Skip to main content

அனிதாவின் தற்கொலை: லட்சியமும் மார்க்கமும்

Image result for அனிதா தற்கொலை

நியூஸ் 18 அலைவரிசையில் நடந்த விவாதம் என நினைக்கிறேன். தோழர் தியாகும் பேசும் போது அனிதாவின் தற்கொலையை இப்படி அணுகினார்: “நாங்கள் ஒரு போது அரசியலுக்காக உயிர்விடுவதை ஏற்க மாட்டோம். ஆனால் அனிதா செய்தது தற்கொலை அல்ல. அது ஒரு உயிர்க்கொடை. அவர் எந்த லட்சியத்துகாக தன் உயிரை பலிகொடுத்தாரோ அதை, அந்த உணர்வை நான் வணங்குகிறேன்.”

இதைக் கேட்ட போது என்னவொரு முரண்பாடான நிலைப்பாடு எனத் தோன்றியது. நீங்கள் லட்சியத்தை வணங்குகிறீர்கள். ஆனால் மார்க்கத்தை மறுக்குகிறீர்கள். (முதலில் தியாகு தான் அந்த மார்க்கத்தை ஏற்கவில்லை என சொல்லி விட்டு பின்னர் “உயிர்க்கொடை” என பாராட்டுகிறார். அது கூட போகட்டும்.) தோழர் தியாகுவுக்காவது அரசியல் தியாகங்களின் சிக்கல் புரிகிறது. நான் இது சம்மந்தமாய் பலரிடம் உரையாட நேர்ந்தது. அவர்களுக்கு தியாகுவின் இந்த தெளிவு கூட இல்லை. உயிரை விடுவது அவசியமில்லை. ஆனால் அனிதா செய்து விட்டார். அவரது உயர்வான லட்சியத்தை நாங்கள் வழிபடுகிறோம் என்கிறார்கள். முகநூலில் நான் கண்ட கணிசமான பதிவுகள் இப்படி அனிதாவின் இழப்புக்காக துக்கம் தெரிவித்து விட்டு, அவரது நோக்கத்தை வணங்கி எழுதப்பட்டவை. ஏனெனில் அனிதாவின் சமூக நீதி சார் இலட்சியம் மிக உயர்வானது என அவர்கள் நம்புகிறார்கள். அப்படி எனில் லட்சியமும் மார்க்கமும் வேறு வேறா?
நீட்டை எதிர்க்கும் பொருட்டு ஒருவர் பிரதமர் மோடியை குண்டு வைத்துக் கொன்றால் அதை பாராட்டுவீர்களா? மாட்டீர்கள். ஏனெனில் கொலையை ஏற்க மாட்டோம். அது எங்கள் மார்க்கமல்ல என்பீர்கள். அப்படி எனில் நீட்டை எதிர்ப்பது எனும் லட்சியம்? அது மகத்தானது அல்லவா? சரி குண்டு வைப்பது சற்று விபரீதமான உதாரணம். ஒருவர் நீட்டை அனைத்து மாநிலங்கள் மீது திணிக்கும் வண்ணம் தீர்ப்பளித்த நீதிபதிகளை கடத்தி செல்கிறார். நீட்டை விலக்கினால் மட்டுமே நீதிபதிகளை விடுவிப்போம் என அரசை மிரட்டுகிறார். இதை ஏற்பீர்களா? லட்சியம் சரி தானே? மார்க்கம் மட்டும் தானே சிக்கல். நிச்சயம் கணிசமானோர் இந்தவிதமான தீவிரவாத செயல்களை ஏற்க மாட்டீர்கள்.
ஆக மார்க்கமும் லட்சியமும் வேறுவேறல்ல. அப்படி எனில் அனிதா விசயத்தில் மட்டும் ஏன் முரண்பாடாய் சிந்திக்கிறீர்கள்?
நீங்கள் அனிதாவின் தற்கொலையை சமூக நீதிக்கான உயிர்க்கொடை என கருதி அந்த மார்க்கத்தையும் ஏற்பதனால் தான் அதை ஆதரித்து பேசுகிறீர்கள். அப்படி எனில் அம்மார்க்கத்தை நீங்கள் பின்பற்றாதது ஏன்?
ஏன் அனிதாவின் மரணத்தை ஒட்டி லட்சக்கணக்கான நீட் எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யவில்லை? சரி, எங்களுக்கு துணிச்சல் இல்லை. துணிந்து அதை செய்த அனிதாவை வணங்குகிறோம் என சொல்கிறார்கள் என வைப்போம். அப்படி எனில், அனிதாவின் இடத்தில் உங்கள் மகளோ சகோதரியோ தாயோ அன்பு மனைவியோ தற்கொலை செய்யும்படி தூண்டுவீர்களா? பள்ளியில் படிக்கும் உங்கள் உங்கள் மகள் உங்களுக்கே தெரியாமல் அனிதா வழியில் நீட்டுக்கு எதிராய் தற்கொலை செய்தால் அதை பாராட்டி வீரவணக்கம் செய்வீர்களா? அல்லது பதறி அழுது இரங்குவீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்.
சரி, உங்களுக்கும் துணிச்சல் இல்லை. உங்கள் மகளும் அதை செய்வதை விரும்பவில்லை. அப்படி எனில் இன்னொருவர் மட்டும் அதை செய்ய வேண்டும்?
நாங்கள் தற்கொலையை கோரவில்லையே என்கிறீர்கள். அப்படி எனில் உயிர்க்கொடை என அதை ஏன் மகத்துவப்படுத்துகிறீர்கள்? நீங்கள் இது போன்ற உயிர்த்தியாகங்கள் தொடர்ச்சியாய் நிகழ வேண்டும் என மறைமுகமாய் வேண்டுகிறீர்களா? நீங்கள் மகத்துவப்படுத்துவதால் ஊக்கம் பெற்று நாளை மற்றொரு அனிதா தன்னுடலை எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் அதற்கு யார் பொறுப்பு? அதையும் வீரச்செயல் என வணங்குவீர்களா?

