முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றமே தண்டனை

Image result for kutrame thandanai

குற்றமே தண்டனை படத்தை முதல் அரைமணிநேரம் பார்க்கிற எவருக்கும் இது தமிழில் மிக முக்கியமான படைப்பு என உடனே விளங்கி விடும். நம் சினிமாக்களில் வழக்கமாய் ஒளிப்பதிவு கதை சொல்வதற்கான ஒரு எளிய கருவி மட்டுமே. ஆனால் ஒரு நுணுக்கமான திரைக்கலைஞனுக்கு மட்டுமே ஒளிப்பதிவை விஷுவல் மொழியாக பயன்படுத்த தெரியும். தமிழில் மிஷ்கின், ராம் போன்றோரை உதாரணம் காட்டலாம். எனக்கு இவ்விதத்தில் எம்.மணிகண்டனை இவர்களுக்கு வெகு அருகில் வைக்க தோன்றுகிறது.

இப்படம் மேலோட்டமாய் tunnel vision எனப்படும் பார்வைக்குறைபாட்டை கொண்டவனின் ஒரு நெருக்கடியை பேசுகிறது. இக்குறைபாடு கொண்டோருக்கு பார்வைப்புலன் குறுகியதாய் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடங்கி விடும். சுற்றிலும் இருப்பது தெரியாது, எதிரில் உள்ள ஒரு சிறு வட்டத்துள் மட்டுமே பார்வை பதியும். காகிதத்தை டெலஸ்கோப்பாய் சுருட்டி அதன் வழி உலகை சதா பார்ப்பது போன்ற அனுபவம் இது. இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த tunnel vision ஒரு உருவகமாய் அது பயன்படுத்துகிறது. ஆழமாய் பார்த்தால் இது பார்வைக் குறைபாடு பற்றின கதை அல்ல. “குறுகின” வாழ்க்கை பார்வை கொண்டவன் பற்றின கதை. அவனால் ஒரு சமயம் தனக்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி மட்டுமே காண இயலும். தான் காதலிக்கும் பெண், அவளை அடைவது எப்படி என யோசிப்பான். தன் பார்வை குறையை எப்படி சரிபடுத்துவது என அக்கறைப்படுவான். வேறு எந்த மனித பிரச்சனைகளும், புற உலக சிக்கல்களும் அவனது (மனக்)கண்ணில் படாது. அதனால் தான் அவன் காதலியின் மரணத்திற்கான பொய் சாட்சியாய் மாறி லஞ்சம் பெறுகிறான். அவனுக்கு இதை செய்வதில் உறுத்தலே இல்லை. இறுதியில் ஒருவேளை அவனே கூட அவளை கொன்றிருக்க கூடும் எனும் குறிப்பு வருகிறது.
 இவை எல்லாமே அவன் தன் சுயநலத்துக்காக செய்வன அல்ல. சுயமையவாதம் தான் அவன் பிரச்சனை, தன்னலம் அல்ல. தன்னை தவிர பிறர் மீது அக்கறை காட்ட இயலாமை தான் அவனது பாத்திரத்தின் மைய பிழை.
படத்தின் இறுதியில் ஒரு நகைமுரண் உள்ளது. அவன் உலகையே சாமர்த்தியமாய் ஏமாற்றி 25 லட்சம் சம்பாதித்திருப்பதாய் எண்னும் போது அவனுக்கு அறுவை சிகிச்சை அளித்து பார்வையை மீட்டுத்தருவாய் சொல்லி மருத்துவமனை அவனை ஏமாற்றுவதை அறிய வருகிறான். மேலும் அவனது பார்வைக்குறைபாட்டுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, அவன் விரைவில் பார்வையை முழுக்க இழக்கப் போகிறான் என அவனது மருத்துவர் உண்மையை வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாய் கைவிடப்படும் அவன் தன் குற்றங்களை எண்ணி மனம் கலங்கி அழுகிறான்.
தஸ்தாவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” படித்தவர்களுக்கு இது ரஸ்கோல்நிக்கோவின் கதை என உடனே புரியும். மணிகண்டனின் படத்தின் தலைப்பு இந்த குறிப்பை வெளிப்படையாகவே வைக்கிறது. “குற்றமும் தண்டனையில்” நாயகன் தொடர்ந்து தனது சிறிய மாடி அறையில் புகுவதில் படிக்கட்டுகள் வழி இறங்கி ஏறுவதுமாய் இருப்பான். இந்த சிறிய மாடிக்குடியிருப்பு அவனது இருண்ட மனதின் குறியீடு என்பார்கள். இப்படத்திலும் நாயகன் அவ்வாறே ஒரு சிறிய மாடி வீட்டில் தனியாக இருக்கிறான். அவனது தனியான போக்குவரத்து பலமுறை காட்டப்படுகிறது.
 தஸ்தாவஸ்கியின் நாயகன் ரஸ்கோல்நிக்கோவ் வட்டிக்கு கடன் அளிக்கும் ஒரு மூதாட்டியை கொல்கிறான். அவன் அதற்கு நியாயப்படாய் பல சமூக மேம்பாட்டு, விடுதலை கோட்பாடுகளை முன்வைக்கிறான். ரஸ்கோல்நிக்கோவின் tunnel vision அவனது தர்க்கமும் அன்பை புரிந்து கொள்ள முடியாத குறுகின மனப்பான்மையுமே. இறுதியில் அவன் தன் கொலை எந்த சமூக புரட்சியையும் விளைவிக்காது, அது ஒரு மாபாதகம் என உணர்கிறான். தான் ஒரு பாவியாக இருந்த போதும் தன்னை மாறுபாடின்றி நேசிக்க ஒரு சோனியா எனும் ஒரு பெண் தயாராக உள்ளதை அறிய வரும் போது அவன் அன்பின் மகத்துவத்தை அறிகிறான். மாற்றம் என்பது அகத்தே நிகழ வேண்டும், சமூக அளவில் பலவந்தமாய் அல்ல என அவன் உணர்கிறான்.
இந்த ”அன்பின் மறுமலர்ச்சி” மட்டுமே மணிகண்டனின் படத்தில் இல்லை. ஆனால் ரஸ்கோல்நிக்கோவின் மனப்பிரச்சனைக்கு ஒரு துல்லியமான விஷுவல் மொழியை மணிகண்டன் அளித்திருக்கிறார். படம் முழுக்க ஒளிப்பதிவு அற்புதமாய் உள்ளது. Tunnel vision வழியாக தான் மொத்த படமும் பயணிக்கிறது.

 பார்வையாளர்களுக்கு உலகை முழுக்க குறுகி நுணுகி மட்டுமே பார்ப்பதன் ஒரு இடுங்கி உணர்வை ஒளிப்பதிவு அளிக்கிறது. முக்கியமாய் ஒளிப்பதிவு மைய பாத்திரத்தின் மனதிற்கான போக்கை காட்டுவதற்கான கருவியாக பயன்படுத்தி இருப்பதை மிகவும் ரசித்தேன். தமிழில் ஒரு மைல்கல் இந்த படம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...