Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

குற்றமே தண்டனை

Image result for kutrame thandanai

குற்றமே தண்டனை படத்தை முதல் அரைமணிநேரம் பார்க்கிற எவருக்கும் இது தமிழில் மிக முக்கியமான படைப்பு என உடனே விளங்கி விடும். நம் சினிமாக்களில் வழக்கமாய் ஒளிப்பதிவு கதை சொல்வதற்கான ஒரு எளிய கருவி மட்டுமே. ஆனால் ஒரு நுணுக்கமான திரைக்கலைஞனுக்கு மட்டுமே ஒளிப்பதிவை விஷுவல் மொழியாக பயன்படுத்த தெரியும். தமிழில் மிஷ்கின், ராம் போன்றோரை உதாரணம் காட்டலாம். எனக்கு இவ்விதத்தில் எம்.மணிகண்டனை இவர்களுக்கு வெகு அருகில் வைக்க தோன்றுகிறது.

இப்படம் மேலோட்டமாய் tunnel vision எனப்படும் பார்வைக்குறைபாட்டை கொண்டவனின் ஒரு நெருக்கடியை பேசுகிறது. இக்குறைபாடு கொண்டோருக்கு பார்வைப்புலன் குறுகியதாய் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடங்கி விடும். சுற்றிலும் இருப்பது தெரியாது, எதிரில் உள்ள ஒரு சிறு வட்டத்துள் மட்டுமே பார்வை பதியும். காகிதத்தை டெலஸ்கோப்பாய் சுருட்டி அதன் வழி உலகை சதா பார்ப்பது போன்ற அனுபவம் இது. இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த tunnel vision ஒரு உருவகமாய் அது பயன்படுத்துகிறது. ஆழமாய் பார்த்தால் இது பார்வைக் குறைபாடு பற்றின கதை அல்ல. “குறுகின” வாழ்க்கை பார்வை கொண்டவன் பற்றின கதை. அவனால் ஒரு சமயம் தனக்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி மட்டுமே காண இயலும். தான் காதலிக்கும் பெண், அவளை அடைவது எப்படி என யோசிப்பான். தன் பார்வை குறையை எப்படி சரிபடுத்துவது என அக்கறைப்படுவான். வேறு எந்த மனித பிரச்சனைகளும், புற உலக சிக்கல்களும் அவனது (மனக்)கண்ணில் படாது. அதனால் தான் அவன் காதலியின் மரணத்திற்கான பொய் சாட்சியாய் மாறி லஞ்சம் பெறுகிறான். அவனுக்கு இதை செய்வதில் உறுத்தலே இல்லை. இறுதியில் ஒருவேளை அவனே கூட அவளை கொன்றிருக்க கூடும் எனும் குறிப்பு வருகிறது.
 இவை எல்லாமே அவன் தன் சுயநலத்துக்காக செய்வன அல்ல. சுயமையவாதம் தான் அவன் பிரச்சனை, தன்னலம் அல்ல. தன்னை தவிர பிறர் மீது அக்கறை காட்ட இயலாமை தான் அவனது பாத்திரத்தின் மைய பிழை.
படத்தின் இறுதியில் ஒரு நகைமுரண் உள்ளது. அவன் உலகையே சாமர்த்தியமாய் ஏமாற்றி 25 லட்சம் சம்பாதித்திருப்பதாய் எண்னும் போது அவனுக்கு அறுவை சிகிச்சை அளித்து பார்வையை மீட்டுத்தருவாய் சொல்லி மருத்துவமனை அவனை ஏமாற்றுவதை அறிய வருகிறான். மேலும் அவனது பார்வைக்குறைபாட்டுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, அவன் விரைவில் பார்வையை முழுக்க இழக்கப் போகிறான் என அவனது மருத்துவர் உண்மையை வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாய் கைவிடப்படும் அவன் தன் குற்றங்களை எண்ணி மனம் கலங்கி அழுகிறான்.
தஸ்தாவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” படித்தவர்களுக்கு இது ரஸ்கோல்நிக்கோவின் கதை என உடனே புரியும். மணிகண்டனின் படத்தின் தலைப்பு இந்த குறிப்பை வெளிப்படையாகவே வைக்கிறது. “குற்றமும் தண்டனையில்” நாயகன் தொடர்ந்து தனது சிறிய மாடி அறையில் புகுவதில் படிக்கட்டுகள் வழி இறங்கி ஏறுவதுமாய் இருப்பான். இந்த சிறிய மாடிக்குடியிருப்பு அவனது இருண்ட மனதின் குறியீடு என்பார்கள். இப்படத்திலும் நாயகன் அவ்வாறே ஒரு சிறிய மாடி வீட்டில் தனியாக இருக்கிறான். அவனது தனியான போக்குவரத்து பலமுறை காட்டப்படுகிறது.
 தஸ்தாவஸ்கியின் நாயகன் ரஸ்கோல்நிக்கோவ் வட்டிக்கு கடன் அளிக்கும் ஒரு மூதாட்டியை கொல்கிறான். அவன் அதற்கு நியாயப்படாய் பல சமூக மேம்பாட்டு, விடுதலை கோட்பாடுகளை முன்வைக்கிறான். ரஸ்கோல்நிக்கோவின் tunnel vision அவனது தர்க்கமும் அன்பை புரிந்து கொள்ள முடியாத குறுகின மனப்பான்மையுமே. இறுதியில் அவன் தன் கொலை எந்த சமூக புரட்சியையும் விளைவிக்காது, அது ஒரு மாபாதகம் என உணர்கிறான். தான் ஒரு பாவியாக இருந்த போதும் தன்னை மாறுபாடின்றி நேசிக்க ஒரு சோனியா எனும் ஒரு பெண் தயாராக உள்ளதை அறிய வரும் போது அவன் அன்பின் மகத்துவத்தை அறிகிறான். மாற்றம் என்பது அகத்தே நிகழ வேண்டும், சமூக அளவில் பலவந்தமாய் அல்ல என அவன் உணர்கிறான்.
இந்த ”அன்பின் மறுமலர்ச்சி” மட்டுமே மணிகண்டனின் படத்தில் இல்லை. ஆனால் ரஸ்கோல்நிக்கோவின் மனப்பிரச்சனைக்கு ஒரு துல்லியமான விஷுவல் மொழியை மணிகண்டன் அளித்திருக்கிறார். படம் முழுக்க ஒளிப்பதிவு அற்புதமாய் உள்ளது. Tunnel vision வழியாக தான் மொத்த படமும் பயணிக்கிறது.

 பார்வையாளர்களுக்கு உலகை முழுக்க குறுகி நுணுகி மட்டுமே பார்ப்பதன் ஒரு இடுங்கி உணர்வை ஒளிப்பதிவு அளிக்கிறது. முக்கியமாய் ஒளிப்பதிவு மைய பாத்திரத்தின் மனதிற்கான போக்கை காட்டுவதற்கான கருவியாக பயன்படுத்தி இருப்பதை மிகவும் ரசித்தேன். தமிழில் ஒரு மைல்கல் இந்த படம்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...