Skip to main content

சம்பவம் எப்படி கதையாகிறது?

அன்புள்ள அபிலாஷ் ...
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் என்னுடைய சிறுகதையை படிக்க கொடுத்திருந்தேன். இது சிறுகதையல்ல டைரி குறிப்பிற்க்கு தலைப்பிட்டு கொடுத்திருக்கிறாய் என்றார். சரி என் டைரி குறிப்பில் என்ன குறை இருக்கிறது ?? என்றேன். அது ஒரு புனைவாக மாற்றம் அடையவே இல்லை என்றார். இன்னும் கொஞ்சம் எழுதிப்பார் என்றார். என் சந்தேகம் ... புனைவு என்றால் என்ன, நான் நேரில் பார்த்த ஒரு சம்பவம் எந்த புள்ளியில் ஒரு புனைவாக மாறுகிறது. சமயமிருப்பின் தெளிவுபடுத்தவும்.
நன்றி ரவீந்தர்

அன்புள்ள ரவீந்தர்
இது ஒரு நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்கு இ.எம் பாஸ்டர் எனும் ஆங்கிலேய நாவலாசிரியர் ஒரு பதில் சொன்னார்.

சம்பவம்: ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருக்கிறார்கள். பரஸ்பரம் மிகுந்த பிரியத்துடன் புரிந்துணர்வுடன் வாழ்ந்து வந்தார்கள். ஊரே அவர்களை கொண்டாடியது. ஒருநாள் ராணி நோய் வந்து எதிர்பாராதாத முறையில் இறந்து போனார். இதனை அடுத்து ராஜாவும் இறந்து போனார்.
கதை: ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருக்கிறார்கள். பரஸ்பரம் மிகுந்த பிரியத்துடன் புரிந்துணர்வுடன் வாழ்ந்து வந்தார்கள். ஊரே அவர்களை கொண்டாடியது. ஒருநாள் ராணி நோய் வந்து எதிர்பாராதாத முறையில் இறந்து போனார். இதனை அடுத்து துயரம் தாள முடியாமல் ராஜா இறந்து போனார்.
(பாஸ்டர் சம்பவத்தை tale என்றும் கதையை story என்றும் வகைப்படுத்துகிறார். Tale என்றால் சாதாரண கட்டுக்கதை. Story என்றால் ஒரு செய்நேர்த்தி உள்ள / இலக்கிய கதை. )
சரி, ரெண்டுக்குமான வித்தியாசத்தை நீங்களே கவனித்திருப்பீர்கள். ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் தூண்டப்பட்டு இன்னொரு சம்பவம் அடுத்து நடக்கையில் அது கதையாகிறது (ராணியின் இழப்பால் தூண்டப்பட்டு கடும் சோகத்தில் ராஜாவும் இறக்கிறார்).
 திரைக்கதையின் இலக்கணமே இது தான். ஏன் இப்படி நடந்தது, அடுத்து என்ன ஆகிய கேள்விகளை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் வரும்படியாய் எழுதினால் கதை உருவாகிறது. வணிகக் கதைகள், சம்பிரதாயமான இலக்கிய சிறுகதை என பல வடிவங்களிலும் இந்த தொழில் யுக்தி தான் செயல்படுகிறது. வணிகக் கதை எடுத்துக் கொண்டால் சுஜாதாவின் எந்த சிறுகதைக்கும் நீங்கள் இதை பொருத்திப் பார்க்கலாம்.
 இலக்கிய கதை எடுத்துக் கொண்டால்? அசோகமித்திரனின் ஒரு சிறுகதையை எடுத்துக் கொள்வோம். கதை ஒரு மத்திய வர்க்க வீட்டில் நடக்கிறது. முதல் கேள்வி: அங்கு என்ன பிரச்சனை? எலி. எலியை பிடிக்க பல முயற்சிகள் செய்து கடைசியில் எலிப்பொறியில் மாட்ட வைக்கிறார்கள். அடுத்த கேள்வி: அடுத்து என்ன நடக்கப் போகிறது? எலியை அடிக்க வேண்டும். ஆனால் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு பாவம் எலியை அடிக்க மனம் வரவில்லை. “பாவம் இதை தொலைவா