முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீகார் தேர்தல் முடிவு சொல்வதென்ன?

பீகார் தேர்தலில் பா.ஜ.க பெற்றுள்ள பெரும் தோல்வி பற்றி சில செய்திக் கட்டுரைகள் படித்தேன். பா.ஜ.க மதவாத, பிரிவினைவாத பிரச்சாரம் செய்ததால் தோற்றது எனத் தான் பொதுவாக பல கட்டுரையாளர்களும் சொல்கிறார்கள். இத்தோல்வி ஒரு பலத்தமான அடி எனும் மீடியா கணிப்பு சரி தான். அடுத்து வரப் போகும் தமிழக, மேற்கு வங்காள தேர்தல்களில் எப்படியும் பா.ஜ.கவுக்கு எலும்புத் துண்டுகளே கிடைக்கும். அஸாம் தேர்தலில் பா.ஜ.க நிமிர வாய்ப்புண்டு என்கிறார்கள். எப்படியும் மீண்டும் ஒரு வலுவான தேர்தல் வெற்றி கிடைக்க பா.ஜ.க அடுத்து இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


 பீகார் தேர்தலில் மிகவும் மும்முரமாய் பிரச்சாரம் செய்த மோடி மக்களிடம் தன் அபிமானத்தை இழந்து விட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிரதமர் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து மைக் பிடித்து உள்ளூர் கட்சியை போட்டிக்கு இழுப்பதன் சிக்கல் இது. நம் வரலாற்றில் எந்த பிரதமரும் இந்தளவுக்கு மாநில பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. மோடி கட்சித் தலைவரா அல்லது தொண்டரா எனும் குழப்பம் ஏற்படுகிறது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கிழித்த கோட்டை தாண்டாத ஒரு பள்ளி மாணவனைப் போன்றே அவர் நடந்து கொள்கிறார். அவர் அதிகாரங்களை முழுக்க தன்னிடத்து மையமாக்கிய சர்வாதிகாரி என்றார்கள். ஆனால் கட்சியின் துக்கடாக்களை கூட அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஏதோ மாவட்ட செயலாளர் போல் கூப்பிட்ட இடங்களில் எல்லாம் போய் கலந்து கொண்டு சின்ன தலைவர்களுடன் மல்லுக்கு நின்று மண்ணைக் கவ்வுகிறார். இதனோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் தலைமை மாநில தேர்தல் பிரச்சாரங்களை இன்னும் கவனமாய் கௌரவமாய் கையாண்டதாய் கூறலாம். காங்கிரஸின் மாநில தேர்தல் தோல்விகளை யாரும் சோனியாவின் முகத்தில் பூசப்பட்ட கரியாக காணவில்லை. கட்சி மீது வாஜ்பாய்க்கு இருந்த பிடிமானமும் அதிகாரமும் கூட மோடிக்கு உள்ளதா என்பது சந்தேகம் தான்.

மோடியின் பிம்பம் நிஜமாகவே சரிந்து விட்டதா? பழைய நகை போல் அவர் சற்று மங்கி விட்டார். முக்கியமான காரணம் அருண் ஷோரி சொல்வது போல மோடியால் தான் முன்வைத்த பொருளாதார சீர்திருத்த/ முன்னேற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பது. பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போலத் தான் இப்போதும் உள்ளது. தேசிய அளவில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை துவங்குவதிலோ புது தொழில்களை ஊக்குவிப்பதிலோ மோடிக்கு கவனம் இல்லை. உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு செலவு செய்ய காசும் இல்லை தான். அது battery saving modeஇல் இருக்கிறது. நிதியை செலவு செய்யாமல் சிக்கனம் பிடிக்கிறது. நிதியை செலவிடாவிட்டால் மக்கள் அதிக வறுமையில் மூழ்குவார்கள். செலவிட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். குரங்கின் வால் ஆப்பில் மாட்டியது போல் தான்.

