Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மெனிஞ்சியோமா

Image result for மெனிஞ்சியோமா

கணேசகுமாரனின் மெனிஞ்சியோமா நாவல் படித்து முடித்ததும் எனக்கு முதலில் தோன்றியது: இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த நாவல் படிக்கப் படும். ஏனென்றால் 1) மூளையில் நடக்கும் அறுவை சிகிச்சை, மருந்துகளும் சிகிச்சை முறைகளும் சோதனைகளும் ஒரு மனிதனை இழிவின் கீழ்மட்டத்துக்கு கொண்டு சென்று அவனை ஒரு சுய நிர்ணயமற்ற விலங்கைப் போன்றே நடத்துவது ஆகிய விசயங்களை கணேசகுமாரன் துல்லியமாய் வர்ணித்துள்ள முறை 2) மீண்டும் தமிழில் ஒருவர் மூளையில் கட்டி வந்து, அறுவை சிகிச்சை செய்து கொண்டு, உயிருடன் மீண்டு வந்து அவர் எழுத்தாளராகவும் இருந்து அதைப் பற்றி ஒரு நாவல் எழுதும் சாத்தியம் 0.05% என்பதால்.


இந்நாவலில் சந்துரு எனும் இளைஞனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அவனது மழிக்கப்பட தலையில் ஒரு கோட்டை வரைந்து அங்கு தலைமை மருத்துவர் ஒரு கத்தியால் கிழிக்கிறார். அப்போது ரத்தம் பீறிட்டு அவர் முகத்தில் தெறிக்கிறது. அவர் அமைதியாய் அகன்று ஒரு கழுத்தொட்டியில் பொறுமையாய் தன்னை அலம்பிக் கொள்கிறார். அவர் இடத்தில் நின்று அடுத்த நிலையில் உள்ள மருத்துவர் ஒரு கருவியால் மண்டை எலும்பை அறுக்கத் துவங்குகிறார். இந்த காட்சியை நாவலை படித்த பின்னும் நீண்ட நேரம் என்னால் மறக்க முடியவில்லை. இதே தொனியில் பெரும்பகுதி நாவல் வாசகனை பீதியூட்டிக் கொண்டே போகிறது.

 மனித நிலையின் அவலம் என்பது சுயமரியாதையும், சுயநிர்ணயத்தை ஒருவன் இழக்கிற இடத்தில் தான் துவங்குகிறது. ஏழ்மை, அடிமைத்தனம், சாதிய ஒடுக்குமுறை என ஒவ்வொரு கொடுமையில் மனிதன் தன் மீதுள்ள உரிமையை இழக்கிறான். ஆனால் இந்த அவலத்தின் உச்சம் என்பது ஒருவன் தன் உடல் மீதுள்ள நிர்ணய உரிமையை இழந்து, அதை ஒரு மருத்துவருக்கு, நிறுவனத்துக்கு, சமூகத்துக்கு ஒருவன் தாரை வார்ப்பது தான். தமிழில் உடல் சார்ந்து மெல்ல மெல்ல ஒருவன் சீரழிந்து சிதைவதை, அதன் இழிவை, அருவருப்பை தொடர்ந்து எழுதியவர் என ஜெயமோகனை சொல்ல வேண்டும். குறிப்பாய் அவரது ஏழாம் உலகம், நூறு நாற்காலிகள் போன்ற படைப்புகள். மெனிஞ்சியோமா நாவல் எனக்கு இந்த வகை எழுத்து எனப் பட்டது. ஒரே வித்தியாசம் ஜெயமோகனில் இப்படி இழிவுக்குள்ளாகப்படுபவர் பிறிதாகவும் கணேசகுமாரனில் அது மைய பாத்திரமாகவும் இருக்கிறது. ஜெயமோகன் சிதையும் உடலைக் கொண்டு அறம், நன்மை-தீமை குறித்த கேள்விகளை எழுப்புகிறார். கணேசகுமாரன் அவலத்தையும் அதன் கழிவிரக்கத்தையும் மட்டும் சித்தரிக்கிறார்.

 இது சார்ந்து இன்னொரு விசயம்: இப்படியான அருவருப்பான காட்சிகளை நாம் நேரில் பார்த்தால் வாந்தி எடுப்போம். உதாரணமாய், மெனிஞ்சியோமாவில் சந்துருவுக்கு எனிமா கொடுப்பது, அவன் தன் நாவை நனைக்க மூத்திரத்தை தொட்டு நக்குவது, சிகிச்சை காலத்தில் முதன்முதலில் எழுந்து நடக்க துவங்கியதும் முதன்முதலில் சிறுநீர் கழிப்பதற்காய் ஏங்குவது… ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் கதையில் அந்த பிச்சைக்காரி அம்மா தன் மகனின் குழந்தைக்கு ஒரு அழுகிய உணவை ஊட்டும் இடம் ஆகியவை. ஆனால் இக்காட்சிகளை எழுத்து வழியாய் ஒரு வர்ணனையாய் எதிர்கொண்டு கற்பனை செய்வதில் வாசகனுக்கு ஒரு சுகம், ஒரு திகில் உணர்வு உள்ளது.

எனக்கு மெனிஞ்சியோமா படிக்க ஒரு பேய் நாவல் போன்றிருந்தது. இரவு 12 மணிக்கு துவங்கி 1:30க்கு படித்து முடித்தேன். அதன் பிறகு கண்ணை மூடித் தூங்க பயமாய் இருந்தது. சொல்லப் போனால் பேய் நாவல்கள் கூட என்னை இப்படி பயமுறுத்தியது இல்லை.

இந்த நாவலில் மருந்துகள், சிகிச்சை முறை, மூளையின் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறிவியல் தகவல்களை தந்தபடியே போகிறார் கணேசகுமாரன். இதற்கு அவர் நிறைய மெனக்கட்டிருப்பது தெரிகிறது. இத்தகவல்கள் நாவலின் காட்சிகளின் குரூரத்தன்மையை இன்னும் உக்கிரமாக்க உதவுகின்றன. இதை அவர் தெரிந்து செய்தாரா அல்லது எதேச்சையாய் நடந்ததா எனத் தெரியவில்லை. எப்போதுமே ஒரு கொடூரமான செயலை எந்த உணர்ச்சியுமற்ற அறிவியல் அல்லது தொழில் நுட்ப தகவல்களால் விவரித்தால் அதன் தாக்கம் பன்மடங்காக இருக்கும். மெனிஞ்சியோமாவில் மருத்துவ துறையின் ஒரு அந்நியத்தன்மை, அதன் சர்வாதிகாரம், அதனிடம் நம்மை ஒப்பிவித்தபின் நான் உணரும் தனிமை, பீதி ஆகியவற்றை உணர்த்த இத்தகவல்கள் மட்டுமே கொண்டு எழுதப்பட்ட இடங்கள் உதவுகின்றன.

தூங்கும் முன் மூன்று கேள்விகளை யோசித்தபடி இருந்தேன்:
1)   ஏன் இப்படியான ஒரு நாவலை வாசித்து தொலைத்தேன்?
2)   ஏன் இந்த நாவலை நான் இதுவரை வாசிக்கவில்லை?

3)   ஏன் இவ்வளவு அருவருப்பும் கொடூரமும் கொண்ட நாவல் எனக்கு இவ்வளவு சிலாகிப்பாய் எனக்கு தோன்றுகிறது? நான் ஏன் இந்த அவலத்தை உள்ளுக்குள் ரசிக்கிறேன்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...