முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றமே தண்டனை

Image result for kutrame thandanai

குற்றமே தண்டனை படத்தை முதல் அரைமணிநேரம் பார்க்கிற எவருக்கும் இது தமிழில் மிக முக்கியமான படைப்பு என உடனே விளங்கி விடும். நம் சினிமாக்களில் வழக்கமாய் ஒளிப்பதிவு கதை சொல்வதற்கான ஒரு எளிய கருவி மட்டுமே. ஆனால் ஒரு நுணுக்கமான திரைக்கலைஞனுக்கு மட்டுமே ஒளிப்பதிவை விஷுவல் மொழியாக பயன்படுத்த தெரியும். தமிழில் மிஷ்கின், ராம் போன்றோரை உதாரணம் காட்டலாம். எனக்கு இவ்விதத்தில் எம்.மணிகண்டனை இவர்களுக்கு வெகு அருகில் வைக்க தோன்றுகிறது.

இப்படம் மேலோட்டமாய் tunnel vision எனப்படும் பார்வைக்குறைபாட்டை கொண்டவனின் ஒரு நெருக்கடியை பேசுகிறது. இக்குறைபாடு கொண்டோருக்கு பார்வைப்புலன் குறுகியதாய் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடங்கி விடும். சுற்றிலும் இருப்பது தெரியாது, எதிரில் உள்ள ஒரு சிறு வட்டத்துள் மட்டுமே பார்வை பதியும். காகிதத்தை டெலஸ்கோப்பாய் சுருட்டி அதன் வழி உலகை சதா பார்ப்பது போன்ற அனுபவம் இது. இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த tunnel vision ஒரு உருவகமாய் அது பயன்படுத்துகிறது. ஆழமாய் பார்த்தால் இது பார்வைக் குறைபாடு பற்றின கதை அல்ல. “குறுகின” வாழ்க்கை பார்வை கொண்டவன் பற்றின கதை. அவனால் ஒரு சமயம் தனக்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி மட்டுமே காண இயலும். தான் காதலிக்கும் பெண், அவளை அடைவது எப்படி என யோசிப்பான். தன் பார்வை குறையை எப்படி சரிபடுத்துவது என அக்கறைப்படுவான். வேறு எந்த மனித பிரச்சனைகளும், புற உலக சிக்கல்களும் அவனது (மனக்)கண்ணில் படாது. அதனால் தான் அவன் காதலியின் மரணத்திற்கான பொய் சாட்சியாய் மாறி லஞ்சம் பெறுகிறான். அவனுக்கு இதை செய்வதில் உறுத்தலே இல்லை. இறுதியில் ஒருவேளை அவனே கூட அவளை கொன்றிருக்க கூடும் எனும் குறிப்பு வருகிறது.
 இவை எல்லாமே அவன் தன் சுயநலத்துக்காக செய்வன அல்ல. சுயமையவாதம் தான் அவன் பிரச்சனை, தன்னலம் அல்ல. தன்னை தவிர பிறர் மீது அக்கறை காட்ட இயலாமை தான் அவனது பாத்திரத்தின் மைய பிழை.
படத்தின் இறுதியில் ஒரு நகைமுரண் உள்ளது. அவன் உலகையே சாமர்த்தியமாய் ஏமாற்றி 25 லட்சம் சம்பாதித்திருப்பதாய் எண்னும் போது அவனுக்கு அறுவை சிகிச்சை அளித்து பார்வையை மீட்டுத்தருவாய் சொல்லி மருத்துவமனை அவனை ஏமாற்றுவதை அறிய வருகிறான். மேலும் அவனது பார்வைக்குறைபாட்டுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, அவன் விரைவில் பார்வையை முழுக்க இழக்கப் போகிறான் என அவனது மருத்துவர் உண்மையை வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாய் கைவிடப்படும் அவன் தன் குற்றங்களை எண்ணி மனம் கலங்கி அழுகிறான்.
தஸ்தாவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” படித்தவர்களுக்கு இது ரஸ்கோல்நிக்கோவின் கதை என உடனே புரியும். மணிகண்டனின் படத்தின் தலைப்பு இந்த குறிப்பை வெளிப்படையாகவே வைக்கிறது. “குற்றமும் தண்டனையில்” நாயகன் தொடர்ந்து தனது சிறிய மாடி அறையில் புகுவதில் படிக்கட்டுகள் வழி இறங்கி ஏறுவதுமாய் இருப்பான். இந்த சிறிய மாடிக்குடியிருப்பு அவனது இருண்ட மனதின் குறியீடு என்பார்கள். இப்படத்திலும் நாயகன் அவ்வாறே ஒரு சிறிய மாடி வீட்டில் தனியாக இருக்கிறான். அவனது தனியான போக்குவரத்து பலமுறை காட்டப்படுகிறது.
 தஸ்தாவஸ்கியின் நாயகன் ரஸ்கோல்நிக்கோவ் வட்டிக்கு கடன் அளிக்கும் ஒரு மூதாட்டியை கொல்கிறான். அவன் அதற்கு நியாயப்படாய் பல சமூக மேம்பாட்டு, விடுதலை கோட்பாடுகளை முன்வைக்கிறான். ரஸ்கோல்நிக்கோவின் tunnel vision அவனது தர்க்கமும் அன்பை புரிந்து கொள்ள முடியாத குறுகின மனப்பான்மையுமே. இறுதியில் அவன் தன் கொலை எந்த சமூக புரட்சியையும் விளைவிக்காது, அது ஒரு மாபாதகம் என உணர்கிறான். தான் ஒரு பாவியாக இருந்த போதும் தன்னை மாறுபாடின்றி நேசிக்க ஒரு சோனியா எனும் ஒரு பெண் தயாராக உள்ளதை அறிய வரும் போது அவன் அன்பின் மகத்துவத்தை அறிகிறான். மாற்றம் என்பது அகத்தே நிகழ வேண்டும், சமூக அளவில் பலவந்தமாய் அல்ல என அவன் உணர்கிறான்.
இந்த ”அன்பின் மறுமலர்ச்சி” மட்டுமே மணிகண்டனின் படத்தில் இல்லை. ஆனால் ரஸ்கோல்நிக்கோவின் மனப்பிரச்சனைக்கு ஒரு துல்லியமான விஷுவல் மொழியை மணிகண்டன் அளித்திருக்கிறார். படம் முழுக்க ஒளிப்பதிவு அற்புதமாய் உள்ளது. Tunnel vision வழியாக தான் மொத்த படமும் பயணிக்கிறது.

 பார்வையாளர்களுக்கு உலகை முழுக்க குறுகி நுணுகி மட்டுமே பார்ப்பதன் ஒரு இடுங்கி உணர்வை ஒளிப்பதிவு அளிக்கிறது. முக்கியமாய் ஒளிப்பதிவு மைய பாத்திரத்தின் மனதிற்கான போக்கை காட்டுவதற்கான கருவியாக பயன்படுத்தி இருப்பதை மிகவும் ரசித்தேன். தமிழில் ஒரு மைல்கல் இந்த படம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.