முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றிடத்தை நிரப்பும் தமிழ் எழுத்தாளன்

ஏன் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள் பிரசுரிக்க இவ்வளவு அலுத்துக் கொள்கிறார்கள் என பிர்தவுஸ் ராஜகுமாரன் ஒரு முகநூல் உரையாடலில் கேட்டிருந்தார். உண்மைதான். கடந்த பத்தாண்டுகளில் இங்கு சிறுகதைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் அதிகமும் கட்டுரைகளை பிரசுரிக்கவே விரும்புகின்றன. இதனாலேயே சிறுகதையாளர்கள் நாவலுக்கும், கவிஞர்கள் கட்டுரைக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். நம் வரலாற்றிலேயே மிக அதிகமாய் கட்டுரைகள் இப்போது தான் பிரசுரமாகின்றன. இது கட்டுரைகளின் வசந்த காலம்.

 இதை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் துவக்க கட்டங்களில் இங்கு அச்சாக்கம் அறிமுகமான பெரிய எழுத்து பத்திரிகைகளின் உற்சாகமான பருவத்தோடு ஒப்பிட முடியும். அன்று புதிதாய் எழுதப் படிக்க தெரிந்த ஒரு மக்கள் திரள் உருவானது. அவர்களுக்காக உடனடியாய் தமிழ் பத்திரிகைகள், நாட்டுப்புற பாடல்கள், வம்பு இலக்கியம், பரபரப்பு செய்திகள் தாங்கிய பாடல்கள் சிறு நூல்களாய் வெளியாகி பரவலாய் விற்றன. பின்னர் இந்த பிரசுரங்கள் நிலைப்பெற்று பெருவணிக நிறுவனங்களாகின. இன்று அந்த இடத்தை டி.வி, இணையம், சமூக வலைதளங்கள் எடுத்திருக்கின்றன.
 எப்போதெல்லாம் ஒரு சமூக தேவை உருவாகிறதோ அப்போது அந்த இடத்தை நிரப்ப ஒரு தரப்பினர் தற்காலிகமாய் தோன்றுவார்கள். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெச்சூர் பெரிய எழுத்து பத்திரிகை பிரசுரகர்த்தாக்களுக்கு ஏற்பட்ட சமூக தேவை போன்ற ஒன்று ரெண்டாயிரத்துக்கு பிறகு இலக்கிய எழுத்தாளனுக்கு ஏற்பட்டது. இணையம் மூலம் தகவல்கள் வந்து கொட்ட துவங்கின. மீடிய பலமடங்கு வளர்ந்து விரிவானது. ஆங்கிலத்தில் பரவலாய் கிடைக்கும் தகவல்களை தொகுத்து செய்திக் கட்டுரைகளாய் எழுத இங்கு ஆட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழில் பத்திரிகையாளர்கள் / ரிப்போர்ட்டர்கள் போதுமான அளவு தகவல் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஆக, அரசியல், சமூகம், சினிமா, கலை, விளையாட்டு என தகவல் கட்டுரைகள் எழுதும் பணியை இலக்கிய எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் உலக சினிமா பற்றி ஏகப்பட்ட கட்டுரைகளை நம் எழுத்தாளர்கள் வெளியிட்டார்கள். ஏனென்றால் மக்களுக்கு அன்று உலக சினிமா பற்றி அறியும் ஆர்வம் இருந்தது. பின்னர் மீடியா, சி.டி, கணினி மூலம் உலக சினிமா பரவலாகிய பின் அத்தகைய அறிமுக எழுத்துக்கு தேவையில்லாமல் ஆக, எழுத்தாளர்களும் உலக சினிமா அறிமுகங்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்.
ஆங்கில மீடியாவில் இத்தகைய கட்டுரைகளை எழுத inhouse எழுத்தாளர்கள் உண்டு. நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையை உதாரணம் சொல்லலாம். பத்திரிகையாள எழுத்தாளர்கள் அங்கு தனி பிரிவு. அவர்கள் ஆளுக்கு ஐந்து நூல்களாவது பிரசுரித்து இருப்பார்கள். ஆங்கில ஹிந்துவின் பரத்வாஜ் ரங்கனை அந்த வகையில் சேர்க்கலாம்.. ஆனால் தமிழில் அப்படி இல்லை. இங்கு இலக்கிய எழுத்தாளன் அந்த பணியை எடுத்துக் கொள்கிறான்.
ஆனால் இந்த நிலை நீண்ட காலம் தொடராது. எதிர்காலத்தில் தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக்கும் ரோபோட்டுகள் வந்து விடும். இப்போதே artificial intelligence மூலம் ஆங்கிலத்தில் கட்டுரைகள் உற்பத்தி ஆவதாய் சொல்கிறார்கள். தமிழிலும் எதிர்காலத்தில் தகவல் கட்டுரைகள் மலிவாகும். மேலும் மக்களுக்கு விரைவில் கட்டுரைகள் அலுத்து விடும். அப்போது கதைகளுக்கான தேவை ஏற்படும். கதைகள் அதிகளவில் பிரசுரமாகும். அப்போது எழுத்தாளன் படைப்பூக்கமுள்ள எழுத்துக்கு மீள்வான்.

தமிழில் வெகுஜன பரப்பில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை பத்திரிகையாளர்கள் நிரப்புவதில்லை. எழுத்தாளன் லுங்கியை மடித்துக் கட்டி அப்பணியில் இறங்கி விடுகிறான். வெற்றிடம் முழுக்க நிரம்பியதும் அவன் தன் சாய்வுநாற்காலிக்கு திரும்புகிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...