Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அரசியல் கற்பிதங்கள் 1: இடதுசாரிகளின் தோல்வி


உ.பி தேர்தலில் பா.ஜ.க பெற்ற பெருவெற்றியைப் பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில் வலதுசாரி அரசியலின் எழுச்சியை பற்றி அவர் வினவினார். வலதுசாரிகள் ஏன் சமீபமாய் உலகெங்கும் அதிகாரத்தை கைப்பெற்றுகிறார்கள்? மக்கள் முற்போக்கு அரசியலில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
நான் அவரிடம் கேட்டேன்: அடுத்த அல்லது அதற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தலில் தோற்றால் நீங்கள் வலதுசாரி அரசியல் வீழ்ச்சியுற்றதாய் கூறுவீர்களா? டிரம்ப் போன்ற ஜனாதிபதிகள் முன்பு இருந்ததில்லையா? வலதுசாரிகள் இதற்கு முன் உலகில் கோலோச்சியதில்லையா?

ஒரு தேர்தல் அல்லது ஆட்சி மாற்றத்தைக் கொண்டு மக்களின் அரசியல் விருப்பங்கள், நம்பிக்கைகளை அளப்பது முழங்கையை கொண்டு வானை அளப்பது போன்ற செயல். டிரம்ப் வலதுசாரி என்பதால் அமெரிக்கர்கள் அவருக்கு ஓட்டளிக்கவில்லை. அவரது துணிச்சலான, முரட்டுத்தனமான, தான் தோன்றித்தனமான பிம்பம் அம்மக்களுக்கு பிடித்திருந்தது; தம் சிக்கல்களை, எரிச்சல்களை அவர் பிரதிநுத்துவப்படுத்துவதாய் நம்பினர்.
 உ.பி தேர்தலைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க சீரான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி ஆகிய விசயங்களை தான் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தியது. மதவெறியை அல்ல. ஆக, இத்தேர்தல் முடிவுகளை நாம் இந்துத்துவாவுக்கான மக்களின் முத்திரையிடலாக பார்க்க முடியாது. மேலும் தேர்தல் என்பது ஒரு அறிவார்ந்த விவாத நிகழ்வு அல்ல. தேர்தலில் சரி தவறுகளை யாரும் கூட்டிக் கழித்து ஓட்டளிப்பதில்லை. அது ஒரு உணர்ச்சி வெளிப்பாடு. உணர்ச்சிநிலைக்கு நீங்கள் தர்க்க விளக்கங்கள் அளிக்க இயலாது. அதை மக்களின் மனநிலை வெளிப்பாடு என்று மட்டுமே கூற இயலும்.
இன்னொரு விசயம் இந்தியாவில் வலதுசாரிகள் என்றுமே ஒரு தனி கட்சியினராய் இருந்ததில்லை. சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியில் வலதுசாரிகளின் வலுவான தாக்கம் இருந்தது என ராமசந்திர குஹா எழுதுகிறார். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் தடை விரைவில் நீக்கப்பட்டது. காங்கிரஸ் ஒரு மென்–இந்துத்துவா கட்சியாகவே திகழ்ந்தது. திகழ்கிறது. தேசியவாதம் பேசும் சிவசேனா, திராவிட கட்சிகள் ஆகியவற்றிடம் ஒரு மென் வலதுசாரித்தனம் உண்டு. பெரியாரிடம் ஐரோப்பிய (புத்தொளிக்கால) பகுத்தறிவு தாக்கம் இருந்தது. இடதுசாரிகளின் சாயலும் இருந்தது. இந்த புள்ளியில் தான் சிவசேனாவும் திராவிட கட்சிகளும் (தேசியவாத, இனப்பெருமை பேசும் கட்சிகளாய் இருந்தும்) மாறுபடுகின்றன. திராவிட கட்சிகள் சற்றே வலதுசாரி உதட்டுச்சாயம் பூசின இடதுசாரிகளாகவே தமிழகத்தில் வளர்ந்து வந்திருக்கிறார்கள். இங்கு இடதுசாரிகளால் அதிகம் ஜொலிக்க முடியாதத்தற்கும் இது ஒரு காரணம். ஆக, இந்தியாவில் வலதுசாரிகளை முழுக்க ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவுடன் மட்டும் அடையாளப்படுத்த முடியாது. வலதுசாரிகள் என்றுமே இங்கு இருந்திருக்கிறார்கள். இன்று ஒரு வலுவான நிர்வாக கட்டமைப்பாக அவர்கள் திரண்டிருக்கிறார்கள் என்பது தான் வித்தியாசம்.
