Skip to main content

அநாவசியமாக…


மாதப்பத்திரிகை பத்திகளில் நான் விரும்பிப் படிக்கும் ஒன்று நஞ்சுண்டன் உயிர் எழுத்தில் எழுதும் ”செம்மைக் குறிப்பு”. வழக்கமான நம் பத்திகள் சமூக நிகழ்வு எதிர்வினை குறிப்புகள் அல்லது சுயவரலாற்று பதிவுகளாக இருக்கும். (சமூக நிகழ்வு எதிர்வினை பத்திகள் தாம் மிக மிக எளிது; ஒரு வார பேஸ்புக் செய்தியோடையை பத்து நிமிடம் பார்த்தால் உடனே எழுதி விடலாம்.) நஞ்சுண்டன் எழுதுவது நிபுணர் பத்தி எனலாம். நஞ்சுண்டன் காலச்சுவடுக்காய் பிழைதிருத்தம், செம்மைப்படுத்தல் பணிகளை செய்து வருகிறார். அத்துறையில் அவர் மிகத்திறமையானவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பத்தியில் தனது செம்மைப்படுத்தல் அனுபவங்களைக் கொண்டு நடைமுறை இலக்கணம் பற்றி எழுதுகிறார். எப்படி எளிதாக துல்லியமாய் தெளிவாய் புரியும்படி எழுதுவது என விளக்குகிறார்.

 நான் தொழில்முறையில் ஒரு (ஆங்கில) எடிட்டர் என்பதால் எனக்கு இப்பத்தி மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கிறது. அலுவலகத்தில் நண்பர்களுடனும் பயிற்சி வகுப்பிலும் நாங்கள் விவாதிக்கும் விஷயங்களை ஒருவர் தமிழிலும் விவாதிப்பது படிக்க உவகை அளிக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு ஜெயமோகன் என்னிடம் “தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கணமே தெரியவில்லை” என குறைபட்டுக் கொண்டது நினைவிருக்கிறது. குறிப்பாக, subject-verb agreement தவறுகளை தமிழ் எழுத்தாளர்கள் கன்னாபின்னாவென செய்வதாய் அவர் குறிப்பிட்டார். அந்த பட்டியலில் நான் முதலில் வருவேன் என நினைக்கிறேன். எனக்கு தமிழ் இலக்கணத்தின் அரிச்சுவடி கூட தெரியாது. ஆங்கில இலக்கணம் மட்டுமே தெரியும். ஆக, நான் எழுதும் போது என் ஆங்கில இலக்கண அறிவை மட்டுமே பயன்படுத்துகிறேன். என் பிரதியை நான் திருத்தும் போது எனக்கு முதலில் கண்ணில் படும் தவறு (எழுத்துப்பிழைகள் தவிர) தவறான சொல் அடுக்கு. இதை ஆங்கிலத்தில் misplaced modifier என்பார்கள். இம்மாத பத்தியில் நஞ்சுண்டன் இவ்வாறு நாம் சொற்களை ஒரு வாக்கியத்தில் தவறான இடத்தில் பயன்படுத்துவதன் பிரச்சனைகளைப் பற்றி சொல்கிறார்.

