Skip to main content

அசோகமித்திரனும் நம் குற்றவுணர்வும்

அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி உரையின் உணர்ச்சிகரமான சாராம்சம் மீது எனக்கு முழு உடன்பாடே. சொல்லப்போனால் அப்பேச்சு என்னை மிகவும் நெகிழ வைத்தது.

ஆனால் அப்பேச்சின் மைய உணர்ச்சியை, சாரமான சேதியை விடுத்து விட்டு அசோகமித்திரன் டீ வாங்கி வருவது, கார் ஓட்டுவது போன்ற பணிகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டார் என ஜெயமோகன் சொல்வதை மட்டும் எடுத்துக் கொண்டு அது உண்மையா என நாம் கொந்தளிப்பதும் சர்ச்சிப்பதும் நகைமுரணானது. நாம் ஏன் கொதிக்கிறோம்? அ.மி அவமதிக்கப்பட்டார் என்றா? ஆனால் ஜெயமோகனின் உரை முழுக்க அ.மியின் மேதைமையை, பங்களிப்பை, இலக்கிய லட்சியவாதத்தை புகழும்பட்சமாகவே இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் தலைகீழாக புரிந்து கொள்ளலாகாது. ஒருவேளை ஜெயமோகன் சொல்வது போல் அ.மி கீழான பணிகளை தன் பிழைப்புக்காக செய்யாதிருந்திருக்கலாம். இத்தகவல்கள் ஜெயமோகனின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அ.மியை பழிக்கும் வண்ணம் அவர் இதை சொல்லவில்லையே? அ.மியின் எழுத்து வாழ்வின் போராட்டங்களை, தமிழ் சமூகம் அவரை பேணாததன் அவலத்தை சுட்டிக் காட்டத் தானே இதை சொல்கிறார்?

இங்கு நாம் ஏன் கொந்தளிக்கிறோம்? அவர் மொண்ணையான சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் நம்மை கருதுவதாலா? அவரது பேச்சு நம்மை கழிவிரக்கம் கொள்ள செய்கிறதா? புதுமைப்பித்தனின், பாரதியின் வறுமையைப் பற்றி கண்ணீர் வடிக்கும் போது நமக்கு இதே குற்றவுணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் அது வேறொரு சமூகம், வரலாற்றுக் காலம். இது நம் காலம். இப்பொழுது எழுத்தாளன் நியாயமாய் கவனிக்கப்படுவதாய் நம்ப விரும்புகிறோம்.

ஆனால் அது உண்மையல்ல. அசோகமித்திரன் தன் கடைசிக் காலத்தின் தன் பிள்ளைகளின் கவனிப்பினால் மட்டுமே சௌகர்யமாய் இருந்தார். அவர்கள் வளர்ந்து நல்ல வேலையில் அமர்ந்ததால் அவர் முதுமையில் துயருறாமல் பார்த்துக் கொண்டனர். தமிழ் சமூகம் அளித்த ராயல்டி பணத்தினால் அவர் என்றும் சொகுசாய் வாழவில்லை.
இப்போது நாம் அ.மியின் வறுமையை மறக்க விரும்புகிறோம். அவரை ஒரு இலக்கிய தொன்மமாய் மாற்றி வழிபட்டு கடக்க தவிக்கிறோம். ஜெயமோகன் அ.மியின் பொருளாதார சிரமங்களை பேசும் போது நமக்கு எரிச்சலாகிறது. உடனே அவர் அ.மியை பழிப்பதாய் பிரச்சனையை திருப்பிப் போடு கும்முகிறோம். இதற்கெல்லாம் அவசியமில்லை.

ஜெயமோகன் பேச்சின் சாராம்சம் உண்மையானது. அ.மியின் வறுமையும் அவமானங்களும் இச்சமூகம் அவருக்கு அளித்தவையே. முக்கியமான விசயம் என்னவெனில் நாம் அதற்காக குற்றவுணர்ச்சி அடைந்து கோபப்பட வேண்டியதில்லை.

அ.மியை அல்லல்பட வைத்த சமூகம் நாம் அல்ல. அதற்கு நாம் பொறுப்பாக வேண்டியதில்லை. அ.மியின் வறுமைக்கு பொறுப்பு நம் வரலாறு தான். நாம் அனைவரும் வரலாற்றின் ஒரு பகுதி. நாம் அதை மாற்ற முடியாது. அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் அதனால் இல்லை.

Comments

சமூக வலைத்தளங்களில் ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையும் கிண்டல் செய்தும் குறைசொல்லியும் எழுதுவதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் குழு ஒன்று உருவாகியிருப்பது உங்களுக்குத் தெரியாதா?

- ஆனால் இந்த முறை, ஜெயமோகன் கூறிய சில கருத்துக்கள தவறு போலத்தான் தோன்றுகிறது. தேநீர் வாங்கிவருதல் போன்ற சிறு வேலைகளைச் செய்து பிழைக்கும் அளவுக்கு அசோகமித்திரன் வறுமையில் இருந்ததில்லை என்று அவரது சகோதரரின் மகள் திருமதி கீதா சாம்பசிவம் முகநூலில் எழுதியிருக்கிறார். எனக்கு கீதா அவர்களைத் தெரியும். எனவே ஜெயமோகன் அந்த ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டார் என்றுதான் கருதுகிறேன்.

