Skip to main content

இந்தியாவுக்கு ஆப்படிக்கும் ஆஸ்திரேலியா

Image result for indian team wickets bangalore test

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியை ஏன் இப்படி ஒவ்வொரு மூத்திர சந்தாக கொண்டு போய் குமுறுகிறார்கள், ஏன் இந்த அணி ஒரேநாளில் கைப்புள்ளையாகி விட்டது என நண்பர் முத்து பழனியப்பன் சாட்டில் கேட்டார்:
Hi Abilash
why are you not writing anything on cricket now
I am eagerly waiting for some good article in tamil on recent lapses by indian team

நேற்று தமயந்தியின் நூல் வெளியீட்டு கூட்டத்தில் அகரமுதல்வனும் இதே விசயத்தை பற்றித் தான் விசாரித்தார். இருவருக்காகவும் (என்னையே சற்று சமாதானப்படுத்துவதற்காகவும்) ஒரு சின்ன கிரிக்கெட் அலசல்.


பூனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை ஆஸ்திரேலியா மரண அடி அடித்து படுக்க வைத்தது. இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியா கூட. இரண்டு இன்னிங்ஸிலும் இந்தியா 107 மற்றும் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஓ கபீ எனும் ஊர் தெரியாத இடது கை ஸ்பின்னர் 12 விக்கெட்டுகள் எடுத்தார். இவ்வளவு படுகேவலமாய் இந்தியர்கள் இதற்கு முன் ஸ்பின் பந்தை ஆடியதில்லை. ஆனால் இதே ஆடுதளத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவை விட சிறப்பாக ஆடினர். 333 ரன்களுக்கு வென்றது. இப்போது பங்களூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா முதல் இன்னிங்ஸில் மட்டமாக ஆடி 189க்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஸ்பின்னர் லயன் எட்டு விக்கெட்டுகள் எடுத்தார். அதே ஆடுதளத்தில் அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி ஆடி வருகிறது. இந்த ஆட்டமும் மூன்றாவது நாள் முடிவுக்குள் முடிந்து விடும் எனத் தோன்றுகிறது.
 அடுத்து ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டிலும் சுழல் ஆடுதளம் அமைந்தால் அந்த ஆட்டத்திலும் இந்தியா மூன்று நாட்களுக்குள் தோற்று விடும். நான்காவது டெஸ்ட் தர்மஷாலாவில் நடக்கிறது. ஒருவேளை அந்த ஆட்டம் தட்டையான ஆடுதளத்தில் நடந்தால் இந்தியா அதை டிரா செய்யலாம். அல்லது வெல்லக் கூட செய்யலாம். ஆனால் மூன்று ஆட்டங்களாவது ஆஸ்திரேலியா வெல்லும் என்பது உறுதி. என்ன காரணம்?
1)   காலாட்டம்
கிரிக்கெட் பேட்டிங்கில் சிரமமான ஆடுதளங்களில் தாக்குப்பிடிக்க ஒரு தோதான காலாட்டமும், தெளிவான திட்டமும் அவசியம். இந்தியாவுக்கு வரும் முன்பு இலங்கையில் மோசமாய் ஆடிய ஆஸ்திரேலியா ஆசியாவில் எப்படி தாக்குப்பிடிப்பது என யோசித்து சரியான திட்டங்களை வகுத்தது. கடுமையான தயாரிப்புகளை மேற்கொண்டது. அவர்களின் பேட்டிங் கொள்கைகள் இவை