பிரபஞ்சன் எழுதிய கதையொன்றின் முதல் பத்தி இது. இதன் கடைசி வரியை கவனியுங்கள்:
“அவன் எப்போதும் அந்த இடத்தில்தான் நிற்கச் சொல்வான். பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் பத்திரிகை, சிகரெட் மற்றும் தின்பண்டங்கள் விற்கும் கடைக்கு பக்கத்தில். வெயில்படாமல் நிற்க, சார்ப்பு இருக்கும். தவிரவும், ஒரு வகையான மறைப்பு வேறு இருக்கும். அனாவசியமாக பயணம் போகும் தெரிந்தவர் கண்களில் விழ வேண்டும்.”
கடைசி வரியில் “அனாவசியமாக” எனும் சொல் “விழ வேண்டும்” என்பதற்கானது. ஆனால் அதை வாக்கியத்தின் முதலில் வைத்ததால் அது “பயணம் போவதை” குறிப்பது போல் ஆகி விடுகிறது. அதாவது ”தேவையில்லாமல் பயணம் செய்கிறவர்கள் கண்ணில் விழ வேண்டாம்” என பொருள் ஆகிறது. இது தான் misplaced modifier / dangling modifier. எழுதும் வேகத்தில் இது போல் தவறுகள் அதிகம் நடக்கும். குறிப்பாய், பேச்சு மொழியில் நாம் அழுத்தத்துக்காக சொற்களை முன்பின்னாய் பயன்படுத்துவோம். ஆனால் எழுத்து மொழியில் அந்த பாணியை கொண்டு வரும் போது தவறாகி விடுகிறது. இவ்வாக்கியத்தில் ”பயணம் போகும் தெரிந்தவர் கண்களில் அனாவசியமாக விழ வேண்டும்” என இருக்க வேண்டும். நான், தொழில்முறையாய், இது போன்ற நிறைய பிழைகளை ஆங்கில நூல்களில் திருத்தியிருக்கிறேன். வேலையிடத்தில் வெங்கட்ராமன் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தான் என்னிடம் வந்து இந்த விதிமுறை பற்றி அடிக்கடி பேசுவார். ஆரம்பத்தில் நான் இந்த பிழைகளை கண்டுகொள்ள மாட்டேன். அவரிடம் பேசி பேசி எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டு நானும் இப்பிழைகளை அதிகம் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். பிறகு தமிழில் நான் எழுதும் வாக்கியங்களிலும் திருத்த ஆரம்பித்தேன். சொற்களை சரியான இடத்தில் வைக்கும் போது எப்படி வாக்கியம் துல்லியமாய், ஒரு ஜன்னலை திறந்து விட்டது போல வெளிச்சம் மிக்கதாக ஆகிறது என்பது பார்க்க வியப்பாக இருக்கும்.
”சு.ரா” என்பது ஒரு சுந்தர ராமசாமி என்பதன் சுருக்க வடிவம் (abbreviation). இதில் முற்றுப்புள்ளி வைக்கலாமா என்பதில் எனக்கு குழப்பம் உண்டு. ஆங்கிலத்தில் முற்றுப்புள்ளியை இவ்விசயத்தில் ஒழித்து விட்டார்கள். நான் எடிட் செய்யும் நூல்களிலும் வைப்பதில்லை. ஆனால் தமிழில் நாம் கலவையாய் பயன்படுத்துகிறோம். எனக்கு “சுரா” என எழுதுவதில் ஒரு தயக்கம் உள்ளது. அது ஒரு தனிப்பெயர் போல் ஆகி விடாதா என பயம் உண்டு. அதை முதலில் படிக்கும் ஒருவர் சுரா என்பது ஒரு எழுத்தாளனின் முழுப்பெயர் தான் என நினைத்துக் கொண்டால்? “அமி” (அசோகமித்திரன்) என படிக்க ஏதோ ஒரு வட இந்திய பெயர் போல் இருக்கிறது. ஆனால் “திமுக” என்பதை (பலரும் அறிந்த பெயர் என்பதால்) நான் முற்றுப்புள்ளிகள் இன்றி பயன்படுத்துவேன். நஞ்சுண்டன் புள்ளிகளை முழுக்க தவிர்க்கவே பரிந்துரைக்கிறார்.
இப்பத்தியில் நஞ்சுண்டன் ஒரே பத்தியில் காலங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதை (tense inconsistency) பற்றியும் எழுதுகிறார். (இன்றைய அலுவலக பயிற்சி வகுப்பில் நான் இதே தலைப்பில் வகுப்பெடுக்க போகிறேன்.) சு.ராவின் மனைவி எழுதிய நூல் ஒன்றில் இருந்து உதாரணங்களை தந்து நுணுக்கமாய் விளக்குகிறார். அதை நீங்களே இதழில் படித்துப் பாருங்கள்.
கடைசியாக தினமணியில் வந்த ஒரு கவனப்பிழையை சுட்டிக்காட்டுகிறார். “அமைதிக்கு அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு: மாதா அமிர்தானந்த மயி”. அமைதி என்பது ஒரு பிரச்சனை அல்ல. பிரச்சனைக்கு மட்டுமே தீர்வு. ”அமைதிக்கு அன்பு ஒன்றே வழி” என இருக்க வேண்டும்.
நான் அடிப்படையில் ஒரு ஆசிரியன். எனக்கு பிழைகளை கண்டால் கோபம் வராது. ஆர்வம் மட்டுமே ஏற்படும். அதனால் மொழிப்பிழைகளை கேலி செய்வதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன். தலைமயிர் கலைவது போல மொழியும் கலையும். அப்போது இலக்கணப் பிழைகள் தோன்றும். அவற்றைக் களைவது ஒரு ஆர்வமூட்டும் பணி. ஆங்கிலத்தில் மிகப்பெரிய அறிஞர்களின் நூல்களில் நூற்றுக்கணக்கான பிழைகளை கண்டு திருத்தி இருக்கிறேன். நான் ஒரு 200 பக்க நூலை எடிட் செய்தால் குறைந்தது 250இல் இருந்து 500 மொழிப் பிழைகளையாவது கண்டுபிடித்து விடுவேன். ஒரு பக்கத்துக்கு குறைந்தது இரண்டு பிழை என்பது தான் என் கணக்கு. ஒப்பிடுகையில் நம்மைப் போன்றவர்களின் பிழைகள் பொருட்டே அல்ல. இதில் லஜ்ஜைப்பட ஒன்றுமில்லை.

நான் முதலில் தந்த பிரபஞ்சனின் மேற்கோளில் மூன்றாவது வரியில் மற்றொரு பிழை இருக்கிறது. நஞ்சுண்டன் ஏனோ அதை குறிப்பிட தவறி விட்டார். அதாவது subjectக்கும் வினைச்சொல்லுக்கும் நடுவே காற்புள்ளி வரக் கூடாது என்பது விதி. ஆகையால் “வெயில்படாமல் நிற்க, சார்ப்பு இருக்கும்.” எனும் வரியில் “நிற்க” என்பதற்கு அடுத்து வரும் காற்புள்ளியை நீக்கிட வேண்டும்.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...