முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செக்ஸ் என்பது செக்ஸ் அல்ல



Image result for indian girls holding hands
நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார்.

 மனிதர்களுக்கு தம்மை யாரும் நேரடியாய் பாராட்டவோ கொஞ்சவோ அவசியம் இல்லை. பகற்கற்பனை செய்வது மனிதனின் தனித்துவமான திறன். அப்போது அவர்கள் தம்மையே பல கற்பனை சூழல்களில் எதிர்கொள்கிறார்கள். அப்போது மேற்கண்ட விசயத்தை குழந்தை செய்யக் கூடும் என பிராயிட் சொல்கிறார். ஆனால் நாம் சிறுவயதில் இருந்தே கடுமையாய் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் அவர்களிடம் இருந்து இப்பழக்கத்தை அகற்றி விடுகிறோம். வளர்ந்த பின் இதை சமூகம் ஏற்கிற சைகைளாய் வெளிப்படுத்துகிறோம். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விசயத்தை கிளர்ச்சியுடன் சொல்லும் ஆண்கள் தன்னிச்சையாய் தம் வயிற்றையே தடவுவது, ஆண்மையை காட்ட விரும்புகிறவர்கள் தம் புஜங்களை, மயிரடர்ந்த மாரை வருடுவதை, தோற்றம் பற்றி விருப்பம் கொண்டவர்கள் முடியை தாமே கோதுவது ஆகியவற்றை காணலாம். இனிமேல் யாருடனாவது பேசும் போது அவர்களின் கைகளை கவனியுங்கள். உதட்டை அடிக்கடி நாவால் ஈரப்படுத்தி பேசுகிறவர்கள் உண்டு. பெண்களிடம் இது அதிகம் என்றாலும் ஆண்களிடமும் உண்டு.
 ஆண்களை விட பெண்கள் தம் மனநிலையை அதிகமாய் உடல்மொழியில் வெளிப்படுத்தக் கூடியவர்கள். தெருமுனையில் பெண்கள் நின்று பேசுவதைப் பார்க்க சின்ன வயதில் ஏதாவது நாடக கம்பனியில் பயிற்சி எடுத்திருக்கிறார்களோ எனத் தோன்றும். கால் மேல் கால் இட்டு பேசுவது, கூந்தலை விரல்களால் கோதிக் கொண்டே இருப்பது, அடிக்கடி நகைகளை தொட்டுப் பார்ப்பது ஆகியவற்றை பெண்களின் சைகைகளாய் குறிப்பாய் சொல்லலாம். சில பெண்கள் அடிக்கடி சேலையை அரை அங்குலம் தூக்கி விட்ட படி நடப்பார்கள். இறுக்கமாய் மேலாடை அணிந்தவர்கள் அதை அடிக்கடி கீழே இழுத்து விடுவார்கள். குட்டையாய் கீழாடை அணிந்த பெண்களின் அவஸ்தை தனியாக தெரியும். இதெல்லாம் அவர்களுக்கே தெரியாமல் அபோத மனதில் நடக்கிற விசயங்கள். நம்மையே அறியாமல் நெர்வஸாக இருக்கும் போது இதையெல்லாம் செய்கிறோம். தன்னம்பிக்கை தளும்பும் போது கூந்தலை வருடுவது, கால் மேல் காலிடுவது எல்லாம் செய்கிறோம்.
மகிழ்ச்சியை நம்முடைய உடல் மீது வெளிப்படுத்தும் இயற்கை விழைவை நாம் இன்னும் இழக்கவில்லை. சமூகம் நம்மை நமது மொழி மற்றும் இசை மற்றும் நடனம் போன்ற பண்பாட்டு வடிவங்கள் வழி இதைக் காட்ட கோருகிறது. ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. கூட்டமாய் செல்லும் போது கைகோர்த்துக் கொள்ளும் இளம்பெண்களை பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்துக் கொள்வேன். ஆண்களால் இது ஒரு போதுமே முடியாது. ஆனால் இதே பெண்கள் படித்து வேலை கிடைத்து திருமணமாகி சமூகத்தில் மேல் தட்டுக்கு நகர்ந்ததும் பிற பெண்களை சட்டென தொட்டுப் பேசும் பழக்கத்தை இழந்து விடுகிறார்கள். அதே போல ஆண்களைப் பற்றி பெண்கள் பேசும் போது கவனியுங்கள். நெருங்கிய தோழிகள் என்றால் கையை பற்றி வருடியபடி பேசுவார்கள். அல்லது ஆர்வத்தில் முகங்களை மிகவும் நெருக்கமாய் வைத்துக் கொள்வார்கள்.
செக்ஸ் என்பது உடலுறவுக்கான மட்டும் செயல் அல்ல. அதற்கு சமூக அரசியல் பரிமாணங்கள் உண்டு. சொல்லப்போனால் 90% நேரம் சமூக அரசியல் புலங்களில் தான் செக்ஸ் வெளிப்படுகிறது. பெரிய கூட்டம் நடுவில் ஒரு தலைவன் / நட்சத்திரம் தோன்றும் போது அவரைத் தொட்டுப் பார்க்கும் இச்சை மிக எளிதாக லட்சக்கணக்கானோருக்கு நிச்சயம் தோன்றுகிறது. அவருடைய தோல் ஒன்றும் தனியான தன்மை கொண்டது அல்லது என அனைவரும் அறிவோம். அவரது கருத்துக்கள், ஆட்டம், இசை அல்லது பிற செயல்பாடுகள் வழி அவரை முழுமையாய் அறிந்து கொள்ளவும் இயலும். ஆனாலும் ஒருமுறை அவரை தொட்டுப் பார்த்து விட்டால் நமக்கெல்லாம் அனுபூதி கிடைத்து விடுகிறது. ஒரு தலைவர் / நட்சத்திரத்தை நோக்கி லட்சோபலட்சம் கரங்கள் நீளுகின்றன. இதை எப்படி விளக்குவது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...