முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனதுக்குள் கேட்கும் குரல்

Image result for silk smitha

இதைப் படிக்கும் போது உங்களுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடையது? உங்களுடையது தான். ஆனால் நீங்கள் தான் வாயே திறக்கவில்லையே? இது எப்படி நிகழ்கிறது. அறிவியல் ஒரு விளக்கம் கொடுக்கிறது. பேச்சுக்கான சில நரம்பணுக்கள் வாசிக்கும் போதும் செயல்படுகின்றன. அதனால் தான் ”குரல்” கேட்கிறது.

மேற்கத்திய இலக்கிய கோட்பாடுகள் குறித்து ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு அத்தியாயம் அமைப்பியல் பற்றி. அமைப்பியலின் பிதாமகர் சசூர். அவர் ஒரு சொல் எப்படி அர்த்தம் கொள்கிறது என விளக்குகிறார். சில்க் என்றதும் உங்களுக்கு எப்படி அர்த்தமாகும்? சில்க் ஸ்மிதா, பட்டாடை அல்லது பட்டின் மென்மை, ஏன் பட்டுப்புழு கூட மனதில் தோன்றலாம். முதலிடம் எப்படியோ சிலுக்குக்கு தான். சரி எப்படி இந்த அர்த்தப்படுத்தல் நிகழ்கிறது?
ஒரு சொல்லை சசூர் இரண்டு விசயங்களின் இணைப்பினால் உருவாகிற சங்கதி என பார்க்கிறார். அர்த்தப்படுத்தும் சங்கதி, அர்த்தப்படுத்தப்படும் விசயம். சில்க் என்றால் அவரது தோற்றம் அர்த்தப்படுத்தும் சங்கதி (signifier). சில்க் எப்படியானவர் (அதாவது ஒரு நடிகை) என்பது அர்த்தப்படுத்தப்படும் விசயம் (signified).
 இதை ஏன் ரெண்டாக பார்க்க வேண்டும்? ஒருவேளை சில்க் ஸ்மிதா தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அரசியலில் புகுந்து வென்று, ஒரு கட்சியின் தலைவி ஆகி முதலமைச்சர் ஆகி தனக்கென வேறு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தால்… ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து சில்க் என கேட்டதும் உங்களுக்கு “தமிழினத் தலைவி”, “ஏழைகளின் காவலர்” என்பது போல் ஒரு அர்த்தம் கிடைக்கலாம். ஆக அர்த்தம் நிரந்தரம் அல்ல. இதை விளக்க ஒரு சொல்லையும் அர்த்தத்தை ரெண்டாய் பிரித்து பார்க்க வேண்டும் என்றார் சசூர். அதனால் அவர் சொல்லையே ரெண்டாக்கினார். அர்த்தத்தை சுட்டி நிற்கும் பொருள். அது சுட்டும் அர்த்தம்.
இதை விளக்கும் போது சசூர் sound image பற்றி சொல்கிறார். ஒரு சொல் நமக்குள் வேலை செய்ய அதற்கு ஒரு ஒலி பிம்பம் வேண்டும் என்றார். உதாரணமாய் மோடி என்று கேட்டதும், அதாவது படித்தால் கூட, மனதுக்குள் அவரது சித்திரம் எழ வேண்டும். அதற்கு நம் மனம் மோடி எனும் சொல் தனக்குள் ஒலித்து கேட்க வேண்டும் என்றார். அதாவது நீங்கள் சாலையில் ஒரு அழகான பெண்ணை பார்த்ததும் அவளைக் குறித்து யோசிக்கிறீர்கள். அந்த எண்ணங்களை, உங்கள் குரல் பின்னணியில் டப்பிங் செய்ய, மனதுக்குள் நீங்கள் அவளை பார்க்கும் அதே சமயம் கேட்கிறீர்கள் தானே? அப்படி கேட்காமல் அவளைக் குறித்து நீங்கள் யோசிக்கவே முடியாது.
எனக்கு இந்த இடம் வந்ததும் ஒரு சந்தேகம் எழுந்தது. பிறவியிலே செவிடான ஒருவருக்கு எந்த சொல்லுக்கும் ஒலி வடிவம் தெரியாது. அவர் வாசிக்கும் போது, யோசிக்கும் போது சொற்கள் அவருக்குள் ஒலிக்குமா? அவருக்குள் sound image இருக்காது தானே? அப்படி என்றால் சசூர் சொல்வது அவர் விசயத்தில் பொருந்தாது.
அது மட்டுமல்ல திடீரென ஒருவர் கத்தியை எடுத்து நம் கழுத்தில் வைத்தால் அந்த நொடி உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என துல்லியமாய் புரிந்து விடும். ஆனால் யோசிக்கவே மாட்டீர்கள். எண்ணமே எழாமல் புரிந்து கொள்வீர்கள். அப்போது கத்தி எனும் பிம்பத்தை அதன் ஒலி வடிவின்றி அறிந்து கொள்கிறோமே. இது எப்படி நிகழ்கிறது?

அதே போல வேகமாய் வாசிக்கையிலும் நம் மனம் சொற்களை உச்சரிப்பதில்லை. சசூரின் கோட்பாடே பிரக்ஞைபூர்வமான மனநிலையில் ஏற்படுத்தும் அர்த்தப்படுத்தல் பற்றியது என நினைக்கிறேன். பிரக்ஞை அற்ற நிலையில் நாம் புரிந்து கொள்ளும் போது சசூரின் ஒலி பிம்பம் செயல்படுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...