Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இன்னும் எத்தனைக் காலம் தான்…



சமீபத்தில் நான் பாகிஸ்தான் – இலங்கை ஐம்பது ஓவர் கிரிக்கெட் ஆட்டமொன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். சராசரியான ஸ்கோர் தான். 292. இரண்டாவதாக ஆடிய இலங்கை அந்த இலக்கை எட்டும் நோக்கில் முதல் பத்து ஓவர்களும் சற்று கவனமாய் ஆடியது. தரங்காவும் திரிமன்னேவும் ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வந்தார்கள். 

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கவில்லை. அவர்களை சுலபமாய் அடித்தாட முடிந்தது. அடுத்து ஹபீஸ் ஸ்பின் போட வந்தார். பந்து சுழலவில்லை. சரி, இனிமேல் பாகிஸ்தானுக்கு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் தான் உண்டு. அல்லாவிடில் இந்த ஜோடி நிலைத்தாடினால் இலங்கை நிச்சயம் வென்று விடும் என எண்ணினேன்.

ஆனால் அடுத்து ஒரு முக்கிய திருப்பம். ஹபீஸ் தன் இரண்டாவது ஓவர் போட வந்தார். ஒரு பந்து சட்டென எகிறித் திரும்பியது. எனக்கு இது வியப்பாக இருந்தது. அதெப்படி சுழலில்லாத ஆடுதளத்தில் இவர் மட்டும் சுழலச் செய்கிறார்? இதனை அடுத்து ஹபீஸ் சில நேரான பந்துகளை வீசினார். அவரை ஆட முடியாது தரங்கா திக்கித் திணறினார். ஒன்றிரண்டு ரன்களை எடுப்பதே ஒரு பிரயத்தனம் ஆகியது. இது மொத்தமாய் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மூச்சுத்திணறல் கொண்ட நோயாளிகளைப் போல் இலங்கையின் பேட்ஸ்மேன்கள் நடந்து கொண்டார்கள். ரன் ரேட் எகிறியது. விக்கெட்டுகள் சரிந்தன. பாகிஸ்தான் வென்றது. அனைத்துக்கும் சூத்திரதாரி ஹபீஸ். அவர் அப்படி என்ன தான் பண்ணினார்?

