Skip to main content

மெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்

 Image result for mersal
மெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் சிலர் துவங்கி தமிழ் உள்ளூர் முகநூல் விமர்சகர்கள் வரை தெரிவித்த ஆதரவைக் காண்கையில் இந்த கேள்வி மட்டுமே எனக்கு எழுகிறது: ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகத்தில் அவசியமின்றி ஏன் பலரும் எண்டர் ஆகி எழுதப்படாத வசனங்களைப் பேசி வேறு யாருக்கோ கைத்தட்டல்கள் போவதை உணராமல் புல்லரிக்கிறார்கள்?
இந்த சர்ச்சையின் நோக்கம் என்ன? (ஆம், எந்த ஊடக சர்ச்சையும், அதுவும் அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்ட எந்த சர்ச்சையும், தாமாக ஏற்படுவதில்லை.

1)   விஜய்யை ஒரு மாற்று அரசியல் சக்தியாக லாஞ்ச் செய்வது.
2)   ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்திக்கு, மத்திய அரசுக்கு எதிரான கோபத்துக்கு ஒரு போலி வடிகாலை உருவாக்குவது.
3)   இதன் மூலம் அடுத்த சில வருடங்களில் வரப் போகும் மாநில தேர்தலில் நால்முனை அரசியல் போட்டியை திமுகவுக்கு மாற்றாக பா.ஜ.க உண்டுபண்ண விரும்புகிறது. அதற்கான ஒரு பரிசோதனை நிகழ்வு போல விஜய் எனும் அரசியல் தரப்பு மக்கள் முன்னிலையில் வைக்கப்படுகிறது.
 சில வாரங்கள் முன்பு தான் பிக்பாஸ் மற்றும் தனது குழப்பக் கவிதைகள் வழி கமல் அரசியல் விமர்சனங்களை தொடர்ந்து வைத்து பரபரப்பை உண்டு பண்ணினார். பிக்பாஸ் முடிந்து கமலும் கொஞ்சம் அமைதியானதும் விஜய் முன்னே வருகிறார். கமலை பா.ஜ.கவினர் தாக்கியதைப் போன்றே விஜய்யையும் தாக்குகிறார்கள். இது எதேச்சையாய் நடக்கிறது என நான் நம்பவில்லை.
கமல் அரசியல் கருத்துக்கள் தெரிவித்து, பின்னர் அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதாய் புரளி கிளம்பி, அவரே அதை மறுத்து பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையிலும், எடப்பாடி கும்பலைப் போன்றே கமலும் ஒரு பா.ஜ.க பினாமி எனும் நம்பிக்கை மக்களிடம் வலுப்பட்டது. விஜய் விசயத்தில் அத்தவறு நேராமல் பா.ஜ.க கவனம் காட்டி உள்ளது. எடப்பாடி அரசை விமர்சிக்காமல் விஜய் பா.ஜ.க அரசை விமர்சிக்கிறார்.
 இது போல் மத்திய அரசை விமர்சிப்பதில் விஜய் மட்டுமல்ல எந்த நடிகருக்கும் முன்மாதிரி இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதிகபட்சம் ஆளும் மாநில அரசை விமர்சிப்பார்கள். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மத்திய அரசு இதுவரை அதிகம் விமரசிக்கப்பட்டதில்லை. (ஏனெனில் தமிழகத்தில் அப்படி ஒரு தேசிய அளவிலான அரசியல் ஆர்வமும், மத்திய அரசை பொருட்படுத்தும் அவசியமும் இருந்ததில்லை.) விஜய் தனது முந்தைய படங்களில் எந்த தெளிவான அரசியல் தரப்பும் வெளிப்படுத்தியதில்லை. எந்த கட்சிக் கொள்கையையும் நிர்வாக சீர்கேட்டையும் குறிப்பாய் விமர்சித்ததில்லை. ஏன் இப்போது இவ்வளவு தெளிவாக ஜி.எஸ்.டியை சாடுகிறார்?
விஜய் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதாய் நான் நம்பவில்லை. மாறாக பா.ஜ.கவுக்காக ஒரு (போலி) எதிர்-பா.ஜ.க நிலைப்பாடு எடுக்கிறார்.
 வரும் தேர்தலில் அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைக்கும் அல்லது மறைமுக கூட்டணி வைக்கும். அப்போது பா.ஜ.க கூடுதலாய், கமல், ரஜினி, விஜய், தீபா என மூன்று அல்லது நான்கு முனை போட்டியை களத்தில் உருவாக்கும். ஒரு கட்சி அதிமுகவை எதிர்க்கும், இன்னொன்று பா.ஜ.கவை எதிர்க்கும், இன்னொன்று ஊழலை பொத்தாம் பொதுவாய் எதிர்க்கும், இன்னொன்று எல்லா திராவிட கட்சிகளின் சீர்கேட்டையும் எதிர்க்கும். இவ்வாறு, அதிமுக அதிருப்தி (கூடுதலாய் பா.ஜ.க எதிர்ப்பு) வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பா.ஜ.க பார்த்துக் கொள்ளும். அதற்கான முன்னோட்டம் தான் நாம் இதுவரை பார்த்தது.
அடுத்த வருட இறுதிக்குள் ரஜினி தனது பட வேலைகளை முடித்துக் கொண்டு சில பல அரசியல் கருத்துக்களை கூறி களத்தில் குதிப்பார். எச்.ராஜா துவங்கி பல உள்ளூர் பா.ஜ.கவினர் ரஜினியை கேவலமாய் திட்டி சர்ச்சையை உண்டு பண்ணுவார்கள் (அல்லது அவர்கள் அமைதியாக அதிமுக அமைச்சர்கள் ரஜினியை ஏசித் தள்ளுவார்கள்.). மொத்த ஊடக உலகமும் பேஸ்புக்கும் அதைப் பற்றிப் பேசும்.
 ரஜினியோ கமலோ உடனடியாய் கட்சி ஆரம்பிப்பார்கள் என நான் நம்பவில்லை. இப்போதே அவர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்கள் வளர்ந்திட நிச்சயம் வாய்ப்புள்ளது. எப்படி ஒ.பி.எஸ்ஸோ, எடப்பாடியோ கால் இஞ்ச் வளர்வதைக் கூட பா.ஜ.க அனுமதிக்காதோ அவ்வாறே அது இந்த சினிமா தலைவர்கள் விசயத்திலும் நடந்து கொள்ளும். தேர்தலுக்கு சற்று முன் காளான்கள் போல் முளைத்து ஒருவித புதுமையையும் அது சார்ந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி, அதை இந்த சினிமாத் தலைவர்களின் கட்சிகள் வாக்குகளாய் அறுவடை செய்ய முடியுமா என பா.ஜ.க பார்க்கும். அப்போதும் இவர்கள் அதிகமாய் வாக்குகள் பெறாமல் கவன சிதறல் அரசியல் மட்டுமே பண்ண வேண்டும் என்கிற கட்டளையையும் அது இந்த சினிமா தலைவர்களுக்கு அளிக்கும். எல்லாரும் மோடியின் உள்ளங்கைக்குள் நிற்கும் அளவு மட்டுமே வளர வேண்டும். அதற்குள் நின்று தரப்பட்ட வசனங்களை பேச வேண்டும். இதுவே பா.ஜ.கவின் தேர்தல் திட்டம்.
”மெர்சல்” விசயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தலையிட்டு கருத்து சொன்னதை எண்ணி எச்.ராஜா போன்றவர்கள் உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள் என நினைக்கிறேன்.
இச்சர்ச்சையில் வலைதளங்களில் கருத்து சொன்னவர்களில் அராத்து சொன்னதில் மட்டுமே எனக்கு வெகுவாக இணக்கமுண்டு. அவர் கேட்கிறார்: ”விஜய் சினிமாவில் அரசியல் பேசுவது எவ்வளவு காமெடியோ, அந்த காமெடிக்கு சற்றும் குறைந்ததல்ல, தமிழக பாஜக இந்த படத்தை எதிர்ப்பது. மத்திய அரசால், ஒரு சின்ன இன்கம்டாக்ஸ் ரெய்ட் மூலம் இந்த நடிகர்களை தொடை நடுங்க வைத்து வழிக்கு கொண்டு வந்து விட முடியும். 
இதைப்போன்ற நடிகர்கள் ஏதோ ரெண்டு வசனம் திரைப்படத்தில் பேசி விட்டதை புரட்சி என்பதும், அதற்கு எதிர்வினையாக கோமாளிகள் அந்த காட்சிகளை எடுக்க வேண்டும் என்று சொல்வதை அடக்குமுறை என்பதும் அடர் கருப்பு நகைச்சுவையன்றி வேறென்ன? 

