முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட சர்ச்சை


அட்டைப்படம் ஒரு புத்தகத்தின் தரத்தை மேம்படுத்தும் வாசகனின் கற்பனையை சிறகடிக்க வைக்கும் என்பதாக தமிழில் ஒரு கற்பிதம் உள்ளது. உண்மையில் ஒரு நூலின் பிரதிக்கும் அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் ஆகியவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வெண்முரசு நாவல் வரிசைக்கு சண்முகவேல் அற்புதமான ஓவியங்களை நல்கியிருக்கிறார். அதனால் அந்நாவல்களின் ஆழம் அதிகமாகும் என்றோ வாசகர்கள் அப்படங்களை கொண்டு நாவலை கற்பனை செய்வார்கள் என்றோ நான் நம்பவில்லை. முழுக்க ஜெயமோகனின் எழுத்து வழியாகத் தான் வாசகன் தன் கற்பனை உலகை விரித்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பு மொழிக்குள் ஆரம்பித்து மொழிக்குள்ளே முடிகிறது. அட்டைப்பட ஓவியம் ஒரு தனி படைப்பு.

 இதுவே என் பார்வை. எனக்கும் பிற எழுத்தாளர்களைப் போல் என் நூல் மிக நளினமாய் கண்கவர் வடிவத்தில் வெளிவர வேண்டும் என தீராத ஆசை உண்டு. ஆனால் அது வெறும் கிளுகிளுப்பு தான் என எனக்குத் தெரியும். ஒரு அடர் இருட்டான அறைக்குள் வந்த பின் எப்படி பேரழி கூட வெறும் உடல் தானோ அது போல் பிரசுரமான பின் ஒரு புத்தகம் வெறும் எழுத்துக்குவியல் மட்டுமே. அதன் உயிர் முழுக்க சொற்களில் இருக்கிறது.
நான் ஒவ்வொரு முறையும் என் நூலை முதல் முறை பார்க்கும் போது அழகாய் ஆடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு குழந்தையை போலத் தான் கையில் வாங்கிக் கொள்கிறேன். ஆனாலும் எதார்த்தம் எனக்குத் தெரியும். உயிர்மையில் வெளிவந்த என் நூல்களில் “இன்றிரவு நிலவின் கீழ்”, “கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்”, “கால்கள்” ஆகியவற்றின் அட்டைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பொதுவாக நூல்களின் அட்டை அமைப்பில் மனுஷ்யபுத்திரன் தனி அக்கறை கொள்வார். ஒரு புத்தகத்தின் ஆதாரமான தொனி பிம்பத்தில் வந்து விட வேண்டும் என நினைப்பார். அதே போல் தொலைவில் இருந்து பார்க்க கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும். பெரும்பாலான உயிர்மை அட்டைகள் இவ்விசயத்தில் சிறப்பானவை. எனது “கால்கள்” நாவலின் அட்டையில் நோய்மையின் நிறத்தை, ஒரு கனவில் மங்கலாய் தெரியும் ஒற்றைக்காலின் பிம்பத்தை, அவர் வரவழைத்திருப்பார். ”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு ராஜேஷ் குமார் த்ரில்லர் பாக்கெட் நாவல்களின் தொனியை கொணர்ந்து ஒரு ரெட்ரோ வடிவத்தில் அட்டையை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். மனுஷ்யபுத்திரனிடம் விவாதித்து ராஜேஷ்குமாரின் சில சாம்பிள் அட்டைப்படங்களையும் அனுப்பினேன். ஆனால் அதற்கு மேல் அவ்விசயத்தில் பங்காற்ற என்னால் இயலவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கே அது அபத்தமான ஐடியா எனப் பட அதை மேலும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் இறுதியில் உயிர்மை வடிவமைத்த அட்டை எனக்கு பிடித்திருந்தது. அது வழக்கமான அட்டை அல்ல. பார்க்கவும் தனித்து தெரிந்தது. மேலும் உயிர்மையில் அட்டைகள் தயாராகும் அவசர கதி எனக்கு தெரியும். குறைவான பணியாளர்களுடன், குறைந்த பட்ச இட வசதியுடன் எப்போதும் நேர நெருக்கடிகளுடன் அங்கு பணிகள் நடக்கும். அந்த சூழலில் இவ்வளவு தரமாய் புத்தகங்களை அவர்கள் கொண்டு வருவதே ஒரு சாதனை என தோன்றும். ஆக, அட்டைப்படம் மறைமுகமாய், கலை நுணுக்கத்துடன் இல்லை எனும் வாதங்கள் நடைமுறை நிலவரத்தை கணக்கில் கொள்ளாதவை. கடந்த முப்பது வருடங்களில் நம் அட்டைப்படங்கள் பயணித்துள்ள விதத்தை கவனித்தாலே உயிர்மை, காலச்சுவடு ஆகியவற்றின் பணி எவ்வளவு சிறப்பானது என புரியும். உயிர்மை அட்டைப்படங்களில் எப்போதும் என் நினைவில் நிற்பது எஸ்,ராவின் “நெடுங்குருதி”யின் அட்டைப்படம். மிக கவித்துவமான தூண்டுதல் அளிக்கும் படம் அது.
