முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமலின் அரசியல் எதிர்காலம்

Image result for kamal hassan

சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
வெளியே நல்ல மழை.
நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன். 

டிவியை சற்று நேரம் கவனித்த எனக்கு எனக்கு அந்த கமல் ஆதரவு பேச்சாளரின் அப்பாவியான முகம் ரொம்ப பிடித்திருந்தது. அருகில் இருந்த என் நண்பருக்கோ அவரது இந்த “ஊழல்” பிரசங்கம் ரொம்ப எரிச்சலூட்டியது. “கமல் இதுவரை ஒரு சொல்லாவது மத்திய அரசை எதிர்த்து பேசி இருக்கிறாரா?” என அவர் பொரும ஆரம்பித்தார்.
 நண்பர் கொதித்தால் அது குக்கர் விசிலடிப்பது போல. முழுக்க நிற்பது வரை பொறுக்க வேண்டும். அவர் முடித்த பின் நான் கேட்டேன் “கமல் என்னென்ன பண்ண வில்லை என்பதை ஒரு பட்டியலிடுங்களேன்?” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை?”
“ஆமா”
நண்பர் தொடர்ந்தார்:
 ”‘எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது..’ கமல் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தாரே தவிர அவர் அன்று காத்திரமாக என்ன செய்தார்?” என்று கேட்டார்.
 அக்கேள்வி எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டதால் டி.வியை அணைத்து விட்டு அவர் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். “ஆமா ஏன் போராடவில்லை?”என கேட்டுக் கொண்டேன்.
கமலை அரசிலுக்கு லாஞ்ச் செய்ய ஜல்லிக்கட்டு, நீட் தேவு – அனிதாவின் தற்கொலை போன்று சில கொந்தளிப்பான அரசியல் சந்தர்ப்பங்கள் அமைந்தனவே? இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை? இப்படி நான் கேட்டுக் கொண்ட போது நண்பர் கொதிப்பின் உச்சத்துக்கு போனார்.
ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது கமலஹாசன் கட்சி ஆரம்பித்திருந்தால், பா.ஜ.க மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் கொடி தூக்கி மக்களையும் ஒன்று திரட்டி இருந்தால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, பலமான மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவும் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?
நண்பர் சொன்னார், “பா.ஜ.க சார்பில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”
“சரி பண்ணிட்டேன். ஆனாலும் புரியலையே?”
“கமல் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருப்பார். அதை நிச்சயம் பா.ஜ.க விரும்பாது.”
“சரி பா.ஜ.கவுக்கு என்ன தான் வேண்டும்.”
“கமல் ஒரு வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கைக்கு அடக்கமான ஒரு கருவி போல் இருக்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டென கட்சியை ஆரம்பித்து வக்காளர்கள் இடையே ஒரு சிறிய கவனக் கலைப்பை செய்ய வேண்டும். குட்டையை குழப்ப வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கும். கமல் அப்போது அரசியலில் ஒரு பொன்சாய் மரம் போல் சரியான சைஸுக்கு வளர்வார். ஆனால் அடுத்தவர்களையும் வளர விட மாட்டார்.”
“சேச்சே கமல் அந்தளவுக்கு முட்டாளா என்ன?”
“கமல் புத்திசாலி தான். ஆனால் அவர் வசம் பணம் இல்லையே? எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது? யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது? மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே? அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? கமல் ரிஸ்கே எடுக்காமல் விளையாட விரும்புகிறார். அதனால் தான் பா.ஜ.க பணிக்கும் போது அவர் கரெக்டாக லாஞ்ச் ஆவார்.”
“அதனால் அவருக்கு என்னங்க லாபம்?”
”தனக்கு ஒருவேளை மக்கள் ஆதரவு அமைந்தால் அதை அவர் ஓட்டுக்களாக மாற்ற முடியும். பா.ஜ.க கொடுக்கும் பணத்தை வாங்கி எதிர்கால சினிமா திட்டங்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். தோல்வி அடைந்தாலும் போனது தலைப்பாகையோடு போச்சு என்றாகி விடும். பெரிதாய் அடி விழாது.”
“வடிவேலுவுக்கு வந்த கதி இவருக்கு வராதா?”
“வராதுங்க. எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க இருக்கும். அவர்களின் ஆதரவு கமலுக்கு இருப்பது வரை அவர் அதிகர உச்சாணிக் கொம்பில் இருப்பார். மேலும் ஸ்டாலின் ஒன்றும் ஜெயலலிதா அல்ல விரட்டி விரட்டி பழிவாங்க. அவர் கண்ணியமானவர். இன்னொரு விசயம் … அது ரொம்ப முக்கியம்.”
“என்ன?”
“ஒருவேளை தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் ஆட்சிக் கூட்டணியில் பா.ஜ.க பங்கு பெற்றால்?”
“திமுகவுடனா?”
“ஏதோ ஒரு திராவிட கட்சியுடன்”
“கேட்கவே பீதியாய் இருக்குதே”
“அப்போது கமல் ஒரு சூறாவளி போல அரசியலில் கலக்குவார்.”
“யாருக்கு எதிராக அப்போது பேசுவார்.”
“யாருக்கு எதிராகவும் பேச மாட்டார். சும்மா பேசிக் கொண்டிருப்பார்.”
“சரி கமல் கட்சியின் பெயர் என்னவாக?”

“Loading…”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...