முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: வாசக சாலை விமர்சனக் கூட்டம்




நேற்று வாசக சாலை சார்பில் நடந்த எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கான விமர்சனக் கூட்டம் ஒரு எழுத்தாளனாய் எனக்கு மிகவும் நிறைவளித்தது. வேலை நாள் என்பதால் கூட்டம் சேருமா என எனக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம் இருந்தது. ஆனால் தான் போய் சேருமுன்னரே பதினைந்து பேர் அரங்கில் காத்திருந்ததாய் நிகழ்ச்சியின் அமைப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் சொன்னார். சற்று நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது.

 முதலில் அருள் ஒரு ஆழமான செறிவான உரையை தந்தார். நாவலை ஐரோப்பிய நாவல் பரப்பில் வைத்து, அதன் பல அடுக்குகளை விளக்கினார். எப்படி இந்நாவல் துப்பறியும் வகைமையில் எழுதப்பட்டாலும் அது அவ்வகைமையை கடந்து இலக்கிய நாவலாய் உருவாகி உள்ளதை குறிப்பிட்டார்.
 அடுத்து பேசிய கவிஞர் மனுஷி முழுக்க வேறொரு பார்வையை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்து அளித்தார். எப்படி தொடர்ந்து பெண் உடல் இங்கு பலியாக்கப்படுகிறது என்பதையும், நாவலில் தன்னை கவர்ந்த கவித்துவமான இடங்களை சுட்டிக் காட்டி அபாரமாய் பேசினார்.
 அடுத்து பேசிய சரஸ்வதி காயத்ரியின் உரையில் இருந்து ஒரு வாசகரின் கண்ணோட்டத்தை என்னால் துல்லியமாய் அறிய முடிந்தது. சகஜமாய் நேர்மையாய் தன்னை அந்த நாவல் எப்படி பயமுறுத்தவும் தொந்தரவு படுத்தவும் செய்தது எனப் பேசினார்.
 இயக்குநர் ராம் இந்த நாவல் சரளமாகவும் படிக்கத்தக்கதாகவும் உள்ளதை குறிப்பிட்டார். பாலியல் குற்றங்களுக்கு பலியாகும் ஒரு பெண் குழந்தையின் மனம் எப்படியானது என இந்நாவல் கேட்கும் இடம் முக்கியம் என்றார். ஒரு குழந்தை பத்து, பன்னிரெண்டு வயதில் இருந்தே தன்னை வளர்ந்த ஒருவளாக கருதக் கூடும். இந்த கோணத்தில் இருந்து நாவலில் தமிழ்ச்செல்வன் பாத்திரம் வைக்கும் வாதமான, தான் பலாத்காரம் செய்ததாய் கூறப்படும் பெண் உண்மையில் தன்னை தூண்டி அந்த உறவுக்குள் ஈடுபடச் செய்தாள் எனும் கருத்து, நாவலுக்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது என்றார்.
 இதை அடுத்து பேசிய எழுத்தாளர் விஜய மகேந்திரனும் நாவல் தனக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருந்ததையும், பத்மராஜன் படங்களையும் நினைவுபடுத்தியதையும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. என் மீதுள்ள பிரியத்தால் அங்கு வந்த நண்பர் முரளி, கவிஞர் பிரியதர்ஷினி, பிரவீன், மொழிபெயர்ப்பாளர் ஆனந்த்ராஜ், கவிஞர் பா.சரவணன், நண்பர்கள் டேவிட் வெஸ்லி, ஜெய்தினேஷ் என பலரையும் குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும்.
 இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் தமிழில் என்றுமே ஒரு குடும்பமாகத் தான் இருந்து வருகிறோம். கூட்டங்கள் ஒரு குடும்ப சந்திப்புக்கான ஒரு சந்தர்ப்பமும் தான். அது அளிக்கும் மகிழ்ச்சியே தனி!

கூட்டத்தை ஏற்பாடு செய்த, அபாரமாய் ஒருங்கிணைத்த வாசகர் சாலையின் கார்த்திக் வெங்கட்ராமன், பார்த்திபன், ராஜராஜன் ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.