முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெனிஞ்சியோமா

Image result for மெனிஞ்சியோமா

கணேசகுமாரனின் மெனிஞ்சியோமா நாவல் படித்து முடித்ததும் எனக்கு முதலில் தோன்றியது: இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த நாவல் படிக்கப் படும். ஏனென்றால் 1) மூளையில் நடக்கும் அறுவை சிகிச்சை, மருந்துகளும் சிகிச்சை முறைகளும் சோதனைகளும் ஒரு மனிதனை இழிவின் கீழ்மட்டத்துக்கு கொண்டு சென்று அவனை ஒரு சுய நிர்ணயமற்ற விலங்கைப் போன்றே நடத்துவது ஆகிய விசயங்களை கணேசகுமாரன் துல்லியமாய் வர்ணித்துள்ள முறை 2) மீண்டும் தமிழில் ஒருவர் மூளையில் கட்டி வந்து, அறுவை சிகிச்சை செய்து கொண்டு, உயிருடன் மீண்டு வந்து அவர் எழுத்தாளராகவும் இருந்து அதைப் பற்றி ஒரு நாவல் எழுதும் சாத்தியம் 0.05% என்பதால்.


இந்நாவலில் சந்துரு எனும் இளைஞனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அவனது மழிக்கப்பட தலையில் ஒரு கோட்டை வரைந்து அங்கு தலைமை மருத்துவர் ஒரு கத்தியால் கிழிக்கிறார். அப்போது ரத்தம் பீறிட்டு அவர் முகத்தில் தெறிக்கிறது. அவர் அமைதியாய் அகன்று ஒரு கழுத்தொட்டியில் பொறுமையாய் தன்னை அலம்பிக் கொள்கிறார். அவர் இடத்தில் நின்று அடுத்த நிலையில் உள்ள மருத்துவர் ஒரு கருவியால் மண்டை எலும்பை அறுக்கத் துவங்குகிறார். இந்த காட்சியை நாவலை படித்த பின்னும் நீண்ட நேரம் என்னால் மறக்க முடியவில்லை. இதே தொனியில் பெரும்பகுதி நாவல் வாசகனை பீதியூட்டிக் கொண்டே போகிறது.

 மனித நிலையின் அவலம் என்பது சுயமரியாதையும், சுயநிர்ணயத்தை ஒருவன் இழக்கிற இடத்தில் தான் துவங்குகிறது. ஏழ்மை, அடிமைத்தனம், சாதிய ஒடுக்குமுறை என ஒவ்வொரு கொடுமையில் மனிதன் தன் மீதுள்ள உரிமையை இழக்கிறான். ஆனால் இந்த அவலத்தின் உச்சம் என்பது ஒருவன் தன் உடல் மீதுள்ள நிர்ணய உரிமையை இழந்து, அதை ஒரு மருத்துவருக்கு, நிறுவனத்துக்கு, சமூகத்துக்கு ஒருவன் தாரை வார்ப்பது தான். தமிழில் உடல் சார்ந்து மெல்ல மெல்ல ஒருவன் சீரழிந்து சிதைவதை, அதன் இழிவை, அருவருப்பை தொடர்ந்து எழுதியவர் என ஜெயமோகனை சொல்ல வேண்டும். குறிப்பாய் அவரது ஏழாம் உலகம், நூறு நாற்காலிகள் போன்ற படைப்புகள். மெனிஞ்சியோமா நாவல் எனக்கு இந்த வகை எழுத்து எனப் பட்டது. ஒரே வித்தியாசம் ஜெயமோகனில் இப்படி இழிவுக்குள்ளாகப்படுபவர் பிறிதாகவும் கணேசகுமாரனில் அது மைய பாத்திரமாகவும் இருக்கிறது. ஜெயமோகன் சிதையும் உடலைக் கொண்டு அறம், நன்மை-தீமை குறித்த கேள்விகளை எழுப்புகிறார். கணேசகுமாரன் அவலத்தையும் அதன் கழிவிரக்கத்தையும் மட்டும் சித்தரிக்கிறார்.

 இது சார்ந்து இன்னொரு விசயம்: இப்படியான அருவருப்பான காட்சிகளை நாம் நேரில் பார்த்தால் வாந்தி எடுப்போம். உதாரணமாய், மெனிஞ்சியோமாவில் சந்துருவுக்கு எனிமா கொடுப்பது, அவன் தன் நாவை நனைக்க மூத்திரத்தை தொட்டு நக்குவது, சிகிச்சை காலத்தில் முதன்முதலில் எழுந்து நடக்க துவங்கியதும் முதன்முதலில் சிறுநீர் கழிப்பதற்காய் ஏங்குவது… ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் கதையில் அந்த பிச்சைக்காரி அம்மா தன் மகனின் குழந்தைக்கு ஒரு அழுகிய உணவை ஊட்டும் இடம் ஆகியவை. ஆனால் இக்காட்சிகளை எழுத்து வழியாய் ஒரு வர்ணனையாய் எதிர்கொண்டு கற்பனை செய்வதில் வாசகனுக்கு ஒரு சுகம், ஒரு திகில் உணர்வு உள்ளது.

எனக்கு மெனிஞ்சியோமா படிக்க ஒரு பேய் நாவல் போன்றிருந்தது. இரவு 12 மணிக்கு துவங்கி 1:30க்கு படித்து முடித்தேன். அதன் பிறகு கண்ணை மூடித் தூங்க பயமாய் இருந்தது. சொல்லப் போனால் பேய் நாவல்கள் கூட என்னை இப்படி பயமுறுத்தியது இல்லை.

இந்த நாவலில் மருந்துகள், சிகிச்சை முறை, மூளையின் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறிவியல் தகவல்களை தந்தபடியே போகிறார் கணேசகுமாரன். இதற்கு அவர் நிறைய மெனக்கட்டிருப்பது தெரிகிறது. இத்தகவல்கள் நாவலின் காட்சிகளின் குரூரத்தன்மையை இன்னும் உக்கிரமாக்க உதவுகின்றன. இதை அவர் தெரிந்து செய்தாரா அல்லது எதேச்சையாய் நடந்ததா எனத் தெரியவில்லை. எப்போதுமே ஒரு கொடூரமான செயலை எந்த உணர்ச்சியுமற்ற அறிவியல் அல்லது தொழில் நுட்ப தகவல்களால் விவரித்தால் அதன் தாக்கம் பன்மடங்காக இருக்கும். மெனிஞ்சியோமாவில் மருத்துவ துறையின் ஒரு அந்நியத்தன்மை, அதன் சர்வாதிகாரம், அதனிடம் நம்மை ஒப்பிவித்தபின் நான் உணரும் தனிமை, பீதி ஆகியவற்றை உணர்த்த இத்தகவல்கள் மட்டுமே கொண்டு எழுதப்பட்ட இடங்கள் உதவுகின்றன.

தூங்கும் முன் மூன்று கேள்விகளை யோசித்தபடி இருந்தேன்:
1)   ஏன் இப்படியான ஒரு நாவலை வாசித்து தொலைத்தேன்?
2)   ஏன் இந்த நாவலை நான் இதுவரை வாசிக்கவில்லை?

3)   ஏன் இவ்வளவு அருவருப்பும் கொடூரமும் கொண்ட நாவல் எனக்கு இவ்வளவு சிலாகிப்பாய் எனக்கு தோன்றுகிறது? நான் ஏன் இந்த அவலத்தை உள்ளுக்குள் ரசிக்கிறேன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.