முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அ.மாதவனுக்கு சாகித்ய அகாதெமி விருது



2015ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் அ.மாதவனுக்கு வாழ்த்துக்கள். அவரது ”கிருஷ்ணப்பருந்து” ஒரு பிராயிடிய புதினம். பிராயிடின் sublimation கோட்பாட்டை நாவல் வடிவில் பரிசீலித்திருப்பார். சொல்லப்போனால் அந்நாவல் வயதான ஒருவரின் “மோகமுள்”. இளம் வயது பாபுவுக்கு பதில் ஒரு முதிர்ந்த ஒரு மனிதர். பாபு வயதில் மூத்த பெண் மீது இச்சை கொள்கிறான். இவர் தன்னை விட வயதில் குறைந்த இளம்பெண்ணை விரும்புகிறார். இரண்டு பேரும் தம் வயதுமீறின காமத்தை அடக்கிக் கொள்கிறார்கள். பாபுவுக்கு அது இசை மீதான பெருங்காதலாகவும் இவருக்கு அது அன்பும், கருணையுமாய் சமூகம் ஏற்கத்தக்க வடிவெடுக்கிறது (sublimation). கச்சிதமான வடிவில், மென்மையான அங்கதத்துடன் கூடிய எண்பதுகளுக்கே உரித்தான பாணியில் சில நல்ல சிறுகதைகளையும் அவர் எழுதி இருக்கிறார்.


அ.மாதவனை விட மேலான படைப்பாளிகளாக நான் கருதும் எஸ்.ரா மற்றும் ஜெயமோகனுக்கு “நரைகூடி கிழப்பருவம் எய்தும்” முன் சாகித்ய அகாதெமி விருது கொடுத்து விட வேண்டும். அதே போல் நாம் போதுமான அளவு அங்கீகாரிக்காத சாதனையாளர்கள் நம் கவிஞர்கள். சொல்லப்போனால் நம் புனைவெழுத்தாளர்களை விட நம் கவிஞர்கள் மிகச்சிறந்த படைப்பாளிகள் (இதை என்னிடம் ஒருமுறை அசோகமித்திரனே ஒத்துக் கொண்டார்). தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், யுவன் (யவனிகா ஸ்ரீராம், என்.டி ராஜ்குமார், குட்டிரேவதி என இப்பட்டியல் நீள்கிறது) போன்றோர் இவ்விருதை பெற புனைவெழுத்தாளர்களை விட நிச்சயம் தகுதியானவர்கள். பொதுவாய் விருது கொடுப்பதில் புனைவுக்கு மட்டும் கொடுக்கப்படும் மிகை கவனத்தை அ.ராமசாமி சமீபத்தில் கண்டித்து எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது. பல அற்புதமான கோட்பாட்டு மற்றும் ஆய்வுக் கட்டுரைகள், சமூகவியல், மொழியியல் நோக்கிலான அலசல் நூல்களை எழுதியவர்களையும் எத்தனைக் காலம் இருட்டிலே வைத்திருக்கப் போகிறோம்? ராஜ் கௌதமன், ரவிக்குமார், தமிழவன், அ.கா பெருமாள் போன்றவர்களை என்று கௌரவிக்க போகிறோம்? ரவிக்குமார் அளவுக்கு ஆழமும் செறிவும் கொண்ட உரைநடை கொண்டவர்களை மிக அரிதாகத் தான் பார்க்க முடியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் அவர் பங்கேற்ற கருத்தரங்கில் வாசித்த உரையை சமீபத்தில் வாசிக்கப் பெற்றேன். எவ்வளவு நுணுக்கமாய், துல்லியமாய், கூர்மையாய் தத்துவ ஆழத்துடன் அவரால் எழுத முடிகிறது என வியந்து கொண்டே இருந்தேன். ஒரு சிறு உரையே இப்படி என்றால் அவரது கட்டுரைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் அளவுக்கு ஐரோப்பிய கோட்பாட்டு நூல்களை நுணுக்கமாய் அறிந்து கொண்டவர்கள் தமிழில் மிக மிக குறைவு. சமீபத்தில் பேஸ்புக்கில் அவர் வரையும் கோட்டோவியங்கள் பார்க்கும் போது இம்மனிதர் எதைத் தொட்டாலும் மின்னுகிறதே என தோன்றியது. ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் தன் ஆற்றலையெல்லாம் அரசியலில் திருப்பி விட்டது நிச்சயம் ஒரு இழப்பு தான்.
பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு விருது என்றில்லாமல் புனைவு, கவிதை, உரைநடை என பிரித்து மூன்று சாகித்ய அகாதெமி விருதுகள் கொடுத்தால் இந்த சாதனையாளர்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஓரளவுக்கு கவர் செய்ய முடியும். நடக்கும் என நம்புவோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...