Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எழுத்து எனும் பேய்

கடந்த சில மாதங்களாக நான் தினமும் சில மணிநேரங்களாவது எழுதுகிறேன். ஓய்வாக படித்து புத்தகம் வாசித்த, டி.வி பார்த்த, பகற்கனவு கண்ட நாட்கள் வெறும் கனவாகி விட்டன. எழுத்து ஒரு வேலை போல் ஆகி விட்டது. குறிப்பாய் தொடர்ந்து இரு தொடர்களை (தினமணி மற்றும் குமுதம்) எழுத ஆரம்பித்த பின் கராறாய் திட்டமிட்டு எழுத வேண்டியதாகி விட்டது. வேலை முடித்து வந்த பின் இரவிலும் காலையிலும் தொடர்ச்சியாய் மூன்று நான்கு கட்டுரைகள் எழுதுவேன். இது போக என் முனைவர் பட்ட ஆயுவு சார்ந்த எழுத்துவேலை. அது போக உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்ற பத்திரிகைகளுக்காக எழுதுவது. மிச்ச நேரத்தில் பிளாக், பேஸ்புக்கில் எழுதுவது. எழுத்து என் தினசரி இயக்கத்தின் தவிர்க்க இயலாத பகுதி ஆகி விட்டது.

 சில வாரங்களுக்கு முன்பு நண்பர் டேவிட் ஒரு நாடகம் எழுதித் தரக் கேட்டார். கொல்கொத்தாவுக்கு சென்றிருந்த போது விமான நிலையத்திலும் விமானத்திலும் இருந்து எழுதினேன். கொல்கொத்தாவின் தெருக்களில் சுற்றிய போதும், உணவகத்தில் இருந்தும், பிறகு அறையிலும், பாஷா பரிஷத் விருது மேடையிலுமாய் தொடர்ந்து எழுதி அந்நாடகத்தை முடித்தேன். என் மனைவியிடம் கூறிய போது “ஒரு ஊருக்கு போன ஜாலியா சுத்தி பார்க்காம எழுதிக்கிட்டா இருப்பே? நீயெல்லாம் திருந்த மாட்டியா?” என திட்டினாள். எனக்கு கொல்கொத்தாவில் அலைந்து திரிவது பிடித்திருந்தது. ஆனால் அந்த  அலைச்சலின் மத்தியில் எழுதும் போது தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது. எழுத்து என்னை மீண்டும் ஒரு மையத்தில் பொருத்தி நிலைப்படுத்த உதவியது. குழப்பங்களை, பயங்களை, கவலைகளை கடக்க செய்தது. ஒரு மணி நேரம் எழுதியபின் மனம் அலம்பி விட்டது போல் துலக்கமாகும். அந்த உணர்வுக்காகத்தான் மீண்டும் மீண்டும் எழுத்தில் போய் விழுகிறேன்.
ஆனால் எழுத்து ஒரு நெருக்கடியாகும் போது சிக்கல் தோன்றுகிறது. விருப்பப்படி எழுதுவது போக ஒரு கால அட்டவணைக்கு ஏற்ப தினமும் எழுதுவது களைப்படைய வைக்கிறது. இந்த இரண்டு தொடர்களும் என்னை அப்படித் தான் அலுக்க வைத்து விட்டன. எழுதி எழுதி திகட்டி விட்டது. சரி போதும் என ஒருநாள் முழுக்க எழுதாமல் இருந்தேன். கடந்த மூன்று நான்கு மாதங்களில் நான் முழுக்க எழுதாமல் இருந்த முதல் நாள் அது.
அன்று எப்படிப் போயிற்று? மிகவும் உற்சாகமாய், விடுதலையாய், மகிழ்ச்சியாய் உணர்தேன். கட்டற்று காற்றைப் போல் மனம் இருந்தது. இது போல் அடிக்கடி எழுத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் அன்று மாலையே நான் காரணமின்றி கலங்க தொடங்கினேன். மனம் ஒருமுகப்படாமல் சிதறிக் கொண்டே இருந்தது. விசித்திரமான சோகம் ஒன்று இருளை போல் என்னை மூடிக் கொண்டது. மது அருந்துவதை நிறுத்துபவர்களுக்கு withdrawal symptoms வரும் என்பார்கள். எழுத்து எப்படியான ஒரு போதை என அன்றைய தவிப்பு எனக்கு புரிய வைத்தது. தொடர்ந்து எழுதுவது நம் மூளையின் அமைப்பை, வேதியல் செயல்பாட்டை மாற்றுகிறது என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுபவன் தனக்குள் வேறு ஒருவனாகிறான்.