 மோடி பிரதமாராகும் தருணத்தில் சொர்க்க ராஜ்ஜியம் மண்ணில் வரும் என புகழ்ந்தார்கள். அப்போது நான் உயிர்மையில் எழுதிய கட்டுரையில் (என்ன செய்ய போறீங்க மிஸ்டர் மோடி?) நமது பொருளாதார மந்தநிலை மாறாமல் தொடரும் என்றிருந்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அசோகமித்திரனை சந்தித்த போது “இப்போ தானே ஆட்சிக்கு வந்திருக்காங்க. இப்பவே தீர்ப்பெழுதினா எப்பிடி?” என்றார். ஆனா இப்போது போதுமான காலம் கடந்து விட்டது. இந்த தேசத்தில் எதுவும் மாறவில்லை. மாற்றத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் எதையும் மாற்றாவிட்டால் மக்கள் ஏமாற்றம் கொள்வார்கள் தானே? இன்றும் கிராமங்களில் வேலையில்லை. நகரங்களில் வேலையுண்டு. ஆனால் கிடைக்கிற சம்பளத்தில் சாதாரணமாய் வாழவே தடுமாற வேண்டி உள்ளது. நாம் ஒரு மூட்டை நிறைய பணத்துடன் ஓட்டலில் சாப்பிட போகும் காலம் விரைவில் வரும் என இயக்குநர் ராம் ஒரு பேட்டியில் சொன்னார். அக்காலம் வந்து கொண்டே இருக்கிறது. மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது மோடியை இன்னும் நம்பிக்கை நாயகனாக காட்டி வாக்கு வாங்க முடியாது என்பதையே பீகார் தேர்தல் காட்டுகிறது.

பீகார் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் பா.ஜ.க பிரச்சாரத்தை பொருளாதார வளர்ச்சியில் இருந்து மதவாதம், பிரிவினைவாதம் நோக்கி நகர்த்தியதாகவும் அதுவே பெரும் சறுக்கலுக்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். அவர்களின் ’பொருளாதார மாற்றம்’ பிரச்சாரம் நடப்பில் சொதப்பியதை உணர்ந்து கொண்டதால் தான் அவசரமாய் பிரிவினைவாதத்தை கையில் எடுத்தார்கள் என புரிந்து கொள்கிறேன். மற்றபடி மதவாதம், இட ஒதுக்கீடு ஆகியவை முழுமையான தோல்வி காரணங்களாய் இருக்காது. ஏனென்றால் போன முறை பா.ஜ.க வென்ற போது அது ஒரு இந்துத்துவா கட்சியாகத் தானே இருந்தது? இம்முறை பீகார் மக்கள் நித்தீஷை நம்ப தலைப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான்.

 ஆட்சிக்கு வந்த பின் பா.ஜ.க தன்னை எவ்விதத்திலும் நிரூபிக்காததை ஒரு முக்கிய காரணமாய் சொல்லலாம். அதே போல மதவாத ஆயுதத்தை எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாய் பிரயோகிக்க முடியாது என்பதையும் பா.ஜ.க இத்தோல்வியில் இருந்து புரிந்து கொண்டிருக்கும்.
ஒரு மாநிலத்தேர்தலின் முடிவுகளை வைத்து ஒரு கட்சி பலவீனமாகி விட்டதாய் கணிப்பதும் தவறு தான். தொடர்ந்து வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வேலையே செய்யாமல் இருந்தால் இறுதியில் என்ன கதியாகப் போகிறார்கள் என்பதற்கு மக்கள் கொடுத்த ஒரு சிறு எச்சரிக்கை என புரிந்து கொள்ளலாம். விரைவில் பொருளாதாரம் சீரடையாவிட்டால், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றம் வராவிட்டால் மோடி அடுத்த முறை பிரதமராவது சாத்தியமில்லை. இஸ்லாமியர்கள் மிக மிக சிறுபான்மையினராய் இருப்பவர்கள். அவர்களை ஒரு பொது எதிரியாய் இந்துக்கள் கருதுவதற்கான விகிதாச்சார பிரதிநுத்துவம் கூட அவர்களுக்கு இல்லை. இங்குள்ள பெரும்பான்மை இந்துக்களுக்கு இஸ்லாமியர் மீது அச்சமோ வெறுப்போ இல்லை. விதிவிலக்காய் மேற்தட்டு இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் போன்ற சில மாநிலங்களை சொல்லலாம். பொருளாதார வளர்ச்சி எனும் கனவு பலிக்காது எனத் தெரிந்ததும் பா.ஜ.க இல்லாத மத எதிரியை கட்டமைத்து அரசியலில் அறுவடை செய்யப் பார்ப்பது அபத்தமான வியூகம். ஒரு மத தலைவராக மோடி மீது பெரும்பான்மை இந்துக்களுக்கு இன்னும் வசீகரம் இருக்கலாம். ஆனால் மதத்தலைவருக்கும் மதவாதத் தலைவருக்கும் வித்தியாசம் உண்டு.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...