முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புக்கான நேரமும் இடமும்


அன்புக்கான நேரத்தைக் கூட தனியாய் அளந்து வைத்திருக்கிறாய் என மனைவி அடிக்கடி குற்றம் சாட்டுவாள். அப்போதெல்லாம் நான் அதை ஏற்றதில்லை.

குழந்தை பிறந்து வள்ர்ந்து வருகிற இப்போது நான் என் நாயுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்து வருவதை குறிப்பாய் உணர்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் முன்பு நான் என் நாயுடன் தினமும் ஒரு மணிநேரமாவது பேசுவேன். அது சுத்தமாய் கவனிக்காது. ஆனாலும் நான் லொடலொடவென அதனுடன் பேசுவதில் தனி மகிழ்ச்சி அடைவேன். அது மட்டுமல்ல, நான் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன வேலை பண்ணினாலும் நாய் என் காலடியிலேயே இருக்கும்.
குளிக்கும் போது வாசலில் காவல் இருக்கும். நான் சாப்பிட்டால் அதுவும் சாப்பிடும். போன் அடித்து நான் எடுக்காவிட்டால் குலைத்து ரகளை பண்ணும். ரொம்ப போரடித்தால் அதன் முகத்தில் பொய்யாய் குத்தி விளையாடுவேன். முகத்தில் என் முஷ்டி படும் முன் அது சரியாய் கவ்வி விட வேண்டும் என்பதே விதிமுறை.

இப்போது வீட்டில் பெரும்பாலான நேரம் குழந்தையுடனே இருக்கிறேன். எழுதும் போதும் சாப்பிடும் போதும் குழந்தை என் தோளில் இருக்கிறது. என் கவனம் முழுக்க குழந்தை பற்றின வேலைகளிலும் பிரச்சனைகளிலுமே. அது சாப்பிட விரும்புகிறதா, தூங்க வேண்டுமா, எப்படி அழுகையை நிறுத்துவது, எப்படி சிரிக்க வைப்பது, எப்படி தூங்க வைப்பது இப்படி என் வீட்டிலுள்ள நேரம் மையம் கொண்டு விட்டது.

இயல்பாகவே நாய் குழந்தையை தன் போட்டியாக நினைக்கிறது. இருவரையும் பக்கத்தில் வைக்க முடியாது. இதனால் நாய் இப்போது என் பக்கத்தில் இருப்பதில்லை. சற்று தொலைவில் அமர்ந்து என்னையே கவனிக்கிறது. அது பிறந்த பின் இவ்வளவு நாட்கள் அதன் அருகே நான் இல்லாமல் இருப்பது இப்போது தான் முதன்முறை.

நாய் எனக்காய் ஏங்கிப் போயுள்ளது அதன் உடலில் தெரிகிறது. முன்பெல்லாம் நான் மணிக்கணக்காய் கொஞ்சினாலும் மதிக்காது. இப்போது நான் சில நிமிடங்கள் சீராட்டினாலும் அப்படி உற்சாகம் கொள்கிறது. வீட்டுக்குள் வரும் போது ஒரு சின்ன பிஸ்கெட் துண்டு கொண்டு கொடுத்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
அதற்காய் கூடுல் நேரம் ஒதுக்கி செலவழிக்க நினைக்கிறேன். அப்போது தான் புரிகிறது என்னிடம் கூடுதலாய் நேரம் அப்படி இல்லை என.

ஒருவேளை நான் காலையில் சிக்கிரம் எழுந்தால் கூட செய்வதற்கு வேறு வேலைகள் தோன்றி விடும். வெளியே அழைத்துப் போனால் கூட நான் இதுவரை அதனுடன் செலவழித்த காலத்துக்கு ஒப்பாகாது. என் நாய்க்கு என்று என் வாழ்வில் இருந்த நேரத்தை மற்றொருவர் பறித்து விட்டார். அதை இனி மீட்க முடியாது.

அன்புக்கு அளவில்லை தான். ஆனால் அன்பு நாம் இருக்கும் இடம், நமக்கு தரப்பட்ட நேரத்தால் வடிவம் தரப்படுகிறது. இடத்துக்கும் நேரத்துக்கும் உள்ள கட்டுப்பாடு அன்புக்கும் வந்து விடுகிறது. இடத்தையும் காலத்தையும் அளப்பது போல் அன்பையும் தேக்கதண்டியால் அளக்க நேர்கிறது.

இதனால் தான் முற்றிலும் வேறொரு இடத்திற்கு கால அட்டவணைக்கு மாறும் போது நாம் அன்பால் நுரை தப்புகிறோம். அன்பை மிதமிஞ்சி பொழிகிறோம். டாஸ்மாக் ஒரு உதாரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.