Skip to main content

தீபாவை ஏன் பா.ஜ.க முன்னிறுத்துகிறது?

Image result for பன்னீர்செல்வம் + தீபா
சில நண்பர்கள் இது பா.ஜ.கவின் பார்ப்பனிய சதி என்கிறார்கள். ஆனால் எனக்கு பா.ஜ.கவின் நோக்கம் வேறு என படுகிறது. அதிமுகவில் தீபாவுக்கான இடத்தை பா.ஜ.க ஆரம்பத்திலேயே சின்னதாய் கோடிட்டு உருவாக்கி விட்டார்கள். அவரை தயாராக்கி இப்போது சரியான சந்தர்பத்தில் கொணர்ந்திருக்கிறார்கள். முக்கியமான காரணம் கடந்த சில நாட்களில் ஒ.பி.எஸ் பெற்றுள்ள பரவலான மக்கள் ஆதரவு. அவரை எதிர்க்கிறவர்கள் கிட்டத்தட்ட யாரும் இல்லை எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட ஒ.பி.எஸ் பக்கம் என்கிறார்கள் (இதை ஸ்டாலின் மறுத்தாலும் கூட). இப்போது சசிகலா ஜெயிலுக்கு போவது உறுதியாகி விட்ட பின், வரும் நாட்களில் கணிசமான எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு தாவுவார்கள் எனில் அதிமுகவின் ஒரே “சிங்கம்” ஒ.பி.எஸ் தான்.
 ஒரு பக்கம் மக்கள் ஆதரவு, மறுபக்கம் கட்சி மீதான முழு அதிகாரம். முன்பில்லாத அளவு அதிகாரமும் மக்கள் ஆதரவும் கொண்ட வேறொரு மனிதர் ஆகி விடுவார் ஒ.பி.எஸ். அவரை இது போல் ஒரு வருடம் ஆளவிட்டால் “அடிமைப்பெண்” எம்.ஜி.ஆர் நிமிர்ந்து நேராக நடக்க கற்றுக் கொண்ட கதையாகி விடும். அதை பா.ஜ.க விரும்பாது. எப்போதும் ஒ.பி.எஸ் தலைக்கு மேல் கத்தி தொங்க வேண்டும். அவர் பலவீனமானவர் எனும் உணர்வில் இருந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவரை ஆட்டி வைக்கவும் அதிமுகவை தன் கைக்குள் வைத்திருக்கவும் பா.ஜ.கவால் முடியும். அதனால் ஒ.பி.எஸ்ஸுக்கு தீபா மூலமாக ஒரு சேதியை விடுக்கிறார்கள். ”எங்களால் உன்னைப் போல் மற்றொரு பொம்மையை உருவாக்கி ஆட்சியை கையகப்படுத்த முடியும்.” ஆனால் ஒ.பி.எஸ் சமர்த்தோ சமர்த்து. உடனே தீபாவுக்கு இணக்கம் தெரிவிக்கிறார். அவர் வீட்டில் வைத்து தீபாவுக்கு ஆரத்தி எடுக்கிறார். நான் எப்போதும் உங்கள் அடிமை தான் என பா.ஜ.கவுக்கு உரக்க மறுசெய்தி விடுக்கிறார்.
வரும் நாட்களில் இது போல் பல பொறிகளை, கண்ணி வெடிகளை, ஒ.பி.எஸ் நடக்கும் வழிகளில் எங்கும் பா.ஜ.க வைத்துக் கொண்டே இருக்கும். அவரும் தனக்கு அடிபடாதது போல் நடித்துக் கொண்டே இருப்பார்.

