முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சம்பவம் எப்படி கதையாகிறது?

அன்புள்ள அபிலாஷ் ...
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் என்னுடைய சிறுகதையை படிக்க கொடுத்திருந்தேன். இது சிறுகதையல்ல டைரி குறிப்பிற்க்கு தலைப்பிட்டு கொடுத்திருக்கிறாய் என்றார். சரி என் டைரி குறிப்பில் என்ன குறை இருக்கிறது ?? என்றேன். அது ஒரு புனைவாக மாற்றம் அடையவே இல்லை என்றார். இன்னும் கொஞ்சம் எழுதிப்பார் என்றார். என் சந்தேகம் ... புனைவு என்றால் என்ன, நான் நேரில் பார்த்த ஒரு சம்பவம் எந்த புள்ளியில் ஒரு புனைவாக மாறுகிறது. சமயமிருப்பின் தெளிவுபடுத்தவும்.
நன்றி ரவீந்தர்

அன்புள்ள ரவீந்தர்
இது ஒரு நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்கு இ.எம் பாஸ்டர் எனும் ஆங்கிலேய நாவலாசிரியர் ஒரு பதில் சொன்னார்.

சம்பவம்: ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருக்கிறார்கள். பரஸ்பரம் மிகுந்த பிரியத்துடன் புரிந்துணர்வுடன் வாழ்ந்து வந்தார்கள். ஊரே அவர்களை கொண்டாடியது. ஒருநாள் ராணி நோய் வந்து எதிர்பாராதாத முறையில் இறந்து போனார். இதனை அடுத்து ராஜாவும் இறந்து போனார்.
கதை: ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருக்கிறார்கள். பரஸ்பரம் மிகுந்த பிரியத்துடன் புரிந்துணர்வுடன் வாழ்ந்து வந்தார்கள். ஊரே அவர்களை கொண்டாடியது. ஒருநாள் ராணி நோய் வந்து எதிர்பாராதாத முறையில் இறந்து போனார். இதனை அடுத்து துயரம் தாள முடியாமல் ராஜா இறந்து போனார்.
(பாஸ்டர் சம்பவத்தை tale என்றும் கதையை story என்றும் வகைப்படுத்துகிறார். Tale என்றால் சாதாரண கட்டுக்கதை. Story என்றால் ஒரு செய்நேர்த்தி உள்ள / இலக்கிய கதை. )
சரி, ரெண்டுக்குமான வித்தியாசத்தை நீங்களே கவனித்திருப்பீர்கள். ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் தூண்டப்பட்டு இன்னொரு சம்பவம் அடுத்து நடக்கையில் அது கதையாகிறது (ராணியின் இழப்பால் தூண்டப்பட்டு கடும் சோகத்தில் ராஜாவும் இறக்கிறார்).
 திரைக்கதையின் இலக்கணமே இது தான். ஏன் இப்படி நடந்தது, அடுத்து என்ன ஆகிய கேள்விகளை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் வரும்படியாய் எழுதினால் கதை உருவாகிறது. வணிகக் கதைகள், சம்பிரதாயமான இலக்கிய சிறுகதை என பல வடிவங்களிலும் இந்த தொழில் யுக்தி தான் செயல்படுகிறது. வணிகக் கதை எடுத்துக் கொண்டால் சுஜாதாவின் எந்த சிறுகதைக்கும் நீங்கள் இதை பொருத்திப் பார்க்கலாம்.
 இலக்கிய கதை எடுத்துக் கொண்டால்? அசோகமித்திரனின் ஒரு சிறுகதையை எடுத்துக் கொள்வோம். கதை ஒரு மத்திய வர்க்க வீட்டில் நடக்கிறது. முதல் கேள்வி: அங்கு என்ன பிரச்சனை? எலி. எலியை பிடிக்க பல முயற்சிகள் செய்து கடைசியில் எலிப்பொறியில் மாட்ட வைக்கிறார்கள். அடுத்த கேள்வி: அடுத்து என்ன நடக்கப் போகிறது? எலியை அடிக்க வேண்டும். ஆனால் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு பாவம் எலியை அடிக்க மனம் வரவில்லை. “பாவம் இதை