முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும் 1: இலக்கிய குழு அரசியலில் தவறில்லை!


இலக்கிய விமர்சகன் ஏன் மதிப்பெண்கள் இடக்கூடாது என்பது பற்றின எனது முந்தின கட்டுரையை ஒட்டி நண்பர் கோகுல் பிரசாத் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பி இருந்தார்: “சில இலக்கிய குழுக்கள் சில இலக்கிய படைப்புகளை அதீதமாய் விதந்தோதி உடனடி பரபரப்பை உண்டு பண்ணி ‘நல்லாத்தான் இருக்கும் போல’ என தற்காலிகமாக நம்ப வைத்து அந்தஸ்தை உருவாக்கி விடுகிறார்களே! அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவற்றை மறுத்து திரையை விலக்கி உண்மையை நிறுவ வேண்டியது விமர்சகனின் கடமை இல்லையா?”

சில புத்தகங்கள் பொய்யாய் பாராட்டப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன எனும் பேச்சு சமீபமாய் வலுப்பட்டிருக்கிறது. ஏன் “வலுப்பட்டிருக்கிறது” என சொன்னேன் என்றால் இந்த எண்ணம் நீண்ட காலமாகவே தமிழில் இருக்கிறது. ஏன் என்றால் நீண்ட காலமாகவே தீவிர இலக்கிய உலகில் குழுக்களும் அவற்றின் அரசியலும் உள்ளன. ஒரு படைப்பு பாராட்டப்பட்டால் “ஒருவேளை குழு அரசியலாக இருக்குமோ?”, “அவர்கள் தான் ஒரே சாதி ஆயிற்றே?”, “அதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்து ஆட்களாயிற்றே, உடனே கூட்டு சேர்ந்து விடுவார்கள் தானே?”, “அதான் ஒரே மாவட்டத்து ஆட்கள் ஆயிற்றே, பரஸ்பரம் சொறிந்து விடுகிறார்கள் போலும்?” என ஆயிரம் கேள்விகள் புகைய ஆரம்பிக்கும். இக்கேள்விகளில் நியாயம் உண்டா என்று கேட்டால் ஆம் என்றும் இல்லை என்றும் ஒரே சமயம் பதில் கூறுவேன்.
 ஜெயமோகனின் வெண்முரசு நாவல்களை அவரது “வெண்முரசு வாசக வட்டத்தினர்” அன்றி வேறு யார் படிக்கிறார்கள்? என ஒரு நண்பர் என்னிடம் சமீபமாய் கேட்டார். வேறு யாரெல்லாம் படித்தால் அந்நாவல்களை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நான் அவரிடம் திரும்பக் கேட்டேன். “பொதுவான வாசகர்கள்” என்றார். “இந்த பொதுவான வாசகர்கள் ஒரு படைப்பை கொண்டாடுவதே அதன் சிறப்புக்கான ஆதாரம் எனும் முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? இவர்கள் அல்லாத பொது வாசகர்களுக்கும் இவர்களைப் போன்ற சார்புநிலைகள் இல்லை என உங்களுக்கு எப்படித் தெரியும்?”. அவர் நைஸாக என்னை விட்டு விலகிப் போனார்.
இலக்கிய குழுக்கள் சார்புநிலையின் அடிப்படையில் செயல்படுகிறவை தாம். ஆனால் அதில் என்ன தவறு? தமிழின் பல உன்னதமான படைப்பாளிகள் இந்த இலக்கிய குழுச்சூழல்களில் இருந்து, இந்த இலக்கிய அரசியலின் ஆதரவினால் முன்னிறுத்தப்பட்டு மேலெழுந்து வந்தவர்கள் தானே என ஜெயமோகன் ஒருமுறை கேட்டார். எனக்கு அதுவே நியாயமான கேள்வி எனப் படுகிறது. ஏன் இலக்கிய குழு அரசியலை நாம் நேர்மறையாய் பார்க்கக் கூடாது? ஏன் சார்புநிலையை தழுவி ஏற்றுக் கொள்ளக் கூடாது?
இலக்கியம் என்பது எந்த சார்புநிலையும் அற்ற ஒரு பொதுவாசகனால் ரசித்து கொண்டாடப்படுகிறது என நாம் கற்பனை பண்ணிக் கொள்கிறோம். ஆனால் இந்த “பொது வாசகன்” என்றொருவன் உண்மையில் இருக்கிறானா என நாம் சோதித்துப் பார்ப்பதில்லை. யார் இந்த “பொது வாசகன்”?
அவன் என்ன எந்த வட்டாரத்தையும், குழுவையும், சாதியையும் சேராதவனா? நான் அறியாதவனா? அதனால் மட்டுமே அவன் பாரபட்சம் அற்றவனாய் ஆகி விடுவானா?
