முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தின் உண்மையான வெகுமதி


வாசகர்கள் பொதுவாய் இரண்டு வகையாய் எதிர்வினையாற்றுவார்கள். (1) அறிவார்த்தமாய், படைப்பை பகுப்பாய்ந்து. (2) உணர்ச்சிகரமாய், அந்த படைப்பே தமது தான் எனும் உரிமை கோரலுடன்.
 முதல் எதிர்வினை ஆர்வமூட்டும். படைப்பு பற்றி ஒரு தூலமான புரிதலை உருவாக்கவும் உதவும். இரண்டாவது எதிர்வினை ஆழமான திருப்தி தரும்.

கடந்த சில நாட்களாக எனது “ரசிகன்” நாவலை படித்து விட்டு தோழி ஒருவர் தன் நெகிழ்வான மனப்பதிவுகளை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து கொண்டே இருந்தார். “ஏன் அந்த குழந்தையை கொன்றீர்கள்?” என்று கேட்டார். “என்னால் தூங்கவே முடியவில்லை. விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு அதைப் பற்றியே யோசித்தேன்” என்றார். எழுதும் போது என்னையும் கலங்கடித்த இடங்களே அவரையும் நெகிழ வைத்துள்ளது வியப்பாக இருந்தது. இன்று நாவலை படித்து முடித்து விட்டார் போல. “அடப் பாவி சாதிக்கையும் கொன்று விட்டீர்களா? என்னால் தாங்க முடியவில்லை. அழுது விட்டேன். ஏன் அப்படி செய்தீர்கள்?” என்று ஒரு செய்தி அனுப்பி இருந்தார். நாவல் துவங்குவதில் இருந்தே சாதிக்கின் பாத்திரம் மரணத்தை நோக்கி தான் செலுத்தப்படுகிறது என்று பதிலெழுதினேன். அவரை “கொல்லாமல்” இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. மரணம் மட்டுமே அவனுக்கு நிம்மதி தரும். இதை எழுதும் போது எனக்கு முராகாமியின் நார்வேஜிய வனம் நாவல் நினைவு வந்தது. அதில் நாயகன் வதானாபேவுக்கு கிடைக்கிற ஒவ்வொரு அனுபவமும் காதல் உறவும் அவனுக்கு காயங்களை மட்டுமே பரிசளிக்கும். இதைத் தெரிந்தே அவன் நிந்தனைக்கு ஆட்கொடுத்தபடி கொண்டிருப்பான். தான் மிகவும் நேசிப்பவர்களின் பொருட்டு வேதனையை ஏற்றுக் கொண்டிருப்பான். நாவலின் துவக்கத்தில் இருந்தே அவன் கதை வேறெப்படியும் இருக்க முடியாது எனத் தோன்றும். நாவலின் தொனியிலோ அல்லது பாத்திரத்தின் ஆதார மனப்பிழையிலோ அவன் விதி எழுதப்பட்டு விடுகிறது. எழுத்தாளனே நினைத்தாலும் பிறகு அப்பாத்திரத்தை காப்பாற்ற முடியாது.

”ரசிகன்” வெளியான பின் எனக்கு பலவிதமான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆழமான திருப்தி அளித்தது இந்த நெகிழ்வான எதிர்வினையில் தான். ஒருவிதத்தில் இந்நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியது போன்ற ஒருவித மகிழ்ச்சி. வேறெதனாலும் இல்லை. ஒரு கதை மிகவும் உண்மையாகவும் அணுக்கமாகவும் ஒரு வாசகருக்கு தோன்றும் போதே எழுதியவனுக்கு தான் பொய்யான ஒன்றை எழுதவில்லை எனும் நம்பிக்கை ஏற்படுகிறது. எழுத்தின் உண்மையான வெகுமதி அது தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...