Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மாணவர்களுடன் ஜெயமோகன்: ஒரு கொடுப்பினை


ஜெயமோகன் சிங்கப்பூரின் National Institute of Education இல் writer in residency ஆக தங்கி இருக்கிறார். இது பற்றின சேதியை straitstimes.com எனும் இணையதளத்தில் படித்தேன்.
Writer in residency என்பது ஐரோப்பிய தேசங்களில் உள்ள ஒரு வழமை. ஒரு எழுத்தாளரை அழைத்து பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கி எழுத வாய்ப்பளிப்பார்கள். அசோகமித்திரன் தனக்கு இவ்வாறு கிடைத்த வாய்ப்பின் போதான அனுபவங்களை ஒற்றன் நாவலில் எழுதியிருக்கிறார்.
சிங்கப்பூரின் NIEஇல் இப்போது தான் இந்த தமிழ் writer in residency கொண்டு வந்திருக்கிறார்கள். முதன்முதலாக ஜெயமோகனும் மற்றொரு சிங்கப்பூர் எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள். எட்டு வாரங்கள் அங்கு தங்கி எழுதலாம். அவ்வப்போது மாணவர்களுடன் உரையாடலாம். இந்த வாய்ப்பு ஜெயமோகனுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பதை விட அங்குள்ள மாணவர்களுக்கு ஒரு கொடையாக இருக்கும். (அவர்கள் அதை பயன்படுத்த தெரிந்தவர்கள் என்றால்.)

எனக்கு இச்செய்தியை படித்த போது ஜில்லென்று இருந்தது. அந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனத் தோன்றியது. என் கல்லூரி நாட்கள் நினைவு வந்தன. நான் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் படிக்கையில் தான் ஜெயமோகனை அடிக்கடி தேடி சென்று பார்க்க துவங்கினேன். காலையில் இரண்டு வகுப்புகள் முடிந்ததும் கல்லூரியில் இருந்து நைசாக தப்பித்து தக்கலையில் உள்ள ஜெயமோகனின் அலுவலகம் சென்று விடுவேன். அவர் பேச்சை கேட்பதில் எனக்கு அப்படி ஒரு மனக்கிளர்ச்சி இருந்தது.

ஜெயமோகன் என் பேராசிரியர்களை விட பலமடங்கு படித்தவராக இருந்தார். குறிப்பாய் புனைவிலக்கியத்தில். தான் வாசித்த நூல்களின் நுண் தகவல்களை துல்லியமாய் நினைவு வைத்திருப்பார். அவற்றை அழகாய் சுவாரஸ்யமாய் அறிமுகம் செய்வதில் அவர் விற்பன்னர். அக்காலத்தில் எப்படி இலக்கிய பிரதியை அணுக வேண்டும் என அவர் கற்றுத் தந்ததை தான் நான் என் அனுபவம் மற்றும் வாசிப்பு கொண்டு பின்னாளில் மெல்ல மெல்ல விரிவாக்கி கொண்டேன். யானை ஒரு வனத்தில் நடந்தால் ஒரு பாதை அங்கு தானே உருவாகும் என ஜெயமோகன் ஓரிடத்தில் எழுதியிருப்பார். ஜெயமோகனின் சொற்கள் எனும் யானை பயணித்த தடம் என் மனதில் இன்றும் அழியாமல் உள்ளது. நான் அவ்வழி ஒரு வியப்புடன் நடந்து செல்ல முயல்கிறேன்.

நான் அவரிடம் அக்காலத்தில் “நீங்கள் ஏன் ஒரு பேராசியர் ஆகியிருக்கக் கூடாது?” எனக் கேட்டேன். அவர் அது தனக்கு அலுப்பூட்டியிருக்கும் என்றார். ஒருவிதத்தில் உண்மை தான். எல்லா மாணவர்க்ளும் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. ஒரே பாடத்தை திரும்ப திரும்ப சொல்லித் தர வேண்டும். ஆனால் என்னைப் போன்ற ஆர்வம் ததும்பும் மாணவர்களுக்கு ஜெயமோகனின் அருகாமை ஒரு வரப்பிரசாதமாய் இருந்திருக்கும் (இதையே எஸ்.ராவுக்கும் சொல்லலாம்.)

ஜெயமோகனை சந்திக்க ஏற்ற வயது 15-25 எனலாம். அதற்கு பிறகு உங்களுக்கு என அனுபவங்களும் இறுக்கமான நம்பிக்கைகளும் தோன்றும். கண்கள் கடிவாளம் இட்டது போல் ஆகும். நம் மனம் ஈரமன மண் போல் இருக்கும் போது ஜெயமோகன் போன்றவர்களின் சொற்கள் அதில் விழ வேண்டும். அதனால் தான் இது போல் அவரை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் பயன்படுத்த வேண்டும் எனத் தோன்றுகிறது.
ஆனால் இளம் எழுத்தாளர்கள் அவருடன் தொடர்ந்து உரையாடுவதும் ஆரோக்கியமானது அல்ல என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். எப்படி ஒரு ஆலமரத்தின் கீழ் வேறு செடி வளர முடியாதோ அது போல் ஜெயமோகனுடனான தொடர்ந்து உரையாடல் உங்கள் சிந்தனை சுயமாய் அமைவதை தடுக்கும். இதை நான் ஏதோ இன்று புதிதாய் சொல்ல வில்லை. வலுவான ஆளுமை கொண்ட, அறிவும் கற்பனையும் மிக்க, பிறர் மீது அதிகம் தாக்கம் செலுத்துபவர்களின் நட்பு ஒருவரின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என பிரான்ஸிஸ் பேகன் எனும் பதினேழாம் நூற்றாண்டு ஆங்கில கட்டுரை ஆசிரியர் சொல்லி இருக்கிறார். ஜெயமோகனுடன் தொடர்ந்து நெருக்கமான உறவு பேணும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் (எனக்குத் தெரிந்து) தனித்துவமான எழுத்தாளர்ர்களாய், சிந்தனையாளர்களாய் மலர்ந்ததில்லை. அவர்கள் அவரைப் போன்றே யோசிக்கவும் எழுதவும் முயன்று கொண்டிருப்பார்கள். அவரது தாக்கம் அவர்களை சிறுத்து போக செய்யும்.

புது எழுத்தாளர்கள் ஜெயமோகனை “அகலாது அணுகாது தீக்காய” வேண்டும். ரொம்ப பக்கத்தில் போனால் சுட்டு விடுவார். (அது நெருப்பின் குணம். அவரது தவறல்ல :)) கொஞ்சம் விலகி நின்று அவரை ரசிக்கவும் அவருடன் உரையாடவும் வேண்டும். அல்லது அரவணைப்பாய், உயிருக்கு உயிராய் பழகி விட்டு, அவரது வெம்மையில் உங்கள் ஆளுமை தவிப்பதை அறிந்ததும் உறவை முறித்து கொண்டு விட வேண்டும். முதலாவது தான் நல்லது!
ஆனால் மாணவர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. நண்பர்களுக்கும் (அவர்களிடம் மிகுந்த அக்கறை கொள்பவர் ஜெயமோகன்)

ஜெயமோகன் இளைஞர்கள், மாணவர்கள், இளம் வாசகர்கள் அருகில் இருக்க வேண்டியவர். அது அவர்களுக்கு கொடுப்பினையாக இருக்கும்! 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...