Skip to main content

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும்: யார் சிறந்த கலைஞன்?

Image result for tolstoy dostoevsky

அன்புள்ள அண்ணன்,

உங்களுடைய டால்ஸ்டாய் தாஸ்தாவஸ்கி கட்டுரையை முழுவதும் வாசித்தேன். இந்த கட்டுரைக்காக எத்தனைக் கடைகளில் தீராநதியை தேடி தேடி அலைந்தேன் தெரியுமா. ஏன் என்று தெரியவில்லை இத்தனைக் காலமும் இந்தக் கட்டுரையை நான் பார்க்காதவாறு ஏதோ ஒன்று என்னை தடுத்துக் கொண்டிருந்தது. நேற்று ஒரு ரம்மியமான ஒரு உணவர்வு தாஸ்தாவஸ்கியின் படைப்புகள் மீது ஏற்பட்டது. அது குறிப்பாக தாஸ்தாவஸ்கி என்னும் ஆளுமையின் மீதே ஏற்பட்டது என சொல்லலாம். அந்த ரம்யமான உணர்வு இதுதான்: தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். இதுவும் என்னை அதிகம் பாதித்தது. மேற்கத்திய இலக்கியத்தில் நாம் ஜாய்ஸ் ஐயும் ஹெம்மிங்க்வேயையும் கலைஞர்கள் என்று நாம் முன் யோசனை எதுவுமின்றி சொல்லிவிடுவோம். நேற்றைய முன்நாள் வரை இந்த குறிப்பிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டதே கிடையாது. தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். அவன் ஒரு கலைஞன்
என்னுடைய டாபில் பக்தினின் போயட்டிக்ஸ் ஆஃப் தாஸ்தாவஸ்கியின் முன்னுரையை வாசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய அந்த மெல்லிய உணர்வே முன்னுரையாக இருக்கக் கண்டேன். பக்தின் சொல்லுகிறார், தாஸ்தாவஸ்கி ஒரு தத்துவாதி கிடையாது. அவன் ஒரு கலைஞன். தத்துவ தரிசனங்கள் இருக்கலாம் எனினும் அவன் ஒரு கலைஞன். இதையே டால்ஸ்டாய் கலைஞனா என்று கேட்டால் நிச்சயமாக நான் இல்லையென்றுதான் சொல்லுவேன். என் ஆய்வுக்காக ஆன் லைனில் அன்னா கரினினாவைப் பற்றிய் கட்டுரைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மேத்திவ் அர்னாட்ல்டு அன்னா கரினினா நாவலைப் பற்றி எழுதின ஒரு விமர்சனக் கட்டுரையை வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்னா கரினினா ஒரு கலைபடைப்பு என்று நாம் சொல்லமுடியாது என்கிறார், அனால் அது செறிவான வாழ்க்கையை தனக்குள் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். டால்ஸ்டாயை ஒரு உன்னதமான படைப்பாளி என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அந்தஸ்தை என்னால் தாஸ்தாவஸ்கிக்கு கண்டிப்பாக கொடுக்கவே முடியாது. இருப்பினும் தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன் அந்த கலைத்திறனை டால்ஸ்டாயால் அடையவே முடியாது
மீண்டும் மீண்டும் இந்த ஒரு எதிரொலிப்பு எனக்குள் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக் கொண்டே இருக்கிறது.தாஸ்தாவஸ்கி ஒரு கலைஞன் அவனிடம் செல். இது கட்டளையா அல்லது உந்துதலா என்பது இன்னும் எனக்கு விளக்கவில்லை. எனினும் உங்களுடையக் கட்டுரை அதை ஒரு கட்டளை என்றே ஊர்ஜிதப்படுத்திவிட்டது
நன்றி
அன்புடன்
அருள் ஸ்காட் 

அன்புள்ள அருள்
நன்றி!
தல்ஸ்தாய் ஒரு கலைஞனா என்பது சுவாரஸ்யமான கேள்வி. கரைபுரண்ட வெள்ளம் போன்ற எழுத்து இருக்க வேண்டும் எனும் பின்நவீனத்துவ வரைமுறைப் படி ஒருவேளை தஸ்தாவஸ்கி தல்ஸ்தாயை விட மேலான கலைஞன் எனத் தோன்றலாம். ஏனெனில் தல்ஸ்தாயின் நாவல்கள் முழுக்க தல்ஸ்தாயின் பார்வை வெயில் போல் படர்ந்து கிடக்கிறது. அவரது அகத்தின் ஒளிக்கீற்றுகள் மூடிய கதவுகள், ஜன்னல்கள், பாதாள அறைகளையும் துளைத்து இருளில் ஒளிப்புள்ளிகளாய் மிதக்கிறது. எங்கும் நிறைந்து நிற்கும் ஒரு கனிவான பார்வை, பிரக்ஞை அவரது குறையா என்று கேட்டால் இல்லை என்று நான் சொல்வேன். பியர் போன்ற ஒரு பாத்திரம் துயரத்தில் மூழ்கும் போதும், தன் மீட்சிக்காய் போராடும் போதும் தல்ஸ்தாய் தன்னை மறந்து எழுதுவதை நாம் உணர முடியும். ஆனால் உடனே அடுத்தடுத்த அத்தியாயங்களில் தத்தளிக்கும் படகை மாலுமி நிலைப்படுத்த முயல்வது போல் தல்ஸ்தாய் மீள வந்து விடுகிறார். “அன்னா கரினீனாவில்அன்னா தன் குற்றவுணர்வால் தன்னையே மெல்ல மெல்ல தண்டித்து தற்கொலைக்கு இட்டுச் செல்லும் இடங்களில் அதே போல் அபாரமான தன்னுணர்வற்ற நிலையில் தல்ஸ்தாயால் எழுதப்பட்டவை. நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ எழுத்து பாணிகள் இரண்டிலும் பிரக்ஞையை கடந்து ஒரு கலைஞன் செயல்பட நிச்சயம் முடியும். (பின்நவீனத்து எழுத்தில் சிலநேரம் “கட்டற்ற எழுத்துஒரு பாவனையாக கட்டமைக்கப்படுகிறது. அதைக் கண்டு நாம் ஏமாறவும் கூடாது.)

