Skip to main content

வேகமாய் வாசிப்பது எப்படி?

நேற்று “எப்படி வாரம் ஒரு புத்தகம் படிப்பது?” என்றொரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன். எழுதினவர் புத்தகம் என்பது அபுனைவுகளையே. தான் ஒரு மெதுவான வாசகன் என்று கூறும் அவர் எப்படி கல்லூரியில் தன் பேராசிரியர் கூறிய அறிவுரை அவரது வாசிப்பை பன்மடங்காக்க பெருக்க உதவியது என விளக்குக்கிறார்.

 ஒருமுறை அவர் வகுப்பில் தன் வரலாற்று பேராசிரியரிடம் பாடத்திற்கான துணை நூல்களை வாசித்து முடிப்பதற்கு தான் திணறுவதாய் கூறுகிறார். பேராசிரியர் உடனே வகுப்பை பார்த்து “எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை?” எனக் கேட்கிறார். கிட்டத்தட்ட அத்தனை பேரும் கையை தூக்குகிறார்கள். அடுத்து அவர் அபுனைவு நூல்களை எப்படி படிக்கலாம், எப்படி படிக்க கூடாது என விளக்குகிறார். அவர் கூறும் வழிமுறைகள் ஏற்கனவே நாம் அறிந்த scanning, skimming போன்றவை தான். ஸ்கானிங் என்றால் “எந்திரன்” படத்தில் ரோபோ ரஜினி புத்தகம் படிப்பது போல் சர்ரென வாசிப்பது. ஒரு கட்டுரையை மேலும் கீழுமாய் நாலு வாக்கியங்கள் வாசித்தால் அது எதைப் பற்றி என புரிந்து விடும். ஸ்கிம்மிங் அதை விட கொஞ்சம் பொறுமையாய் ஒரு கட்டுரை அல்லது நூலின் முக்கியமான பகுதிகளை மட்டும் ஆடு புல்லை மேய்வது போல் படிப்பது.
 நான் பொதுவாய் இலக்கிய பத்திரிகை கட்டுரைகள், நாளிதழ் நடுப்பக்க கட்டுரைகளை இறுதிப் பத்தியில் இருந்து தான் வாசிக்க துவங்குவேன். பெரும்பாலான கட்டுரையாளர்கள் சொல்ல வந்ததை இறுதிப் பத்தியில் தான் சொல்வார்கள். அது பிடித்திருந்தால் கீழிருந்து மேலாக ஒவ்வொரு பத்தியாக படித்து வருவேன். விவரணைக் கட்டுரைகள் உண்டு. உதாரணமாய், ”நான் 1989இல் தில்லியில் காலை ஒன்பது மணிக்கு ராஜீவ் காந்தியை அவரது பங்களாவில் சந்திக்க காத்திருந்த போது…” என ஒரு கட்டுரை ஆரம்பித்தால் அதை சத்தியமாய் பாதியில் இருந்து தான் படிப்பேன். ஏனென்றால் அப்போது தான் ராஜீவ் கட்டுரைக்குள் நுழையவே செய்வார். வெகுஜன மீடியாவில் பொதுவாக முக்கியமான கருத்துக்களை ஹைலைட் செய்து கட்டுரை நடுவில் காட்டுவார்கள். இப்போது இலக்கிய பத்திரிகைகளிலும் அந்த பாணியை பின்பற்றுகிறார்கள். அந்த வாக்கியங்களை நம்பக் கூடாது. அவை பெரும்பாலும் தவறான புரிதலைத் தான் தரும்.
புத்தகத்தை எடுத்தவுடன் அதன் பின்னட்டையை படிப்பது, அத்தியாயத் தலைப்புகள் கொண்ட உள்ளடக்கம் பக்கத்தை பார்வையிடுவது சில நொடிகளில் அதைப் பற்றி ஒரு பார்வையை கொடுக்கும் என்கிறார். அதாவது உங்களிடம் பத்து புத்தகங்கள் உள்ளன. அத்தனையையும் படிக்க நேரமில்லை என்றால் இவை இரண்டையும் பார்த்தால் அதன் அடிப்படை ஓரளவு புரியும். இதற்கு அடுத்த கட்டமாய் முன்னுரைகளை படிக்கலாம் என்கிறார். ஆனால் இது கொஞ்சம் ஆபத்தான வேலை. சில புத்தகங்களில் முன்னுரையே நாற்பது ஐம்பது பக்கங்கள் இருக்கும், புத்தகத்தை விட சிரமமாக கூட முன்னுரைகள் அமைவதுண்டு.
 ஒரு புத்தகத்தை பற்றின மதிப்புரைகளை படிப்பது அதைப் பற்றி சுருக்கமாய் பிறர் என்ன நினைக்கிறார்கள் என அறிய உதவும். ஒரு வருடம் முக்கியமான ஐநூறு புத்தகங்கள் வருகின்றன என்றால் அத்தனையையும் படிக்க முடியாமல் போகலாம். ஆனால் அவற்றில் 400 புத்தகங்களை பற்றியாவது பொதுவாக சுருக்கமாய் அறிந்து வைத்திருப்பது ஒரு வரலாற்று பார்வை தரும், வேறு நூல்களை வாசிக்கையில் அவற்றை எந்த இடத்தில் பொருத்துவது என தெரிய வரும், நண்பர்களுடனான உரையாடல்களில் உதவும்.