அ) LBW மற்றும் பவுல்ட் ஆகிய முறையில் அவுட் ஆவவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதற்கு எப்போதுமே ஸ்டம்புகளை பாதுகாக்கும் விதம் பேட் கொண்டு நேராக ஆட வேண்டும். எட்ஜ் வாங்கினால் பரவாயில்லை. ஏனென்றால் எட்ஜ் வாங்கி இந்தியாவில் அவுட் ஆகும் சாத்தியங்கள் பத்தில் மூன்று தான். எட்ஜ் வாங்கக் கூடாது என அஞ்சி ஆடும் போது பேட்ஸ்மேன் LBW ஆவது தான் அதிகம்.
ஆ) அடுத்து கிட்டத்தட்ட எல்லா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் இத்தொடருக்காக தம் காலாட்டத்தை முன்னங்கால் சார்ந்ததாக மாற்றிக் கொண்டனர். முன்னங்காலில் இறங்கி நின்று பந்தை முழுநீளத்தில் சந்திக்கும் போது பவுல்ட் மற்றும் LBW பாணியில் அவுட் ஆகும் வாய்ப்புகள் குறைகின்றன. மேலும் இது ஸ்பின்னர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இத்தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பந்தை square cut, late cut, pull ஆகிய வழமையான ஆஸ்திரேலிய பாணியில் ஆட வில்லை. மாறாக முன்னங்காலுக்கு வந்து long on, long off பகுதிக்கு நேராக அடிக்க முயன்றனர். பின்னங்காலுக்கு அவர்கள் செல்லாதது இந்திய ஸ்பின்னர்களின் பெரும்பாலான அஸ்திரங்களை முனை முறிய வைத்தது.

துவக்க ஆட்டக்காரர்களில் இருந்து 11வது எண்ணில் ஆடும் பவுலர்கள் வரை ஒரே திட்டத்துடன் கவனத்துடன் ஆடினர். அவர்கள் திரும்பும் பந்தை தொடரவோ மட்டையால் தொடவோ முயலவில்லை. அப்படியே எட்ஜ் வாங்கினாலும் அது எப்போதும் களத்தடுப்பாளர்களிடம் செல்லாது என நம்பினர். அவ்வாறே நடந்தது. (அப்படி எட்ஜ் வாங்கின நிலையிலும் இந்திய தடுப்பாளகள் பல கேட்சுகளை தவற விட்டது வேறு விசயம்.) பல சமயங்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆடிய பாணி சற்று அசிங்கமாக இருந்தது. ஆனால் அவர்கள் கூச்சப்படாமல் அப்படியே தொடர்ந்தனர். பந்து அபாரமாய் திரும்பி அவர்களின் மட்டையை தொட்டும் தொடாமலும் கடந்து போய்க் கொண்டே இருந்தது. நூற்றுக்கணக்கான முறைகள். இந்திய ஸ்பின்னர்கள் இந்த விசித்திரத்தை கண்டு தமக்குள் சிரித்தனர். கரிப்பான சிரிப்பு. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் சிரித்தனர். நமுட்டுச் சிரிப்பு.

ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் இவ்வளவு தூரம் வெற்றி பெறுவார்கள் என அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இரண்டு விசயங்கள் அவர்களுக்கு உதவியது. முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டுகளில் பந்து முதல் நாளிலே கடுமையாய் திரும்பியது. ஓ கபி மற்றும் நேதன் லையன் இருவருமே பந்தை அதிகம் சுழற்றாதவர்கள். அதனால் ஆடுதளங்களில் அவர்களின் பந்துகள் குறைவாக திரும்பி உடனே எட்ஜ் வாங்கியது. ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் பந்தை அதிகமாய் side spin செய்வார்கள். இப்பந்து அதிகம் திரும்பும். ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் அதிகம் over spin செய்வார்கள். இதனால் பந்து குறைவாக திரும்பும் ஆனால் அதிக பவுன்ஸ் பெறும். அதனாலே அதிகமாய் சுழலும் ஆடுதளங்கள் இந்திய ஸ்பின்னர்களை விட ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கே உதவியது.

