முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயெல்லாம் ஒரு தாயா?

Image result for writer cartoon
பிளாகில் மட்டும் எழுதினால் பிளாகர், பேஸ்புக்கில் எழுதினால் பேஸ்புக் பதிவர், இதையே பத்திரிகையில் எழுதினால் ”எழுத்தாளர்”. எப்படி இந்த பட்டங்களை தீர்மானிக்கிறார்கள் என எனக்கு இன்று வரை புரியவில்லை.
 இப்படி எழுத்துக்களுக்கு தனி குணம், வகைமை உண்டென்றும் எனக்கு தோன்றவில்லை. சாரு எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் துவக்கத்திலும் எழுதிய பத்திரிகை கட்டுரைகளை படியுங்கள். அவற்றில் இன்றுள்ள இணைய எழுத்தின் எள்ளலும் சரளமும் மிளிரும் ஸ்டைல் அப்போதே இருக்கும். நீளமாய் சீரியஸாய் பேஸ்புக், பிளாகில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். பத்திரிகையில் அரட்டை மொழி பயன்படுத்துகிறவர்களும் உண்டு. எப்படி இவர்களை வகை பிரிக்கிறார்கள்?

முன்பு இலக்கிய பத்திரிகைகளில் நீளமாய் கடிதம் எழுதி பிரசுரிப்பவர்கள் இருந்தனர். இக்கடிதங்கள் சிலநேரம் மிகத்தரமாய் இருக்கும் என சாரு ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். குறிப்பாய் காலச்சுவடு இக்கடிதங்கள் மூலம் ஒரு தனி இயக்கமே நடத்தியது. இவர்கள் எழுத்தாளர்கள் இல்லையா? இன்று பேஸ்புக் பதிவுகளுக்கு நீளமான முக்கியமான அல்லது சர்ச்சையை தூண்டும் பின்னூட்டம் எழுதுகிறவர்கள் தனியே இருக்கிறார்கள். பத்து வரி பதிவு எழுதுபவர் பதிவர் எழுத்தாளர் என்றால் இருபது வரிக்கு பின்னூட்டம் இடுபவர் யார்? நோட்டு புத்தகத்தில் நிறைய எழுதி எதையுமே பிரசுரிக்காதவர்கள் எழுத்தாளர்களா இல்லையா?
எது இந்த எழுத்தாள அடையாளத்தை கொடுக்கிறது? தொடர்ந்து எழுதுவதா? அப்படி என்றால் வருடத்திற்கு ஒரு கதை எழுதுபவர் அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தொகுப்பு பிரசுரித்து விட்டு காணாமல் போனவர் எழுத்தாளர் இல்லையா?

சினிமாவில் இந்த சிக்கல் இல்லை. இயக்குநர் ராமை அவர் படம் எடுக்கும் முன்பே எனக்குத் தெரியும். அவர் தன்னை அப்போதே இயக்குநர் எனத் தான் அறிமுகப்படுத்திக் கொள்வார். ஒருவர் படம் எடுக்க நினைத்தாலே அவர் இயக்குநர் தான் என கூறுவார் அவர். ஆனால் எழுத்தில் இப்படி சுலபத்தில் கோர முடிவதில்லை. இசை, ஓவியம் போன்ற கலைகளுக்கும் இது பொருந்தும்.

ஒருவேளை இது வணிகமயமாகாத கலைகளில் சிக்கலாக இருக்கலாம். ஏனென்றால் பரவலான விற்பனைக்குரிய எந்த பண்டத்தை உற்பத்தி பண்ணக் கூடியவருக்கும் உடனடியாய் ஒரு அடையாளம் கிடைத்து விடுகிறது. இல்லாத போது அடையாளம் முழுக்க பார்வை சார்ந்ததாகிறது.

ஒரு பெண் எப்போது தாயாகிறாள்? கருத்தரித்த பின்னரா அல்லது முன்னரேவா? எந்த குழந்தையையும் அள்ளி கையிலெடுத்து நேசிக்கும் ஒருவள் தாயின் அந்தஸ்தை பெறுகிறாளா? பெற்ற பிள்ளையை வெறுக்கும் தாய் ஒருத்தி தாயா இல்லையா? நீயெல்லாம் ஒரு தாயா?, தகப்பனா? நீயெல்லாம் ஒரு நண்பனா? என்பதான கேள்விகளை நீங்கள் “நீயெல்லாம் இரு இயக்குநரா?” “நீயெல்லாம் ஒரு விற்பனை பிரதிநிதியா?” “நீயெல்லாம் ஒரு முதலாளியா?” என மாற்றி கேட்க முடியாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...