Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சசிகலா எனும் alpha male

Image result for சசிகலா

ஜெயலலிதாவின் இடம் யாருக்கு எனும் கேள்வி எழுந்த போது ஒரு நண்பர் சொன்னார்: “அதிமுக முழுக்க பா.ஜ.கவின் கையில் போய் விட்டது. அவர்கள் அதிமுகவை டம்மியாக பயன்படுத்தி ஆளப் போகிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஒரு பிரபலத்தை முன்வைப்பார்கள். அதற்குள் அதிமுகவின் தலைமையை முடிந்தவரை நிர்மூலமாக்கி விடுவார்கள். அதிமுகவின் கட்டமைப்பை, வாக்கு வங்கியை தமக்கு சாதகமாய் பயன்படுத்தி தமிழகத்தை கவர்வதே பா.ஜ.கவின் திட்டம்”.
 இது நாம் பலரும் அறிந்ததே. ஆனால் அடுத்த தேர்தல் வரையிலான கட்டத்தில் அதிமுகவுக்கு என்றொரு தலைவர் வேண்டுமே? அது யார்?
அது சசிகலாவாகத் தான் இருக்கும் என்றார் நண்பர். “ஏனென்றால் சசிகலா உறுதியானவர். துணிச்சலானவர். பன்னீர் யார் மிரட்டினாலும் பணிந்து விடக் கூடியவர். அவரால் கட்சியை ஒருங்கிணைத்து நடத்த முடியாது என பா.ஜ.க அறியும். அதனால் சசிகலாவே பா.ஜ.கவின் தேர்வாக இருக்கும்.”

