முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடையற்ற காதல்

காலையில் (சுமார் பத்து, பத்தரை இருக்கும்) ஒரு இனிய கனவுக்குள் புதைந்து புதைந்து தூங்கிக் கொண்டிருந்த போது ரெயின் போ எப்.எம்மில் அழைத்து திருக்குறள் தினம் பற்றி இரண்டு நிமிடம் பேச முடியுமா எனக் கேட்டார்கள்.
தயாராவதற்கு அரைமணி அவகாசம் கேட்டு விட்டு பேச உட்கார்ந்தேன். இதனிடையே எனக்கு பிடித்த சில குறள்களை அசைபோட்டவாறிருந்தேன். ஒரு எளிய குறளின் முதல் வரி - நான் திரும்ப திரும்ப யோசிப்பது - “அன்பிற்கும் உண்டோ அழைக்கும் தாழ்”.

 முதலில் பள்ளியில், பிறகு சில சினிமா பாடல்களில் என இவ்வரி என்னை பின் தொடர்ந்தபடியே உள்ளது. அன்பு எளிமையாக நாம் அன்றாட வாழ்வில் காட்டக் கூடியது தானே. அதை ஏன் தடுக்க முடியாதது என வள்ளுவர் சொல்கிறார்? அதை என்று தான் தடுத்து வைத்தோம்? இப்படி எல்லாம் பள்ளியில் படிக்கும் போது குழம்பி இருக்கிறேன். இக்குறளுக்கும் பல வித விளக்கங்கள் உள்ளன. வள்ளலார் போன்றோர் முழுக்க ஆன்மீக பார்வையில் விளக்கி இருக்கிறார்கள். காமத்துப் பாலில் ஒரு குறளில் காதலை மத யானையுடன் வள்ளுவர் ஒப்பிடுவார் (இது பின்னர் ”காதல் யானை வருகிறான் ரெமோவாக” சினிமாவில் வந்தது). அன்பை மதம் பிடித்த யானையின் ஆற்றலோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளவே விரும்புகிறேன். ஏன் என சொல்கிறேன்.
உண்மையான அன்பில் ஒரு மூர்க்கம், கண்மூடித்தனம் இருக்கும். அதை எடை தூக்கிப் பார்க்க, தர்க்கத்தால் அலச முடியாது. இதை நட்பில், காதலில், வாசிப்பில் கூட பார்க்கலாம். அன்பை நடைமுறை எதார்த்தத்தால் புரிந்து கொள்ள முடியாது என்பதையே வள்ளுவர் சொல்ல வருகிறார். மரத்தில் இருந்து புளியங்காய் உதிர்வது போல் சிலர் வாரத்துக்கு ஐந்து நண்பர்களை உதிர்ப்பார்கள், புதிதாய் ஐந்து பேரை நண்பர்களாய் சேர்த்துக் கொள்வார்கள். காதலிலும் இந்த போக்கு இன்று உருவாகி உள்ளது. திருமணத்திலும் மிக சுலபமாய் பிரிவு பற்றி யோசிக்க துவங்குகிறோம். இதற்கு அடிப்படை காரணம் தர்க்க சிந்தனை இன்று அன்பில் ஆதிக்கம் செலுத்துவது. நடைமுறையில் அன்பு உதவுமா என பார்க்கிறோம். ஒருவர் தொந்தரவு அளிக்கக் கூடியவர், அவரால் நமக்கு வேதனை ஏற்படுகிறது என்றால் உடனே அந்த உறவை கைவிடலாம் என நினைக்கிறோம். விவாகரத்துகள், காதல் பிரிவுகள் இன்று மலிகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லா உறவுகளிலும் பிரிவதற்கு பத்து போதுமான வலுவான காரணங்கள் நிச்சயம் இருக்கும். அதையும் சகித்து தான் அவ்வுறவுகள் தொடர்கின்றன. ஒரு மூர்க்கமான, காட்டாற்று வெள்ளம் போன்ற இச்சை, விருப்பம், அன்பு இருந்தால் அவ்வுறவுகள் என்ன துன்பம் ஏற்பட்டால் விலகாது.
என்னிடம் சில நண்பர்கள் திருமணத்துக்கு முன் அறிவுரை கேட்பார்கள். ஒரு பெண்ணிடம் கண்மூடித்தனமான அன்பு இருந்தால் ஒழிய அவளுடன் 30, 40 வருடங்கள் வாழ்வது வீண் என சொல்வேன். அந்த அன்பு இயல்பாக ஆரம்பத்திலேயே இருக்கலாம். அல்லது நாமாகவே மெல்ல மெல்ல பேசி பேசி உருவாக்கவும் முடியும். கடுமையான சிக்கல்கள், அலுப்புகள் தோன்றும் போதும் உறவில் ஒரு சுவாரஸ்யம், இனிமை இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு கணத்தில் இவளுடன் வாழத்தான் வேண்டுமா என காரணங்களை பட்டியல் போட ஆரம்பித்தால் எல்லாம் முடிந்தது.
