முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசிப்பு பற்றி நான்கு கேள்விகள் (2) - எதுக்குமே நேரமில்லை



Image result for texting at the cinema

ஏன் நேரமில்லை?
வாசிக்க நேரமில்லை என ஏன் கூறுகிறார்கள்? எனக்கே பல நாட்களில் வாசிக்க ”நேரமிருப்பதில்லை”. ஆனால் அரட்டை அடிக்க, வேலை செய்ய, படம் பார்க்க “நேரமிருக்கும்”. என்னுடைய சில நண்பர்களால் ஒரு ஐம்பது பக்க நாவலைக் கூட தொடர்ந்து படிக்க முடிவதில்லை. ஒரு அத்தியாயம் படித்து விட்டு களைத்து தூங்கி விடுவார்கள். வாசிப்புக்கான தொடர்ச்சி இங்கு தான் முக்கியமாகிறது.
நாவல் வாசிப்பில் என் அனுபவம் இப்படி. நான் ஆயிரம் பக்க நாவல் ஒன்றை படித்து முடித்தால் அடுத்து அதே போல மற்றொரு தலையணை நாவலுக்கு தயாராகி விடுவேன். முந்தின நாவலின் தொடர்ச்சியாகவே இதை பார்ப்பேன். இது ஒரு பருவம். ஆயிரக்கணக்கான பக்கங்களை சுலபத்தில் தாண்டி சென்று விடுவேன். பிறகு ஒரு இடைவேளை வரும். வேறு வகையான நூல்களை வாசிக்க துவங்குவேன். பெரிய நூல்களுக்கான பழக்கம் விட்டுப் போன பின் ஒரு புதிய ஆயிரம் பக்க நாவலுக்குள் நுழைவது சிரமமாக இருக்கும். நூறு பக்கம் படித்ததும் ஆர்வம் இழந்து விடுவேன்.