தொலைவா எங்கியாவது கொண்டு போய் திறந்து விட்டிரு” என மைய பாத்திரத்திடம் அவன் அம்மா சொல்கிறாள். அடுத்து என்ன ஆச்சு? மைய பாத்திரம் அதை தொலைவாக ஒரு வெட்டவெளிக்கு எடுத்துப் போகிறான். அப்புறம்? எலியை திறந்து விடுகிறான். சரி, எலி வெளியே ஓடியதா? அது தான் இல்லை. அது வெளியே வந்து பார்த்து திகைத்து நின்றது. ஏன்? இப்போது தான் நாம் “அடுத்து என்ன?” என்பதில் இருந்து “ஏன்?” எனும் கேள்விக்கு வருகிறோம். அதை ஆசிரியர் சொல்வதில்லை. ஆனால் வெட்டவெளியை முதன்முதலில் பார்க்கும் ஒண்டுக்குடித்தன எலியின் திகைப்பை சுருக்கமாய் காட்டி விடுகிறார். கடைசியாய் ஒரு கேள்வி: அப்படி எலி வெளியே வந்து திகைத்து நின்ற போது என்னாச்சு? அங்கு விரைந்து வரும் ஒரு வண்டி அதன் மேல் ஏறி விட அது செத்து விடுகிறது.
 ஒரு வழக்கமான வாழ்க்கைச் சூழல். அங்கே ஒரு சற்றே விசித்திரமான பிரச்சனை: எலியை பிடிப்பது. அடுத்து இப்பிரச்சனை தரும் புது புது சவால்கள். அவை உருவாக்கும் “அடுத்து என்ன?” எனும் கேள்விகள். இக்கேள்விகள் தாம் இக்கதையை இறுதி வரை நகர்த்துகின்றன. அதேநேரம் இக்கதையை முக்கியமாக ஆக்குவது ”ஏன்” எனும் கேள்வி தான். அக்கேள்வியை தூண்டும் எலியின் திகைப்பு தான். அது தான் கதையின் அவதானிப்பு முடியப்பட்டுள்ள தருணம். வாசகனுக்கு வாழ்க்கையின் நகைமுரண் கண்டு நெகிழவும் புன்னகைக்கவும் கதைக்குள் இங்கு ஒரு சந்தர்ப்பத்தை அசோகமித்திரன் தருகிறார். “நானும் இந்த எலியை போலத் தானே” என அந்த வாசகன் ஒரு நொடி யோசிக்கிறான். “அந்த மைய பாத்திரமும் அந்த எலியை போல் ஒரு இடுங்கின வாழ்க்கையில் அல்லல்படுகிறவன் தானே?” என தனக்குள் கேட்கிறான். இந்த இடத்தில் வாசகனின் மனம் விரிகிறது. அவனுக்கு வாழ்க்கை குறித்த ஒரு புதிய பார்வை, கோணம் கிடைக்கிறது. இந்த கோணம் இக்கதையை ஒரு உயர்ந்த இலக்கிய படைப்பு ஆக்குகிறது.
ஆக, ஒரு சிறுகதைக்கு இரண்டு அம்சங்கள் முக்கியம்: 1) கதைத்தன்மை. மேற்சொன்ன கேள்வி-பதில் பாணி தான் கதைத்தன்மையை உருவாக்குகிறது. விவரணை, வசனம், கவித்துவம், நாடகீயமான உணர்ச்சிமோதல், வித்தியாசமான பின்னணி என எதைக் கொண்டும் இந்த கதை பாணியை நீங்கள் வலுவாக்கி வாசகனை உள்ளிழுத்து தன்னை மறக்க வைக்கலாம். பெரும்பாலான வாசகர்கள் கதையின் இந்த முதல் நிலையிலேயே திருப்தி கண்டு விடுவார்கள்.
2) கோணம். பார்வை, கேசரி கிளறுவது பார்த்திருப்பீர்கள். கடைசியில் அந்த ஒரு சொட்டு எஸன்ஸ் சேர்க்கும் வரையில் அது இனிப்பான உப்புமா மட்டும் தான். ஆனால் அதை சேர்த்ததும் மணம் மற்றும் நிறம் பெற்று அது கேசரியாகிறது. ஒரு எளிய காதல் கதையை (தொண்ணூறுகளில் வந்த முரளியின் “இதயம்” போன்ற கதையை) மௌனி இப்படித் தான் வாழ்க்கைத் தேடல் பற்றிய ஒரு அபாரமான கதையாக்குகிறார் (”அழியாச்சுடர்”). மல்கோவா ஆண்டி கதையை பிராய்டிய பார்வை கொண்டு அபாரமான இலக்கிய நாவலாக்குகிறார் தி.ஜா (மோகமுள்).
