Skip to main content

இணைய சமத்துவமும் பொதுமக்களும்

இன்று சன் நியூஸ் சண்டே ஸ்பெஷல் விவாத மேடை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் கலந்து கொண்டேன். தலைப்பு இணைய சமத்துவம் (net neutrality). Free Basicsஇன் அடிப்படை பிரச்சனைகளை நான் ஏற்றுக் கொண்டேன். அதேவேளை இது ஒரு லட்சியபூர்வமான பிரச்சனை மட்டுமே என குறிப்பிட்டேன். அதாவது நடைமுறையில் இது இணைய சமத்துவத்தை அழிக்கவோ பயனர்களை அடிமையாக்கவோ போவதில்லை. எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாய் கொண்டு வேறு நிறுவனங்களும் தம்மை முன்னிட்டு மட்டுமே கட்டுப்பாடான இணைய வசதியை வழங்கினாலும் இன்னொரு பக்கம் சுதந்திரமான இணையமும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏனென்றால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு இணையத்துக்கான 100 ரூ உண்மையில் பெரிய செலவல்ல. எப்படி பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மக்களை பயன்படுத்துவதற்கு இது போன்ற திட்டங்களை கொண்டு வருகிறதோ மக்களும் இது போன்ற திட்டங்களை தமக்கு தேவையான படி பயன்படுத்திக் கொள்வார்கள்.

Free Basicsஐ பயன்படுத்தும் ஆரம்ப கட்ட பயனர்களுக்கு இணைய சுதந்திரம் என்றாலே என்னவென தெரியாமல் போய் விடும் என்பது புருடா. நாளை சன் குழுமத்தின் அலைவரிசைகளை மட்டும் ஒரு சேவையில் இலவசமாய் தருகிறார்கள் என்றால் மக்கள் சன் நியூஸை மட்டும் பார்த்து மூளை சலவை ஆவார்களா? இல்லை? செய்தி இன்று பல வித ஊடகங்கள் மூலம் மக்களை போய் சேர்ந்தபடியே உள்ளது. யாரும் அதை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. பார்வையாளர்கள் சன்மியூஸிக்குக்காகவோ சீரியல் பார்க்கவோ இந்த சேவையை பயன்படுத்துவார்கள். பலவித செய்தி அலைவரிசைகளை பார்க்க விரும்புகிறவர்கள் வேறு சேவையை பயன்படுத்துவார்கள். மக்களுக்கு இது போன்ற சலுகைகளை எப்படி தமக்கு தோதாக பயன்படுத்த வேண்டும் என தெரியும்.
போனில் புதிதாய் இணையம் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு கூட இணையத்தின் வரம்பு என்னவென தெரியும். அவர்கள் முட்டாள்கள் அல்ல.
இதன் மூலம் பேஸ்புக் பயனர்களை தனக்கு அடிமையாக்கும் என்பதும் மிகை தான். பேஸ்புக்கு ஏற்கனவே இல்லாத அடிமைகளா புதிதாக உருவாக போகிறார்கள்?
இதன் மூலம் பேஸ்புக் நம் இணைய பயன்பாட்டு பாணியை அறிந்து அதை வியாபாரத்துக்கும் லாபத்துக்கும் பயன்படுத்துமென்றால் அது தவறல்லவா? இது இன்றைய யுகத்தில் தவிர்க்க முடியாத சமரசம். நம் போனில் உள்ள கணிசமான செயலிகளுக்கு நமது பயண விபரம், இணைய பயன்பாட்டு விபரங்கள் தெரியும். கோர்ட்டானா, சிரி போன்ற விர்ச்சுவல் அஸிஸ்டெண்டுகளுக்கு அதை விட நுணுக்கமான தகவல்கள் நம்மைப் பற்றி தெரியும். பெரிய நஷ்டமில்லை, ஆனால் நிறைய பயன் நமக்குண்டு என தெரிந்தே அனுமதிக்கிறோம்.
பொதுவாக இது போன்ற விவாதங்களில் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் × சுரண்டப்படும் தனிமனிதன் எனும் எதிரிடையை பயன்படுத்துவது வழக்கம். கார்ப்பரேட்டுகளுக்கு நம்மால் எப்படி பயனுள்ளதோ அதே போல் நமக்கும் கார்ப்பரேட்டுகளால் பயன் உண்டு. சில இடதுசாரிகள் இதை ஒருதலைபட்சமான ஒடுக்குமுறையாக பார்க்கும் தேய்வழக்கான பார்வையை கைவிட வேண்டும். ஒரு பக்கம் தாராளமயமாதலால் பயன்பெற்றபடியே, தனியார் நிறுவனங்களில் கைநிறைய சம்பாதித்து அனைத்து நுகர்வு சார் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு இன்னொரு பக்கம் ஏ கார்ப்பரேட் ஏகாதிபத்தியமே என பொருமுவது பாசாங்கு.
Free Basics ஒரு கருத்தியலாக தவறு தான். ஆனால் நடைமுறையில் அதனால் பிரச்சனைகள் அதிகமிருக்காது. மக்கள் தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள் என்றேன். உடனே மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிந்தன் “ஒரு விசயம் லட்சியபூர்வமாய் தவறு என்றால் அது நடைமுறையில் மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்?” என்று கேட்டார்.
 லட்சியங்களுக்கும் நடைமுறைக்குமான தூரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். லட்சியம் என்பது அடைய முடியாது இலக்கு. உதாரணமாய் வணிக நோக்கே இல்லாமல் அனைவருக்குமான இணையம் என்பது லட்சியம். அது நடக்காது. வணிக நோக்குடன் அளிக்கப்படும் இணையத்தை தன் தேவைக்கேற்ப பயன்படுத்துவது நடைமுறை. இரண்டுக்குமான சமரசம் எதிர்காலத்தில் நடக்கும் போது வணிக நோக்கு குறைவான அதிக சுதந்திரமுள்ள இலவச இணையம் சாத்தியமாகலாம். இந்த சமரசத்துக்கான உரைகல் மட்டுமே லட்சியம். மற்றபடி லட்சியத்துக்கு பயனில்லை.
ஓட்டுக்கு பணம் வந்து விட்டதனால் ஜனநாயகம் அழிந்து விட்டதா? இல்லை. தேர்தல் செலவு அதிகமாகி விட்டது. ஊழல் பெருத்து விட்டது. ஆனால் மக்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு தமக்கு தேவையான கட்சியை தான் தேர்கிறார்கள். இல்லாவிட்டால் ஒரே கட்சி மட்டுமே நூறு வருடத்துக்கு ஆட்சியில் இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் தவறா என்றால் தவறே. ஆனால் நடைமுறையில் அது ஒரு பிரச்சனை அல்ல. சொல்லப்போனால் நாலு ஓட்டுகள் உள்ள வீட்டில் ஒரு மாத செலவுக்கு பணம் கிடைத்து விடுகிறது. அரசியல்வாதிகள் தம்மை பயன்படுத்துவது போல் தாமும் அரசியல்வாதிகளை பயன்படுத்துவோம் என மக்கள் நினைத்து பணத்தை வாங்குகிறார்கள். Free Basicsஉம் அப்படித் தான்.
இந்த ஞாயிறு இரவு விவாத மேடை ஒளிபரப்பாகிறது. பாருங்கள்.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...