இடதுசாரிகளின் வீழ்ச்சி எனும் பார்வையிலும் எனக்கு உடன்பாடில்லை. இடதுசாரிகளின் நெருக்கடி உலகமயமாதலுடன் துவங்கி விட்டது. அச்சித்தாந்தத்திற்கு ஏற்ற சமூகவியல், பொருளாதார சூழல் இன்று உலகெங்கும் மறைந்து வருகிறது. அதனாலே இடதுசாரிகளும் அரசியல் வெளியில் தம் இடத்தை இழக்கிறார்கள். அது அவர்களின் தவறு அல்ல. மேலும் ஒரு சமூகத்தின் வளர்ச்சி நிலை, உற்பத்தி கட்டமைப்புகளுக்கும் இடதுசாரிகளுக்கும் தவிர்க்க முடியாத உறவு உண்டு. மார்க்ஸியம் ஒரு பொருளாதார கொள்கை. அது வறுமையை உறிஞ்சி வளரும் சித்தாந்தம். வெளிப்படையான சமூக ரீதியான வறுமை அதன் நிலைப்பாட்டுக்கு அவசியம். இந்தியாவை எடுத்துக் கொண்டோம் என்றால் தொழில் வளர்ச்சி என்றும் அபரிதமாய் இருந்திராத வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் செழித்தது ஒரு விதிவிலக்கு அல்ல. இந்த இரு மாநிலங்களும் மத வழிபாட்டை தீவிரமாய் முன்னெடுக்கும் மாநிலங்கள். மரபையும் நவீனத்தையும் சமமமாய் வைத்து கொண்டாடும் மாநிலங்கள். அங்கு இடதுசாரிகள் பொருளாதார சமூகவியல் தாக்கத்தை மட்டும் செலுத்தினார்கள். மார்க்ஸையும் கடவுளையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து வழிபடுவதில் அம்மக்களுக்கு சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கு கார்ப்பரேட்வாதம் தலைதூக்கிய போது இடதுசாரிகள் வெளியேற வேண்டி வந்தது.
இடதுசாரிகளின் பிரச்சனை அவர்கள் அல்ல. காலம். காலம் அவர்களை வாசலைத் தாண்டி வர அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து விட்டது. வரலாறு அவர்களை காலாவதி ஆக்கி விட்டது. அவர்கள் என்ன தான் மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு களத்தில் இறங்கி போராட முயன்றாலும் தத்துவார்த்தமாய் தம் அரசியலை தகவமைப்பது இனி எளிதல்ல. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் ஒரு மார்க்ஸியவாதிக்கு சொல்ல என்ன இருக்கிறது? காவிரி நீர் பங்கீட்டில் இடதுசாரித் தத்துவத்துக்கு விளக்க ஒன்றும் இல்லை. இன்றைய அரசியல் என்பது அடையாள அரசியல். அன்றாட தேவைகளுக்கான அரசியல். கொள்கை, சித்தாந்தங்கள் அற்ற அரசியல். எந்த சித்தாந்தமும் அற்ற, மக்களின் உணர்வுநிலைகளை மட்டும் பிரதிபலிக்கும் ஒரு தலைவன் மட்டுமே இன்று ஜெயிக்க முடியும்.
இடதுசாரிகளின் சறுக்கல் அவர்களின் தவறு அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களுக்கு இன்று ஒரு போலியான சமத்துவ உணர்வை அளிக்கின்றன. வாடிக்கையாளர் முதல் ஊழியன் வரை கார்ப்பரேட்டுகளால் தான் நியாயமாய் நடத்தப்படுவதாய் நம்புகிறான். இந்த நம்பிக்கை தான் இடதுசாரிகளுக்கு கிடைத்த மரண அடி. அதாவது பழைய நிலப்பிரபுத்துவ சூழலில் ஒரு தொழிலாளி தன் தொழிலுக்கும் தான் பணி செய்யும் நிலத்துக்கும் தனக்குமான இடைவெளியை வெளிப்படையாக உணர்ந்தான். ஆனால் இன்று அப்படி இல்லை. இன்று உங்கள் வேலையின் இறுதி பயன்மதிப்பு என்ன என உங்களுக்கு தெரியாது. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவதாய் நம்புகிறீர்கள். உங்கள் மீது நேரடியான அதிகாரம் செலுத்தப்படுவதில்லை. உங்கள் முதலாளியை நீங்கள் நேரில் பார்ப்பதில்லை. இன்று எல்லாமே பொம்மலாட்டம் போல் மறைமுகமாக நடக்கிறது. நீங்கள் கசக்கி பிழியப்படும் போதும் உங்களுக்கு நோவதில்லை. நீங்கள் மிகையாக விலை செலுத்தி ஒரு பொருளை வாங்கும் போது நீங்கள் ஏமாற்றப்படுவதாய் நீங்கள் உணர்வதில்லை. மாறாக ஒரு வாடிக்கையாளனாய் உங்களுக்கு என்று தனி உரிமைகள், அதிகாரம் உள்ளதாய் நம்புகிறீர்கள். சமகால முதலாளியம் உங்களை பூர்ஷுவா, கூலிக்காரன் என உணர வைப்பதில்லை. அது உங்களுக்கு முதலாளி என பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தி இன்னொரு பக்கம் தொழிலாளியாக்கி வேலை வாங்குகிறது. இச்சூழலில் இடதுசாரிகள் மூச்சுமுட்டி திணறுவதில் வியப்பில்லை.

 இன்றைய சூழலில் இடதுசாரிகளின் ஒரே பிடிமானம் தொழிற்சங்கங்கள் மட்டும் தான். அவையும் கைநழுவினால் அவர்கள் முழுக்க துடைத்து அகற்றப்படுவார்கள். ஆனாலும் இடதுசாரி தத்துவம் பிற கட்சிகளின் கொள்கைகள் வழி வாழும் என்றே நம்புகிறேன். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...