முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டாலினின் முதல் அதிரடி

Image result for ஸ்டாலின்
சில அரசு அலுவலகங்களில் எதைக் கேட்டுப் போனாலும் ”விண்ணப்படிவம் நிரப்பிக் கொடுங்கள். அதன் பிறகு அதோ அங்கே வரிசையில் காத்து நில்லுங்கள்” என்பார்கள். ஒன்றுக்கு போக வேண்டும் என்றாலும் விண்ணப்பட்ட படிவம் தான். சாகும் தறுவாயில் ஸ்டிரெச்சரில் தூக்கி வந்தாலும் விண்ணப்படிவம் தான். ஸ்டாலினின் அரசியல் கிட்டத்தட்ட இது போன்றது. அவர் எதையும் நிதானமாய் திட்டமிட்டு சீராய் செய்ய விரும்புகிறவர். நாடகீயமான அடாவடித்தமான (கேஜ்ரிவால் பாணி) அரசியல் அவர் இயல்பு அல்ல. ஆனால் அரசியலில் நாடகம், கண்ணீர், ஆவேசம், கோபம் ஆகியவற்றுக்கும் முக்கிய இடம். ஒரு தலைவன் சரியான வேளையில் தெருவில் இறங்கி நின்ற குரல் கொடுத்தால் மொத்த சமூகமும் செவி மடுக்கும். அப்படியான சில நல்ல சந்தர்பங்களை ஸ்டாலின் இதற்கு முன் தனது மடிப்பு கலையாத அரசியல் காரண்மாய் தவற விட்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் கண் முன்னாலேயே தவற விட்டார்: அப்போராட்டத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களுக்கு பின்னால் லட்சக்கணக்கான பொதுமக்கள், அதன் பிறகு மெ 17 இயக்கத்தினர், ஒ.பி.எஸ் என பலரும் முன்னெடுத்து சமூகத்தை உணர்ச்சி அலையில் மிதக்க வைத்தார்கள். மொத்த தமிழ் சமூகமும் தன்னை ஒற்றைப் புள்ளியில் ஓர் இனமாக உணர்ந்த அபூர்வமான தருணம் அது. ஸ்டாலின் பந்த், ரயில் மறியல் தாண்டி அது பற்றி யோசிக்கவில்லை.