இவையெல்லாம் பொதுவாய் நாம் அறிந்த உத்திகளே. ஆனால் பேராசிரியர் புதிதாய் ஒன்று சொல்கிறார். வாசிப்பு மெத்தனமாவதற்கு காரணம் நாம் கட்டுரை நூல்களை ஒரு நாவலை போல் முழுமையாய் அணு அணுவாய் படிக்க நினைப்பதனால் தான் என்கிறார். இது எனக்கு சட்டென ஒரு வெளிச்சத்தை தந்தது. நாவலை அல்லது ஒரு கதையை அதில் முழுக்க மூழ்கி வாசிக்க வேண்டும். இதை immersive வாசிப்பு என்கிறார்கள். நீருக்குள் மூழ்கி இருப்பது போல் புனைவுக்குள் மூழ்கி விட வேண்டும்.
 இலக்கிய வாசகர்கள் சிறு வயது முதலே இப்படித் தான் பழக்கப்படுகிறார்கள். பயிற்றுவிக்கப்படுகிறார்கள். விளைவாக ஒரு கட்டுரை நூலை படிக்கையில் அதன் ஒவ்வொரு தகவலையும் விவரணையும் வாதத்தையும் உள்வாங்கி அதில் மூழ்கி வாசிக்க முனைகிறார்கள். ஆனால் அதன் மூலம் நாம் ஒரு நாவலின் அனுபவத்தையும் பெற முடியாது. அந்நூலும் அந்தளவுக்கு ஆழமான அனுபவமோ பக்கத்துக்கு பக்கம் ஞானம் கொப்புளிக்கிறதாக இருக்காது. விளைவாக அவர்கள் மெத்தனமான வாசகர்கள் ஆகிறார்கள்.
நான் மெதுவாக வாசிக்கிறவன். வேகமாய் வாசிப்பது எப்படி என ஒருமுறை ஜெயமோகனிடம் கேட்டேன். அவர் இரண்டு விசயங்களை சொன்னார். ஒன்று வழக்கம் போல் இடமிருந்து வலமாய் பார்வையை பக்கத்தில் ஓட விடாமல் மேலே-கீழே, கீழே-மேலே என ஓட்டி வாசிப்பது. இன்னொன்று சொற்களின் அர்த்தத்தை பற்றி கவலைப்படாது நூலில் மூழ்கிப் போய் வாசிப்பது. இதற்கு நிறைய கற்பனையும் உணர்வுவேகமும் போதும்.
மேற்சொன்ன உத்திகளை நான் நாவல் வாசிப்புக்கு கூட பயன்படுத்தினது உண்டு. குறிப்பாய் மோசமாய் எழுதப்பட்ட நாவல்களை அங்குலம் அங்குலமாய் வாசிக்க தேவையில்லை எனத் தோறும் போது வேகமாய் அதன் முக்கிய பத்திகளை மட்டும் வாசித்து விட்டு சென்று விடுவேன். ஒருமுறை 350 பக்க தமிழ் நாவல் ஒன்றை இம்முறையில் 6 மணிநேரத்தில் வாசித்து விட்டேன். அதை பொறுமையாக மூன்று நாட்களாய் வாசித்திருந்தால் நேரம் வீணாகி இருக்கும் என முடித்த உடன் தோன்றியது. கல்லூரியில் படிக்கும் போது டி.எச் லாரன்ஸின் ரெயின்போ நாவலை இது போல் வாசிக்க முயன்றேன். ஒவ்வொரு பக்கத்திலும் உணர்ச்சிகரமான நாடகியமான இடங்களில் மட்டும் பார்வையை பதித்து மிச்சத்தை ஊகித்தபடி நகர்ந்தேன். முழுக்க என்னை மறந்து ஆழ்ந்து வாசிக்க முடிந்தேன். ஒரு மணிநேரத்தில் 100 பக்கங்கள் படித்தேன். ஆனால் அதன் பிறகு என்னால் அது போல் வாசிக்க முடிந்ததில்லை.
இப்படித் தான் வாசிக்க வேண்டும் என்றில்லை. இவை வாசிப்பின் பல்வேறு சாத்தியங்கள் என நினைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மையே அறியாமல் பேஸ்புக் ’ஸ்கேனிங்’ உத்தியை நமக்கு பயிற்றுவித்துள்ளது என நினைக்கிறேன். வேகமாய் ஒரு பதிவின் சில வரிகளை மட்டும் அங்கங்கே வாசிக்க, அதன் படம், அதில் வருகிற பரபரப்பான கமெண்டுகள் ஆகியவற்றை மேய்ந்து விட்டு அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிற வழக்கம் நமக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் பேஸ்புக் பதிவை படிக்கிற பாணியை தான் நான் ஒருவிதத்தில் மேலே புத்தகங்கள் படிப்பதற்கான வழிமுறையாக விளக்கி இருக்கிறேன். பேஸ்புக்கில் பழகியவர்கள் பெரிய கட்டுரைகளை வாசிக்க முடியாது என நான் நினைக்கவில்லை மாறாக மற்றவர்களை விட வேகமாய் அவர்களால் படிக்க முடியும். ஒருவேளை ஆழமாய் படிக்க முடியாமல் போகலாம் என்றாலும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...