முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாளிதழ்களின் எதார்த்தம்

Image result for reporter cartoon

நாளிதழ்களில் எவ்வளவோ செய்திக்கட்டுரைகள், துணுக்குகள், புகைப்படங்கள், வாழ்க்கைத்தகவல்கள், ஆளுமைகள் தம் வாழ்வை பற்றி பேசும் பேட்டிகள். இவ்வளவையும் சுவாரஸ்யமாய் படித்து கடந்த பின் ஒரு ஜனநெரிசலான தெரு வழி நடந்து வீட்டுக்கு வந்தது போல் இருக்கிறது. ஒன்று கூட நினைவில் தங்குவதில்லை. ஆனால் நாம் உறங்கும் போதும் விழிக்கும் போதும் நாளிதழ்கள் எந்திரம் போல் தகவல்களை உற்பத்தி பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஏன் பேட்டிகள், வாழ்க்கை குறிப்புகள், சமூக சித்திரங்கள் கூட நமக்கு உண்மையாய் தெரிவதில்லை? ஏன் மூவாயிரம் பேர் படிக்கும் சிறுபத்திரிகை கதை ஒன்று மனதுக்கு அவ்வளவு நெருக்கமாய் தோன்றுகிறது?
 காரணம் ஒன்று தான். தினப் பத்திரிகைகள் செய்தியை மிகவும் கராறாய் தர முயல்கின்றன. அப்போது அதில் உள்ள உண்மை செத்து விடுகிறது. உதாரணமாய், ஜாம்பஜார் சாலையில் உள்ள 42 குப்பைத் தொட்டிகளில் 31 எப்போதும் நிரம்பி வழிகிறது எனும் செய்தியில் தகவல் தான் இருக்கிறது. உண்மை இல்லை.


மாறாக சற்றே பெரிய செய்திக் குறிப்புகளில் இரண்டாவது மூன்றாவது பத்திகளில் இருந்து புனைவுத்தன்மை தலை தூக்குகிறது. ஒரு கொலை நடந்த இடம், பின்னணி, ஒரு அரசியல் பேரணியின் சூழல், அங்கு உருவான தோரணைகள் பற்றின சித்திரங்கள் வரும் போது ஒரு செய்திக்குறிப்பில் ஒரு flow அந்த ரிப்போர்ட்டருக்கே தெரியாமல் உருவாகிறது. அதில் நம் மனம் திளைக்கிறது. தந்தியின் செய்திக்குறிப்பில் இந்த புனைவுத்தன்மை சற்று முரட்டுத்தனமாய் இருந்தாலும் எனக்கு அது பிடிக்கும். நான் தினத்தந்தியில் சற்று காலம் பணி செய்தேன். ஒருமுறை ஒரு இளம் பெண் தன் தங்கையையும் அம்மாவையும் கொன்று விட்டாள். அவள் காதலனுடன் சேர பெற்றோர் தடுத்ததே காரணம். அவளது அப்பா ஒரு போலீஸ்காரர். அம்மாவை கொல்வதே அவளது முதல் நோக்கம். கொலை நடுவே தங்கையும் வர அவளை மொட்டைமாடி தண்ணீர் தொட்டியில் முக்கி கொல்கிறாள். பிறகு அவள் ரயில்வே தடத்தில் தனியே திரிந்து கொண்டிருக்கிறாள். கைதாகிறாள். இந்த செய்திகளை தொகுத்து மொழியாக்கித் தர என்னிடம் எடிட்டர் கேட்டார். அப்போது ஒரு கதையில் நுழையும் கிளர்ச்சி எனக்கு கிடைத்தது. நீண்ட காலம் ரயில்வே தடத்தில் தனியே திரியும் இளம்பெண்ணின் சித்திரம் என் மனதில் இருந்தது. எனக்கு கொல்லப்பட்டவர்களை விட அப்பெண்ணின் மீது தான் பரிதாபம் அதிகம் ஏற்பட்டது.

ஹிந்துவில் இன்னும் தளுக்கான நேர்த்தியான புனைவுத்தன்மை கொண்ட செய்திக் குறிப்புகள் வரும். ஒரு பெண் தன் குழந்தையை கிணற்றில் தூக்கி போட்டு தானும் குதிக்கிறாள். ஆனால் அவள் காப்பாற்றப்பட்டு விடுகிறாள். அவள் மீது கொலைவழக்கு. இந்த ஒற்றைவரியில் பல வருடங்களுக்கு முன்பு துலாபாரம் என ஒரு படம் வந்தது. ஆனால் ஆறேழு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தியை நான் ஒரு நாளிதழில் படித்தேன். இதில் வரும் சிறுசிறு உணர்ச்சியற்ற தகவல்கள் வழி சட்டென ஒரு முழுமையான சித்திரம் வாசகனுக்கு கிடைக்கிறது. இது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. (இந்த பாணியை தான் ஹெமிங்வே தன் கதைகளில் பயன்படுத்தினார்.)

சில பேட்டிகளில் துவக்கமாய் பேட்டி காணப்படுகிறவரின் தோற்றம், உடல் மொழி, சுபாவம், அவர்கள் சந்திக்கப் போகும் இடம் பற்றி ஒரு விவரிப்பு இருக்கும். ஆனால் ஒரு செய்திக்குறிப்பில் உள்ள புனைவுத்தன்மையை இதில் காண முடியாது. செய்திக்குறிப்பின் புனைவில் எந்த தோரணையும் பிரக்ஞையும் இராது. அது இன்னும் உண்மையாக இருக்கிறது.

எனக்கு இதனால் தான் நாவல் படிப்பதற்கு இணையான போதை செய்தித்தாள் படிப்பதில் உண்டு. அதுவும் முதல் மற்றும் நடுத்தாள்களுக்கு இடையிலான தாள்களில் தான் அந்த போதை மிகவும் அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.