முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தின் உண்மையான வெகுமதி


வாசகர்கள் பொதுவாய் இரண்டு வகையாய் எதிர்வினையாற்றுவார்கள். (1) அறிவார்த்தமாய், படைப்பை பகுப்பாய்ந்து. (2) உணர்ச்சிகரமாய், அந்த படைப்பே தமது தான் எனும் உரிமை கோரலுடன்.
 முதல் எதிர்வினை ஆர்வமூட்டும். படைப்பு பற்றி ஒரு தூலமான புரிதலை உருவாக்கவும் உதவும். இரண்டாவது எதிர்வினை ஆழமான திருப்தி தரும்.

கடந்த சில நாட்களாக எனது “ரசிகன்” நாவலை படித்து விட்டு தோழி ஒருவர் தன் நெகிழ்வான மனப்பதிவுகளை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து கொண்டே இருந்தார். “ஏன் அந்த குழந்தையை கொன்றீர்கள்?” என்று கேட்டார். “என்னால் தூங்கவே முடியவில்லை. விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு அதைப் பற்றியே யோசித்தேன்” என்றார். எழுதும் போது என்னையும் கலங்கடித்த இடங்களே அவரையும் நெகிழ வைத்துள்ளது வியப்பாக இருந்தது. இன்று நாவலை படித்து முடித்து விட்டார் போல. “அடப் பாவி சாதிக்கையும் கொன்று விட்டீர்களா? என்னால் தாங்க முடியவில்லை. அழுது விட்டேன். ஏன் அப்படி செய்தீர்கள்?” என்று ஒரு செய்தி அனுப்பி இருந்தார். நாவல் துவங்குவதில் இருந்தே சாதிக்கின் பாத்திரம் மரணத்தை நோக்கி தான் செலுத்தப்படுகிறது என்று பதிலெழுதினேன். அவரை “கொல்லாமல்” இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. மரணம் மட்டுமே அவனுக்கு நிம்மதி தரும். இதை எழுதும் போது எனக்கு முராகாமியின் நார்வேஜிய வனம் நாவல் நினைவு வந்தது. அதில் நாயகன் வதானாபேவுக்கு கிடைக்கிற ஒவ்வொரு அனுபவமும் காதல் உறவும் அவனுக்கு காயங்களை மட்டுமே பரிசளிக்கும். இதைத் தெரிந்தே அவன் நிந்தனைக்கு ஆட்கொடுத்தபடி கொண்டிருப்பான். தான் மிகவும் நேசிப்பவர்களின் பொருட்டு வேதனையை ஏற்றுக் கொண்டிருப்பான். நாவலின் துவக்கத்தில் இருந்தே அவன் கதை வேறெப்படியும் இருக்க முடியாது எனத் தோன்றும். நாவலின் தொனியிலோ அல்லது பாத்திரத்தின் ஆதார மனப்பிழையிலோ அவன் விதி எழுதப்பட்டு விடுகிறது. எழுத்தாளனே நினைத்தாலும் பிறகு அப்பாத்திரத்தை காப்பாற்ற முடியாது.

”ரசிகன்” வெளியான பின் எனக்கு பலவிதமான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆழமான திருப்தி அளித்தது இந்த நெகிழ்வான எதிர்வினையில் தான். ஒருவிதத்தில் இந்நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியது போன்ற ஒருவித மகிழ்ச்சி. வேறெதனாலும் இல்லை. ஒரு கதை மிகவும் உண்மையாகவும் அணுக்கமாகவும் ஒரு வாசகருக்கு தோன்றும் போதே எழுதியவனுக்கு தான் பொய்யான ஒன்றை எழுதவில்லை எனும் நம்பிக்கை ஏற்படுகிறது. எழுத்தின் உண்மையான வெகுமதி அது தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...