ஏன் இது போன்ற உயிர்க்கொடைகளை இன்னொருவர் நிகழ்த்த வேண்டும் என நாம் வேண்டுகிறோம்? அவர் ஏன் எப்போதும் “இன்னொருவராய்” இருக்க வேண்டும்? இதுவே என் அடிப்படையான கேள்வி.

Comments

சரியான... சாட்டையடிக் கேள்வி சார்.
ஒரு உயிர் அது எதன் பொருட்டு போனாலும் உயிர்க்கொடை, லட்சியத்துக்கான மரணம் என்றெல்லாம் சொல்லும் யாராலும் உயிர்க்கொடைகளையும் லட்சியச்சாவுகளையும் தங்கள் இல்லத்திலோ உறவிலோ ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏன்னா அடுத்தவன் செத்தா அது கொடை... தன் வீட்டில் என்றால் அது உயிர்.

Anonymous said…
உங்கள் கருத்து சிந்திக்க தூண்டுகிறது. தன்மீதே ஏவப்படும் வன்முறையும் ஏற்க படமுடியாத வன்முறையே. எதையும் ஆக்கப்பூர்வமான முறையிலேயே எதிர்க்க வேண்டும்.

அறிவுப்பரப்பு என்பது வெறும் என்ஜினீரிங்கும் , மருத்துவமு மட்டுமே அல்ல. பௌதிகம், கணிதம், வரலாறு, உயிரியல் போன்ற அறிவு சார் துறைகளில் ஏன் நம்மிடம் ஆர்வம் இல்லை. மருத்துவத்திலும் கூட ஏன் நம்முடைய சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற முறைகளும் உள்ளனவே. ஆங்கில வைத்தியத்தில் மட்டும் ஏன் இந்த வெறிபிடித்த மோகம்.?

நீட் பற்றிய இவ்வளவு பெரிய அலட்டல் தேவையா?.....கல்வி பற்றி இன்னும் ஆழமான பரந்த விவாதம் தேவை.

சிவா
Unknown said…
தியாகு பேசியது நீயூஸ் 18 தமிழ்நாடு
நன்றி. திருத்தி விட்டேன்
Anonymous said…
Nalla Sindhanai.

Thiyagarajan

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...