Skip to main content

முதல் குடிமகன்கள்



டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் நடந்த போது காவல்துறை குடிகாரர்கள் நிம்மதியாய் குடிப்பதற்காய் பாதுகாப்பு கொடுத்ததைப் பார்த்தோம். அதை வெட்கக்கேடு என விமர்சித்தோம். இது போன்ற சந்தர்பங்களில் போலீசாரின் நிலை உண்மையில் ரொம்பவே பரிதாபம்.
என் வீட்டுப் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் உண்டு. அங்கு வரும் கூட்டத்திற்கு வாகனங்கள் நிறுத்த இடமில்லை. சிலர் சற்று தொலையில் காலி இடங்களில் நிறுத்துவார்கள். பலர் டாஸ்மாக்குக்கு எதிரிலும் பாதி சாலையிலும் ஏதோ அடிப்பம்புக்கு முன் குடங்களை அடுக்கி வைத்தது போல் நிறுத்தி விட்டு போய் விடுவார்கள். அது ஏற்கனவே குறுகலான சாலை. இதனாலே எப்போதும் டாஸ்மாக் பிஸியாக உள்ள மாலை வேளைகளில் போக்குவரத்துக்கு மலச்சிக்கல் வந்து நின்று விடும். இன்று ஒன்பது மணிக்கு நிறைய பேருந்துகள் அவ்வழி போகும் நேரம். எதிரெதிரே வந்த இரு பேருந்துகள் மேலும் நகர முடியாதபடி சாலை வரை பைக்குகள் நின்றிருந்தன. பேருந்து ஓட்டுநர் பைக்கை எடுத்து நீக்கி வைக்குமாறு கத்துகிறார். யாரும் கேட்கவில்லை. அவர் கடுப்பாகி சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்று விட்டார். முதலில் எல்லோரும் பைக்குகள் அங்குள்ள ஓட்டலில் சாப்பிடுகிறவர்களுடையது என நினைத்திருந்தார்கள். ஓட்டல்காரர்கள் உண்மையை தெளிவுபடுத்தியதும் ஓட்டுநர் பைக்குகளின் உரிமையாளர்களே வந்து நகர்த்தட்டும், அதுவரை பஸ் நகராது என்று விட்டார். ஒரே களேபரம். கடைசியில் ரொம்ப பிஸியாக பரோட்டா அடித்துக் கொண்டிருந்த மாஸ்டர் கையை கழுவி விட்டு வந்து பைக்குகளை தூக்கி தள்ளி வைத்தார்.

 பேருந்து நகர போக்குவரத்து சீரானது. கொஞ்ச நேரத்தில் ஸ்பீக்கர் கட்டிய ஜீப்பில் இரு போலிசார் ஆடம்பரமாய் மிரட்டியபடி வந்தனர். அவர்கள் ஓட்டலின் காலி முக்காலி ஒன்று வெளியே கிடப்பதை கண்டு “அதை தூக்கி உள்ளே போடுடா” என கத்தினர். அடுத்து பைக்குகளைப் பார்த்தனர். உடனே பைக்குகளை அங்கிருந்து எடுக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்தனர். யாரும் பொருட்படுத்தவில்லை. அடுத்து ஓட்டல்காரரிடம் பைக்குகளின் உரிமையாளர்களை அழைக்கும்படி கூவினார்கள். அவர்கள் டாஸ்மாக்குக்குள் போய் பார்க்கும் படி கூறினர். டாஸ்மாக் என்று கேட்டதுமே போலிசார் கப்சிப் என்றாகி விட்டனர்.
 அவர்கள் நினைத்தால் டாஸ்மாக்குக்குள் சென்று பைக்கின் உரிமையாளர்களை அழைத்து வந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் டாஸ்மாக்குக்குள் போலிசார் நுழைந்து கைது என செய்தி வந்தால் அடுத்த நிமிடமே அம்மா இரண்டு பேரையும் சஸ்பண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார். குடிப்பவர்களின் அதிகாரமும் கெத்தும் என்னவென நான் உணர்ந்த தருணம் அது. டாஸ்மாக்குகள் பக்கத்தில் வந்தாலே போலிசார் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தது போல் நடுங்குகிறார்கள். ஒவ்வொரு டாஸ்மாக்கும் அவர்களுக்கு அம்மாவின் பெயரிலான கோயிலாகவே படுகிறது. குடிகாரர்களைத் தொட்டால் அரசு உதைக்கும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் காறித் துப்புவார்கள்.

ஒரு போலீஸ்காரர் ஒரு வீம்புக்காக பைக்குகளின் டயர் காற்றை திறந்து விட முயன்றார். ஆனால் அதையும் அவரால் சரிவர செய்யத் தெரியவில்லை என பொதுமக்கள் சிரித்தனர்.
முன்பெல்லாம் ஒருவர் தன்னை மந்திரியின் மைத்துனன், எம்.எல்.ஏ உறவுக்காரன், வட்டச்செயலாளர் என ஏதாவது ஒரு பெயர் சொல்லி போலிசையும் அரசு எந்திரத்தையும் மிரட்டுவார்கள். இன்று நான் டாஸ்மாக் வாடிக்கையாளன் என்று சொன்னால் போதும் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துள்ளது. குடிகாரர்களை போலிசார் சல்யூட் அடிக்காத குறை தான். அந்த பெருமை நிச்சயம் அம்மாவுக்கே சேரும். குடிகாரர்கள் இனி இந்த அரசிடம் இருந்து ஓய்வூதியம், பஞ்சப்படி ஆகியன கோரலாம். ஐ.டி கார்ட் கேட்கலாம். தொழிற்சங்கம் அமைக்கலாம். அவர்கள் மீது கை வைத்தால் இந்த அரசு பார்த்துக் கொண்டிருக்காது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...