நான் தல்ஸ்தாயை ஒரு கலைஞனாக புரிந்து கொள்ளவில்லை. அது ஒரு ”சின்ன வார்த்தை”. தல்ஸ்தாய் அதையும் கடந்தவர்.
 எங்கள் பல்கலையின் ஊடகத்துறை மாணவர்கள் என்னை பேட்டி எடுத்தார்கள். “உங்களுக்கு பிடித்த நாவலாசிரியர் யார்?” எனக் கேட்ட போது நான் தல்ஸ்தாயின் பெயரையே சொன்னேன். “தல்ஸ்தாய் கிட்டத்தட்ட கடவுளைப் போன்றவர். அவர் வெறும் எழுத்தாளர் அல்ல. அவர் உருவாக்கும் அகண்ட பரப்பில் தோன்றாத மனிதர்களே இல்லை; பேசப்படாத பிரச்சனைகளோ நெருக்கடிகளோ தொடப்படாத ஆழங்களோ இல்லை. (நீங்கள் ரஸ்கோல்நிக்கோவின் துயரத்தின், கேள்விகளின் ஒரு முன்மாதிரியை கூட தல்ஸ்தாயில் கண்டுபிடிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.) அவர் ஒரு குட்டிப் பிரபஞ்சத்தை உண்டு பண்ணுகிறார். ஒரு மேஜையில் எறும்புகளை பிடித்து வந்து போட்டு அவை குறுக்குமறுக்காய் ஓடுவதை ஒரு குழந்தை வேடிக்கை பார்ப்பது போல் தல்ஸ்தாய் உலகின் அத்தனை மனிதர்களையும் தன் நாவலுக்குள் தத்தம் போக்குகளில் அலைபாய விடுகிறார். அவர்களின் தீமைகளை, நன்மைகளை, இழிவுகளை, மேன்மைகளை சற்றே விலகி நின்று கனிவுடன் கவனிக்கிறார். இந்த கனிவு அவரை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது.” 
நீங்கள் சொல்வது சரி தான்: தஸ்தாவஸ்கி ஒரு கலைஞன். ஆனால் தல்ஸ்தாய் கடவுள்!
நான் தல்ஸ்தாயை எனது 17 வயதில் படிக்கத் துவங்கினேன். உங்களைப் போல் “போரும் வாழ்வும்” நாவலை திரும்பத் திரும்ப ஆங்கிலத்திலும் தமிழ் மொழியாக்கத்திலும் படித்தேன். அதன் பிறகு நான் படித்த உலக இலக்கியத்தின் சிறந்த நாவல்கள் எவையும் “போரும் வாழ்வும்” நாவலின் ஒரு சிறு அத்தியாயமே எனும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. குறிப்பாய், பிரித்தானிய, அமெரிக்க இலக்கியத்தின் சாதனைப் படைப்புகளைப் படிக்கையில் “சின்னப் பையன்கள் சின்னதாய் ஏதேதோ முயற்சி பண்ணியிருக்கிறாங்க” என்று தான் தோன்றும். மார்க்வெஸ், லூல்போ போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகள் தான் நம் ரஷ்ய மேதைக்கு கொஞ்சமே கொஞ்சம் பக்கத்தில் வந்து பார்த்தவர்கள் என நினைப்பேன். எந்த நாவலைப் படித்தாலும் “அதான் தல்ஸ்தாய் இதை எழுதி விட்டாரே” என எனக்கு தோன்றாத நாள் இல்லை. உலகில் எழுதப்பட்ட, எழுதப்பட வேண்டிய அத்தனை நாவல்களையும் அவர் அந்த ஒரே நாவலுக்குள் (வெண்ணெய் விழுங்கிய கண்ணனின் வாய்க்குள் பிரபஞ்சம் போல்) அடைத்து விட்டார். நாம் இப்போது நம் படைப்புகளில் நிகழ்த்துவதெல்லாம் தல்ஸ்தாய் உருவாக்கிய மனிதர்களின் நிழல் அசைவுகளை, நடனங்களை, பாய்ச்சல்களைத் தான்.

அன்புடன்
ஆர். அபிலாஷ்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...