முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவர்களுடன் ஜெயமோகன்: ஒரு கொடுப்பினை


ஜெயமோகன் சிங்கப்பூரின் National Institute of Education இல் writer in residency ஆக தங்கி இருக்கிறார். இது பற்றின சேதியை straitstimes.com எனும் இணையதளத்தில் படித்தேன்.
Writer in residency என்பது ஐரோப்பிய தேசங்களில் உள்ள ஒரு வழமை. ஒரு எழுத்தாளரை அழைத்து பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கி எழுத வாய்ப்பளிப்பார்கள். அசோகமித்திரன் தனக்கு இவ்வாறு கிடைத்த வாய்ப்பின் போதான அனுபவங்களை ஒற்றன் நாவலில் எழுதியிருக்கிறார்.
சிங்கப்பூரின் NIEஇல் இப்போது தான் இந்த தமிழ் writer in residency கொண்டு வந்திருக்கிறார்கள். முதன்முதலாக ஜெயமோகனும் மற்றொரு சிங்கப்பூர் எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள். எட்டு வாரங்கள் அங்கு தங்கி எழுதலாம். அவ்வப்போது மாணவர்களுடன் உரையாடலாம். இந்த வாய்ப்பு ஜெயமோகனுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பதை விட அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு கொடையாக இருக்கும். (அவர்கள் அதை பயன்படுத்த தெரிந்தவர்கள் என்றால்.)

எனக்கு இச்செய்தியை படித்த போது ஜில்லென்று இருந்தது. அந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனத் தோன்றியது. என் கல்லூரி நாட்கள் நினைவு வந்தன. நான் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் படிக்கையில் தான் ஜெயமோகனை அடிக்கடி தேடி சென்று பார்க்க துவங்கினேன். காலையில் இரண்டு வகுப்புகள் முடிந்ததும் கல்லூரியில் இருந்து நைசாக தப்பித்து தக்கலையில் உள்ள ஜெயமோகனின் அலுவலகம் சென்று விடுவேன். அவர் பேச்சை கேட்பதில் எனக்கு அப்படி ஒரு மனக்கிளர்ச்சி இருந்தது.

ஜெயமோகன் என் பேராசிரியர்களை விட பலமடங்கு படித்தவராக இருந்தார். குறிப்பாய் புனைவிலக்கியத்தில். தான் வாசித்த நூல்களின் நுண் தகவல்களை துல்லியமாய் நினைவு வைத்திருப்பார். அவற்றை அழகாய் சுவாரஸ்யமாய் அறிமுகம் செய்வதில் அவர் விற்பன்னர். அக்காலத்தில் எப்படி இலக்கிய பிரதியை அணுக வேண்டும் என அவர் கற்றுத் தந்ததை தான் நான் என் அனுபவம் மற்றும் வாசிப்பு கொண்டு பின்னாளில் மெல்ல மெல்ல விரிவாக்கி கொண்டேன். யானை ஒரு வனத்தில் நடந்தால் ஒரு பாதை அங்கு தானே உருவாகும் என ஜெயமோகன் ஓரிடத்தில் எழுதியிருப்பார். ஜெயமோகனின் சொற்கள் எனும் யானை பயணித்த தடம் என் மனதில் இன்றும் அழியாமல் உள்ளது. நான் அவ்வழி ஒரு வியப்புடன் நடந்து செல்ல முயல்கிறேன்.

நான் அவரிடம் அக்காலத்தில் “நீங்கள் ஏன் ஒரு பேராசியர் ஆகியிருக்கக் கூடாது?” எனக் கேட்டேன். அவர் அது தனக்கு அலுப்பூட்டியிருக்கும் என்றார். ஒருவிதத்தில் உண்மை தான். எல்லா மாணவர்க்ளும் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. ஒரே பாடத்தை திரும்ப திரும்ப சொல்லித் தர வேண்டும். ஆனால் என்னைப் போன்ற ஆர்வம் ததும்பும் மாணவர்களுக்கு ஜெயமோகனின் அருகாமை ஒரு வரப்பிரசாதமாய் இருந்திருக்கும் (இதையே எஸ்.ராவுக்கும் சொல்லலாம்.)

ஜெயமோகனை சந்திக்க ஏற்ற வயது 15-25 எனலாம். அதற்கு பிறகு உங்களுக்கு என அனுபவங்களும் இறுக்கமான நம்பிக்கைகளும் தோன்றும். கண்கள் கடிவாளம் இட்டது போல் ஆகும். நம் மனம் ஈரமன மண் போல் இருக்கும் போது ஜெயமோகன் போன்றவர்களின் சொற்கள் அதில் விழ வேண்டும். அதனால் தான் இது போல் அவரை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் பயன்படுத்த வேண்டும் எனத் தோன்றுகிறது.
ஆனால் இளம் எழுத்தாளர்கள் அவருடன் தொடர்ந்து உரையாடுவதும் ஆரோக்கியமானது அல்ல என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். எப்படி ஒரு ஆலமரத்தின் கீழ் வேறு செடி வளர முடியாதோ அது போல் ஜெயமோகனுடனான தொடர்ந்து உரையாடல் உங்கள் சிந்தனை சுயமாய் அமைவதை தடுக்கும். இதை நான் ஏதோ இன்று புதிதாய் சொல்ல வில்லை. வலுவான ஆளுமை கொண்ட, அறிவும் கற்பனையும் மிக்க, பிறர் மீது அதிகம் தாக்கம் செலுத்துபவர்களின் நட்பு ஒருவரின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என பிரான்ஸிஸ் பேகன் எனும் பதினேழாம் நூற்றாண்டு ஆங்கில கட்டுரை ஆசிரியர் சொல்லி இருக்கிறார். ஜெயமோகனுடன் தொடர்ந்து நெருக்கமான உறவு பேணும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் (எனக்குத் தெரிந்து) தனித்துவமான எழுத்தாளர்ர்களாய், சிந்தனையாளர்களாய் மலர்ந்ததில்லை. அவர்கள் அவரைப் போன்றே யோசிக்கவும் எழுதவும் முயன்று கொண்டிருப்பார்கள். அவரது தாக்கம் அவர்களை சிறுத்து போக செய்யும்.

புது எழுத்தாளர்கள் ஜெயமோகனை “அகலாது அணுகாது தீக்காய” வேண்டும். ரொம்ப பக்கத்தில் போனால் சுட்டு விடுவார். (அது நெருப்பின் குணம். அவரது தவறல்ல :)) கொஞ்சம் விலகி நின்று அவரை ரசிக்கவும் அவருடன் உரையாடவும் வேண்டும். அல்லது அரவணைப்பாய், உயிருக்கு உயிராய் பழகி விட்டு, அவரது வெம்மையில் உங்கள் ஆளுமை தவிப்பதை அறிந்ததும் உறவை முறித்து கொண்டு விட வேண்டும். முதலாவது தான் நல்லது!
ஆனால் மாணவர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. நண்பர்களுக்கும் (அவர்களிடம் மிகுந்த அக்கறை கொள்பவர் ஜெயமோகன்)

ஜெயமோகன் இளைஞர்கள், மாணவர்கள், இளம் வாசகர்கள் அருகில் இருக்க வேண்டியவர். அது அவர்களுக்கு கொடுப்பினையாக இருக்கும்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.