முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேய்கள் அரசாண்டால்….

12487095_10156329841080315_1319418043815133185_o

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் மெல்ல மெல்ல சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வது எப்படி இருக்கும் என நமக்கு புரிய வந்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலையும் அதன் பின்னணியும் இந்த சர்வாதிகார வெறியாட்டத்தின் உச்சம் எனலாம். இதற்கு முந்தைய எந்த அரசும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள், போராளிகள் அனைவரின் கழுத்தையும் சதா சுருக்குக் கயிற்றில் கட்டி வைத்திருக்க முனைந்ததில்லை. இந்த அரசும் அதன் கட்சித் தலைவர்களும் முற்றிய மனநோயாளிகளைப் போல் பாதுகாப்பின்மையின் விளிம்பில் தவிக்கிறார்கள். தமக்கெதிராய் ஒரு சொல், ஒரு அசைவு, ஒரு கருத்து தோன்றினால் போதும் கத்தியை தூக்க, சாட்டையை சொடுக்க, தூக்குக்கயிறை முறுக்க துவங்கி விடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் அரசை விமர்சித்து பேசினார். ஒரு சில நாட்களுக்குள் அப்பேச்சை குறிப்பிட்டு விளக்கம் வேண்டி மத்திய கல்வி அமைச்சகத்திடம் இருந்து நிர்வாகத்திற்கு கடிதம் வந்து விட்டது. சமீபமாய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசும் போது மோடியை குஜராத் இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி என்று சொன்னேன். உடனே அங்கிருந்த பா.ஜ.க ஆள் என்னை கிரிமினல் என நேரலையிலே திட்ட தொடங்கி விட்டார். போன வாரம் மீண்டும் அந்த டிவிக்கு போயிருந்த போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார். நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க தரப்பில் இருந்து என்னைப் பற்றி நிறைய புகார்கள் வந்து கொண்டே இருந்தனவாம். ஒரு சின்ன வாக்கியத்துக்கே இவ்வளவு புகார்கள் என்றால் நேரடியாய் பல்கலைக்கழகத்துக்குள் இந்துத்துவாவுக்கு எதிராய் கூட்டங்கள் நடத்தி, எ.பி.வி.பி போன்ற இந்துத்துவா அமைப்புகளை நேரடியாய் எதிர்த்த ரோஹித் வெமுலாவுக்கு எந்தளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கும் யோசியுங்கள்.

