Skip to main content

அசோகமித்திரனும் நம் குற்றவுணர்வும்

அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி உரையின் உணர்ச்சிகரமான சாராம்சம் மீது எனக்கு முழு உடன்பாடே. சொல்லப்போனால் அப்பேச்சு என்னை மிகவும் நெகிழ வைத்தது.

ஆனால் அப்பேச்சின் மைய உணர்ச்சியை, சாரமான சேதியை விடுத்து விட்டு அசோகமித்திரன் டீ வாங்கி வருவது, கார் ஓட்டுவது போன்ற பணிகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டார் என ஜெயமோகன் சொல்வதை மட்டும் எடுத்துக் கொண்டு அது உண்மையா என நாம் கொந்தளிப்பதும் சர்ச்சிப்பதும் நகைமுரணானது. நாம் ஏன் கொதிக்கிறோம்? அ.மி அவமதிக்கப்பட்டார் என்றா? ஆனால் ஜெயமோகனின் உரை முழுக்க அ.மியின் மேதைமையை, பங்களிப்பை, இலக்கிய லட்சியவாதத்தை புகழும்பட்சமாகவே இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் தலைகீழாக புரிந்து கொள்ளலாகாது. ஒருவேளை ஜெயமோகன் சொல்வது போல் அ.மி கீழான பணிகளை தன் பிழைப்புக்காக செய்யாதிருந்திருக்கலாம். இத்தகவல்கள் ஜெயமோகனின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அ.மியை பழிக்கும் வண்ணம் அவர் இதை சொல்லவில்லையே? அ.மியின் எழுத்து வாழ்வின் போராட்டங்களை, தமிழ் சமூகம் அவரை பேணாததன் அவலத்தை சுட்டிக் காட்டத் தானே இதை சொல்கிறார்?

இங்கு நாம் ஏன் கொந்தளிக்கிறோம்? அவர் மொண்ணையான சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் நம்மை கருதுவதாலா? அவரது பேச்சு நம்மை கழிவிரக்கம் கொள்ள செய்கிறதா? புதுமைப்பித்தனின், பாரதியின் வறுமையைப் பற்றி கண்ணீர் வடிக்கும் போது நமக்கு இதே குற்றவுணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் அது வேறொரு சமூகம், வரலாற்றுக் காலம். இது நம் காலம். இப்பொழுது எழுத்தாளன் நியாயமாய் கவனிக்கப்படுவதாய் நம்ப விரும்புகிறோம்.

ஆனால் அது உண்மையல்ல. அசோகமித்திரன் தன் கடைசிக் காலத்தின் தன் பிள்ளைகளின் கவனிப்பினால் மட்டுமே சௌகர்யமாய் இருந்தார். அவர்கள் வளர்ந்து நல்ல வேலையில் அமர்ந்ததால் அவர் முதுமையில் துயருறாமல் பார்த்துக் கொண்டனர். தமிழ் சமூகம் அளித்த ராயல்டி பணத்தினால் அவர் என்றும் சொகுசாய் வாழவில்லை.
இப்போது நாம் அ.மியின் வறுமையை மறக்க விரும்புகிறோம். அவரை ஒரு இலக்கிய தொன்மமாய் மாற்றி வழிபட்டு கடக்க தவிக்கிறோம். ஜெயமோகன் அ.மியின் பொருளாதார சிரமங்களை பேசும் போது நமக்கு எரிச்சலாகிறது. உடனே அவர் அ.மியை பழிப்பதாய் பிரச்சனையை திருப்பிப் போடு கும்முகிறோம். இதற்கெல்லாம் அவசியமில்லை.

ஜெயமோகன் பேச்சின் சாராம்சம் உண்மையானது. அ.மியின் வறுமையும் அவமானங்களும் இச்சமூகம் அவருக்கு அளித்தவையே. முக்கியமான விசயம் என்னவெனில் நாம் அதற்காக குற்றவுணர்ச்சி அடைந்து கோபப்பட வேண்டியதில்லை.

அ.மியை அல்லல்பட வைத்த சமூகம் நாம் அல்ல. அதற்கு நாம் பொறுப்பாக வேண்டியதில்லை. அ.மியின் வறுமைக்கு பொறுப்பு நம் வரலாறு தான். நாம் அனைவரும் வரலாற்றின் ஒரு பகுதி. நாம் அதை மாற்ற முடியாது. அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் அதனால் இல்லை.

Comments

சமூக வலைத்தளங்களில் ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையும் கிண்டல் செய்தும் குறைசொல்லியும் எழுதுவதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் குழு ஒன்று உருவாகியிருப்பது உங்களுக்குத் தெரியாதா?

- ஆனால் இந்த முறை, ஜெயமோகன் கூறிய சில கருத்துக்கள தவறு போலத்தான் தோன்றுகிறது. தேநீர் வாங்கிவருதல் போன்ற சிறு வேலைகளைச் செய்து பிழைக்கும் அளவுக்கு அசோகமித்திரன் வறுமையில் இருந்ததில்லை என்று அவரது சகோதரரின் மகள் திருமதி கீதா சாம்பசிவம் முகநூலில் எழுதியிருக்கிறார். எனக்கு கீதா அவர்களைத் தெரியும். எனவே ஜெயமோகன் அந்த ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டார் என்றுதான் கருதுகிறேன்.

