக்கிய இதழ் தயாரிப்பதில் ஈடுபடுவதைப் பற்றிய தகவல்கள் - சினிமாவில் கதைக்கு சம்பந்தமில்லாத வடிவேல்/கவுண்டமணி நகைச்சுவை ட்ராக் போல - சுவாரசியமாக இருந்தாலும் தவிர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.  இந்த நாவலின் அளவை ஒரு தேர்ந்த எடிட்டர் துணை கொண்டு, குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமான, ஆழமான நாவலாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.  உயிர்மை பதிப்பகத்தின் நாவல்களில், தட்டச்சுப் பிழைகள் இருக்காது என்ற என் நம்பிக்கை, இந்த நாவலில் கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டது.  என்னத்தைச் சொல்ல?


எல்லா திசைகளிலும், நிதானமாக பரந்து, விரிந்து செல்லும் இந்த நாவல், வாசகனின் கவனத்தையும், நுண்வாசிப்பையும் கோருகிறது. இந்த நாவலின் களமும், உளவியல் சார் கதை சொல்லும் விதமும், அபிலாஷை தமிழில் முக்கியமாக கவனிக்க வேண்டிய, தனித்துவம் மிக்க இளம் எழுத்தாளராக முன்னிருத்துகின்றன. 

*2014 யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்.
ன்றி: http://baski-reviews.blogspot.in/2014/12/blog-post.html

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...