 பொங்கி பிரவாகிக்கும் வெள்ளத்தில் மாட்டிக் கொள்வது போலத் தான் உறவுகள். மாட்டிக் கொண்டபின் தன் போக்குக்கு உறவு நம்மை அடித்து செல்லும். எதிர்த்து நீந்தக் கூடாது. உண்மையான அன்பில் இந்த சாகச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். உங்கள் காதலியிடம் / மனைவியிடம் கேட்டால் உங்களைப் பற்றி நூறு குற்றங் குறைகளை உடனடியாய் பட்டியல் இடுவாள். ஆனால் உங்களிடம் தனக்கு பிடித்ததும் இதே நூறு குறைகளே என தன் மனதிற்குள் ஒத்துக் கொள்வாள்.
 எனக்கு மிகவும் பிரியமான நண்பர். அவர் என்னிடம் சொன்னார் “கடந்த இரு வருடங்களில் பலமுறை நீ என்னை திட்டியிருக்கிறாய். உன் உறவை துண்டிக்க எனக்கு ஒரு நொடி ஆகுமா சொல். நான் ஏன் அதை செய்யவில்லை?”. நான் பதிலுக்கு புன்னகைத்துக் கொண்டேன்.
உண்மையான அன்பு இது போல் ஏதாவது ஒரு விடையற்ற புள்ளியில் கேள்வி போல் தொக்கி நிற்கும்.
உணர்ச்சி பிரவாகமாய் பித்து நிலையில் நேசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அன்பு அப்படி மட்டுமே இருக்க வேண்டியதில்லை. தடையற்ற அன்பு நிதானமாயும் நிகழ முடியும். நேர்த்தியாய் உள்ளார்ந்து நேசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இதை அறிய ஒரு அளவுகோல் இவர்களின் பேச்சின் இடையே எப்போதும் தான் விரும்புகிறவர் பற்றி குறிப்பு வந்தபடியே இருக்கும். நான் கல்லூரியில் படிக்கும் போது அடிக்கடி சுந்தர ராமசாமியை சந்தித்து பேசுவேன். அவர் மிகவும் கவனமாய் அக்கறையாய் நேர்த்தியாய் எல்லாவற்றையும் அளந்து கணித்து வாழ்ந்தவர். அவர் காதல் மௌனமானது. என்னிடமே இருமுறை தன் மனைவி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஒருமுறை அமெரிக்க நூலகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தான் வாசித்த நூல்கள் பற்றி பேசும் போது எதேச்சையாய் தன் மனைவியை குறிப்பிட்டு ‘அவளுக்கு இலக்கிய வாசிப்பு போதாது’ என்றார். அதில் ஒரு புகார் தொனி, குறும்புத்தனமான கடிதல் எல்லாம் இருந்தது. அதன் பிறகு அமெரிக்காவில் மனைவியுடன் தினமும் நடைபழக போவது பற்றி பிரியத்துடன் குறிப்பிட்டார். அப்போது அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் எதைப் பற்றி பேசினாலும் மனைவியை அவரால் அதில் இருந்து தவிர்க்க இயலவில்லை. நான் பிறகு சந்தித்த பல கணவர்கள் தம் மனைவியை பற்றி பேசுவதையே தவிர்த்து விடுவதை பார்த்திருக்கிறேன். அப்படி ஒருவர் தன் வாழ்க்கையில் இல்லை என்பது போன்றே நடந்து கொள்வார்கள். மனைவியின் வாழ்க்கையில் இவர் ஒரு நிழலாகவும் இவர் வாழ்க்கையில் மனைவி ஒரு நிழலாகவும் இருப்பார்கள். இந்த உறவில் அன்பு செத்து விட்டது. ஆனால் சு.ரா அப்படி அல்ல. தான் இறுதி மூச்சு வரையிலும் மனைவியின் அன்பு குறித்த பிரக்ஞையுடன், அந்த அமைதியான பிரியத்துடன் இருந்திருப்பார் என ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் தன் வாசகர்களுடனும் சக எழுத்தாளர்களுடனும் செய்தது போல் தன் மனைவியுடனும் தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தார். அவர் சரியாக நூல்களை வாசிப்பதில்லை என்று முதுமையிலும் புகார் சொல்கிறார் என்றால் அந்த அக்கறையின் ஆழத்தை, அன்பின் குறும்பை புரிந்து கொள்ளலாம். சு.ராவின் அன்பெனும் காட்டாற்று வெள்ளம் அவதானிப்புகளாலும் அக்கறையினாலும் ஆனது.
இவ்வளவு விசயங்களின் சாராம்சத்தை இன்று வானொலியில் பேசினேன். ஒரு நல்ல விசயத்தை பேசி ஒரு நாளை ஆரம்பிப்பது மகிழ்ச்சியானது.

கருத்துகள்

”தளிர் சுரேஷ்” இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையா சொல்றீங்க! வாழ்த்துக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...