முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் கற்பிதங்கள் 1: இடதுசாரிகளின் தோல்வி


உ.பி தேர்தலில் பா.ஜ.க பெற்ற பெருவெற்றியைப் பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில் வலதுசாரி அரசியலின் எழுச்சியை பற்றி அவர் வினவினார். வலதுசாரிகள் ஏன் சமீபமாய் உலகெங்கும் அதிகாரத்தை கைப்பெற்றுகிறார்கள்? மக்கள் முற்போக்கு அரசியலில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
நான் அவரிடம் கேட்டேன்: அடுத்த அல்லது அதற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தேர்தலில் தோற்றால் நீங்கள் வலதுசாரி அரசியல் வீழ்ச்சியுற்றதாய் கூறுவீர்களா? டிரம்ப் போன்ற ஜனாதிபதிகள் முன்பு இருந்ததில்லையா? வலதுசாரிகள் இதற்கு முன் உலகில் கோலோச்சியதில்லையா?

ஒரு தேர்தல் அல்லது ஆட்சி மாற்றத்தைக் கொண்டு மக்களின் அரசியல் விருப்பங்கள், நம்பிக்கைகளை அளப்பது முழங்கையை கொண்டு வானை அளப்பது போன்ற செயல். டிரம்ப் வலதுசாரி என்பதால் அமெரிக்கர்கள் அவருக்கு ஓட்டளிக்கவில்லை. அவரது துணிச்சலான, முரட்டுத்தனமான, தான் தோன்றித்தனமான பிம்பம் அம்மக்களுக்கு பிடித்திருந்தது; தம் சிக்கல்களை, எரிச்சல்களை அவர் பிரதிநுத்துவப்படுத்துவதாய் நம்பினர்.
 உ.பி தேர்தலைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க சீரான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி ஆகிய விசயங்களை தான் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தியது. மதவெறியை அல்ல. ஆக, இத்தேர்தல் முடிவுகளை நாம் இந்துத்துவாவுக்கான மக்களின் முத்திரையிடலாக பார்க்க முடியாது. மேலும் தேர்தல் என்பது ஒரு அறிவார்ந்த விவாத நிகழ்வு அல்ல. தேர்தலில் சரி தவறுகளை யாரும் கூட்டிக் கழித்து ஓட்டளிப்பதில்லை. அது ஒரு உணர்ச்சி வெளிப்பாடு. உணர்ச்சிநிலைக்கு நீங்கள் தர்க்க விளக்கங்கள் அளிக்க இயலாது. அதை மக்களின் மனநிலை வெளிப்பாடு என்று மட்டுமே கூற இயலும்.
இன்னொரு விசயம் இந்தியாவில் வலதுசாரிகள் என்றுமே ஒரு தனி கட்சியினராய் இருந்ததில்லை. சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியில் வலதுசாரிகளின் வலுவான தாக்கம் இருந்தது என ராமசந்திர குஹா எழுதுகிறார். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் தடை விரைவில் நீக்கப்பட்டது. காங்கிரஸ் ஒரு மென்–இந்துத்துவா கட்சியாகவே திகழ்ந்தது. திகழ்கிறது. தேசியவாதம் பேசும் சிவசேனா, திராவிட கட்சிகள் ஆகியவற்றிடம் ஒரு மென் வலதுசாரித்தனம் உண்டு. பெரியாரிடம் ஐரோப்பிய (புத்தொளிக்கால) பகுத்தறிவு தாக்கம் இருந்தது. இடதுசாரிகளின் சாயலும் இருந்தது. இந்த புள்ளியில் தான் சிவசேனாவும் திராவிட கட்சிகளும் (தேசியவாத, இனப்பெருமை பேசும் கட்சிகளாய் இருந்தும்) மாறுபடுகின்றன. திராவிட கட்சிகள் சற்றே வலதுசாரி உதட்டுச்சாயம் பூசின இடதுசாரிகளாகவே தமிழகத்தில் வளர்ந்து வந்திருக்கிறார்கள். இங்கு இடதுசாரிகளால் அதிகம் ஜொலிக்க முடியாதத்தற்கும் இது ஒரு காரணம். ஆக, இந்தியாவில் வலதுசாரிகளை முழுக்க ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவுடன் மட்டும் அடையாளப்படுத்த முடியாது. வலதுசாரிகள் என்றுமே இங்கு இருந்திருக்கிறார்கள். இன்று ஒரு வலுவான நிர்வாக கட்டமைப்பாக அவர்கள் திரண்டிருக்கிறார்கள் என்பது தான் வித்தியாசம்.
