Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அட்டைப்பட சர்ச்சை


அட்டைப்படம் ஒரு புத்தகத்தின் தரத்தை மேம்படுத்தும் வாசகனின் கற்பனையை சிறகடிக்க வைக்கும் என்பதாக தமிழில் ஒரு கற்பிதம் உள்ளது. உண்மையில் ஒரு நூலின் பிரதிக்கும் அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் ஆகியவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வெண்முரசு நாவல் வரிசைக்கு சண்முகவேல் அற்புதமான ஓவியங்களை நல்கியிருக்கிறார். அதனால் அந்நாவல்களின் ஆழம் அதிகமாகும் என்றோ வாசகர்கள் அப்படங்களை கொண்டு நாவலை கற்பனை செய்வார்கள் என்றோ நான் நம்பவில்லை. முழுக்க ஜெயமோகனின் எழுத்து வழியாகத் தான் வாசகன் தன் கற்பனை உலகை விரித்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பு மொழிக்குள் ஆரம்பித்து மொழிக்குள்ளே முடிகிறது. அட்டைப்பட ஓவியம் ஒரு தனி படைப்பு.

 இதுவே என் பார்வை. எனக்கும் பிற எழுத்தாளர்களைப் போல் என் நூல் மிக நளினமாய் கண்கவர் வடிவத்தில் வெளிவர வேண்டும் என தீராத ஆசை உண்டு. ஆனால் அது வெறும் கிளுகிளுப்பு தான் என எனக்குத் தெரியும். ஒரு அடர் இருட்டான அறைக்குள் வந்த பின் எப்படி பேரழி கூட வெறும் உடல் தானோ அது போல் பிரசுரமான பின் ஒரு புத்தகம் வெறும் எழுத்துக்குவியல் மட்டுமே. அதன் உயிர் முழுக்க சொற்களில் இருக்கிறது.
நான் ஒவ்வொரு முறையும் என் நூலை முதல் முறை பார்க்கும் போது அழகாய் ஆடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு குழந்தையை போலத் தான் கையில் வாங்கிக் கொள்கிறேன். ஆனாலும் எதார்த்தம் எனக்குத் தெரியும். உயிர்மையில் வெளிவந்த என் நூல்களில் “இன்றிரவு நிலவின் கீழ்”, “கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்”, “கால்கள்” ஆகியவற்றின் அட்டைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பொதுவாக நூல்களின் அட்டை அமைப்பில் மனுஷ்யபுத்திரன் தனி அக்கறை கொள்வார். ஒரு புத்தகத்தின் ஆதாரமான தொனி பிம்பத்தில் வந்து விட வேண்டும் என நினைப்பார். அதே போல் தொலைவில் இருந்து பார்க்க கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும். பெரும்பாலான உயிர்மை அட்டைகள் இவ்விசயத்தில் சிறப்பானவை. எனது “கால்கள்” நாவலின் அட்டையில் நோய்மையின் நிறத்தை, ஒரு கனவில் மங்கலாய் தெரியும் ஒற்றைக்காலின் பிம்பத்தை, அவர் வரவழைத்திருப்பார். ”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு ராஜேஷ் குமார் த்ரில்லர் பாக்கெட் நாவல்களின் தொனியை கொணர்ந்து ஒரு ரெட்ரோ வடிவத்தில் அட்டையை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். மனுஷ்யபுத்திரனிடம் விவாதித்து ராஜேஷ்குமாரின் சில சாம்பிள் அட்டைப்படங்களையும் அனுப்பினேன். ஆனால் அதற்கு மேல் அவ்விசயத்தில் பங்காற்ற என்னால் இயலவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கே அது அபத்தமான ஐடியா எனப் பட அதை மேலும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் இறுதியில் உயிர்மை வடிவமைத்த அட்டை எனக்கு பிடித்திருந்தது. அது வழக்கமான அட்டை அல்ல. பார்க்கவும் தனித்து தெரிந்தது. மேலும் உயிர்மையில் அட்டைகள் தயாராகும் அவசர கதி எனக்கு தெரியும். குறைவான பணியாளர்களுடன், குறைந்த பட்ச இட வசதியுடன் எப்போதும் நேர நெருக்கடிகளுடன் அங்கு பணிகள் நடக்கும். அந்த சூழலில் இவ்வளவு தரமாய் புத்தகங்களை அவர்கள் கொண்டு வருவதே ஒரு சாதனை என தோன்றும். ஆக, அட்டைப்படம் மறைமுகமாய், கலை நுணுக்கத்துடன் இல்லை எனும் வாதங்கள் நடைமுறை நிலவரத்தை கணக்கில் கொள்ளாதவை. கடந்த முப்பது வருடங்களில் நம் அட்டைப்படங்கள் பயணித்துள்ள விதத்தை கவனித்தாலே உயிர்மை, காலச்சுவடு ஆகியவற்றின் பணி எவ்வளவு சிறப்பானது என புரியும். உயிர்மை அட்டைப்படங்களில் எப்போதும் என் நினைவில் நிற்பது எஸ்,ராவின் “நெடுங்குருதி”யின் அட்டைப்படம். மிக கவித்துவமான தூண்டுதல் அளிக்கும் படம் அது.
