முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

ஞானக்கூட்டத்துக்கு ஆழ்ந்த அஞ்சலி.

Image result for ஞானக்கூத்தன்

நான் நவீன கவிதையை படிக்க துவங்கிய காலத்தில் நண்பர்கள் ஞானக்கூத்தனை சிலாகித்து பாராட்டுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அவரை அப்போது படிக்க தவறவிட்டேன். ஆங்கில இலக்கிய படிப்பு எனக்கு பல நவீன ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு நான் அப்பின்புலத்தில் தமிழின் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவர்களுக்கு பிறகு தான் ஞானக்கூட்டத்தின் மொத்த கவிதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன். இயல்பாகவே எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனக்கு ஞானக்கூத்தன் ஒரு நவீன கவிஞரே அல்ல எனப் பட்டது. நவீன கவிதையின் வளர்ச்சிக்கு வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமானுக்கு கூட ஒரு பங்கு உண்டென சொல்வேன். கலீல் கிப்ரான் கூட நவீன கவிதை வாசகனுக்கு முக்கியமானவர் தான். ஆனால் ஞானக்கூத்தன் இவர்களுக்கு வெகுபின்னால் இருக்கிறார். அவர் எழுதியவை ஒருவித செவ்வியல் தனிப்பாடல்கள். சற்றே லகுவான நேரடி மொழியில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகள். அவரது பகடியும் எனக்கு வெகுசிலாக்கியமாய் பட்டதில்லை.


அதன் பிறகு அவர் கவிதையியல் பற்றி எழுதின நூலை படித்தேன். சம்ஸ்கிருத ரசா கோட்பாட்டை கவிதையியலாக மாற்றும் முயற்சி. எனக்கு அந்நூல் அதிருப்தி அளித்தது

எப்போதுமே ஒரு எழுத்தாளனுக்குள் முரண்பட்ட பண்பாடுகளின் குறுக்கீடு நிகழ வேண்டும். வாசிப்பு அல்லது வாழ்க்கை மூலமாக. உதாரணமாய் ரொம்ப மரபார்ந்த ஆள் இடதுசாரி சிந்தனைகளின் ஆட்பட்டாலோ அல்லது இறுக்கமான நவீன மனம் ஒன்று மரபார்ந்த இலக்கியம் அல்லது மதம் நோக்கி ஈர்க்கப்பட்டாலோ. அல்லது அசோகமித்திரனுக்கு நிகழ்ந்தது போல்  எதார்த்த வாழ்வு அவருக்குள் இருக்கும் லட்சியவாதங்களை முறியடித்தாலோ இது நிகழலாம். அப்போது படைப்பூக்கம் கிளர்ச்சி பெறும். புது சிந்தனைகள் தோன்றும். இதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன். ஞானக்கூத்தனுக்குள் இது நிகழவில்லை என தோன்றுகிறது. பட்டுப்புழுவாகமே வாழ்ந்து விட்டார். அல்லது தான் சந்தித்த எதிர்நிலைகளை அவர் எளிய பகடிகள் மூலம் கடந்து சென்று விட்டார். அப்படியான பகடிகளில் நான் ரசித்தது நாய்
=====
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
:
இதில் இந்தபார்ப்பான்என்ற சொல்லின் அரசியல் பற்றி நிறைய விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இன்றைய மீடியா கூச்சல் யுகத்துக்கு பொருத்தமான கவிதை தான் இது. அதே நேரம் இந்த பகடியும் ஆழமான ஒன்றல்ல. அதை விட எனக்கு சு.ராவின் இக்கவிதை சிறந்த பகடி என தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
'இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...

இக்கவிதையில் பகடி வெறும் வெட்டி சர்ச்சை பற்றியல்ல ஒரு பண்பாட்டின் அபத்தமான பேச்சு மரபை பற்றியது. இதிலுள்ள நுணுக்கமான அபத்தம் ஞானக்கூத்தனில் இல்லை.


கருத்துகள்

நா. கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவைப் பார்த்தபோது, ஞானக்கூத்தன் பேட்டி இன்று படித்தது நினைவுக்கு வருகிறது:
http://azhiyasudargal.blogspot.com/2013/05/blog-post_18.html

”உங்கள் பென்சில் படங்கள் பூரா உங்க பிள்ளைப்பருவ வாழ்க்கை தானா?

ஞானக்கூத்தன்: வெளிப்படையாகச் சொல்லப் போனால் நான் இருபத்தோரு வயசுக்கு மேல வளரல. எனக்கும் என் கவிதைக்கும் ஒண் ணும் நடக்கல, அதுதான் என் பிரச்சினை. அத ஒரு இடத்துல சொல்லிருக்கேன். இருபத்தோரு வயசோட எல்லாம் முடிஞ்சுபோச்சு. அப்புறம் எப்படி வாழ்றது? ஓட்டு போடுறதுக்கு முன்னாடியே வாழ்க்கை முடிஞ்சுபோச்சுன்னா பாக்கி வாழ்க்கையை என்ன செய்றது? இப்ப 72 வயசாகுது. அம்பது வருஷம் ஓட்டியிருக்கேன். அப்படி ஒரு சிக்கல் வாழ்க்கைல. நாலு வயசுலயிருந்து 21 வயசு வரைக்கும்தான் எடுக்குறேன்.”

நா. கணேசன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.