Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கமலின் அரசியல் எதிர்காலம்

Image result for kamal hassan

சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
வெளியே நல்ல மழை.
நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன். 

டிவியை சற்று நேரம் கவனித்த எனக்கு எனக்கு அந்த கமல் ஆதரவு பேச்சாளரின் அப்பாவியான முகம் ரொம்ப பிடித்திருந்தது. அருகில் இருந்த என் நண்பருக்கோ அவரது இந்த “ஊழல்” பிரசங்கம் ரொம்ப எரிச்சலூட்டியது. “கமல் இதுவரை ஒரு சொல்லாவது மத்திய அரசை எதிர்த்து பேசி இருக்கிறாரா?” என அவர் பொரும ஆரம்பித்தார்.
 நண்பர் கொதித்தால் அது குக்கர் விசிலடிப்பது போல. முழுக்க நிற்பது வரை பொறுக்க வேண்டும். அவர் முடித்த பின் நான் கேட்டேன் “கமல் என்னென்ன பண்ண வில்லை என்பதை ஒரு பட்டியலிடுங்களேன்?” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை?”
“ஆமா”
நண்பர் தொடர்ந்தார்:
 ”‘எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது..’ கமல் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தாரே தவிர அவர் அன்று காத்திரமாக என்ன செய்தார்?” என்று கேட்டார்.
 அக்கேள்வி எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டதால் டி.வியை அணைத்து விட்டு அவர் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். “ஆமா ஏன் போராடவில்லை?”என கேட்டுக் கொண்டேன்.
கமலை அரசிலுக்கு லாஞ்ச் செய்ய ஜல்லிக்கட்டு, நீட் தேவு – அனிதாவின் தற்கொலை போன்று சில கொந்தளிப்பான அரசியல் சந்தர்ப்பங்கள் அமைந்தனவே? இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை? இப்படி நான் கேட்டுக் கொண்ட போது நண்பர் கொதிப்பின் உச்சத்துக்கு போனார்.
ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது கமலஹாசன் கட்சி ஆரம்பித்திருந்தால், பா.ஜ.க மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் கொடி தூக்கி மக்களையும் ஒன்று திரட்டி இருந்தால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, பலமான மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவும் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?
நண்பர் சொன்னார், “பா.ஜ.க சார்பில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”
“சரி பண்ணிட்டேன். ஆனாலும் புரியலையே?”
“கமல் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருப்பார். அதை நிச்சயம் பா.ஜ.க விரும்பாது.”
“சரி பா.ஜ.கவுக்கு என்ன தான் வேண்டும்.”
“கமல் ஒரு வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கைக்கு அடக்கமான ஒரு கருவி போல் இருக்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டென கட்சியை ஆரம்பித்து வக்காளர்கள் இடையே ஒரு சிறிய கவனக் கலைப்பை செய்ய வேண்டும். குட்டையை குழப்ப வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கும். கமல் அப்போது அரசியலில் ஒரு பொன்சாய் மரம் போல் சரியான சைஸுக்கு வளர்வார். ஆனால் அடுத்தவர்களையும் வளர விட மாட்டார்.”
“சேச்சே கமல் அந்தளவுக்கு முட்டாளா என்ன?”
“கமல் புத்திசாலி தான். ஆனால் அவர் வசம் பணம் இல்லையே? எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது? யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது? மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே? அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? கமல் ரிஸ்கே எடுக்காமல் விளையாட விரும்புகிறார். அதனால் தான் பா.ஜ.க பணிக்கும் போது அவர் கரெக்டாக லாஞ்ச் ஆவார்.”
“அதனால் அவருக்கு என்னங்க லாபம்?”
”தனக்கு ஒருவேளை மக்கள் ஆதரவு அமைந்தால் அதை அவர் ஓட்டுக்களாக மாற்ற முடியும். பா.ஜ.க கொடுக்கும் பணத்தை வாங்கி எதிர்கால சினிமா திட்டங்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். தோல்வி அடைந்தாலும் போனது தலைப்பாகையோடு போச்சு என்றாகி விடும். பெரிதாய் அடி விழாது.”
“வடிவேலுவுக்கு வந்த கதி இவருக்கு வராதா?”
“வராதுங்க. எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க இருக்கும். அவர்களின் ஆதரவு கமலுக்கு இருப்பது வரை அவர் அதிகர உச்சாணிக் கொம்பில் இருப்பார். மேலும் ஸ்டாலின் ஒன்றும் ஜெயலலிதா அல்ல விரட்டி விரட்டி பழிவாங்க. அவர் கண்ணியமானவர். இன்னொரு விசயம் … அது ரொம்ப முக்கியம்.”
“என்ன?”
“ஒருவேளை தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் ஆட்சிக் கூட்டணியில் பா.ஜ.க பங்கு பெற்றால்?”
“திமுகவுடனா?”
“ஏதோ ஒரு திராவிட கட்சியுடன்”
“கேட்கவே பீதியாய் இருக்குதே”
“அப்போது கமல் ஒரு சூறாவளி போல அரசியலில் கலக்குவார்.”
“யாருக்கு எதிராக அப்போது பேசுவார்.”
“யாருக்கு எதிராகவும் பேச மாட்டார். சும்மா பேசிக் கொண்டிருப்பார்.”
“சரி கமல் கட்சியின் பெயர் என்னவாக?”

“Loading…”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...