முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறுமை என்றால் என்ன?


வெறுமைக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. அதாவது ஆன்மீக ரீதியாய், தத்துவார்த்தமாய், உளவியல் ரீதியாய். ஆனால் நான் கேட்பது அன்றாட வாழ்க்கையில் நாம் உணரும் வெறுமை. அதாவது “இன்று ஒன்றுமே நினைத்துப் பார்க்கும்படியாய் இல்லை, நான் இன்று ஒன்றுமே உருப்படியாய் செய்யவில்லை, இன்றைய நான் ஒன்றுமில்லாமல் முடிந்து போனதே” எனும் உணர்வு.

இந்த உணர்வு முரணானது. ஏனென்றால் நாம் நாள் முழுக்க எதையோ செய்தபடி தான் இருக்கிறோம். அன்றாட கடமைகள், வேலைக்கு பயணிப்பது, வேலையை செய்வது, வெளியிடத்தில் வெளிநபர்கள், கூட பணி செய்பவர்கள், நண்பர்களுடன் பழகுவது, அவர்களை கையாள்வது என ஒரு நிமிடம் கூட அசராமல் பரபரப்பாய் தான் இருக்கிறோம். ஆனால் ஒரு வேலை நாள் முடிந்து வீடு திரும்பும் போது மேற்சொன்ன உணர்வுகள் வருகின்றன. நினைத்துப் பார்க்கும்படியாய் இன்று ஒன்றுமே இல்லையே என நினைக்கிறோம்.
வேலைக்கு போகாமல் வீட்டில் ஓய்வாய் இருப்பவர்களுக்கும் இதே வெறுமை தோன்றுகிறது. ஒன்று, நேரம் நகராது. எதையாவது உருட்டி புரட்டி நேரத்தை கடத்தியபடி இன்று ஏன் இப்படி வீணாய் கழிந்தது எனத் தோன்றும். அல்லது, நாம் உண்மையில் என்னதான் இந்த வாழ்க்கையில் பண்ணுகிறோம் என கேள்வி எழும்.
இந்த வெறுமை தான் டி.வி, சினிமா, குடி, சூது போன்ற பொழுதுபோக்குகளை நோக்கி, போலி சாமியார்கள், மிதமிஞ்சிய காமத்தை நோக்கி, குற்றங்களை நோக்கி நம்மை செலுத்துகிறது. இன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்படியாய் செய்ய அரைமணி நேரம் அமைந்தால் போதும் என நினைக்கிறோம். ஆனால் எல்லாம் முடிந்த பின் நாம் இன்னும் அதிக வெறுமையாய் தான் உணர்கிறோம்.
உண்மையில் பிரச்சனை என்ன? நம் வாழ்க்கையில் ஆழமான திருப்தி இல்லை. சரி ஆழமான திருப்தி என்றால் என்ன?
நான் அதை இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
ஆழமான திருப்தி = ஆழமான நினைவுகள்.
வெறுமை என்பது நினைவுகள் இல்லாத நிலை. அதாவது உறுதியாய் நாம் பற்றிக் கொள்ளும்படியான நினைவுகள் இல்லாத நிலை. ஒரு ஆழமான உக்கிரமான மகிழ்ச்சியான அனுபவம் (படைப்பூக்கமான செயல்கள், தியானம், மனம் திளைக்கும் அன்பான தருணங்கள், ஒரு பிரம்மாண்டமான செயலில் பங்குபெறும் உணர்வு, ஒரு சின்ன வேலையை சரியாய் விருப்பம் போல செய்து முடிக்கும் நிறைவான நிமிடம்) நேரும் போது காலம் அப்படியே உறைந்து நிற்கும். ஆனால் கனமற்ற அனுபவங்கள் (யாருக்காகவோ அர்த்தமின்றி காத்திருப்பது, திறமைக்கு தொடர்பற்ற வேலையை செய்வது, பிடிக்காத உரையாடலில் பங்கு கொள்வது…) நேரும் போது காலம் விரைந்து கொண்டிருப்பதை மனம் உணர்ந்தபடியே இருக்கும். காலத்தை தடுத்து நிறுத்த ஏங்குவோம். ஆனால் முடியாது. இப்படித் தான் ஒருநாள் வீணாய் போனதாய் உணர்வு ஏற்படுகிறது.
ஆக ஆழமான திருப்தி காலத்துடன் சம்மந்தப்பட்டது. காலம் என்பது நினைவுகளை தீர்மானிக்கிறது. காலம் நம் கட்டுப்பாட்டில் இன்றி விரையும் போது வெறுமையான நினைவுகளே எஞ்சுகின்றன. வெறுமையான நினைவுகள் பலூனுக்குள் காற்று போல. நாம் ஒருநாள் முடியும் போது அனுபவிக்கும் வெறுமை நினைவுகள் இல்லாத ஒரு வறுமை தான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நல்ல நினைவுகளை சம்பாதிப்பது மட்டும் தான். இந்த நினைவுகள் தாம் நம்முடைய சுயத்தை மாட்டி தொங்க விடுவதற்கான ஆணி. நம் மனதின் அடித்தளம் இது.
ஆக இறுதியில் இப்படி சுருக்கமாய் வகுத்துக் கொள்கிறேன்:
மகிழ்ச்சி = கட்டுப்பாட்டில் உள்ள காலம் = நினைவுகள்

வெறுமை = கட்டுப்பாட்டில் இல்லாத காலம் = நினைவின்மை 

கருத்துகள்

veera இவ்வாறு கூறியுள்ளார்…
வெறுமைக்கு அருமையான விளக்கம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.