நம்முடைய அனுபவங்கள் பெரும்பாலும் வாழ்க்கை கோணத்துடன் தான் இருக்கும். அதனால் தான் அனுபவங்களை சுலபத்தில் நல்ல கதையாக்க முடிகிறது. உங்கள் அனுபவம் நல்ல கதையாகி உள்ளதா என எனக்குத் தெரியவில்லை (நான் உங்கள் கதையை படிக்கவில்லை). ஆனால் உங்களுக்கு அது சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.
 நம்மில் பெரும்பாலானோரால் ஒரு நல்ல சிறுகதையாவது நிச்சயம் எழுத முடியும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது இரண்டு விசயங்களில். 1) உங்களுக்கு தெரிந்த கதையில் உள்ள சம்பவங்கள் ஏன் அப்படி நடக்கின்றன என உங்களுக்கு முன்கூறாக தெரியும். ஆனால் வாசகனுக்கு தெரியாது. அந்த நியாயத்தை வாசகனுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களுக்கு நேர்வதை நீங்கள் உடனடியாய் நம்புவீர்கள். அதில் உணர்ச்சிகரமாய் நீங்கள் சம்மந்தப்பட்டிருக்கிறீர்கள். உ.தா. ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவள் பெற்றோரிடம் பேசி பழகுகிறான். அப்போது அவனுக்கு அப்பெண்ணின் அம்மா மீது மோகம் ஏற்படுகிறது. ஏன் என்றே அவனுக்கு புரியவில்லை. அப்பெண்ணை விட அவனுக்கு அவள் அம்மா மீது மிகுந்த காதல் ஏற்படுகிறது. இது ஒரு சவாலான கதைப்புள்ளி. சுலபத்தில் இது காமம் அல்லது வேடிக்கை என்ற புள்ளிக்கு சென்று விடும். அதை தவிர்த்து இதை சீரியஸாக எழுத முடியும். கதையை எதார்த்தமாக எழுதுவதானால் அவனது மனநிலையை, ஆளுமையை ஸ்தாபிக்கும் காட்சிகளை, தகவல்களை முன்கூறாக வாசகனுக்கு சொல்ல வேண்டும். வாசகனை தயாரிக்க வேண்டும். அப்போது வாசகன் அவனது அந்த மோகம் இயல்பானதுதான் என ஏற்பான். இதையே ஒரு மிகை-எதார்த்த (fantasy) கதையாக சுலபத்தில் எழுதலாம் (லஷ்மி சரவணகுமார் அல்லது ஜெ.பி சாணக்யா பாணியில்). கதையில் அந்த இளைஞனுக்கு ஏன் அப்படி மோகம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு உணர்ச்சிகரமாய் விளங்குவது போல் வாசகனுக்கும் விளக்கி விட வேண்டும். உங்கள் பாத்திரம் ஒரு கொலைகாரன் என்றால் அவன் கொல்லுவதன் இறுதி நொடிக்கு முன் உணரும் பதற்றமும் த்ரில்லும் உங்கள் வாசகனுக்கும் ஏற்பட வேண்டும்.
2) அடுத்து இதற்கு வேறொரு கோணத்தை அளிக்க வேண்டும். உங்கள் இயல்பான நிலைப்பாடு, வாழ்க்கைப் பார்வையை ஒட்டி இது எதேச்சையாய் கதையில் அமைய வேண்டும். உ.தா நகுலனின் கதை மற்றும் கவிதைகளில் அவர் மட்டுமே தான் இருப்பார். வெவ்வேரு ரூபங்களில் நகுலனே தோன்றி நகுலனிடம் பேசுவார். இது ஒரு தத்துவ நிலை, வாழ்க்கைப் பார்வை. நகுலன் ஒரு துப்பறியும் கதை எழுதினால் எப்படி இருக்கும் யோசியுங்கள். அவர் கதையில் கொலைகாரனும், கொல்லப்படுபவனும், அதை புலன் அறிகிறவனும் – மூவருமே - நகுலனாகவே இருக்க முடியும். இது தான் நகுலன் கதையை ”நகுலன் கதை” ஆக்குகிறது. இப்படி ஒரு கோணம் உங்களுக்கு இயல்பாகவே இருந்தால் அது உங்கள் கதையில் வரட்டும். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள். போராடி அதை ஏற்படுத்தாதீர்கள்.

இவ்வளவு தான்! 

கருத்துகள்

Nagendra Bharathi இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...