எங்கியாவது கொண்டு போய் திறந்து விட்டிரு” என மைய பாத்திரத்திடம் அவன் அம்மா சொல்கிறாள். அடுத்து என்ன ஆச்சு? மைய பாத்திரம் அதை தொலைவாக ஒரு வெட்டவெளிக்கு எடுத்துப் போகிறான். அப்புறம்? எலியை திறந்து விடுகிறான். சரி, எலி வெளியே ஓடியதா? அது தான் இல்லை. அது வெளியே வந்து பார்த்து திகைத்து நின்றது. ஏன்? இப்போது தான் நாம் “அடுத்து என்ன?” என்பதில் இருந்து “ஏன்?” எனும் கேள்விக்கு வருகிறோம். அதை ஆசிரியர் சொல்வதில்லை. ஆனால் வெட்டவெளியை முதன்முதலில் பார்க்கும் ஒண்டுக்குடித்தன எலியின் திகைப்பை சுருக்கமாய் காட்டி விடுகிறார். கடைசியாய் ஒரு கேள்வி: அப்படி எலி வெளியே வந்து திகைத்து நின்ற போது என்னாச்சு? அங்கு விரைந்து வரும் ஒரு வண்டி அதன் மேல் ஏறி விட அது செத்து விடுகிறது.
 ஒரு வழக்கமான வாழ்க்கைச் சூழல். அங்கே ஒரு சற்றே விசித்திரமான பிரச்சனை: எலியை பிடிப்பது. அடுத்து இப்பிரச்சனை தரும் புது புது சவால்கள். அவை உருவாக்கும் “அடுத்து என்ன?” எனும் கேள்விகள். இக்கேள்விகள் தாம் இக்கதையை இறுதி வரை நகர்த்துகின்றன. அதேநேரம் இக்கதையை முக்கியமாக ஆக்குவது ”ஏன்” எனும் கேள்வி தான். அக்கேள்வியை தூண்டும் எலியின் திகைப்பு தான். அது தான் கதையின் அவதானிப்பு முடியப்பட்டுள்ள தருணம். வாசகனுக்கு வாழ்க்கையின் நகைமுரண் கண்டு நெகிழவும் புன்னகைக்கவும் கதைக்குள் இங்கு ஒரு சந்தர்ப்பத்தை அசோகமித்திரன் தருகிறார். “நானும் இந்த எலியை போலத் தானே” என அந்த வாசகன் ஒரு நொடி யோசிக்கிறான். “அந்த மைய பாத்திரமும் அந்த எலியை போல் ஒரு இடுங்கின வாழ்க்கையில் அல்லல்படுகிறவன் தானே?” என தனக்குள் கேட்கிறான். இந்த இடத்தில் வாசகனின் மனம் விரிகிறது. அவனுக்கு வாழ்க்கை குறித்த ஒரு புதிய பார்வை, கோணம் கிடைக்கிறது. இந்த கோணம் இக்கதையை ஒரு உயர்ந்த இலக்கிய படைப்பு ஆக்குகிறது.
ஆக, ஒரு சிறுகதைக்கு இரண்டு அம்சங்கள் முக்கியம்: 1) கதைத்தன்மை. மேற்சொன்ன கேள்வி-பதில் பாணி தான் கதைத்தன்மையை உருவாக்குகிறது. விவரணை, வசனம், கவித்துவம், நாடகீயமான உணர்ச்சிமோதல், வித்தியாசமான பின்னணி என எதைக் கொண்டும் இந்த கதை பாணியை நீங்கள் வலுவாக்கி வாசகனை உள்ளிழுத்து தன்னை மறக்க வைக்கலாம். பெரும்பாலான வாசகர்கள் கதையின் இந்த முதல் நிலையிலேயே திருப்தி கண்டு விடுவார்கள்.
2) கோணம். பார்வை, கேசரி கிளறுவது பார்த்திருப்பீர்கள். கடைசியில் அந்த ஒரு சொட்டு எஸன்ஸ் சேர்க்கும் வரையில் அது இனிப்பான உப்புமா மட்டும் தான். ஆனால் அதை சேர்த்ததும் மணம் மற்றும் நிறம் பெற்று அது கேசரியாகிறது. ஒரு எளிய காதல் கதையை (தொண்ணூறுகளில் வந்த முரளியின் “இதயம்” போன்ற கதையை) மௌனி இப்படித் தான் வாழ்க்கைத் தேடல் பற்றிய ஒரு அபாரமான கதையாக்குகிறார் (”அழியாச்சுடர்”). மல்கோவா ஆண்டி கதையை பிராய்டிய பார்வை கொண்டு அபாரமான இலக்கிய நாவலாக்குகிறார் தி.ஜா (மோகமுள்).