 எ.பி.வி.பி தலைவர் சுஷீல் குமாரை தாக்கினதாய் ரோஹித் வெமுலா மீது பொய் வழக்கு தொடுக்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லை. குமார் அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்கிறார். அதை ரோஹித் தன் மீது தொடுத்த தாக்குதலில் ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சை என திரித்து புகார் கொடுக்கிறார். இதை அடுத்து ரோஹித் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார், விடுதியில் இருந்து வெளியேற்றப்படுகிறார், அவரது உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. இவை எல்லாமே சட்டத்துக்கு புறம்பாய் நடக்கின்றன. எந்த நியாயமும் இன்றி ஒருவரது வாழ்க்கையை நிர்மூலமாக்க முடியும் என மத்திய அரசு இங்கு வெளிப்படையாய் ஒரு செய்தியை விடுக்கிறது. ரோஹித்தின் ஒடுக்குமுறை என்பது அந்த பல்கலைக்கழகத்தின் முற்போக்கு அரசியல் கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் விடுக்கப்பட்ட நேரடியான மிரட்டல். “எங்களை எதிர்த்தால் முதலில் உன் அடையாளத்தை அழிப்பொம், எதிர்காலத்தை இருளாக்குவோம். குற்றவாளி ஆக்குவோம். கடைசியில் உதவித்தொகையை நிறுத்தி உன் தட்டில் விழுகிற சோறை பறிப்போம். உன் கை, காலை கட்டி கடலில் தூக்கிப் போடுவோம்.” இந்த அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு எதிராய் ரோஹித் தொடர்ந்து போராடிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இறுதியில் விரக்தியின் உச்சத்தில் அவர் தூக்கில் தொங்கினார்.
ஒரு மாணவரை ஒடுக்கி முதுகெலும்பை ஒடிப்பது எளிது. அவரை நீக்கம் செய்தால் போதும். எதிர்காலமே காலியாகி விடும். கல்வி வளாகத்தில் இருந்து நீக்கினால் அவரது அரசியல் இடம் காணாமல் போய் விடும். ஒரே ஆணை மூலம் ஒரு மாணவரை பூஜ்யமாக்க முடியும். அடையாளங்களும் எதிர்காலமும் மாய்க்கப்பட்ட இளைஞர்களின் மன அழுத்தமும் அச்சமும் உச்சபட்சமானது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தன் ஆட்களை கல்வி நிறுவனங்கள் எங்கும் நுழைக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஆனால் இந்துத்துவா பின்னணி கொண்ட அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் மிகவும் குறைவு. ஆனால் எந்த சுப்பன் கிடைத்தாலும் போதும், திண்ணையை ஆக்கிரமிப்போம் என்பது பா.ஜ.க கொள்கை. அப்படித் தான் சுப்பாராவை ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆக்குகிறார்கள். அவர் பதவியேற்றதும் தன் விசுவாசத்தை நிரூபிப்பதற்காய் அரசுக்கு எதிரான மாணவர்களை ஒரேயடியாய் நீக்கம் செய்கிறார். அவர் ஏற்கனவே விடுதி வார்டனாக இருந்த போது அசைவம் உண்ணும் மாணவர்களை தனியாய் உட்கார வைக்க முயன்று சர்ச்சையை உண்டு பண்ணினவர். அப்போது தன்னை எதிர்த்த மாணவர்களையும் இது போல் விடுதியில் இருந்து நீக்கினார். அவர் ஆதிக்க சாதி மனப்பான்மை மிக்கவர் என்கிறார்கள் மாணவர்கள். அவருடைய அரசியல் காரணமாய் தான் இப்போது ரோஹித்தின் மரணம் ஒரு தலித் ஒடுக்குறையாய் பார்க்கப்படுகிறது.
 ஆனால் இந்த தற்கொலையில் சாதியின் பங்கு என்ன என்பது தெளிவில்லை. ரோஹித் ஒரு தலித் போராளி என்பதால் மட்டுமே அவரது தற்கொலை ”தலித் படுகொலை” ஆவதில்லை.
சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராய் போராடியதற்காய் சில மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். ஹைதராபாதில் நடந்தது போன்றே இங்கும் எந்த வலுவான காரணமும் இல்லாமல் தான் உச்சபட்ச தண்டனை கொடுக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் ஒரு மாணவர் தமிழக அரசு வெள்ளத்தின் போது மெத்தனமாய் நடந்து கொண்டது என பேச அவரை அரங்கில் இருந்து வெளியேற்றியதுடன் இல்லாமல் தற்காலிக நீக்கமும் செய்தார்கள். அது மட்டுமல்ல அடுத்த நாள் செய்தித்தாளில் அப்போதைய துணைவேந்தர் முதல்வரை விமர்சித்ததனால் தான் நாங்கள் மாணவரை வெளியேற்றினோம் என பேசி தன் விசுவாசத்தை நிரூபிக்க வேறு செய்தார். ஐ.ஐ.டியில் அம்பேத்கர் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதும் இது போன்ற ஒரு நோக்கத்தினால் தான். சொல்லப்போனால் அரசே கேட்கும் முன் கல்வி நிறுவன நிர்வாகிகள் தாமே முனைந்து மாணவர்களை கடுமையாய் ஒடுக்கி தம் அரச சார்பை நிரூபிக்கிறார்கள். ஆளும் அரசுக்கு தம் முதுகை வளைத்துக் காட்ட இந்த துணைவேந்தர்கள், முதல்வர்களுக்கு மாணவர்கள் ஒரு சிறு வாய்ப்பு அன்றி வேறேதுமில்லை. இரண்டு தரப்பினர் இடையிலான பகடையாட்டத்தில் மாணவர்கள் வாழ்க்க்கையையும் உயிரையும் இழக்கிறார்கள்.
எல்லா பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களின் தலைமையையும் தேர்ந்தெடுக்கிற உரிமையை ஆட்சியாளர்களிடம் இருந்து முதலில் பறிக்க வேண்டும். இந்தியாவின் சிறந்த அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள் மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே போல மாணவர்களை நேரடியாய் நீக்கம் செய்யும் உரிமையையும் கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் இருந்து பறிக்க வேண்டும். இந்த இரண்டையும் புது சட்டங்கள் நிறைவேற்றி நிலுவையில் கொண்டு வந்தால் இப்போதுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கேரளாவில் உள்ளது போல் மாணவர்கள் அமைப்புகள் பெரிய கட்சிகளின் பகுதியாய் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு போதுமான ஆதரவும் பாதுகாப்பும் வெளியில் இருந்து கட்சி அளவில் கிடைக்கும். இன்னொரு பக்கம், மாணவர்கள் எதிர்காலத்தில் கட்சி அரசியலில் பங்கேற்று வளரவும் வாய்ப்பிருக்கும்.

ரோஹித் வெமுலாவின் தற்கொலை கடிதத்தை படிக்கும் போது ஒரு புறம் நெகிழ்கிறோம். இன்னொரு புறம் “இவ்வளவு அறிவும் முதிர்ச்சியும் படைத்த இளைஞரை இழந்து விட்டோமே” என மனம் விம்முகிறது. ஒரு எழுத்தாளனான என்னால் கூட இவ்வளவு அழகான ஆழமான இறுதிக் கடிதத்தை படைத்து விட முடியாது. கடிதத்தின் முடிவில் அவர் சொல்கிறார் “என் மரணத்தை முன்னிட்டு என் நண்பர்களையோ எதிரிகளையோ துன்புறுத்தாதீர்கள்”. இதைப் படிக்கும் போது எனக்கு விஷம் அருந்தும் முன் சாக்ரடீஸ் பேசின இறுதி உரை நினைவு வருகிறது. அவரும் தன் விரோதிகளை நினைத்து இரக்கம் கொண்டார். ஒரு உன்னத லட்சியவாதிக்கு யாருமே எதிரி இல்லை. எ.பி.வி.பியின் சுஷீல்குமார் கூட ரோஹித்துக்கு எதிர்முகாமில் உள்ள ஆளே அன்றி தனிப்பட்ட எதிரி அல்ல. எவ்வளவு பரந்து பட்ட மனம் உனக்கு ரோஹித். தலை வணங்குகிறேன். போய் வா நண்பா! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...