தான் விரும்புகிற ஒரு சினிமாக் கலைஞனை, எழுத்தாளனை நான் பாராட்டி இருக்கிறேன், தான் மதிக்கும் ஒரு கருத்துநிலையுடன் நான் உடன்படுகிறேன், தனது வாழ்வனுபவத்துக்கு இணையான ஒன்றை நான் சித்தரித்திருக்கிறேன் என்பதற்காக மட்டுமே உடனடியாய் என் வாசகன் ஆனவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை என்னிடம் சொல்லியும் இருக்கிறார்கள். இது சார்புநிலை இல்லையா? ஆம்.
சொந்த ஊர்க்காரன் என்பதாலே என்னைப் படிப்பவர்கள் உண்டு. நான் எழுத ஆரம்பித்த புதிதில் ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் சொன்னார்: “எனக்கு உங்க கிரிக்கெட் கட்டுரைகள் மட்டும் தாங்க பிடிக்கும். தீவிரமான கட்டுரைகள் சுத்த போர்!” மிக சமீபத்தில் இயக்குநர் ஸ்ரீகணேஷ் “உங்க கிரிக்கெட் கட்டுரைகளை ரசித்து படிப்பதுண்டு” என்றார். “என் கிரிக்கெட் கட்டுரைகளை நான் போகிறபோக்கில் எழுதுகிறேன் எனக்கு அவை சுத்தமாய் பிடிக்காது.” என இருவரிடமும் சொன்னேன். ஆனால் அவற்றை படிக்காதீர்கள் என நான் அவர்களை தடுக்க முடியாது. கிரிக்கெட்டுக்காய் ஒருவர் என்னை படிப்பது சார்புநிலை தான். அதை விடுங்கள். சில கலைஞர்கள், எழுத்தாளர்கள் நான் அவர்களது படைப்புகளை பாராட்டி எழுதியதை மட்டுமே படித்திருக்கிறார்கள். நண்பனாய் இருப்பதால் மட்டுமே என்னை படிப்பவர்கள் இருக்கிறார்கள். நண்பனாய் இருந்தும் என் ஒரு வரியை கூட படிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அது பற்றி புகார் இல்லை.
”காடு” நாவல் வெளியான போது பரபரப்பாய் கவனிக்கப்பட்டு படிக்கப்பட்டது. இத்தனைக்கும் அது சர்ச்சைக்கு உட்படவில்லை. பரபரப்பான அரசியலும் இல்லை. ஒருமுறை ஜெயமோகன் அந்நாவல் கவனம் பெற்றதன் காரணத்தை என்னிடம் சொன்னார். அந்நாவலை படித்து அதன் விவரணைகளில் திளைத்துப் போய், அதை பயங்கரமாய் சிலாகித்து அவருக்கு கடிதம் எழுதியவர்கள் பலர் ”வறட்சியான நிலப்பகுதியை சேர்ந்தவர்கள். எங்கும் ஈரம் குன்றாத, பச்சைப்பசேல் என்ற, குளங்களும் நீர்நிலைகளும் தளும்புகிற, மலைத்தொடர்கள் பார்வைப்புலத்தை விட்டு நீங்காத குமரிப்பகுதி அவர்களுக்கு முற்றிலும் புது அனுபவமாய் இருக்கிறது. அவர்கள் அந்நாவல் வழி அந்த மண்ணில் இறங்கி நடந்து இயற்கையை ஸ்பரிசித்து உள்ளம் களிப்புறுகிறார்கள். அதற்காகவே அந்நாவலின் மொழிக்குள் மீண்டும் மீண்டும் இறங்கி நடைபயில்கிறார்கள்” என்றார்.
 இதை எப்படிப் பார்ப்பது? “இல்லாமையின் சார்புநிலை” என்றா? ஆனால் அந்நாவலை குமரி மண்ணின் மைந்தனான நானும் மிகவும் சிலாகித்துப் படித்தேனே. ஏன்? இருப்பதை மீண்டும் நிலைவில் எழுப்பவா? ”இருப்பதன் சார்புநிலைக்காகவா?”
ஒரு இந்துத்துவாவாதி, சாதியவாதி, பிற்போக்காளர் என “கருதப்படும்” ஜெயமோகனின் “வெள்ளை யானை” தலித் முகாமினரால் கொண்டாடி விதந்தோதப்பட்டது. ஒரு முற்போக்காளரே அதை பிரசுரித்து முன்னெடுக்கவும் செய்தார். அப்போது ஜெயமோகன் எந்த “குழுவில்” இருந்தார்?
என்னுடைய முதல் நாவல் “கால்கள்” ஊனமுற்ற ஒரு பெண்ணின் கதை என “சொல்லப்படுகிறது”. ஆனால் ஒரு ஊனமுற்ற வாசகன் கூட அதற்காய் என்னை அழைத்து பாராட்டியதில்லை. வாசகிகள் – பெண்கள் – தாம் திரும்பத் திரும்ப அந்நாவலுக்காய் என்னை அழைத்து கண்ணீர் மல்க பேசுகிறார்கள். அவர்கள் ஊனர்கள் இல்லையே? அவர்க்ள் என் “குழுவில்” இல்லையே?
ஆனால் அதற்காய் அவர்கள் ”பொதுவாசகர்களும்” அல்ல. பெண்நிலை எனும் “சார்புநிலை” அவர்களை அந்நாவலை நோக்கி ஈர்க்கிறது. ஒன்ற வைக்கிறது. ஒருவேளை நான் பெண் பெயரில் அந்நாவலை எழுதியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?

(இதன் அடுத்த பகுதி விரைவில் … )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...