உண்மையிலேயே, விஜய்யை வழிக்கு கொண்டு வர பா.ஜ.க இது போல் வீர வசனங்கள் ஏன் பேச வேண்டும்? அவர்களின் பலம் அவர்களுக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா?
இதை ஒரு கருத்து சுதந்திர விவகாரமாக நாம் சுருக்குவதும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டில் பங்கேற்பதாக முடியும்.
இனிமேல் பா.ஜ.கவினர் கொதித்து எழும் எந்த சர்ச்சையிலும் நாம் கவனமாய் இருக்க வேண்டும்.

Comments

Unknown said…
It's surely a valid point Abilash.You have thinked about the agitation against the film more rationally which others did'nt.
settaikkaran said…
தீப்தி நவல் படம் போட்டிருக்கீங்க! பேரைச் சரியாப் போடுங்க சார்! நேவல்-னா என்னா அர்த்தம்னு தெரியுமில்ல? :-)

மத்தபடி உங்க பதிவு படுதமாசு! :-)
Unknown said…
நீண்ட காலம் திட்டம் தீட்டி செயல் படும் அளவு திறமைசாலிகள் இல்லை பாஜகவினர் : எச்.ராஜா இந்த விசயத்தில்
மிகுந்த பதட்டம்+ குழபத்துடன் பயத்துடன்
காணப்பட்டார்..( பாஜக ஒட்டு பலம் மிக குறைவு அது அவர்களுக்கு நல்லா தெரியும்) திமுக பலம்பெற அது தன்னுடைய
புதிய ஆதரவு தளத்தை விரிவு படுத்தனும்
இப்போது 50% மேல் ஒட்டு பெறக்கூடிய நிலை இருக்கு... அதனால் பாஜக வை பார்த்து பயப்பட தேவையில்லை....
இந்தியாவில் நீண்ட காலமாக உள்ள கட்சியில் ( ஒரேசின்னம்,கட்சி பெயர்)
வேற எந்த கட்சியும் இல்லை ( காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட், கூட பல மாற்றம் கண்டுள்ளது)
Unknown said…
தவறான கருத்து

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...