இடதுசாரிகளின் வீழ்ச்சி எனும் பார்வையிலும் எனக்கு உடன்பாடில்லை. இடதுசாரிகளின் நெருக்கடி உலகமயமாதலுடன் துவங்கி விட்டது. அச்சித்தாந்தத்திற்கு ஏற்ற சமூகவியல், பொருளாதார சூழல் இன்று உலகெங்கும் மறைந்து வருகிறது. அதனாலே இடதுசாரிகளும் அரசியல் வெளியில் தம் இடத்தை இழக்கிறார்கள். அது அவர்களின் தவறு அல்ல. மேலும் ஒரு சமூகத்தின் வளர்ச்சி நிலை, உற்பத்தி கட்டமைப்புகளுக்கும் இடதுசாரிகளுக்கும் தவிர்க்க முடியாத உறவு உண்டு. மார்க்ஸியம் ஒரு பொருளாதார கொள்கை. அது வறுமையை உறிஞ்சி வளரும் சித்தாந்தம். வெளிப்படையான சமூக ரீதியான வறுமை அதன் நிலைப்பாட்டுக்கு அவசியம். இந்தியாவை எடுத்துக் கொண்டோம் என்றால் தொழில் வளர்ச்சி என்றும் அபரிதமாய் இருந்திராத வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் செழித்தது ஒரு விதிவிலக்கு அல்ல. இந்த இரு மாநிலங்களும் மத வழிபாட்டை தீவிரமாய் முன்னெடுக்கும் மாநிலங்கள். மரபையும் நவீனத்தையும் சமமமாய் வைத்து கொண்டாடும் மாநிலங்கள். அங்கு இடதுசாரிகள் பொருளாதார சமூகவியல் தாக்கத்தை மட்டும் செலுத்தினார்கள். மார்க்ஸையும் கடவுளையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து வழிபடுவதில் அம்மக்களுக்கு சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கு கார்ப்பரேட்வாதம் தலைதூக்கிய போது இடதுசாரிகள் வெளியேற வேண்டி வந்தது.
இடதுசாரிகளின் பிரச்சனை அவர்கள் அல்ல. காலம். காலம் அவர்களை வாசலைத் தாண்டி வர அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்து விட்டது. வரலாறு அவர்களை காலாவதி ஆக்கி விட்டது. அவர்கள் என்ன தான் மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு களத்தில் இறங்கி போராட முயன்றாலும் தத்துவார்த்தமாய் தம் அரசியலை தகவமைப்பது இனி எளிதல்ல. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் ஒரு மார்க்ஸியவாதிக்கு சொல்ல என்ன இருக்கிறது? காவிரி நீர் பங்கீட்டில் இடதுசாரித் தத்துவத்துக்கு விளக்க ஒன்றும் இல்லை. இன்றைய அரசியல் என்பது அடையாள அரசியல். அன்றாட தேவைகளுக்கான அரசியல். கொள்கை, சித்தாந்தங்கள் அற்ற அரசியல். எந்த சித்தாந்தமும் அற்ற, மக்களின் உணர்வுநிலைகளை மட்டும் பிரதிபலிக்கும் ஒரு தலைவன் மட்டுமே இன்று ஜெயிக்க முடியும்.
இடதுசாரிகளின் சறுக்கல் அவர்களின் தவறு அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களுக்கு இன்று ஒரு போலியான சமத்துவ உணர்வை அளிக்கின்றன. வாடிக்கையாளர் முதல் ஊழியன் வரை கார்ப்பரேட்டுகளால் தான் நியாயமாய் நடத்தப்படுவதாய் நம்புகிறான். இந்த நம்பிக்கை தான் இடதுசாரிகளுக்கு கிடைத்த மரண அடி. அதாவது பழைய நிலப்பிரபுத்துவ சூழலில் ஒரு தொழிலாளி தன் தொழிலுக்கும் தான் பணி செய்யும் நிலத்துக்கும் தனக்குமான இடைவெளியை வெளிப்படையாக உணர்ந்தான். ஆனால் இன்று அப்படி இல்லை. இன்று உங்கள் வேலையின் இறுதி பயன்மதிப்பு என்ன என உங்களுக்கு தெரியாது. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவதாய் நம்புகிறீர்கள். உங்கள் மீது நேரடியான அதிகாரம் செலுத்தப்படுவதில்லை. உங்கள் முதலாளியை நீங்கள் நேரில் பார்ப்பதில்லை. இன்று எல்லாமே பொம்மலாட்டம் போல் மறைமுகமாக நடக்கிறது. நீங்கள் கசக்கி பிழியப்படும் போதும் உங்களுக்கு நோவதில்லை. நீங்கள் மிகையாக விலை செலுத்தி ஒரு பொருளை வாங்கும் போது நீங்கள் ஏமாற்றப்படுவதாய் நீங்கள் உணர்வதில்லை. மாறாக ஒரு வாடிக்கையாளனாய் உங்களுக்கு என்று தனி உரிமைகள், அதிகாரம் உள்ளதாய் நம்புகிறீர்கள். சமகால முதலாளியம் உங்களை பூர்ஷுவா, கூலிக்காரன் என உணர வைப்பதில்லை. அது உங்களுக்கு முதலாளி என பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தி இன்னொரு பக்கம் தொழிலாளியாக்கி வேலை வாங்குகிறது. இச்சூழலில் இடதுசாரிகள் மூச்சுமுட்டி திணறுவதில் வியப்பில்லை.

 இன்றைய சூழலில் இடதுசாரிகளின் ஒரே பிடிமானம் தொழிற்சங்கங்கள் மட்டும் தான். அவையும் கைநழுவினால் அவர்கள் முழுக்க துடைத்து அகற்றப்படுவார்கள். ஆனாலும் இடதுசாரி தத்துவம் பிற கட்சிகளின் கொள்கைகள் வழி வாழும் என்றே நம்புகிறேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...