நாம் அட்டைப்படங்களை இவ்வளவு சிலாகிக்கும் போதும், விமர்சிக்கும் போதும், அவை முழுக்க வேறொரு பிரதி என மறக்க கூடாது. ஒரு புத்தகம் குறித்த ஒரு அவதானிப்பு என ஒரு அட்டைப்படத்தை பார்த்தாலும் கூட அதை புத்தகத்தின் முன்னுரையுடன் மட்டுமே சேர்க்க இயலும். ஒரு சிறப்பான ஆழமான முன்னுரை ஒரு நாவலுக்கோ கவிதைத்தொகுப்புக்கோ என்னவிதமான ஆழத்தை நல்க முடியும்? நூலை வாசிக்க துவங்கியதும் அவன் முன்னுரையை மறந்து விடுவான். ஒரு புத்தகத்துக்கு வெறும் வெள்ளையாய் ஒரு அட்டை வடிவமைத்தாலே போதும் என்பது என் தரப்பு. அப்படி என்றால் அட்டைப்படங்கள் தேவையில்லையா?
நான் இது குறித்து முன்பே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்: க்ரியா ராமகிருஷ்ணன் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை: அழகியலும்வர்க்கமும்
என் வாதம் இது. கலாபூர்வமான அட்டைப்படம், வடிவமைப்பு எல்லாமே புத்தகத்தை விற்பனைப் பண்டமாக்குவதற்கான ஒரு தந்திரம் மட்டுமே. ஒரு சேலை வாங்கினால் கூடுதலாய் பிளவுஸ் துணி அளிப்பது போல ஒரு நாவலுடன் ஒரு நுட்பமான அழகான அட்டைப்படம் கிடைக்கிறது. அதை ஒரு ஓவியத்துடன் ஒப்பிடலாம். ஒரு புத்தகத்துடன் ஒரு நவீன ஓவியத்தை இணைப்பாக தருகிறார்கள். ஏன்? அதன் விலையை நியாயப்படுத்த! அந்த விலை எழுதப்பட்ட பிரதிக்கானது அல்ல. வடிவமைப்பின் நளினம், கலாச்சார மதிப்பு, அழகு ஆகிய நுகர்வு பொருட்களுக்கானது. ஒரு புத்தகத்தை தன் அலமாரியில் வைக்கையில் அது அழகான அலங்கார பொருள் போல இருக்க வேண்டும் என, அதை கையில் தூக்கி செல்கையில் கௌரவமாய், கலாபூர்வமாய், தன் நுண்ணுணர்வை, பண்பாட்டு உணர்வை காட்டும்படியாய் இருக்க வேண்டும் என அவன் கோருகிறான். அதற்காகத் தான் அவன் ஒரு புத்தகத்துக்கு 350-500 ரூ தர தயாராகிறான். வெறும் சாணித்தாளில் அச்சிட்டு வெள்ளை அட்டையுடன் கொடுத்தால் அவன் வாங்க மாட்டான். வாசித்து ரசிக்க அதுவே போதும் என்றாலும் கூட.
ஒரு படைப்பை பண்டமாக்குவதற்கான ஒரு உபகரணம் மட்டுமே அட்டைப்படம். அட்டைப்படத்துக்காக ஒரு படைப்பை வாசகர்கள் கொண்டாடிய வரலாறு இல்லை. அட்டைப்படத்துக்காக படைப்பை நிராகரித்த வரலாறும் இல்லை. தன் பண்டத்தின் தோற்றம் குறித்து மிதமிஞ்சிய அக்கறை காட்டியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். பாதி கடித்த ஆப்பிள் லோகோவுக்காக அவர் அல்லோலப்பட்டிருக்கிறார். கணினியின் உள்ளே இருக்கும் போர்டு கூட அழகான நளினமான இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஏனென்றால் ஒரு பண்டம் பயன்பாடு மிக்கதாய் மட்டுமல்ல பார்க்கவும் அழகாய், ஒரு கலாச்சார குறியீடாய் இருக்க வேண்டும் என ஜோப்ஸ் நன்கு அறிந்திருந்தார். ஆனால் ஒரு புத்தகம் என்பது ஐபோன் இல்லை என நாம் உணர வேண்டும்.

அட்டைப்படம் என்பது வியாபாரி கவலைப்பட வேண்டிய விசயம், எழுத்தாளன் அல்ல. போயும் போயும் ஒரு பண்டமாக்கல் உபகரணத்துக்காகவா உறவை முறிப்பீர்கள் போகன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...