தற்போது ராஜ்கோட்டில் நடந்து வரும்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஒரு மீளமுடியாத சிக்கலில் இருக்கிறது.
இங்கிலாந்து மோசமாய் கட்டுப்பாடே இன்றி பந்து வீசினால் மட்டுமே இந்தியா தப்பிக்கும்.
மற்றபடி தோல்வி கிட்டத்தட்ட உறுதி.
ஆடுதளம் தான் முக்கிய காரணம்.
ராஜ்கோட்டில் நடக்கும் முதல் டெஸ்ட் இது. இந்த நவம்பர் டிசம்பர் காலத்தில் இந்தியா
முழுக்கவே மந்தமான பருவச்சூழல் இருக்கும். ஆடுதளத்துக்கு போதுமான வெயில் கிடைக்காது.
அதனால் உள்ளுக்குள் சற்று ஈரமாக இருக்கும் ஆடுதளத்தில் ரொம்ப மந்தமாய் மெதுவாய் தான்
வரும். இதை சரி செய்ய ஆடுதள தயாரிப்பாளர்கள் தளத்தின் மீதுள்ள புற்களை முழுக்க கத்தரிக்காமல்
விடுவார்கள். ஆனால் சரியாக காயாததால் ஆடுதளம் முழுக்க வெடிப்புகளுடன் இருக்கும். இது
பந்தை ஏற்ற இறக்கத்துடன் எகிற வைக்கும். இந்த வெடிப்புகள் ரொம்ப விரியக் கூடாது எனும்
பதற்றம் தான் ஆடுதள தயாரிப்பாளர்களுக்கு இருக்குமே தவிர ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுதளமாய்
அதை மாற்ற தோன்றாது. தற்காலிக தேவைக்காக அவசர கதியில் பண்ணப்பட்ட இட்லி உப்புமா போன்றது
இந்த ஆடுதளம்.
இதில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாது.
ஸ்பின் ஆகாது. ஆனால் புற்கள் இருப்பதால் கொஞ்சம் ஸ்விங் ஆகும். இந்த புற்களையும் ரோலர்
மூலம் மண்ணுக்குள் அழுத்தி வைத்திருப்பதால் ஸ்விங் குறைவாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங்
ஆகும். ஆனால் அதுவும் குறைவாகவே இருக்கும். வழக்கமாய் இந்திய ஆடுதளங்களில் முதல் நாள்
ஸ்பின்னர்கள் ஓரளவுக்காவது பந்து வீச முடியும். இந்த ஆடுதளம் மிக மொட்டையாக இருக்கிறது.
இதில் பவுலிங் போடவே இந்தியர்கள் விரும்பவில்லை. அவர்களின் ஏமாற்றம் முதல் நாளே தவற
விட்ட காட்சுகளால் அதிகமானது. விரக்தியில் கோலி நிதானம் இழந்தார்கள். அவருடன் சேர்ந்து
பிற வீரர்களும் தோல்வி பயத்தில் நடுங்கினார்கள். விளைவாக அடுத்த மூன்று நாட்களும்
600 சொச்சம் ரன்களை எப்படி எடுக்க போகிறோம் என யோசித்து தற்போதைய ஆட்டத்தில் கவனம்
இழந்தனர். மேலும் கேட்சுகளை தவற விட்டனர். இன்னும் மோசமாய் பவுலிங் செய்தார்கள்.
மலையாக ரன்களை குவித்த நிலையில்
இங்கிலாந்தால் இன்னும் கூலாக பொறுமையாக பந்து வீச முடியும். விரிசல்கள் அதிகமானால்
பந்துகள் சிலர் தாழ்வாக செல்லும். நம்மை விட நன்றாக பந்தை ரிவர்ஸ் செய்யக் கூடியவரக்ள்
இங்கிலாந்து வேகவீச்சாளர்கள். அவர்கள் நேராக பந்தை வீசினாலே (இப்போதைய விரக்தி மனநிலையில்)
இந்தியர்கள் எல்.பி.டபிள்யோ மற்றும் பவுல்ட் ஆகி வெளியேறுவார்கள். மேலும் ஆடுதளத்தில்
உள்ள புற்கள் தரும் கோஞ்ச நஞ்ச ஸ்விங்கையும் அவர்கள் நன்றாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஒருவேளை வெயிலில் தொடர்ந்து
காய்ந்து ஆடுதளம் கொஞ்சம் வேகமெடுத்தால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் உதவும்.
அதே போல் ஆடுதள விரிசல்களும் மோசமாகாமல் இருந்தால் உதவும். இந்தியா இப்போதைய இங்கிலாந்தின்
ஸ்கோரை முறியடித்து லீட் பெற்று மீண்டும் இந்த ஆடுதளத்தில் ஐந்தாவது நாளில் நம் ஸ்பின்னர்கள்
பந்து வீசி இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டுவார்களா? சாத்தியம் குறைவு தான்.
இந்த ஆட்டம் நிச்சயம் டிரா ஆகாது.
அதே போல் இந்தியா வெல்லவும் வாய்ப்பு குறைவே. இங்கிலாந்து தாமாகவே இந்த ஆட்டத்தை நமக்கு
பரிசளித்தால் தான் உண்டு.
இனிமேலும் இது போன்ற அவசர கதி
உப்புமா ஆடுதளங்களில் நாம் ஆடாமல் இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் பார்த்துக்
கொள்ள வேண்டும்.