இராய செல்லப்பா நியூஜெர்சி
அபிலாஸ் என்கிற எழுத்தாளரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரின் இலக்கிய மேதைமையை தமிழ் சமூகம் கொண்டாடவில்லை என்கிற ஆதங்கத்தினால் அவரின் மரணத்தின் போது தன்னுடைய நொண்டிக் கால்களினால் - இப்படி எழுதுவதற்கு தயவு செய்து மன்னிக்க வேண்டும் - பிச்சை எடுத்து சாப்பிடும்படி அவரை இந்தச் சமூகம் நிர்ப்பந்தித்தது என்று நான் உளறிக் கொட்டினால் அதை நீங்கள் ரசிப்பீர்களா அபிலாஸ். ஜெயமோகனின் அஞ்சலி முழுவதும் அத்தகைய உளறல்கள் தான். சம்பந்தமே இல்லாமல் திராவிடக் கட்சியினரை இழிமகன்கள் என்று ஏன் குறிப்பிடுகிறார்? இலக்கியம் என்பது இப்போதும் பிராமிணர்களின் ஆளுமைகளிடம் தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அசோகமித்திரன் பிராமிணர் என்பதற்காக வஞ்சிக்கப்பட்டதாக சீன் போடுகிறார்! இங்கு ஏதோ பிறஜாதி எழுத்தாளர்கள் எல்லாம் சுகமாக வாழவைக்கப் பட்டிருந்ததைப் போல. பிரபஞ்சன் போன்றவர்கள் எல்லாம் சொகுசாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் எழுத வாய்ப்புக் கிடைத்த ஜெயமோகன் போன்றவர்கள் வேண்டுமானால் கொஞ்சம் சுகமாக வாழ நேர்ந்திருக்கலாம். எழுத்தை தன் ஜீவனத்திற்கான உபாயமாகக் கைக் கொள்வது என்பது அதுவும் வெகுஜன ரசனையின் பாற்படாத இலக்கியத்தை வைத்து சம்பாதித்து சாப்பிட்டு விடமுடியும் என்று நம்பி இறங்குவது தற்கொலைக்குச் சமமான முடிவு. அதைப் பாவித்து வாழ்ந்தவர்கள் எல்லோருமே கஷ்ட ஜீவனந்தான் வாழ்ந்து இறந்து போனார்கள். இன்னும் அப்படித் தான் நேரும்? அதை விடுத்து அசோகமித்திரன் பற்றி இவர் ஏன் புதிய புனைவுகள உருவாக்கி உலவ விட வேண்டும்? வாய்க்கு வந்ததையெல்லாம் கண்ணால் பார்த்ததைப் போல அடித்து விட வேண்டியது. அப்படியெல்லாம் இல்லை என்று சம்பந்தபட்டவர்களே மறுக்கும் போது அதையெல்லாம் தன்னுடைய தளத்திலிருந்தே நீக்கிவிட வேண்டியது. இதெல்லாம் என்ன மாதிரியான அறமென்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் ஜெயமோகன் புனைகதைகளை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை அவர் மிகவும் சிறப்பாக செய்கிறார். ஆனால் அஞ்சலி உரையிலெல்லாம் புனைவுகளைப் புகுத்துவது அந்த எழுத்தாளனுக்கே அது நல்லதல்ல.
ஒருவேளை வேண்டுமென்றே தான் எல்லோராலும் தான் திட்டப்பட வேண்டு மென்று தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரோ ஜெ.மோ. என்று தோன்றுகிறது. இந்த சமூகத்தில் தன்னுடைய ஆகிருதியை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தான் ஒரு எழுத்தாளன் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? பாவம் தான் ஜெ.மோ போன்ற சுயமோகிகள் இல்லையா நண்பரே!
நீங்கள் சொல்வதுபோல், வரலாற்றை நாம் மாற்றமுடியாது. அசோகமித்திரன் மட்டுமல்ல, ஜெயகாந்தனும் கூட, வெறும் எழுதிச் சம்பாதித்து சுகவாசியாய் ஆனவர்கள் இல்லை. இதைத்தான் வேறு வேறு வார்த்தைகளில் ஜெயமோகன் சொல்லியிருக்கவேண்டும். ஜெயமோகனுக்கு எதிராக எழுதுவதன் மூலம் cheap popularity தேடும் ஒரு முகநூல் கும்பல் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கெல்லாம் நீங்கள் மறுப்பு எழுதி உங்கள் சிந்தனையை வீணாக்க வேண்டாம் இளம் நண்பரே! சுய படைப்புகளை நீங்கள் மேலும் மேலும் தரவேண்டும். இளமை என்பது இறைவனின் கொடை. எழுத்து என்பது முன்னோர்களின் கொடை. இரண்டும்பெற்றுள்ள நீங்கள் நிறைய புதுப் படைப்புகளில் கவனம் செலுத்துங்கள். அதே சமயம், எழுத்தினால் மட்டும் உயிர் வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுத்துவிடாதீர்கள். அசோகமித்திரனின் ஆன்மா உங்களைச் சும்மா விடாது!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...