நம்முடைய அனுபவங்கள் பெரும்பாலும் வாழ்க்கை கோணத்துடன் தான் இருக்கும். அதனால் தான் அனுபவங்களை சுலபத்தில் நல்ல கதையாக்க முடிகிறது. உங்கள் அனுபவம் நல்ல கதையாகி உள்ளதா என எனக்குத் தெரியவில்லை (நான் உங்கள் கதையை படிக்கவில்லை). ஆனால் உங்களுக்கு அது சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.
 நம்மில் பெரும்பாலானோரால் ஒரு நல்ல சிறுகதையாவது நிச்சயம் எழுத முடியும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது இரண்டு விசயங்களில். 1) உங்களுக்கு தெரிந்த கதையில் உள்ள சம்பவங்கள் ஏன் அப்படி நடக்கின்றன என உங்களுக்கு முன்கூறாக தெரியும். ஆனால் வாசகனுக்கு தெரியாது. அந்த நியாயத்தை வாசகனுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களுக்கு நேர்வதை நீங்கள் உடனடியாய் நம்புவீர்கள். அதில் உணர்ச்சிகரமாய் நீங்கள் சம்மந்தப்பட்டிருக்கிறீர்கள். உ.தா. ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டுக்கு சென்று அவள் பெற்றோரிடம் பேசி பழகுகிறான். அப்போது அவனுக்கு அப்பெண்ணின் அம்மா மீது மோகம் ஏற்படுகிறது. ஏன் என்றே அவனுக்கு புரியவில்லை. அப்பெண்ணை விட அவனுக்கு அவள் அம்மா மீது மிகுந்த காதல் ஏற்படுகிறது. இது ஒரு சவாலான கதைப்புள்ளி. சுலபத்தில் இது காமம் அல்லது வேடிக்கை என்ற புள்ளிக்கு சென்று விடும். அதை தவிர்த்து இதை சீரியஸாக எழுத முடியும். கதையை எதார்த்தமாக எழுதுவதானால் அவனது மனநிலையை, ஆளுமையை ஸ்தாபிக்கும் காட்சிகளை, தகவல்களை முன்கூறாக வாசகனுக்கு சொல்ல வேண்டும். வாசகனை தயாரிக்க வேண்டும். அப்போது வாசகன் அவனது அந்த மோகம் இயல்பானதுதான் என ஏற்பான். இதையே ஒரு மிகை-எதார்த்த (fantasy) கதையாக சுலபத்தில் எழுதலாம் (லஷ்மி சரவணகுமார் அல்லது ஜெ.பி சாணக்யா பாணியில்). கதையில் அந்த இளைஞனுக்கு ஏன் அப்படி மோகம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு உணர்ச்சிகரமாய் விளங்குவது போல் வாசகனுக்கும் விளக்கி விட வேண்டும். உங்கள் பாத்திரம் ஒரு கொலைகாரன் என்றால் அவன் கொல்லுவதன் இறுதி நொடிக்கு முன் உணரும் பதற்றமும் த்ரில்லும் உங்கள் வாசகனுக்கும் ஏற்பட வேண்டும்.
2) அடுத்து இதற்கு வேறொரு கோணத்தை அளிக்க வேண்டும். உங்கள் இயல்பான நிலைப்பாடு, வாழ்க்கைப் பார்வையை ஒட்டி இது எதேச்சையாய் கதையில் அமைய வேண்டும். உ.தா நகுலனின் கதை மற்றும் கவிதைகளில் அவர் மட்டுமே தான் இருப்பார். வெவ்வேரு ரூபங்களில் நகுலனே தோன்றி நகுலனிடம் பேசுவார். இது ஒரு தத்துவ நிலை, வாழ்க்கைப் பார்வை. நகுலன் ஒரு துப்பறியும் கதை எழுதினால் எப்படி இருக்கும் யோசியுங்கள். அவர் கதையில் கொலைகாரனும், கொல்லப்படுபவனும், அதை புலன் அறிகிறவனும் – மூவருமே - நகுலனாகவே இருக்க முடியும். இது தான் நகுலன் கதையை ”நகுலன் கதை” ஆக்குகிறது. இப்படி ஒரு கோணம் உங்களுக்கு இயல்பாகவே இருந்தால் அது உங்கள் கதையில் வரட்டும். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள். போராடி அதை ஏற்படுத்தாதீர்கள்.

இவ்வளவு தான்! 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...