நான் ஹபீஸின் பந்துகளை கூர்ந்து கவனித்தேன். ஒரு சில பந்துகளை மட்டும் அவர் கையை நேராக வைத்து வீசுவது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இப்பந்துகள் மட்டும் திரும்பின. அதாவது அவர் பந்தை எறிய ஆரம்பித்தார். இது விதிமுறைக்கு எதிரான ஒன்று. ஆனால் மிகச்சில பந்துகளுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார். இது பேட்ஸ்மேனைக் குழப்ப, அவர் தனது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆக்‌ஷனில் மீதிப் பந்துகளை வீசினார். மிகுந்த கட்டுப்பாட்டுடன், பந்தை அழகாய் பிளைட் செய்து அவர் வீசினார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த “எறி பந்துகளே” அவருக்கு தன்னம்பிக்கையையும் பேட்ஸ்மேன்களுக்கு மூச்சுத் திணறலையும் அளித்தது. அதுவே ஆட்டத்தை மாற்றி அமைத்தது. டி.வியில் பார்க்கும் எனக்கே இது தெளிவாய் தெரிய ஏன் நடுவர் வேடிக்கை பார்த்தபடி இருந்தார்?
இப்போது இத்தொடரில் பந்தை எறிந்ததற்காய் ஹபீஸ் தடை செய்யப்பட்டிருப்பதாய் செய்தி வந்திருக்கிறது.
2005இல் இருந்தே ஹபீஸ் தொடர்ந்து பந்தை எறிவதாய் குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டு வந்திருக்கிறார். கடந்த மூன்று வருடங்களில் மூன்று முறை தடைசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் தன் ஆக்ஷன் சரி பண்ணப்பட்டதாய் காட்டி தடையை நீக்கி அவர் ஆட வந்து விடுகிறார். அவர் ஆடியதும் பாகிஸ்தானின் பந்து வீச்சு பலமடங்கு பலம் கொண்டதாகிறது. எப்படி அவர் தொடர்ந்து சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கிறார்?
இவ்விசயத்தில் ஐ.சி.சியின் விதிமுறைகள் சற்றே வேடிக்கையானவை. ஒருவர் பந்தை எறிகிறார் என நடுவர் கருதி, அதை ரிபரியும் ஏற்றுக் கொண்டால் அவரை நிபுணர் குழு ஒன்றிடம் அனுப்புவார்கள். இந்த குழு முன்பு வீசிக் காட்டும் போது ஹபீஸை போன்றவர்கள் பந்தை எறிய மாட்டார்கள். ஒழுங்காக வீசுவார்கள். உடனே தடையை நீக்கி அவரை ஆட அனுமதிப்பார்கள். அவரும் திரும்பவும் வீசுவார். திரும்பவும் தடை. திரும்பவும் நான் நல்லவன் என சத்தியம் பண்ணிக் கொடுத்து ஆட வந்து விடுவார்.
இப்படி செய்கையில், இரண்டு வருடங்களுக்குள் ஒரு பவுலர் மீண்டும் பந்தை எறிந்ததாய் கண்டறியப்பட்டால் அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்படும். 2015இல் அப்படித் தான் தடை விதிக்கப்பட்டு ஹபீஸ் ஒரு வருடம் வீட்டில் இருந்தார். ஆனால் 2017இல் மீண்டும் தப்பு செய்ய மீண்டும் தடை. ஆனால் இது மூன்றாவது விதிமீறலாய் கருதப்பட மாட்டாது. முதல் தவறாய் கருதப்படும். இது ஐ.சி.சி விதிமுறையின் முக்கியச் சிக்கல். இனி ஹபீஸ் அடுத்த ஒரு வருடமே கவனமாய் இருக்க வேண்டும். அதறாக அவர் இனி பந்தை எறிய மாட்டார் என்றில்லை. நடுவர் கண்ணில் படும்படி ரொம்ப அதிகமாய் எறியக் கூடாது.
சில ஊர்களில் ஒரு திருடன் பல வருடங்களாய் இருப்பான். அடிக்கடி போலீஸ் அவனை பிடித்துக் கொண்டு போய் விடும். ஆனால் அவன் திரும்ப வந்து அதே வீட்டில் வசிப்பான். அதே போல திருடுவான். சிறைத்தண்டனை, போலீஸ் தொந்தரவு, வதை ஆகியவற்றுடன் அவன் சமரசம் பண்ணி ஒருவிதமாய் பழகி விடுவான். போலீசும் அவனுடன் ஒரு புரிந்துணர்வுடன் செயல்படும். ஹபீஸ்-ஐ.சி.சி விவகாரம் இப்படித் தான் போகிறது.
இதற்கு சரியான தீர்வுகள் இரண்டு:
1)   ஒரு ஆட்டம் நடைபெறும் போதே நடுவர் ஒரு பவுலர் எறிகிறாரா இல்லையா என கவனித்து தடுத்து நிறுத்த அவருக்கு சட்டரீதியான அதிகாரத்தை நல்க வேண்டும். இப்போதுள்ள நடைமுறைப்படி நடுவர் ரெபரியிடம் தெரிவித்து, அவர் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்து ஐ.சி.சிக்கு தெரிவித்து அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து அந்த பவுலரின் வாரியத்துக்கு தகவல் அனுப்புவார்கள். இதற்குள் ஆட்டத்தொடரே முடிந்து போகும். அவர் எறிந்தெறிந்தே தன் அணியை பல ஆட்டங்கள் வெல்லச் செய்து விடுவார்.

2)   இப்படி ஒருவர் பந்தை எறிந்ததாய் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆட்டங்களில் அவரது அணி பெற்ற வெற்றிகள் செல்லாதவை என அறிவிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறையை கொண்டு வந்தாலே ஹபீஸை போன்றவர்களை பாகிஸ்தான் தேர்ந்தெடுக்காது. அல்லாவிட்டால் பழைய குருடி கதவைத் திறடி என கதை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Comments

அவர்கள் ஏமாற்றி ஜெயிப்பதில் கில்லாடிகள்.
கிரிக்கெட் விதிமுறைகள் எல்லாமே வித்தியாசமானவைதான்...

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...