Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தனிமனிதன் எனும் பிரமை (3)

Image result for ayn rand + fountainhead
நான் போன பதிவில் குறிப்பிட்ட ஆதர்ஷ் சமீபமாய் ஐயன் ரேண்டின் நூல்களை படித்து வருகிறார்.
 ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து எழுத்தாளராய் அங்கு மலர்ந்த ஐயன் ரேண்ட் The Fountainhead மற்றும் Atlas Shrugged ஆகிய நாவல்களுக்காகவும், தனது தனிமனிதவாத கருத்துக்களுக்காகவும் இன்றும் பிரசித்தமாய் விளங்குபவர். அவர் தனிமனிதவாதத்தின் போர்க்கொடி என்பதால் பதின்பருவத்தினர் தொடர்ந்து அவரது நாவல்களின் பெரும் ரசிகர்களாக விளங்குகிறார்கள். இன்றும் எந்த கல்லூரிக்கு சென்றாலும் யாராவது அங்கு The Fountainhead படித்துக் கொண்டிருப்பார்கள்.

 மனித இருப்பு என்பது ஒருவர் தன்னை தனித்து அடையாளப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது, ”இருத்தல் என்பது அடையாளம்” என்றார் ரேண்ட்.
 நமது பிரக்ஞை என்பது சுயத்தின் கண் வழி விரிகிறது; இந்த பிரக்ஞை நம்பகத்தன்மை அற்றது, அதன் வழி நாம் புரிந்து கொள்ளும் உலகமும் நிலையற்றது, ஆனால் இதுவே நமக்கு சாத்தியமான ஒரே உலகம் என்பது ஐரோப்பிய கருத்துமுதல்வாத சிந்தனையின் அடிப்படை எனலாம். பூனை கண்ணை மூடித் தூங்குகையில் உலகமே இருள்கிறது என கற்பனை பண்ணும் என வேடிக்கையாக சொல்வார்கள். நான் சிந்திப்பதால் இருக்கிறேன், நான் இருப்பதால் உலகமே இருக்கிறது எனக் கூறும் கருத்துமுதல்வாதிகளின் மீதான பகடி இது. ஐயன் ரேண்ட் இந்த கருத்துமுதல்வாதிகளை மறுத்து ஒரு புது சித்தாந்தத்தை உருவாக்கினார்: புறவயவாதம் (objectivism).
Image result for ayn rand
ரேண்ட்
 நாம் நமது நமது பிரக்ஞையால் கண்டுணரும் உலகம் பகுத்துணரக் கூடியது என்றார் ரேண்ட். பகுத்தறிவையும் புறவய பார்வையையும் முன்னிறுத்தினார். தனிமனிதனை முன்வைக்கும் சித்தாந்தமே சிறப்பானது என்றார். தனிமனிதன் தன்னை சமூகத்தின் பொதுப்போக்குகளில் இருந்து தனித்து உணர்கிறான். அப்படி உணர்வதன் வழி தனது பிரக்ஞையை கட்டமைக்கிறான். இது இமானுவல் காண்ட் ஆகியோர் வலியுறுத்திய அபௌதிகமான, அகவயமான பிரக்ஞை அல்ல. இது ஹைடக்கர் முன்வைத்த மொழிக்குள் மட்டும் வாழும் (சூனியத்தில் உறையும்) பிரக்ஞை அல்ல. இது மண்ணில் கால்பதித்த, பொருளியல் வெற்றியை கொண்டாடும், பகுத்தறிவை தன் பாதையாக வகுத்த பிரக்ஞை. பூமியை வென்றடக்குவதன் வழி தனிமனிதன் உணரும் இருத்தலே ரேண்டின் இருத்தல். இந்த தனிமனிதனின் வெற்றிக்கு வழிவகுக்கும் முதலாளித்துவத்தை ரேண்ட் தனது கடவுள் என வழிமொழிந்தார்.
 வெற்றி பெறும் உந்துதல் அற்ற, சமூக வளத்தை சுரண்டி வாழ முயலும் மந்தை மனப்பான்மையை ரேண்ட் வெறுத்தார். இந்த மந்தையை முதலாளித்துவம் கசக்கிப் பிழிந்து பொருளை உற்பத்தி செய்வதில் தவறில்லை, திறமையும் புத்திசாலித்தனமும் கொண்ட சில தனிமனிதர்களின் உய்வுக்காக மந்தை மனிதர்கள் பலிகொடுக்கப்படுவதே நியாயம் என அவர் நம்பினார். இந்த சிந்தனை சுலபத்தில் சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என ரேண்டின் விமர்சகர்கள் சுட்டுகிறார்கள்.
ரேண்டின் கருத்தியலுடன் எனக்கு உடன்பாடில்லை. இங்கு நாம் அதைப் பற்றி விரிவாக விவாதிப்பது பொருத்தமாக இராது என்பதால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
மனிதனின் சுயம் தனித்துவமானது, பிறரில் இருந்து தன்னை வேறுபடுத்துவதே ஒரு மனிதனை தனிமனிதனாக்குகிறது, அதுவே அவனது சிறப்பு, அவனது வலிமை, வளர்ச்சியின் ஆதாரம் என அவர் நம்புகிறார். இதை விளக்க அவர் ஒரு உதாரணம் தருகிறார். ஒரு இலை ஒரே சமயம் பச்சையாகவும் பழுப்பாகவும் இருக்க இயலாது. (இரண்டு வண்ணங்களும் கலந்து இருக்கலாம். ஆனால் அது வேறு.) பச்சை இலை தன்னை பச்சையாக உணர வேண்டும். அதுவே அதன் தனித்துவமாகிறது. இருப்பாகிறது. அதுவே அதன் உண்மை. பகுத்துணர முடிகிற, நிரூபிக்க முடிகிற உண்மை.
 பச்சை எனும் அடையாளம் ஒரு தர்க்கரீதியான உண்மை. பச்சை A என்றால் பழுப்பு B. பச்சை எப்போதும் பச்சையாகவே இருக்க இயலும். அது பழுப்பாகாது என்பதை அவர் A = A என்கிறார். இந்த சூத்திரத்தில் நீங்கள் எதையும் இட்டு நிரப்பலாம். இதன்படி ஒரு தலித் பீ அள்ளுகிறார் என்றால் அது அவரது குறைபட்ட திறமையின், அடையாளத்தின் விளைவு. தலித் = பீ என்றால் ரேண்ட் “இல்லை இல்லை தவறு” பீ = பீ என்பார். பீயாக இருப்பதனால் அவன் பீ அள்ளுகிறான் என்பார். இது கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் அபத்தமான குரூரமான வாதம். ஒருவரின் இழிநிலைக்கு பின்னால் உள்ள சாதியம், சமூகக் காரணிகள், வரலாறு, பொருளாதாரம் ஆகியவற்றை பொருட்படுத்த மறுக்கும் வாதம்.
இந்த வாதத்தின் தர்க்கப் பிழையை அடுத்த பதிவில் பார்ப்போம்…
(தொடரும்)


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...