 அப்போராட்டத்தை திமுக முன்னெடுத்திருந்தால் போலீஸ் நிச்சயம் கையை கட்டி வேடிக்கை பார்த்திருக்காது. ஆனால் நடந்த போராட்டங்களில் பாதி அளவிலாவது திமுகவால் ஒருங்கிணைக்க முடிந்திருந்தால் ஸ்டாலின் மக்கள் உள்ளங்கள் முழுக்க நிறைந்திருப்பார். ஆனால் அவருக்கு பதிலாக ஒ.பி.எஸ் சிறிது காலம் நல்ல பெயர் சம்பாதித்தார். குறிப்பாக, ராஜினாமாவுக்கு பிறகு அவர் சசிகலாவுக்கு எதிராக தன் ”புரட்சியை” துவங்கிய பின் பா.ஜ.கவினருமே பொறாமைப்படும் அளவுக்கு அவர் இமேஜ் வளர்ந்தது.
இதுவரை வேடிக்கை பார்த்திருந்த ஸ்டாலின் முதன்முறையாய் இப்போது அதிமுகவின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விழித்தெழுந்திருக்கிறார். இன்றைய தினம் திமுகவின் சட்டமன்ற அமளி, ஸ்டாலின் கிழிந்த சட்டையுடன் மீடியாவுக்கு பேட்டி அளித்தது, கவர்னரை சந்தித்தது, மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தது எல்லாமே மாஸ் தான். வரும் மாதங்களில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை ஒட்டி அவர் மாநிலத்தை இது போல் தொடர்ந்து ஸ்தம்பிக்க வைத்தால் கலைஞரே அவரைக் கண்டு பயந்து விடுவார்.
அதேநேரம் ஸ்டாலின் இவ்வளவு ஆவேசமாக போராடியது அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் என்பது நகைமுரண் தான். சசிகலா மீது மக்களில் ஒரு தரப்பினருக்கு உள்ள கோபம் இந்த நகைமுரணை காண விடாமல் தடுக்கிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழுமனதுடன் எடப்பட்டியாரை ஆதரிக்கவில்லை என்பதை அவர்கள் கூறவில்லை. இன்று ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களில் ஒருவரும் கூட “என்னை மிரட்டுகிறாகள்; அடைத்து வைத்திருக்கிறார்கள்” என புகார் கொடுக்கவில்லை. நாளையும் கூறுவார்கள் எனத் தோன்றவில்லை. ஒருவேளை அவர்கள் பல கோடி பணத்தை பெற்று ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் நிச்சயம் வாயே திறக்க மாட்டார்கள். அவர்களுக்கே பிரச்சனை இல்லையென்றால் ஸ்டாலினுக்கு மட்டும் என்ன? ஒ.பி.எஸ் தரப்பும் இன்று அமைதி காத்தது. திமுக மட்டும் ஏன் தன் “எதிர்க்கட்சியின்” உரிமைகளை காப்பாற்ற போராட வேண்டும்? ”நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பதினைந்து நாட்கள் அவகாசம் என்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்” என முதலில் கருத்து சொன்ன ஸ்டாலின் ”ஏன் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு அவசரமாய் நடக்க வேண்டும்? அது தான் 15 நாட்கள் அவகாசம் உள்ளதே” என இன்று முரணாக கேட்கிறார். அப்படி என்றால் ஒ.பி.எஸ்ஸும் பா.ஜ.கவும் சேர்ந்து “குதிரை பேரம்” நடத்த வேண்டும் என்கிறாரா?
எடப்பாடியார் அரசை ஆதரிக்க மாட்டோம் என்றார் சரி. அப்படி என்றால் ஒ.பி.எஸ் அரசு அமைக்க திமுக உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்களா? இதற்கு பதில் இல்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஒருவேளை எடப்பாடியார் அரசு கவிழலாம். ஆனால் அடுத்து யார் அரசு அமைக்க முடியும்? 11 பேர் ஆதரவு கொண்ட ஒ.பி.எஸ்ஸா?
ஆக திமுகவின் நோக்கங்கள் இரண்டு.
1)   அதிமுக ஒரு நிலையான அரசை அமைக்க அனுமதிக்க கூடாது. அதன் விளைவாக ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால் அதன் நற்பலன் திமுகவுக்கே.
2)   எப்படியும் எடப்பாடியார் குழுவினர் வாக்கெடுப்பில் ஜெயித்து விடுவார்கள். ஆனால் எளிதாக அவர்கள் அதை சாதித்து தப்பித்து ஓட விடக் கூடாது. அமளி செய்து போராடி சத்தம் போட்டு ”இது அறமற்ற முறையில் நடந்த வாக்கெடுப்பு” எனும் செய்தியை வலுவாக சமூகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
இரண்டாவது நோக்கத்தில் திமுக வென்று விட்டது.
திமுக இப்படி ஆட்டத்தை கலைக்க பார்க்கும் என அதிமுக முன்னரே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதனாலே திமுகவினர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து மைக்கை பிடுங்கி உடைத்து மேஜையை கவிழ்த்து, சபாநாயகர் நாற்காலியில் ஏறி அமர்ந்து அதகளம் பண்ணும் போது அதிமுகவினர் அமைதியின் திருவுருவங்களாக நடித்தனர். திமுகவின் அதகளத்தையே ஆதாரமாக காட்டி அத்துமீறலுக்காக அவர்களை வெளியேற்றி, வாக்கெடுப்பு நடத்தலாம் என்பதே அவர்களின் திட்டம். இல்லாவிட்டால் வாக்கெடுப்பில் ஒ.பி.எஸ் தரப்பு எடப்பாடியாருக்கு மிக கடுமையான போட்டி கொடுத்திருக்கும். திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க முடியாமல் போனது ஒருவிதத்தில் எடப்பாடியார் பிரம்மாண்ட வெற்றி பெற்றதாய் தோற்றத்தை கொடுக்க உதவியது. இல்லாவிட்டால் திமுகவும் அதிருப்தி அதிமுகவினரும் ஒரு வலுவான அணியாய் எடப்பாடியார் அணிக்கு எதிராக நிற்கும் ஒரு விசித்திர நிலை ஏற்பட்டிருக்கும். நாளைய பேப்பரில் பார்க்க எடப்பாடியார் மயிரிழையில் தப்பித்த சித்திரம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை.

ஆக இன்றைய ஆட்டம் டிரா:  ஸ்டாலின் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். எடப்பாடியாருக்கு கொஞ்சம் சேதம் ஏற்பட்டாலும் திமுகவின் ஆயுதத்தையே கொண்டு அவர்களை சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றி சுலபமாய் வாக்கெடுப்பை நடத்திய திருப்தி அவருக்கு இருக்கும். முக்கியமாய் அவர் முதல்வர் ஆகி விட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...