அடுத்த நாள் மீண்டும் சற்று நேரம் எழுதினதும் மனதுக்குள் மீண்டும் வெளிச்சம் பரவியது. எழுதாமல் இருக்கும் போது நான் அந்நியமாக, துண்டித்து விடப்பட்டது போல் உணர்கிறேன். எழுதுவது மாறாக அன்றாட வாழ்வின் எந்த பிரச்சனையையும் கூலாக சந்திக்க உதவுகிறது. உதாரணமாய் நான் மூன்று மணிநேரம் எழுதி முடித்த பின் யாரும் என்ன சொல்லியும் என்னை கோபப்பட வைக்க முடியாது. போதை வஸ்து பயன்படுத்துவோர், குடிகாரர்கள் ஆகியோருக்கும் இதே நிலை தான். போதை ஏற்றிக் கொண்ட பின் அவர்களைப் போல மகிழ்ச்சியான, கூலான பேர்வழிகளை பார்க்க முடியாது. அன்றாட வாழ்வை மிக இயல்பாக நிதானமாய் கையாள்வார்கள். ஆனால் போதை கிடைக்காவிட்டால் வாழ்க்கையே தப்புத்தாளமாகி விடும்.
நிறைய எழுதுவது என் இயல்பும் அல்ல. நான் 27 வயது வரை வருடத்திற்கு சில கவிதைகள் மட்டுமே எழுதி வந்தேன். நான் இயல்பில் ஒரு சோம்பேறி. ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து படிப்பது, கனவு காண்பது, வேடிக்கை பார்ப்பது தான் என் ஒரே ஜோலி. சமீபமாய் நான் முற்றிலும் மாறி வந்திருக்கிறேன். சொல்லப் போனால் சில வருடங்களுக்கு முன்பு கூட நான் இப்படி இல்லை. அப்போது வாரத்துக்கு ஒருமுறை தான் எழுதுவேன். அதுவே போதுமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் நான் மெல்ல மெல்ல முற்றிலும் வேறொரு ஆளாக மாறி வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது.
போதையின் குணம் இது: போக போக அளவு போதாமல் ஆகும். பத்து பக்கங்கள் எழுதினாலும் எழுதாதது போன்றே தோன்றும். கை நோகும் வரை எழுத அவசியமாகும். வலுக்கட்டாயமாய் நிறுத்தினால் என்ன ஆகும்? போன வருடம் மேகாலயா சென்றிருந்த போது வேண்டுமென்று ஒன்றுமே எழுதாமல் இருந்தேன். காரில் சென்று கொண்டிருந்தேன். பக்கத்தில் ஆங்கில கவிஞரும் நாவலாசிரியருமான ஜீத் தயில் இருந்தார். அரட்டை அடித்தபடி வந்தோம். கடந்த சில மணிநேரமாக எழுதுவதற்கு ஒரு டாபிக் மாட்டியிருந்தது. பிறகு எழுதலாம் என தள்ளிப் போட்டிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டும் வெளியே மலைகளை வேடிக்கை பார்த்தும் வந்தோம். என் மனதில் எழுத வேண்டிய வரிகள் அப்போது தன்னிச்சையாக ஓடத் துவங்கின. என்னால் அதை நிறுத்த முடியவில்லை. மூன்று பத்திகள் கடந்ததும் இனியும் சரிப்படாது என லேப்டாப்பை திறந்து அப்படியே அந்த வரிகளை எழுதினேன். மனமும் உடலும் இசைவு கொண்டது.



Comments

Saravanakumar said…
<<ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து படிப்பது, கனவு காண்பது, வேடிக்கை பார்ப்பது தான் என் ஒரே ஜோலி. சமீபமாய் நான் முற்றிலும் மாறி வந்திருக்கிறேன்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? ஏனென்றால் இந்த symptoms எனக்கும் இருக்கு :) .. கொஞ்சம் மாத்திக்கலாம்னு பார்க்கிறேன்.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...