 இந்த “ஆர்வம்” என்பது உண்மையில் அப்புத்தகத்தின் இயல்பு சம்மந்தமானது அல்ல. நீண்ட நேரம் தொடர்ந்து மொழியில் மூழ்கும் “ஆர்வம்” இது. இந்த ”ஆர்வம்” தொற்றிக் கொண்டால் பிறகு சின்ன புத்தகங்களுக்குள் பயணிப்பது சிரமமாக இருக்கும். நிறைவு இருக்காது. கல்யாண விருந்தில் பாதி பந்தியில் எழுந்தது போல் இருக்கும்.
இப்போது தமிழில் குறுநாவல்களுக்கு ஒரு மவுசு உள்ளது. இதை ஒரு பொழுதுபோக்கு வாசிப்பு மனநிலையாக மட்டும் நான் பார்க்கவில்லை. ஏனென்றால் கல்கி, சாண்டில்யன் ஆண்ட காலத்தில் ஆயிரம் பக்க நாவல்களைக் கூட நம் வாசகர்கள் அநாயசமாக படித்து கடக்கவில்லையா? இன்றும் இந்த வாசகர்கள் புத்தக கண்காட்சியில் ”பொன்னியின் செல்வனை” வாங்க தவறுவதில்லை.
ஆக, இது வெறும் நேரம் சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. பேஸ்புக், இணையம், சினிமா என வெகுஜன ஊடகங்களில் கூட எந்த கதையையும் / விவாதத்தையும் சுருக்கமாய் கூற வேண்டும் எனும் நிர்பந்தம் தோன்றி விட்டது. இன்றைய படங்களில் நீளமான காட்சிகளோ வசனங்களோ இல்லை. பார்வையாளர்களுக்கு உடனே அலுத்து விடுகிறது. காட்சிகளை நிறைய இடைவெட்டல்களுடன் திருப்பங்களுடன் அமைக்கிறார்கள். ரொம்ப சுவாரஸ்யமான படங்களைக் கூட முழுக்க அவர்கள் கவனிப்பதில்லை. இடையிடையே ஸ்மார்ட்போனில் அரட்டை அடித்தும் முகநூலில் போஸ்ட் செய்தபடியும் தான் படத்தையும் ரசிக்கிறார்கள்.
 நான் சில வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தை சத்யம் திரையரங்கில் ஒரு மீள் திரையிடலின் போது பார்த்தேன். அப்பொது முற்றிலும் அறுபது, எழுபதுகளின் தலைமுறை பார்வையாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு காட்சி நறுக்கென, உடனுக்குடன் திருப்பம் கொண்டதாய் இருக்க வேண்டியதில்லை. அவர்களால் கொஞ்சம் ஜவ்வாய் இழுக்கும் காட்சிகளை, நாடகீயமான தழுதழுப்புகளை ரசிக்க முடிந்தது. அவர்கள் வேறொரு “காலத்தில்” இருந்தார்கள். இன்னும் துல்லியமாய் சொல்வதானால் அவர்கள் காலத்தை வேறுவிதமாய் பார்க்க பழகி இருந்தார்கள்.
இன்றைய கவனச்சிதறல் கலாச்சாரம், அதன் துரித-ரசனை மனப்பான்மை முழுக்க பழக்கத்தின் வழி ஏற்பட்டது தான் என நம்புகிறேன். ஏனென்றால் நம்மை விட அதிக தொழில்நுட்ப, உலகமயமாக்கல் தாக்கம் கொண்ட மேற்கத்திய சமூகங்களில் ஐநூறு, ஆயிரம் பக்க நாவல்கள் பரவலாய் படிக்கப்படுகின்றன. அங்குள்ள ”பெஸ்ட் செல்லர்கள்” சற்று உடல் வீங்கின நாவல்களே. இலக்கிய நாவலாசிரியர்களில் வெகுஜன பரப்பையும் ஊடுருவிய ஹருகி முராகாமி நாவல்களின் சராசரி நீளமே முன்னூற்று ஐம்பது பக்கங்கள் தாம். ஆங்கில இந்திய நாவல்களிலும் எனக்குத் தெரிந்து குறுநாவல்களே இல்லை.
 வணிக நாவல்களில் நூறு பக்கங்களில் லகுவாய் சிக்கலற்ற கதைகளை கூறுவது வெற்றி பெறும் என நிரூபித்தவர் சேத்தன் பகத். ஒரு மசாலா தோசையும் காபிக்குமான பணம் இருந்தால் இவர் நாவல்களை வாங்கி விடலாம். இதனாலே இந்தியாவின் இளைய தலைமுறை இவரை கொண்டாடியது. சேத்தன் பகத் இந்தியாவின் சமகாலத் தலைமுறையின் மனப்பழக்கத்தை சரியாய் ஊகித்து உணர்ந்தவர் எனலாம். ஆனால் இதே சேதன் பகத் அமெரிக்க வாசகர்களுக்காய் எழுதினால் கூடுதலாய் இருநூறு பக்கங்கள் எழுதுவார் என உறுதியாய் கூறுவேன்.
வாசிப்புக்கான நேரமும் குறையவில்லை; ஆர்வமும் குன்றவில்லை. ஆனால் வேறொரு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்பழக்கம் வாசிப்பில் மட்டுமல்ல செய்தி வாசிப்பு, டிவி நிகழ்ச்சித் தொகுப்பு, அன்றாட அரட்டை, சமூகமாக்கல் எங்கும் ஒரு துரித மனோபாவத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 எல்லா பழக்கங்களையும் போல் இதுவும் ஒரு கட்டத்தில் அலுத்து விடும். எல்லாவற்றையும் ”சீக்கிரம் சீக்கிரம்” என கோரும் நாம் “ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டது?” என கேட்கும் காலம் வரும். ”சீக்கிரமே” வரும்! நாம் அப்போது நேரத்தை நீட்டிக்க விரும்புவோம். இன்னும் சற்று நேரம் ஒரு விசயத்தில் ஆழ்ந்து போய் சிலாகிக்க விரும்புவோம். அதற்கான ஒரு கலாச்சார அலை தோன்ற வேண்டும். அப்போது நம் மனமும் காலத்தை சற்று நீளமானதாய் பார்க்க பழகிக் கொண்டு விடும். அப்போது நம்மால் பொறுமையான சினிமாக்களை பார்க்க முடியும். ஐநூறு பக்க நாவல்களை அநாயசமாய் படிக்க முடியும். நம் நாவலாசிரியர்கள் வருடத்திற்கு ஒரு ஆயிரம் பக்க நாவல் எழுத முனைவார்கள்.
 சரி, இதையெல்லாம் படிக்க நமக்கு நேரம் அப்போது எப்படி வாய்க்கும்? நேரம் வெளியில் இல்லை. மனதில் உள்ளது. இப்போது நாம் நேரத்தை கேப்ஸ்யூல்களாய் சுருக்கி பலவித காரியங்களில், பொழுதுபோக்குகளில் செலவழிக்கிறோம். அப்போது நாம் நேரத்தை ஒன்றாய் சேர்த்து ஒரு காரியத்தில் ஈடுபட பயன்படுத்துவோம். 
வாசிப்பை மக்களிடைய பரவலாக்க வாசிப்பின் அருமை பெருமைகளை விளக்கினாலோ, புத்தகங்களை அதிகம் புழக்கத்தில் வைத்திருந்தாலோ போதாது. வாசிப்பு உண்மையில் நடைமுறை வாழ்க்கைக்கு எந்த பயனும் அளிக்காத ஒரு பழக்கம். அந்த பழக்கத்தை பண்பாட்டின் ஒரு பகுதியாய் மக்களுக்கு ஏற்படுத்துவது தான் அதைக் காப்பாற்றும் ஒரே வழி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...