 அதாவது எப்போதுமே turn மற்றும் swing ஆகியவை ஓரளவு தான் இருக்க வேண்டும். அதிகம் இருக்க கூடாது. வழக்கமான ஆடுதளங்களில் பந்து குறைவாக மெதுவாக திரும்பும் என்பதால் பந்தை அதிகம் செய்யும் இந்திய ஸ்பின்னர்களே ஜொலிப்பார்கள். ஆனால் இது போன்ற ஆடுதளங்களில் வெளிநாட்டு ஸ்பின்னர்கள் தான் சோபிப்பார்கள். இந்திய ஸ்பின்னர்களில் இது போன்ற ஆடுதளங்களில் ஆபத்தான ஒருவர் இருந்தார்: அனில் கும்பிளே. அவரும் பந்தை குறைவாக சுழற்றக் கூடியவர்.

அதிகம் சுழலும் ஆடுதளங்களின் பிரச்சனை
மரபான இந்திய ஆடுதளங்களில் இது வரை இந்தியாவின் வியூகம் முதல் இன்னிங்ஸில் நீண்ட நேரம் பேட் செய்து 450க்கு மேல் ரன்களை குவிப்பது. எதிரணியை உளவியல் ரீதியாய் சீர்குலைய வைப்பது. நீண்ட நேரம் பொறுமையாய் பந்து வீசி எதிரணி பேட்டிங்கின் அடித்தளத்தை பெயர்ப்பது. அதற்கு பேட்டிங் ஆடுதளங்களில் இந்தியாவுக்கு உதவின. தொடர்ந்து கோலியின் தலைமையின் கீழ் இந்தியா இந்த பாணியில் தான் வெற்றிகளாய் குவித்தது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தான் இந்தியா இது போன்று அதிகம் சுழலும் ஆடுதளத்தில் ஆடியது. ஆனால் தென்னாப்பிரிக்காவிடம் நல்ல சுழலர்களும் இல்லை. அவர்களுக்கு ஒரு தெளிவான பேட்டிங் வியூகமும் இல்லை. அதனால் இந்தியாவால் வெல்ல முடிந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து போன்ற அணிகளுக்கு இல்லாத தயாரிப்பு மற்றும் ஸ்பின் திறன் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது.

இந்தியாவின் பின்னங்கால் பிரச்சனை

இது போன்ற ஆடுதளங்களில் ஆடும் போது எந்த அளவுக்கு தொடர்ந்து பேட்ஸ்மேன் பின்னங்காலில் இருக்கிறாரோ அந்தளவுக்கு பவுலர் விக்கெட் எடுக்கும் சாத்தியம் அதிகமாகும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் பெரும்பாலான பந்துகள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முன்னங்காலில் தான் ஆடியிருக்கிறார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களோ கணிசமான பந்துகளை பின்னங்காலில் சென்று ஆடினார்கள். தொடர்ந்து குறைவான ஸ்கோர்களில் நாம் வெளியேற ஆஸ்திரேலியாவின் கடைக்கோடி பேட்ஸ்மேன் கூட சுலபமாய் நம்மை ஆடுவதன் காரணம் இது தான்.

நாம் ஏன் பின்னங்காலிலே ஆடுகிறோம்?

ஆடுதளங்கள் தாம் காரணம். கடந்த சில வருடங்களில் நாம் தொடர்ந்து மெத்தனமான ஆடுதளங்களிலே ஆடி வருகிறோம். பந்து மெதுவாக குறைவாக சுழலும் என்பதால் பின்னங்காலில் ஆடுவதே தோதானது. அப்போது பந்தின் திருப்பத்துக்கு அட்ஜஸ்ட் செய்வது எளிது. அப்படி ஆடி பழகிய பின் இப்போது அபாரமாய் திரும்பும் ஆடுதளத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அதே பாணியை பின்பற்ற சொதப்பி விடுகிறது. ஆனால் குறிப்பாய் இதே மாதிரி திரும்பும் ஆடுதளத்துக்காகவே தயாரித்து வந்து ஆஸ்திரேலியா ஜொலிக்கிறது.

லயன் எப்படி எட்டு விக்கெட்டுகள் சுருட்டினார்?

பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே வியூகம் அமைத்து அதை நடைமுறைப்படுத்துவதில் நம் ஆடுதளங்களிலே நம்மை முந்தி விட்டது ஆஸ்திரேலியாவின் சிறப்பு. இதை சற்றும் எதிர்பாராத இந்தியா பெரும்பாலான நேரங்களில் முழித்துக் கொண்டு நிற்கிறது.
இரண்டாவது டெஸ்டில் வலது கை பேட்ஸ்மேனுக்கு off stumpக்கு வெளியில் தான் rough என்பட்டும் இளகின மண் இருந்தது. அங்கே பந்து சற்றே குறைநீளத்தில் வேகமாய் வீசினால் பந்து எகிறும் என ஆஸ்திரேலிய ஸ்பின்னர் லயன் புரிந்து கொண்டார். அவர் இயல்பிலேயே off stumpக்கு வெளியில் வீச விரும்புகிறவர்கள். மேலும் over spin மூலமாய் பந்தை எகிற வைப்பவர் என்பதால் இந்த rough அவருக்கு தோதாக அமைந்தது. பேட்ஸ்மேன் இறங்கி வந்து ஆடக் கூடாது என்பதால் அவர் அடிக்கடி பந்தை சற்று வைடாக வீசிக் கொண்டிருந்தார். இப்படி பந்து எகிறுவது கண்டு பயந்து பின்னங்காலுக்கு சென்ற புஜாரா எட்ஜ் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு பயந்து பின்னங்காலுக்கு சென்று பந்தை அடிக்காமல் விட்ட கோலி LBW ஆனார். ரஹானே கூட ஆரம்பத்தில் முன்னங்காலுக்கு வந்து ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு பின்னங்காலுக்கு சென்றார். அவரது பிரச்சனையே ஸ்பின்னர்களை முன்னங்காலில் ஆட முடியாதது தான். பின்னங்காலுக்கு சென்ற பின் அவர் மிகவும் திணறினார். ஒரு கட்டத்தில் இறங்கி நான்கு ரன்கள் அடிக்க வந்தார். ஆனால் வைடான பந்தை என்பதை கவனிக்காமல் ஸ்டம்பிங்க் ஆனார். அஷ்வினுக்கும் சஹாவுக்கும் இதே போன்று பின்னங்கால் ஆட்டம் தான் எமன் ஆனது. கருண் நாயர் மற்றும் ராகுல் மட்டுமே இந்த ஆடுதளத்தில் சரியாக முன்னங்காலுக்கு வந்து தொடர்ந்து ஆடினார்கள். ராகுல் தொண்ணூறு ரன்கள் அடித்தார். கருண் ஒரு நல்ல பந்துக்கு அவுட் ஆனார். அவரது பாணியில் பிறர் தொடர்ந்திருந்தால் இந்தியா நிச்சயம் 300க்கு மேல் அடித்திருக்கும்.

நான் குறிப்பிட்ட இந்த விசயங்களை ஏற்கனவே ஊடகங்களில் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணிக்கு நின்று நிதானித்து இதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களே பூனேவில் செய்த தவறை பெங்களூரிலும் செய்கிறார்கள். மூன்றாவது டெஸ்டிலும் செய்வார்கள். இத்தொடர் முடிந்த பிறகு அலசி ஆராய்ந்து தப்பை உணர்வார்கள். ஆனால் பயன் இல்லை. இந்தியா அடுத்து டெஸ்டுகளை வெளிநாட்டில் ஆடப் போகிறது. அங்கு இந்த சுழல் பந்தாட்டம் தேவையிராது.


நாம் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளரான பாங்கர் மற்றும் முதன்மை பயிற்சியாளர் கும்பிளேவை நோக்கித் தான் இக்கேள்வியை கேட்க வேண்டும். சாமான்யர்களுக்கு புரிகிற எளிய விசயம் உங்களுக்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் சொன்னால் கேட்கிற நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் இல்லையா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...