இராய செல்லப்பா நியூஜெர்சி
அபிலாஸ் என்கிற எழுத்தாளரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரின் இலக்கிய மேதைமையை தமிழ் சமூகம் கொண்டாடவில்லை என்கிற ஆதங்கத்தினால் அவரின் மரணத்தின் போது தன்னுடைய நொண்டிக் கால்களினால் - இப்படி எழுதுவதற்கு தயவு செய்து மன்னிக்க வேண்டும் - பிச்சை எடுத்து சாப்பிடும்படி அவரை இந்தச் சமூகம் நிர்ப்பந்தித்தது என்று நான் உளறிக் கொட்டினால் அதை நீங்கள் ரசிப்பீர்களா அபிலாஸ். ஜெயமோகனின் அஞ்சலி முழுவதும் அத்தகைய உளறல்கள் தான். சம்பந்தமே இல்லாமல் திராவிடக் கட்சியினரை இழிமகன்கள் என்று ஏன் குறிப்பிடுகிறார்? இலக்கியம் என்பது இப்போதும் பிராமிணர்களின் ஆளுமைகளிடம் தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அசோகமித்திரன் பிராமிணர் என்பதற்காக வஞ்சிக்கப்பட்டதாக சீன் போடுகிறார்! இங்கு ஏதோ பிறஜாதி எழுத்தாளர்கள் எல்லாம் சுகமாக வாழவைக்கப் பட்டிருந்ததைப் போல. பிரபஞ்சன் போன்றவர்கள் எல்லாம் சொகுசாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் எழுத வாய்ப்புக் கிடைத்த ஜெயமோகன் போன்றவர்கள் வேண்டுமானால் கொஞ்சம் சுகமாக வாழ நேர்ந்திருக்கலாம். எழுத்தை தன் ஜீவனத்திற்கான உபாயமாகக் கைக் கொள்வது என்பது அதுவும் வெகுஜன ரசனையின் பாற்படாத இலக்கியத்தை வைத்து சம்பாதித்து சாப்பிட்டு விடமுடியும் என்று நம்பி இறங்குவது தற்கொலைக்குச் சமமான முடிவு. அதைப் பாவித்து வாழ்ந்தவர்கள் எல்லோருமே கஷ்ட ஜீவனந்தான் வாழ்ந்து இறந்து போனார்கள். இன்னும் அப்படித் தான் நேரும்? அதை விடுத்து அசோகமித்திரன் பற்றி இவர் ஏன் புதிய புனைவுகள உருவாக்கி உலவ விட வேண்டும்? வாய்க்கு வந்ததையெல்லாம் கண்ணால் பார்த்ததைப் போல அடித்து விட வேண்டியது. அப்படியெல்லாம் இல்லை என்று சம்பந்தபட்டவர்களே மறுக்கும் போது அதையெல்லாம் தன்னுடைய தளத்திலிருந்தே நீக்கிவிட வேண்டியது. இதெல்லாம் என்ன மாதிரியான அறமென்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் ஜெயமோகன் புனைகதைகளை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை அவர் மிகவும் சிறப்பாக செய்கிறார். ஆனால் அஞ்சலி உரையிலெல்லாம் புனைவுகளைப் புகுத்துவது அந்த எழுத்தாளனுக்கே அது நல்லதல்ல.
ஒருவேளை வேண்டுமென்றே தான் எல்லோராலும் தான் திட்டப்பட வேண்டு மென்று தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரோ ஜெ.மோ. என்று தோன்றுகிறது. இந்த சமூகத்தில் தன்னுடைய ஆகிருதியை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தான் ஒரு எழுத்தாளன் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? பாவம் தான் ஜெ.மோ போன்ற சுயமோகிகள் இல்லையா நண்பரே!
நீங்கள் சொல்வதுபோல், வரலாற்றை நாம் மாற்றமுடியாது. அசோகமித்திரன் மட்டுமல்ல, ஜெயகாந்தனும் கூட, வெறும் எழுதிச் சம்பாதித்து சுகவாசியாய் ஆனவர்கள் இல்லை. இதைத்தான் வேறு வேறு வார்த்தைகளில் ஜெயமோகன் சொல்லியிருக்கவேண்டும். ஜெயமோகனுக்கு எதிராக எழுதுவதன் மூலம் cheap popularity தேடும் ஒரு முகநூல் கும்பல் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கெல்லாம் நீங்கள் மறுப்பு எழுதி உங்கள் சிந்தனையை வீணாக்க வேண்டாம் இளம் நண்பரே! சுய படைப்புகளை நீங்கள் மேலும் மேலும் தரவேண்டும். இளமை என்பது இறைவனின் கொடை. எழுத்து என்பது முன்னோர்களின் கொடை. இரண்டும்பெற்றுள்ள நீங்கள் நிறைய புதுப் படைப்புகளில் கவனம் செலுத்துங்கள். அதே சமயம், எழுத்தினால் மட்டும் உயிர் வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுத்துவிடாதீர்கள். அசோகமித்திரனின் ஆன்மா உங்களைச் சும்மா விடாது!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...