பா.ஜ.க இதன் மூலம் அதிமுகவை செங்கல் செங்கல்லாக பெயர்த்து அடிக்க ஆரம்பித்திருக்கிறது. 1972இல் ஆரம்பித்து திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கிறது அதிமுக. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுத்து அவரை திமுகவில் இருந்து துரத்த கலைஞர் முயன்று தோற்றார். விளைவாக அதிமுக தோன்றியது. எம்.ஜி.ஆர் எனும் புயலில் அவர் பஞ்சாக பறந்து போனார். அடுத்து எம்.ஜி.ஆர் மரணத்துக்கு பிறகேனும் தனக்கு நியாயமான ஆட்சி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என அவர் நம்பி இருக்கலாம். அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு ஒரு வலுவான வாரிசு அமையக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு முடிந்த வரை இடைஞ்சல்கள் கொடுத்தார். சட்டமன்றத்தில் ஜெயா முதலில் நுழைந்த போது அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு எதேச்சையாய் நடந்தது அல்ல. ஆனால் என்ன தான் விரட்டியும் ஜெயா நின்று போராடி வென்றார். கலைஞரின் அரசியல் வாழ்வில் இரண்டாவது இருண்ட காலம் துவங்கியது. ஜெயலலிதாவை அதற்கு தேர்தலில் அவர் முறியடித்த பின் அத்தோடு நில்லாமல் ஊழல் வழக்குகளில் அவரை சிறையில் தள்ளினார். அங்கே கைதிகள் யாரும் பயன்படுத்தாத சிதிலமான சிறையில் தன்னை அடைத்து வைத்து அச்சுறுத்த பார்த்ததாக ஜெயலலிதா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். ஆரம்ப நாட்களில் தினமும் கலைஞர் ஜெயிலருக்கு போன் செய்து ஜெயலலிதா அழுகிறாரா என விசாரிப்பாராம். ஜெயலலிதாவை ஒரு பக்கம் அச்சுறுத்தியும் ஊழல் வழக்குகள் மூலம் அல்லல்படுத்தியும் அரசியலில் இருந்து துரத்த அவர் விரும்பி இருக்கலாம். முக்கியமான விசயம் ஜெயலலிதா மூலம் மீண்டும் அதிமுக எழுந்து வந்து தனக்கு துர்கனவாய் தொடரக் கூடாது என பயந்தார். அந்த வேளையில் ஜெயலலிதா மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்தாலும் கலைஞர் தன் எதிர்கால அரசியல் வாழ்க்கையின் முக்கிய தடையாக ஜெயலலிதாவையே கண்டார். ஆனால் வழக்குகள், சிறை எதுவும் ஜெயலலிதாவை பின்வாங்க செய்யவில்லை. ஜெயலலிதா எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் மக்கள் அவரை மீளமீள தேர்ந்தெடுத்தனர். கலைஞர் மீது என்றுமே இந்தளவு பரிவை மக்கள் காட்டியதில்லை. ஜெயலலிதா தனது பண பலம் மற்றும் நிர்வாகத்திறன் மூலம் அதிமுகவை உறுதியான உள்கட்டமைப்பு கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்தார். ஜெயலலிதா இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருந்தால் கலைஞரின் அரசியல் வாழ்வும் இருளாகவே முடிந்திருக்கும். எம்.ஜி.ஆரை விட, ஜெயலலிதாவை விட ஆளும் தகுதியும் அனுபவமும் மிக்கவர் கலைஞர் தான். அதிமுக எனும் கட்சி தோன்றாமல் இருந்திருந்தால் கலைஞருக்கு போட்டியாக இங்கு மற்றொரு தலைவர் வந்திருக்க முடியாது. அவரே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆண்டிருப்பார். ஆனால் இப்போது முதன்முறையாக தன் கனவு நனவாவதை - அதிமுக இல்லாத ஒரு தமிழகம் உருவாகிறதை - தன் கண்முன் காண்கிறார்.
மக்கள் ஆதரவு என்பது பருவநிலை போன்றது. மாறிக் கொண்டே இருக்கும். மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் அதிமுகவை கட்டுப்படுத்தி அதற்கு தெளிவான பாதை அமைத்துக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் சசிகலா மட்டும் தான். அதிமுக மாதிரியான கட்சி அவரை மாதிரியான ஆளிடம் மட்டுமே அடங்கும் காளை. அவர் கையில் கட்சி ஒரு வருடம் இருந்தால் இயல்பாகவே மக்கள் ஆதரவை பல்வேறு நலத்திட்டங்கள், டிராமா மூலம் உருவாக்கி இருப்பார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சசிகலா துடைத்தெறியப்பட்டு விட்டார். இதை இரண்டு விதமாக பார்க்கலாம். தமிழகத்துக்கு நிச்சயம் நல்லது. அதிமுகவுக்கு பாதகமானது. இனி அதிமுக தொடர்ந்து உட்கட்சி பூசல்கள் கொண்ட வலுவான தலைமை அற்ற கட்சியாக நீடிக்கும். அதன் மூலம் மக்கள் ஆதரவை முழுக்க இழக்கும். குறிப்பாக ஒ.பி.எஸ் எந்த விதத்தில் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவராக மலர பா.ஜ.க அனுமதிக்காது. பா.ஜ.க தீபா உள்ளிட்ட வேறு பல போட்டி முனைகளை அதிமுகவுக்குள் ஏற்படுத்தி வளர்த்து விட்டபடி இருக்கும். ஒ.பி.எஸ் ஒரு உயரத்துக்கு மேல் வளர்வதாக தெரிந்தால் இப்போது சசிகலா பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அவருக்கு எதிராக பா.ஜ.க கலகத்தை ஏற்படுத்தும். வருமான வரி ரெய்டுகள் நடத்தும். ஒ.பி.எஸ்ஸை ஒரு மரத்தை போல் சாய்க்கும். அதாவது கலைஞரால் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக செய்ய முடியாத ஒன்றை இப்போது பா.ஜ.க கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.
இப்படி திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரே நோக்கம், இலக்கு, கொள்கை – அதிமுகவை நிர்மூலமாக்குவது.
அதிமுகவின் செல்வாக்கு, உள்கட்டமைப்பு மற்றும் தொண்டர்களை பயன்படுத்தி பா.ஜ.க இங்கு குறிப்பிடும்படியான இடங்களை அடுத்த தேர்தலில் வெல்லுமா என்பது இப்போதைக்கு விடையில்லாத கேள்வி. ஆனால் இப்போதைக்கு பா.ஜ.கவினர் தாம் திமுகவின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாய் எதிர்காலத்தில் சட்டமன்றத்தில் இடம் பெறுவோம் கனவு காணலாம்.

இதன் மூலம் திமுகவுக்கு கிடைக்கும் பலன் பலமடங்கு பெரிது. அடுத்த சில பத்தாண்டுகளில் திமுகவுக்கு போட்டியே இருக்காது. 

Comments

அதிமுக-வை சிதைப்பதில் திமுக-வும் பாஜக-வும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. வளர்ந்துவரும் சூழலை அவை எப்படித் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் என்பது பொருத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.

அடுத்த சில பத்தாண்டுகளுக்கு திமுக-விற்கு போட்டியே இருக்காது என்கிறீர்கள். அரசியல், குறிப்பாக தமிழக அரசியல் இப்படிச் சின்னச் சின்னக் யூகக் கட்டங்களுக்குள் கச்சிதமாக வந்து உட்காருகிற சங்கதி அல்ல.

-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...