முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்தோசைக்காரரும் டாஸ்மாக் எதிர்ப்பாளரும்



நேற்றிரவு ஒரு சின்ன கடையில் கல்தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடை முதலாளி தன் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக பார்க்கும் அந்த பாணி எனக்கு போகன் சங்கரை நினைவூட்டியது. அவர் சும்மா வானத்தை பார்வையிடும் பாணியில் லேசாய் முகவாயை தூக்கி பார்த்து தான் “கல் தோசை ரெண்டா போட்டிருட்டுமா?” என்று கேட்கையில் பல சிறுபத்திரிகை எழுத்தாளர்களை நினைவுபடுத்தினார். அது எப்படியோ போகட்டும். அவருக்கு ஒரு பழக்கம். தெரிந்தவர்கள் யாராவது கடைக்கு வந்தால் வராத ஒருத்தரைப் பற்றிக் கேட்பார். ஒரு பத்து வயது சோனிப் பெண் நைட்டி அணிந்து துள்ளலாய் குதித்தபடி பார்சல் வாங்க வந்தாள். அவளிடம் “ஏன் உன் அக்கா வரல? என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அவளோ “இது போல நூற்றுக்கணக்காண ஆண்களை பார்த்தாச்சு” என்கிற கணக்கில் ஒரு பாவனை காட்டி விட்டு பழையபடி நின்ற வாக்கி ஆடிக் கொண்டிருந்தாள்.

 அப்போது வாடிய கீரையை போல் ஒரு பெண் வந்தாள். மிகவும் சின்ன வயதில் திருமணம் கொடுத்திருக்க வேண்டும். 24, 25 இருப்பாள். ஆனால் ஒரு யுகம் திருமணம் எனும் செக்கில் ஓடிய அலுப்பும் இளைப்பும் தெரிந்தது. அவளிடமும் நம் சிறுபத்திரிகை தோசை கடைக்காரர் “ஏம்மா ஒரு வாரமா ஆளையே காணலே?” என்றார். அவள் தனக்கு நான்கைந்து நாளாய் ஜுரம் என்றும், இப்போது தான் உடல் தணிந்து வெளியே வந்திருப்பதாயும் சொன்னாள். நம் ஆள் எப்போதும் வராத ஆளைப் பற்றித் தானே பேசுவார். உடனே அவள் கணவனைக் குறிப்பிட்டு சொன்னார். “அவன் நேத்து கூட வந்து பீப் வாங்கிப் போனானே”. அந்த பெண்ணின் முகமே மாறி விட்டது. தன் கணவன் சரியாய் வேலைக்கு போவதில்லை, தினமும் குடித்து குடித்தே பணத்தை அழிக்கிறார், வீட்டையே கவனிப்பதில்லை என ஒரே புலம்பல். கடைக்காரர் புது வாடிக்கையாளர்களைப் பார்க்க நகர்ந்து விட்டார். கேட்க ஆள் இல்லை என்றாலும் அப்பெண் கணவனை இரைந்து திட்டிக் கொண்டிருந்தார். அடுத்து அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கினார். பத்தடிக்கு ”நாலு கடையிருந்தா குடிக்காம என்ன பண்ணுவாங்களாம்? குடியால கெட்டுப் போற குடும்பங்களுக்கு இந்த அரசு என்ன நிவாரணம் பண்ணப் போகிறது?” என வரிசை வரிசையாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். அவர் ஒரு கண்காணாத படக்கருவியை நோக்கி கருத்து சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரு நிமிடம் சன் நியூஸ் விவாத மேடையில் இருக்கிறோமோ எனும் எண்ணம் வந்து விட்டது. அவ்வளவு தெளிவாக சரளமாக தர்க்கரீதியாய் திட்டினார். பொதுவாக யார் வேண்டுமானாலும் யாரையும் காறித் துப்பலாம். ஆனால் அடுக்கடுக்காய் கருத்து சொல்வது ஒரு கலை என இத்தனைக் காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு. இந்த மீடியா யுகத்தில் இனி நிபுணர்கள் என தனியாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பொதுமக்கள் எல்லாரும் இனி நிபுணர்களே. மக்கள் இவ்வளவு criticalஆக மாறி வருவது ஒரு நல்ல விசயம்.
அது மட்டுமல்ல டாஸ்மாக் நடத்தி இப்படி பல குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் அரசு மீது கணிசமான பெண்களுக்குள் கடும் கோபம் நொதிக்கிறது. அரசும் ஆளுங்கட்சி சாராய ஆலை முதலாளிகளும் சம்பாதிக்கும் கோடிகள் ஒரு கீழ்த்தட்டு குழந்தையின் ஒரு வேளை உணவு, படிக்க வேண்டிய புத்தகம், நிம்மதியான சூழல், கல்விக்கான செலவு என ஒவ்வொன்றையும் பறித்து உருவான பணம். ஒருநாள் இந்த கோபம் கண்ணகியின் ஒற்றை முலையைப் போல் இந்த அரசை எரித்து சாம்பலாக்க போகிறது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...