முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (1)

Image result for crowd tamil theatre
இது ஒரு கோழியா முட்டையா என்பது போன்ற சிக்கல் என உங்களுக்கு தோன்றலாம். ஆனாலும் இக்கேள்விக்கு என்னிடம் தெளிவான விடை ஒன்று உள்ளது. மேலும் இக்கேள்வி வெகுசுவாரஸ்யமானது என்றும் எனக்குத் தோன்றுகிறது.
மனிதனின் தேவைகள் ஒரு பண்டத்தை உற்பத்தி பண்ணத் தூண்டுகிறதா அல்லது நேர்மாறா? சமீபத்தில் ஒரு சமூகவியல் வகுப்பில் ஒரு மாணவி மார்க்ஸிய கோட்பாடு பற்றி பேசும் போது இவ்விசயத்தை குறிப்பிட்டாள். தேவையே பொருட்களின் உற்பத்தியை நேரடியாய் தீர்மானிக்கிறது என்றாள். நான் அவளிடம் கேட்டேன், “ஒரு அழகிய சுரிதார் பார்த்ததும், ஒரு புது போன் சந்தையில் வந்ததும் உங்களுக்கு அதை வாங்கத் தோன்றுகிறது. அங்கே தேவையா அல்லது அப்பொருள் நமக்குள் தூண்டும் ஆசையா நம்மை வாங்க வைக்கிறது? அதே போல ஒரு புதுப்படம் வெளியாகி அதைப் பற்றி மீடியாவில் பரபரப்பாய் பேசினால் போய் பார்க்கத் தோன்றுகிறது. நாம் பார்க்க ஆசைப்பட்டதனால் அப்படம் வெளியானதா அல்லது அப்படம் வெளியானதால் நமக்கு பார்க்க ஆசை தோன்றியதா?

 அத்தியாவசிய பொருளான மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப் படும் ஒவ்வொரு மின்சாதனப் பொருளும் நமது மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கின்றன. இப்பொருட்களை கொடு என நான் சந்தையிடம் கேட்கவில்லை. ஆனால் சந்தை இப்பொருட்களை தட்டில் வைத்து என்னிடம் நீட்ட நீட்ட எனக்கு கூடுதல் மின்சாரம் தேவையாகிறது. எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு பிக்சர் டியூப் டிவி போதும். நூறு ரூபாய்க்கு கேபிள் கனெக்‌ஷன் போதும். ஆனால் இரண்டுமே இனி கிடைக்காது என ஆகும் போது நான் பத்தாயிரம் ரூபாய்க்கு எல்.சி.டியும் மூவாயிரத்துக்கு செட் ஆப் பாக்ஸும் வாங்க நேர்கிறது. சில வேளைகளில் நமது ஆசை தூண்டப்பட்டு தேவையை சந்தையே உருவாக்கிறது.
 சில சந்தர்பங்களில் ஒரு தேவை நம் மீது திணிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபட்ட சூழல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான சந்தையை உருவாக்குகிறது. கார்ப்பரேட்மயமாக்கல் ஒரு நகரப்பகுதியின் நில மதிப்பை பல மடங்கு செயற்கையாக ஏற்றி விடுகிறது. அங்கு வசிப்பவர்கள் மிகையான வாடகைக்கும் சேர்த்து சம்பாதிக்க நேர்கிறது. அதற்காக கூடுதல் உழைக்கிறார்கள். வீடு வாங்க வேண்டும் என்பதையே ஒரு கனவாக வளர்க்கிறார்கள். அதற்காக இருபது வருடங்கள் உழைத்து வங்கிக் கடன் செலுத்தி போராடி இறுதியில் வீடு எனும் லட்சியத்தை அடைகிறார்கள். ஆனால் வீட்டின் விலையை சந்தை செயற்கையாய் ஏற்றவில்லை என்றால் (அல்லது ஒரு நகரத்தில் இருந்து மென்பொருள் நிறுவனங்கள் வெளியேறினால்) நீங்கள் அதே வீட்டை பத்து வருடங்களில் வாங்கி இருக்க முடியும். வீட்டின் மதிப்பு மேலும் குறைந்தால் உங்களுக்கு வீடு வாங்கும் ஆசையே ஏற்படாது.
 ஆக செயற்கையான பரபரப்பு, போட்டி மனப்பான்மை, பொருள் மீதான இச்சையை கார்ப்பரேட் சந்தை உண்டு பண்ணுகிறது.”
இதை ஒட்டி ஒரு சுவாரஸ்யமான விவாதம் வகுப்பில் நடைபெற்றது. எனக்கு Fast Food Nation எனும் புத்தகத்தில் Eric Schlosser துரித உணவு பண்பாடு எப்படி அமெரிக்காவில் திணிக்கப்பட்டது என விளக்கியிருந்தது நினைவு வந்தது. அறுபதுகளில் ரயில் பாதைகள் அகற்றப்பட்ட தேசத்தை முழுக்க இணைக்கும் சாலைகள் அமெரிக்கா எங்கும் அமைக்கப்பட்டன. ரயில் பாதைகளே அதுவரையிலும் அமெரிக்காவின் ரத்த தமனிகளாய் இருந்தன. குறைவான கட்டணத்தில் மக்கள் இந்த பொதுபோக்குவரத்தை பயன்படுத்தி சௌகர்யமாய் இருந்தனர். அப்போது அறிமுகமாகத் துவங்கின கார்களை விற்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரயில் சேவை முக்கிய தடையாக இருந்தன. அதனால் அவை அரசை லாபி செய்து ரயில் பாதைகளை அகற்றினர். பதிலுக்கு சாலைகளை (மக்கள் செலவில்) பரவலாய் அமைத்தனர். அடுத்து கார்களின் தேவையை, வசதியை மக்களுக்கு இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினர். மக்களுக்கு இப்போது கார்கள் அவசியமாய் போயின. ரயிலை விட இதுவே சௌகர்யம், இதுவே முன்னேற்றத்தின் அறிகுறி என நம்பத் தலைப்பட்டனர். ஆனால் சந்தை இத்துடன் நிற்கவில்லை. சாலையில் பயணிப்போருக்கு அவசரமாய் வண்டியை நிறுத்தி வாங்கி கொறிக்க துரித உணவு தேவைப்பட்டது. அப்படி சாலை ஓரங்களில் பர்க்கர் கடைகள் அறிமுகமாகி மெக்டொனால்ட்ஸ், கெ.எப்.ஸி போன்றவை பெரும் வணிக வெற்றி பெற்று அமெரிக்க உணவில் இருந்து பிரிக்க முடியாத வஸ்துக்களாகின. ஆனால் ரயில் பாதைகள் அகற்றப்படாவிட்டால் மெக்டவல்ஸ், கெ.எப்.ஸி எல்லாம் முளைத்திருக்காது.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...