நாம் அட்டைப்படங்களை இவ்வளவு சிலாகிக்கும் போதும், விமர்சிக்கும் போதும், அவை முழுக்க வேறொரு பிரதி என மறக்க கூடாது. ஒரு புத்தகம் குறித்த ஒரு அவதானிப்பு என ஒரு அட்டைப்படத்தை பார்த்தாலும் கூட அதை புத்தகத்தின் முன்னுரையுடன் மட்டுமே சேர்க்க இயலும். ஒரு சிறப்பான ஆழமான முன்னுரை ஒரு நாவலுக்கோ கவிதைத்தொகுப்புக்கோ என்னவிதமான ஆழத்தை நல்க முடியும்? நூலை வாசிக்க துவங்கியதும் அவன் முன்னுரையை மறந்து விடுவான். ஒரு புத்தகத்துக்கு வெறும் வெள்ளையாய் ஒரு அட்டை வடிவமைத்தாலே போதும் என்பது என் தரப்பு. அப்படி என்றால் அட்டைப்படங்கள் தேவையில்லையா?
நான் இது குறித்து முன்பே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்: க்ரியா ராமகிருஷ்ணன் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை: அழகியலும்வர்க்கமும்
என் வாதம் இது. கலாபூர்வமான அட்டைப்படம், வடிவமைப்பு எல்லாமே புத்தகத்தை விற்பனைப் பண்டமாக்குவதற்கான ஒரு தந்திரம் மட்டுமே. ஒரு சேலை வாங்கினால் கூடுதலாய் பிளவுஸ் துணி அளிப்பது போல ஒரு நாவலுடன் ஒரு நுட்பமான அழகான அட்டைப்படம் கிடைக்கிறது. அதை ஒரு ஓவியத்துடன் ஒப்பிடலாம். ஒரு புத்தகத்துடன் ஒரு நவீன ஓவியத்தை இணைப்பாக தருகிறார்கள். ஏன்? அதன் விலையை நியாயப்படுத்த! அந்த விலை எழுதப்பட்ட பிரதிக்கானது அல்ல. வடிவமைப்பின் நளினம், கலாச்சார மதிப்பு, அழகு ஆகிய நுகர்வு பொருட்களுக்கானது. ஒரு புத்தகத்தை தன் அலமாரியில் வைக்கையில் அது அழகான அலங்கார பொருள் போல இருக்க வேண்டும் என, அதை கையில் தூக்கி செல்கையில் கௌரவமாய், கலாபூர்வமாய், தன் நுண்ணுணர்வை, பண்பாட்டு உணர்வை காட்டும்படியாய் இருக்க வேண்டும் என அவன் கோருகிறான். அதற்காகத் தான் அவன் ஒரு புத்தகத்துக்கு 350-500 ரூ தர தயாராகிறான். வெறும் சாணித்தாளில் அச்சிட்டு வெள்ளை அட்டையுடன் கொடுத்தால் அவன் வாங்க மாட்டான். வாசித்து ரசிக்க அதுவே போதும் என்றாலும் கூட.
ஒரு படைப்பை பண்டமாக்குவதற்கான ஒரு உபகரணம் மட்டுமே அட்டைப்படம். அட்டைப்படத்துக்காக ஒரு படைப்பை வாசகர்கள் கொண்டாடிய வரலாறு இல்லை. அட்டைப்படத்துக்காக படைப்பை நிராகரித்த வரலாறும் இல்லை. தன் பண்டத்தின் தோற்றம் குறித்து மிதமிஞ்சிய அக்கறை காட்டியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். பாதி கடித்த ஆப்பிள் லோகோவுக்காக அவர் அல்லோலப்பட்டிருக்கிறார். கணினியின் உள்ளே இருக்கும் போர்டு கூட அழகான நளினமான இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஏனென்றால் ஒரு பண்டம் பயன்பாடு மிக்கதாய் மட்டுமல்ல பார்க்கவும் அழகாய், ஒரு கலாச்சார குறியீடாய் இருக்க வேண்டும் என ஜோப்ஸ் நன்கு அறிந்திருந்தார். ஆனால் ஒரு புத்தகம் என்பது ஐபோன் இல்லை என நாம் உணர வேண்டும்.

அட்டைப்படம் என்பது வியாபாரி கவலைப்பட வேண்டிய விசயம், எழுத்தாளன் அல்ல. போயும் போயும் ஒரு பண்டமாக்கல் உபகரணத்துக்காகவா உறவை முறிப்பீர்கள் போகன்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...