Skip to main content

குற்றமே தண்டனை

Image result for kutrame thandanai

குற்றமே தண்டனை படத்தை முதல் அரைமணிநேரம் பார்க்கிற எவருக்கும் இது தமிழில் மிக முக்கியமான படைப்பு என உடனே விளங்கி விடும். நம் சினிமாக்களில் வழக்கமாய் ஒளிப்பதிவு கதை சொல்வதற்கான ஒரு எளிய கருவி மட்டுமே. ஆனால் ஒரு நுணுக்கமான திரைக்கலைஞனுக்கு மட்டுமே ஒளிப்பதிவை விஷுவல் மொழியாக பயன்படுத்த தெரியும். தமிழில் மிஷ்கின், ராம் போன்றோரை உதாரணம் காட்டலாம். எனக்கு இவ்விதத்தில் எம்.மணிகண்டனை இவர்களுக்கு வெகு அருகில் வைக்க தோன்றுகிறது.

இப்படம் மேலோட்டமாய் tunnel vision எனப்படும் பார்வைக்குறைபாட்டை கொண்டவனின் ஒரு நெருக்கடியை பேசுகிறது. இக்குறைபாடு கொண்டோருக்கு பார்வைப்புலன் குறுகியதாய் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடங்கி விடும். சுற்றிலும் இருப்பது தெரியாது, எதிரில் உள்ள ஒரு சிறு வட்டத்துள் மட்டுமே பார்வை பதியும். காகிதத்தை டெலஸ்கோப்பாய் சுருட்டி அதன் வழி உலகை சதா பார்ப்பது போன்ற அனுபவம் இது. இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த tunnel vision ஒரு உருவகமாய் அது பயன்படுத்துகிறது. ஆழமாய் பார்த்தால் இது பார்வைக் குறைபாடு பற்றின கதை அல்ல. “குறுகின” வாழ்க்கை பார்வை கொண்டவன் பற்றின கதை. அவனால் ஒரு சமயம் தனக்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி மட்டுமே காண இயலும். தான் காதலிக்கும் பெண், அவளை அடைவது எப்படி என யோசிப்பான். தன் பார்வை குறையை எப்படி சரிபடுத்துவது என அக்கறைப்படுவான். வேறு எந்த மனித பிரச்சனைகளும், புற உலக சிக்கல்களும் அவனது (மனக்)கண்ணில் படாது. அதனால் தான் அவன் காதலியின் மரணத்திற்கான பொய் சாட்சியாய் மாறி லஞ்சம் பெறுகிறான். அவனுக்கு இதை செய்வதில் உறுத்தலே இல்லை. இறுதியில் ஒருவேளை அவனே கூட அவளை கொன்றிருக்க கூடும் எனும் குறிப்பு வருகிறது.
 இவை எல்லாமே அவன் தன் சுயநலத்துக்காக செய்வன அல்ல. சுயமையவாதம் தான் அவன் பிரச்சனை, தன்னலம் அல்ல. தன்னை தவிர பிறர் மீது அக்கறை காட்ட இயலாமை தான் அவனது பாத்திரத்தின் மைய பிழை.
படத்தின் இறுதியில் ஒரு நகைமுரண் உள்ளது. அவன் உலகையே சாமர்த்தியமாய் ஏமாற்றி 25 லட்சம் சம்பாதித்திருப்பதாய் எண்னும் போது அவனுக்கு அறுவை சிகிச்சை அளித்து பார்வையை மீட்டுத்தருவாய் சொல்லி மருத்துவமனை அவனை ஏமாற்றுவதை அறிய வருகிறான். மேலும் அவனது பார்வைக்குறைபாட்டுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, அவன் விரைவில் பார்வையை முழுக்க இழக்கப் போகிறான் என அவனது மருத்துவர் உண்மையை வெளிப்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாய் கைவிடப்படும் அவன் தன் குற்றங்களை எண்ணி மனம் கலங்கி அழுகிறான்.
தஸ்தாவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” படித்தவர்களுக்கு இது ரஸ்கோல்நிக்கோவின் கதை என உடனே புரியும். மணிகண்டனின் படத்தின் தலைப்பு இந்த குறிப்பை வெளிப்படையாகவே வைக்கிறது. “குற்றமும் தண்டனையில்” நாயகன் தொடர்ந்து தனது சிறிய மாடி அறையில் புகுவதில் படிக்கட்டுகள் வழி இறங்கி ஏறுவதுமாய் இருப்பான். இந்த சிறிய மாடிக்குடியிருப்பு அவனது இருண்ட மனதின் குறியீடு என்பார்கள். இப்படத்திலும் நாயகன் அவ்வாறே ஒரு சிறிய மாடி வீட்டில் தனியாக இருக்கிறான். அவனது தனியான போக்குவரத்து பலமுறை காட்டப்படுகிறது.
 தஸ்தாவஸ்கியின் நாயகன் ரஸ்கோல்நிக்கோவ் வட்டிக்கு கடன் அளிக்கும் ஒரு மூதாட்டியை கொல்கிறான். அவன் அதற்கு நியாயப்படாய் பல சமூக மேம்பாட்டு, விடுதலை கோட்பாடுகளை முன்வைக்கிறான். ரஸ்கோல்நிக்கோவின் tunnel vision அவனது தர்க்கமும் அன்பை புரிந்து கொள்ள முடியாத குறுகின மனப்பான்மையுமே. இறுதியில் அவன் தன் கொலை எந்த சமூக புரட்சியையும் விளைவிக்காது, அது ஒரு மாபாதகம் என உணர்கிறான். தான் ஒரு பாவியாக இருந்த போதும் தன்னை மாறுபாடின்றி நேசிக்க ஒரு சோனியா எனும் ஒரு பெண் தயாராக உள்ளதை அறிய வரும் போது அவன் அன்பின் மகத்துவத்தை அறிகிறான். மாற்றம் என்பது அகத்தே நிகழ வேண்டும், சமூக அளவில் பலவந்தமாய் அல்ல என அவன் உணர்கிறான்.
இந்த ”அன்பின் மறுமலர்ச்சி” மட்டுமே மணிகண்டனின் படத்தில் இல்லை. ஆனால் ரஸ்கோல்நிக்கோவின் மனப்பிரச்சனைக்கு ஒரு துல்லியமான விஷுவல் மொழியை மணிகண்டன் அளித்திருக்கிறார். படம் முழுக்க ஒளிப்பதிவு அற்புதமாய் உள்ளது. Tunnel vision வழியாக தான் மொத்த படமும் பயணிக்கிறது.

 பார்வையாளர்களுக்கு உலகை முழுக்க குறுகி நுணுகி மட்டுமே பார்ப்பதன் ஒரு இடுங்கி உணர்வை ஒளிப்பதிவு அளிக்கிறது. முக்கியமாய் ஒளிப்பதிவு மைய பாத்திரத்தின் மனதிற்கான போக்கை காட்டுவதற்கான கருவியாக பயன்படுத்தி இருப்பதை மிகவும் ரசித்தேன். தமிழில் ஒரு மைல்கல் இந்த படம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...