ஆனால் ஜெயாவின் மரணத்திற்கு பின்பான மத்திய அரசின் போக்கு இக்கூற்றுக்கு எதிராக இருந்தது. சசிகலா தன்னை தலைவர் ஆக்கக் கோரும் ஒரு குழுவினரை தனக்காக கூச்சல் இடும்படி களத்தில் இறக்கினார். அதிமுக தலைவர்கள் சிலரே சசிகலாவுக்கு ஆதரவாக பேசினர். சசிகலாவே முதல்வராக வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன. பன்னீர் உடனே தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தார். அதிகாரிகள் கூட சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தன்னை மதிப்பதில்லை என்றும் புகார் கூறினார். உடனே சசிகலாவுக்கு ஆதரவான தலைமைச்செயலாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரியினர் ரெய்ட் செய்தார்கள். மிரட்டினார்கள். அடுத்து சசிகலாவின் சொத்துகளை ரெய்ட் செய்வார்கள் எனக் கூறப்பட்டது. சசிகலாவை வீட்டை காவல் காக்கும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நீக்க்கப்பட்டனர். சசிகலா கட்சியில் இருந்து விலக வேண்டும் என பா.ஜ.க நிர்பந்திப்பதாக கூட பத்திரிகைகள் எழுதின. ஆனால் சசிகலா அஞ்சி வெளியேறுவார் என நான் நம்பவில்லை.
கட்சியின் மீது கணிசமான கட்டுப்பாட்டை வைத்திருக்கும், ஜெயாவின் சொத்துக்களை கைவசம் வைத்திருக்கும் ஒருவரை எளிதில் அகற்றி விட முடியாது. மேலும் மிரட்டினால் உடனடியாய் வெளியேறும் சுபாவக்காரர் அல்ல சசிகலா.
அதற்குப் பதிலாக சசிகலா – பன்னீர் – பா.ஜ.க தரப்பினர் இடையில் ஒரு சமரசம் நடக்கிறது. பன்னீரை தொந்தரவின்றி ஆட்சி செய்ய சசிகலா அனுமதிப்பார். சசிகலாவின் இடத்தை பன்னீர் கேட்க மாட்டார். (அவர் என்றுமே அந்த வம்புக்கு போக மாட்டார்.) முக்கியமாக, பா.ஜ.கவின் பிடியில் இந்த ஜல்லிக்கட்டு மாடு வந்து விட்டது. சசியை அடக்கியது பா.ஜ.கவுக்கு ஒரு குறியீட்டு வெற்றி.
ஆனால் சசிகலாவை நீண்ட காலம் பா.ஜ.கவால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது. பா.ஜ.கவுக்கு என்றும் அவர் மீது நம்பிக்கை இருந்ததில்லை என விகடன் இணையதளத்தில் சில கட்டுரைகள் சொல்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே அவருக்கும் பா.ஜ.கவுக்கும் முழு ராசியில்லை. அவர் காங்கிரசுடன் சற்று இணக்கம் காட்டுகிறார். கலைஞரின் நலம் விசாரிக்கிறேன் எனும் சாக்கில் கலைஞர் குடும்பத்தை சந்திக்கிறார். அவர் தனக்கென ஒரு அணியை அமைக்க முயல்கிறார். ஏனென்றால் ஜெயாவுக்கு பிறகு பன்னீரை கொண்டு தான் பா.ஜ.க காய் நகர்த்தும் என சசிகலா அறிந்திருந்தார். இப்போது மோடிக்கு முன் முழுக்க தலைவணங்கி விட்டார். அதனால் அவரை பொதுச்செயலாளராக இருக்க அனுமதித்திருக்கிறார்கள்.
இப்போதே ஒரு வலுவான தலைவருக்கான சில அறிகுறிகளை அவர் காட்டி விட்டார். பதவியேற்கும் போது கண்கலங்குகிறார். எம்.ஜி.ஆர். ஜெயா சமாதிகளுக்கு சென்று வணங்குகிறார். அங்கு அதிமுக மந்திரிகளையும் வரச் செய்கிறார். பல இடங்களில் ஜெயலலிதாவின் பிம்பத்தை பின்னணியில் வைத்து சசிகலாவின் வணங்கி நிற்கும் படத்தை தாங்கிய சுவரொட்டிகள் பளிச்சிடுகின்றன. பன்னீர் செல்வம் இந்த பிம்பம் கட்டியமைக்கும் பணிகளில் இதுவரை ஒன்றை கூட செய்ய முயலவில்லை. ஆனால் ஒரு கட்சிக்கு தன்னை வலுவாக முன்னெடுக்கும் ஒரு தலைவர் தேவை. இப்போதைக்கு அது சசிகலா தான்.
ஒரு சிறந்த தலைவர் யார்? மக்களுக்கு நல்லது செய்கிற தலைவர் யார் என நான் கேட்கவில்லை. மக்களை வசீகரிக்கிற, கட்சியை கட்டுப்படுத்துகிற தலைவர் யார்? ஆணவமும், துணிச்சலும், பிடிவாதமும், சிறப்பாய் மீடியா பிம்பத்தை கட்டமைக்கிறவரும், கட்சியை விரல் நுனியில் வைத்திருக்கும் நிர்வாகத் திறனும் கொண்டவர் தான் சிறந்த தலைவர். அதாவது ஆங்கிலத்தில் alpha male என்பார்கள். இங்கு அது சசிகலா மட்டுமே. அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனால் அதிமுக ஒரு கட்சியாக நிலைபெற வேண்டுமென்றால் அது சசிகலாவின் எழுச்சியால் மட்டுமே சாத்தியமாகும் எனத் தோன்றுகிறது. தலைமைப் பண்பை நாம் ஒழுக்க, அற மதிப்பீடுகள் இன்றி அளவிட வேண்டும். இந்த மதிப்பீடுகளுக்கு அரசியலில் எந்த மதிப்பும் இல்லை.
பா.ஜ.க இதை நன்கு அறியும். அதனால் சசிகலாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை அது சுலபத்தில் அனுமதிக்காது. பல முட்டுக்கட்டுகள் போடுகள். குழு அரசியலை வளர்த்து அவரை முடிந்த வரை தளர்த்த பார்க்கும்.
ஆனால் இப்போதைக்கு அதிமுகவிற்கு பன்னீர் செல்வத்தினால் பலன் இல்லை என தோன்றுகிறது. அவர் ஒரு பா.ஜ.க பினாமி மட்டுமே. மேலும் அவர் ஒரு இயல்பான தலைவரும் அல்ல. அவர் கீழ் அதிமுக நிர்மூலமாகி விடும். அவ்விதத்தில் சசிகலாவின் முதல் கட்ட வெற்றி திமுகவுக்கு ஒரு நெருக்கடியாக இருக்கும். அடுத்த தேர்தலில் திமுக வெல்லும் என்பது 99% உறுதி என்றாலும், திமுகவுக்கு தலைவலி கொடுக்கும் வண்ணம் அதிமுகவை முன்னெடுக்க சசிகலாவால் முடியும். இதை உணர்ந்ததனால் தான் ஸ்டாலின் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் விலக வேண்டும், அதற்கான விசாரணை வேண்டும் என கோரி இருக்கிறார். ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது எனும் செய்தி வளர்வது சசிகலாவுக்கு பங்கமாக இருக்கும் என அவர் அறிவார். ஆனால் இந்த கோரிக்கை ஒரு விசயத்தை காட்டுகிறது: ஸ்டாலின் சசிகலாவை பொருட்படுத்த துவங்கி விட்டார்.


Comments

Unknown said…
YES sasi seems to have inherited certain jayas mannerisms tactics behaviour ...to capture the aiadmk audience.. panneer certainly lacks the charisma...

so known devil is better than an unknown angel...

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...